Saturday, January 30, 2010

நம்ம கோபாலும்....கேரள வேலையும்..

நம்ம ஊரை விட்டு வந்து நாடோடியாய் சுற்ற ஆரம்பித்து வருடங்கள் பல ஆகின்றன. இதுனால ஊர்ல நடக்கிற தில்லாலங்கடி செய்தி எல்லாம் தெரிந்சுக்காம இருக்கலாமா?. முடியவே முடியாது. அதுக்கு தான் இருக்கவே இருக்கான் நம்ம சுரேஷ். விடுமுறைகளில் ஊருக்கு செல்லும் போது மறக்காமல் என்னை வந்து பார்த்து விடுவான். என்ன வேலை செய்கின்றாய் என்று கேட்டால் பல பிஸினஸ் செய்கிறேன் என்று சொல்வான். ஊரில் ஒரு வேலையும் ஒழுங்கா செய்து நான் பார்த்தது கிடையாது. என்னுடைய பொழுதுப்போக்கு ஊரில் நடக்கும் விசயங்களை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வதுதான். அப்படி தான் ஒரு நாள் நம்ம் ராஸ்கோல் விசயத்தையும் சொன்னான்.



ஊரில் வெட்டி ஆபிசர்களாய் சுற்றிக் கொண்டு இருந்த சுரேஷின் நண்பர்கள் கூட்டத்தில் நம்ம ராஸ்கோல் ரெம்ப முக்கியமானவன். அவனுடைய முழுப் பெயர் ராஜகோபால். அது நண்பர்களுடைய வாய் வழக்கில் ராஸ்கோலாக மாறிப்போனது. ஆள் பார்பதற்க்கு கலரில் யமன் வாகனத்தைப் போலவும், உடம்பு ஒங்கி வளர்ந்த மூங்கிலைப் போலவும் கன்னம் இரண்டும் டொக்கு விழுந்து பார்பதற்கு வயல் வெளியில் கட்டப் பட்ட சொக்கப் பாணை போல் காட்சி தருவான். ஊரில் எந்த கெட்ட விசயங்கள் நடந்தாலும் அதில் இந்த கூட்டத்தின் பங்கு கண்டிப்பாக இருக்கும். அதனால் ஊரில் உள்ளவர்களிடம் தறுதலைகள், திருந்தாத ஜென்மங்கள், ஊதாரிக் கூட்ட்ம் என்று பல பட்ட பெயர்களை சுமந்து வந்தார்கள்.

இப்படி போயிட்டு இருந்த நாட்களில் ஒரு நாள் அந்த கூட்டத்தில் இருந்து நம்ம ராஸ்கோலு தீடிரென காணமல் போயிட்டானாம். பிறகு மூன்று மாதம் கழித்து ஊரில் உள்ள கோவில் திருவிழா ஒன்றிற்கு வந்து சேர்ந்து இருக்கிறான். சுரேஷின் மகாசபையிலும் வந்து கலந்து இருக்கிறான். அப்போது அவனது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் மலையாளம் கலந்து இருந்ததாம். தமிழே ஒழுங்காக பேசத் தெரியாத நம்ம ராஸ்கோலு இப்ப மலையாள பாட்டு எல்லாம் பாடி இருக்கிறான். வளர சுகமானோ, பின்னே நான் கானன் என்ற மலையாள வார்த்தைகள் அவன் நாவில் விளையாடி இருக்கின்றன. இதனால் அனைவரும் ஆச்சரியத்துடன் என்ன என்று விசாரித்து இருக்கிறார்கள். அதற்க்கு அவன் நான் இப்போது கேரளாவில் வேலைக்கு சென்று வந்தேன் என்று பதில்மொழி கூறி இருக்கிறான். ஊரில் எந்த வேலைக்கு சென்றாலும் இரண்டு நாட்கள் தங்காத நம்ம ராஸ்கோலு இன்று " பட்சே ஞான் இல்லை என்றால் அவிடே ஒரு சோலியும் நடக்கா " என்று அவர்களிடம் புராணம் பாடியிருக்கிறான். இரண்டு நாட்கள் தான் ராஸ்கோலை ஊரில் பார்க்க முடிந்தாதாம். மறுபடியும் காணாமல் போய் இருந்தானாம்.

நம்ம ராஸ்கோலின் அம்மாவும் அப்பாவும் பையன் இப்ப எல்லாம் வேலைக்கு முழுக்கு போடுவதே இல்லை என்றும் ஒழுங்காக வேலைக்கு செல்கிறான் என்று ஊரில் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் சுரேஷ் கூட்டத்தின் அம்மா அப்பாவிடம் தன் பிள்ளையைப் பற்றி புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். இதை கேட்கும் அவர்களுக்கு காதில் புகை வந்து அதை அப்படியே திருப்பி இவர்களுக்கு காதில் ரத்தம் வழிய அர்ச்சனை செய்வார்களாம்.




தீடிரென ஒரு நாள் நம்ம ராஸ்கோலின் வீட்டின் முன்பு நின்று வேடிக்கை பார்க்க கூட்டம் ஒன்று கூடி இருந்ததாம். சுரேஷும் கூட்டத்தின் அருகில் சென்று ஒரு பொக்கை வாய் பெரியவரிடம் என்ன விசயம் என்று கேட்டு இருக்கிறான். அதற்கு அவர் கேரளாவிற்கு சென்ற நம்ம ராஜகோபாலு அங்க இருந்து லட்டு போல ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் லவட்டிட்டு வந்து விட்டான் என்று பொக்கை வாயைக் காட்டி சிரித்திருக்கிறார். இவனுக்கும் அந்த பெண்ணின் முகத்தை பர்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. சிறிது நகர்ந்து எட்டி பார்த்தானாம் அங்கு அழகிய சேர நாட்டு இளம்பெண் ஒருத்தி நின்று இருக்கிறாள். கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணின் அழகைப் பற்றியும், நம்ம ராஸ்கோலைப் பற்றியும் பலவாறு பேசியது இவன் காதில் விழுந்ததாம். " பின்னே நமக்கும் ஏதும் சோலி அவிடே கிட்டுமோ " என்று ராஸ்கோலிடம் சோதிக்கணும் என்ற முடிவுடன் அங்கிருந்து நகர்ந்து வந்து இருக்கிறான்.

Wednesday, January 27, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-2

முதல் இடுகயை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை தொடரவும்.

இந்த சாலையை வெறும் வாணிபத்திற்க்கும், போக்குவரத்திற்கு மட்டும் பயன் படுத்தாமல் சுற்றுலாதலமாகவும் இதை வடிவமைத்திருப்பது இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம். நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர் என்று. நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து இந்த பாலத்தை சுற்றி வர காரில் அந்த சாலையில் பயணித்தோம். கார் பயணத்தில் இரண்டு பக்கங்களிலும் கடலின் அழகை காரில் இருத்தவாறு ரசிக்க முடிந்தது. சிறிது நேரத்தில் பயணம் முடிவுக்கு வந்தது கார் ஒரு நகரத்திற்குள் புகுந்தது. கடலும் கண்ணை விட்டு மறைந்தது. இரண்டு பக்கமும் மரங்களும், கட்டிடங்களும் என் கண்களுக்கு தென்பட்டன. ஒரு பூங்கா போல் தோன்றியது. காரை டிரைவர் காலியாக இருந்த இடத்தில் நிறுத்தினான். வண்டியின் முன்னால் இருந்த நண்பர் தான் எங்களை அழைத்து வந்தார். அவர் காரை விட்டு இறங்கவே நாங்களும் காரை விட்டு இறங்கினோம். எங்களுடன் வந்த நண்பரில் ஒருவர் அழைத்து வந்தவரிடம் " கடலில் உள்ள பாலத்தை சுற்றி கட்டுகிறேன் என்று கூறி விட்டு ஏதோ பூங்காவிற்கு அழைத்து வந்துருக்கிறீர் " என்று கேட்டார். நானும் அதை வழிமொழியலாம் என்று அழைத்து வந்தவரின் முகத்தை பார்த்தேன். அவர் கண்ணில் தெரிந்த ஏளன பார்வை என் வாயை மூடியது. அழைத்து வந்த நண்பர் சிரித்துக்கொண்டே " அதற்கு மேல் தான் நாம் நிற்கிறோம் " என்றார். அனைவரும் ஆச்சரியத்துடன் சுற்றும், முற்றும் பார்த்தோம்.



உண்மை தான் நாங்கள் நிற்பது கடலின் மேல் தான் என்பது அவர் சுட்டிக் காட்டிய அந்த வானுயர்ந்த கோபுரத்தை பார்த்த போது எங்களுக்கு புலப்பட்டது. ஏனென்றால் இங்கு வருவதற்கு முன் அவர் தனது மொபைலில் ஏற்கனவே அவர் வந்த போது எடுத்த போட்டோவை காட்டியிருந்தார். நாங்கள் நிற்க்கும் இடத்தை சுற்றிலும் மரங்கள் அழகாக வளர்க்கப் பட்டு இருந்தது. வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களும், கட்டிடங்களும் இருந்தன. சிறிது நடந்து சென்றோம் அங்கு கடல் கண்ணுக்கு புலப் பட்டது. அழகாக வேலி அமைக்கப் பட்டு இருந்தது. ஆங்காங்கே மண் மேடைகள் காணப்பட்டன. அதில் இருந்த வாறு சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆம் தூண்டில் போட்டு கடலில் மீன் பிடிப்பது இவர்களின் பொழுதுப்போக்கு. அதில் நாமும் கலந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த மண்மேடையில் புற்கள் வளர்க்கப்பட்டு அழகாக இருந்தன. அதில் இருந்தவாறு கடலின் அழகையும், அதன் மேல் உள்ள இந்த சாலையின் ஒரு பகுதியையும் ரசிக்க முடியும்.




அங்கிருந்து அப்படியே நகர்ந்து அந்த கோபுரம் இருந்த திசையை நோக்கி நடந்தோம். கோபுரதிற்கு உள்ளே செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இந்த கோபுரம் மிக வித்தியாகமாக கட்டப்பட்டு இருந்தது. மேலே செல்வதற்கு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது நமது பெரியோர் வாக்கு. அது இவர்கள் விசயத்தில் நூறு சதவீதம் உண்மை. இங்கு இரண்டு மசூதி(Mosque) இருக்கின்றது. மேலும் இந்த கோபுரத்தில் ஒரு உணவகமும் உள்ளது. குழந்தைகள் விளையாட விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய ஒரு அறையும் உள்ளது. மேல் தளத்தில் நின்று இந்த கடல் நகரின் அழகை சுற்றி பார்க்க கண்ணாடி சுவர் அமைக்கப்ப்ட்டுள்ளது.



இதன் மேல் நின்று பார்க்கும் போது கடல் மேல் அமைந்துள்ள இந்த அழகிய சாலையும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் மற்றும் சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் அழகும் அருமை. இரவு நேரமாக இருந்தால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த சாலையின் அழகு இருமடங்காக ஜொலிக்கிறது. லிப்டில் மேலிருந்து கீழாக வரும் போதும்
அதில் உள்ள கண்ணாடி வழியாக வெளி காட்சியை பார்க்க முடிகிறது.



நான் மேலே விவரித்து இருப்பது சவூதி அரேபிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை மட்டும் தான். இதை அடுத்து பெக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் மேலே உள்ளது போல் ஒரு குட்டி நகரம் உள்ளது. கடலின் மேல் அமைக்கப் பட்ட இந்த இரு இடங்களின் பரப்பளவு 660,000 சதுர அடி. அந்த இரண்டு கோபுரங்களின் உயரம் 65 மீட்டர்.



புதன் மற்றும் வியாழக் கிழமைகாளில் இந்த சாலை மிக கூட்டமாக இருக்கும். அந்த நாட்களில் இந்த சாலையில் உள்ள வாகன நெரிசல் நமது ஊரில் உள்ள மவுண்ட் ரோடு நெரிசலை தாண்டி விடும். காரணம் நமது ஊரில் வாரத்தின் கடைசி நாட்காளாகிய சனி மற்றும் ஞாயிறு போல் இங்கு வியாழன் மற்றும் வெள்ளி. சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை போதை,.....மற்றும் எல்லா விசயங்களுக்கும் தடா என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பெக்ரைனை பொறுத்தவரை இதற்கு நேர் எதிர்மறை. மதுவில் இருந்து மா....வரை அனைத்தும் சுலபமாக கிடைக்கும். எனவே குடிமக்கள் அதிகம் வார இறுதி நாட்களில் இந்த சாலையை பயன்படுத்துவதால் மிக நெரிசலாக இருக்கும். குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல. 2008 ஆம் ஆண்டின் காணக்கெடுப்பின் படி சாரசரியாக ஒரு நாள் இந்த சாலையை உபயோகப்படுத்தியவர்களின் எண்ணிக்கை 48,612. வாகனங்களின் எண்ணிக்கை 23,690.




எலே மக்க இதை படிச்சிட்டு சவூதி போயிட்டு நாக்கில் எச்சில் உறினால் நாமளும் அப்படியே பெக்ரைன் போலானு நினைக்சுட்டு வந்திடாதுங்க. அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஓய்..என்னன விசா(Visa) அடிக்கும் போதே அதில் மல்டிபிள் எண்டிரி(Multiple Entry Visa) என்று அடிக்க வேண்டும். இல்லாமல் சிங்கிள் எண்டிரி(Single Entry Visa) என்று சவூதி வந்துட்டு பெக்ரைன் போனால் திரும்ப சவூதி வரமுடியாது .நல்ல கப்சாவும் குப்பூசும் ஜெயில்ல கிடைக்கும் ஓய்..

Monday, January 25, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-1

நான் சவூதி அரேபியாவில் பார்த்த இடங்களில் என்னை பிரமிக்க வைத்த இடங்களில் ஒன்று கிங்க் பகாத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கடல் வழி மேம்பாலச் சாலை. இது சவூதி அரேபியா நாட்டையும் பெக்ரைன் நாட்டையும் இணைக்க கூடிய பெரிய கடல் வழி மேம்பாலம் ஆகும்.




மிக அழகாக, நேர்த்தியாக பிரமிக்கதக்கதாய் கட்டப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருபவர்கள் பெக்ரைன் விமானத்தளத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து வழியாக பயணம் செய்ய நேர்ந்தால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.




இந்த சாலையானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஒரு பகுதி சவூதி அரேபிய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பகுதி பெக்ரைன் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இந்த இரண்டு எல்லைப் பகுதியும் இணையும் கடலின் மேல் பகுதியில் தனித் தனியே இரு குட்டி நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் இரண்டு மிக பிரமாண்ட கோபுரங்களையும் அமைத்துள்ளார்கள்.



இந்த சாலையானது அமைக்க 1965-ஆம் ஆண்டு இரு நாட்டு மன்னர்களால் முடிவுச் செய்யப்பட்டது. இரண்டு நாட்டு குழுக்கள் இணைந்து திட்டம் வகுத்தன. பின்பு 1968-ஆம் ஆண்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட வேலைகள் முடிக்கப்பட்டு 1986-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சவூதி மன்னர் கிங்க் பகாத் பின் அப்துல் அஸிஸ்(King Fahd bin Abdul Aziz) மற்றும் பெக்ரைன் மன்னர் ஹெச் ஹெச் சாகிப் இசா பின் சல்மான்(HH Shaikh Isa bin Salman) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு நாளைடைவில் இது கிங்க் பாகத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்பட்டது.


இந்த பாலமானது வாகனங்கள் வருவதற்க்கும் போவதற்க்கும் தனித்தனியாக சாலைகள் அமைக்கப்பட்டு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சாலையின் அகலம் 11.6 மீட்டர். ஒவ்வொரு சாலையும் இரண்டு லேன்(Lanes) களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஆங்கங்கே வண்டிகளை நிறுத்துவதற்கு அவசர வண்டி நிறுத்துமிடங்களையும்(Emergency Vehicle Parking) அமைத்துள்ளனர். இந்த சாலையானது ஐந்து பாலங்களையும்(Bridges), ஏழு செயற்கை மிதவைத் தளத்தையும்(Embankments) கொண்டு அமைக்கப் ப்ட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர். இது 536 சிமென்ட் தூண்களால்(Concrete Columns) கடல் உள் இருந்து தாங்கப்படுகிறது.



இந்த சாலையனாது நான்கு ஒப்பந்தங்களாக(Contract) போடப்பட்டு கட்டி முடிக்கப் பட்டது. இந்த சாலை கட்ட அமைக்கப் பட்ட குழுவின் பரமரிப்புக்கும், நிர்வகிப்பவர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆன செலவு மட்டும் 86 மில்லியன் சவூதி ரியால். முழுவதும் கட்டி முடிக்க செலவு ஆன தொகை 3,036 மில்லியன் சவூதி ரியால்(1SR=12.32 RS)


இவர்கள் சதாரணமாக 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். இந்த கடல் வழி சாலையைக் கடப்பதற்கு 15 முதல் 20 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பயணம் செய்யும் போது இரண்டு பக்கங்களில் உள்ள இயற்கை அழகு நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.


சவூதி அரேபியாவில் மேம்பாலங்கள் கட்டுவது சதாரணமாக செய்து விடுகிறார்கள். ஏதோ சிகரெட் அட்டையில் சிறுவர்கள் வீடுகள் கட்டுவதைப் போல் சிமென்ட் பாளங்களை(CONCRETE BLOCK) கொண்டு அடுக்கி விடுகிறார்கள்.



கிங் பகாத் கேஸ்வே க்கு(KING FAHAD CAUSEWAY) நான் சென்று வந்த அனுவத்தை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்..

தொடரும்......

Friday, January 22, 2010

ஒற்றை மதில் சுவரும்...இளைஞர் கூட்டமும்...

ஊரில் நான் பள்ளிக்கூடம் சென்று வரும் போது தவறாமல் கவனித்து வரும் இடம் மூன்று வழி தெருவில் உள்ள அந்த இடிந்து போன ஒற்றை மதில் சுவர். அந்த சுவரை சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் அந்த மதில் சுவரை தேர்தெடுத்து அதில் அமர்வதற்க்கு முக்கிய காரணம் பள்ளிச் சென்று வரும் மாணவிகளும், கல்லூரிச் சென்று வரும் பெண்களும் அந்த வழியாக தான் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள்.

இவ்வாறு சென்று வரும் பெண்களை கேலி செய்வதும், கிண்டல் பண்ணுவதும் தான் இவர்களுக்கு பொழுதுப்போக்கு. அந்த கூட்டத்தில் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள அவர்கள் ஒவ்வொருவரும் செய்யும் செயலும் ரெம்ப வேடிக்கையாக இருக்கும். பெரும்பாலும் அவர்கள் அந்த வழியாக வரும் பெண்கள் அணிந்து வரும் ஆடைகளின் வண்ணங்களைப் பற்றிய சினிமா பாடல்களையோ அல்லது அவர்களின் பெயர்களைப் பற்றி வரும் பாடல்களையோ பாடி கிண்டல் செய்வார்கள். பாடலின் வரிகள் எல்லாம் புதுப் புது சொற்கள் சேர்த்து தனி மெட்டு அமைத்து பாடுவார்கள். அவர்களின் பாடல்கள் இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் பழையப் பாடல்களை ரீமேக், ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலைச் செய்வதை விட அழகாக இருக்கும். பாடலைக் கேட்டாலே சிரிப்பு தான் வரும். அப்படிதான் ஒரு நாள் மாலை நேரம் அனைவரும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அவ்வாறே நானும் வீட்டிற்கு போகும் வழியில் அந்த மூன்று வழித் தெருவில் கண்ட காட்சி. நாய் ஒன்று பழைய எலும்பு துண்டு ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு அந்த மதில் சுவரில் உள்ள இளைஞர்களைத் தாண்டி ஓடியது. இதைக் கவனித்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் இருந்து தீடிரென ஒருவன் மட்டும் எழுந்து அனைவரும் கேட்க்கும் படியாக சத்தமாக அந்த நாயை காட்டி இந்த நாய் தான் "தாய் வீடு" படத்தில் ரஜினியுடன் நடித்த நாய் அடுத்ததாக கமலுடன் நடிக்க ஒத்திகை பார்கின்றது என்று கூறியது தான் தாமதம். அந்த வழியாக சென்று வந்த எல்லோர் முகத்திலும் சிரிப்பு தாங்க முடியவில்லை. அன்று அந்த கூட்டத்தில் அவன் தான் ஹீரோ. அந்த வழியாக சென்று வந்த பெண்களும் அவனை கவனிக்க தவறவில்லை. இப்படி தினமும் எதாவது வேடிக்கை செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு இருப்பார்கள். அந்த வழியாக வரும் பெரியவர்களும் இவர்களை கண்டுக் கொள்வதும் இல்லை. அப்படி வாய் தவறி அவர்கள் எதாவது சொன்னால் அவர்களையும் இவர்கள் விடுவதில்லை கலாட்டா செய்து விடுவார்கள். இதைப் பயன்படுத்தி அந்த வழியாக வரும் பெண்களிடம் இவர்கள் எல்லை மீறுவது இல்லை. கண்ணியமாகவே நடந்து கொள்வர்.

தீடிரென ஒரு நாள் பார்த்தால் அந்த மதில் சுவர் காலியாக இருக்கும். கண்டிப்பாக அன்று சுபமுகூர்த்த நாளாக இருக்கும். ஊரில் உள்ள எதாவது ஒரு வீட்டில் திருமணம் நடக்கும். அந்த மதில் சுவர் இளைஞர்கள் அனைவரும் அன்று அந்த வீட்டில் ஆஜராகி இருப்பார்கள். வாழைமரத் தோரணம் கட்டுவதில் இருந்து சாப்பாடுப் பந்தி பரிமாறுவது வரை அவர்களே ஆளுக்கொரு வேலை என்று பிரித்துக் கொண்டு அழகாக செய்து முடிப்பார்கள். இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் என்னவென்றால் இவர்கள் காலையும் மாலையும் ஒற்றை மதில் மேல் இருந்து கிண்டல் செய்த பெண்களில் ஒருவர் தான் கண்டிப்பாக மணமேடையில் இருப்பார்.

Sunday, January 17, 2010

என்னுடைய மாற்றம் சமுதாயத்தை மாற்றும்..

நான் வலைப்பதிவுகளைப் பற்றி அறிந்துக் கொண்டது இரண்டு வருடங்களுக்கு முன்னதாகத் தான். இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் எனது மேனேஜர் விஜய் சங்கரன். அவர் சாருவின் தீவிர ரசிகன். சாருவின் எல்லாப் புத்தகங்களையும் வெளிவந்தவுடன் வாங்கிப் படித்து விடுவார். மேனேஜர் என்று சொன்னவுடன் ஏதோ ஐம்பது வயது இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். முப்பத்தைந்து வயதுக்குள் தான். அவரிடம் இருந்து தான் நானும் பல புத்தகங்களை இலவசமாக வாங்கிப் படித்துள்ளேன். அவரிடம் உள்ள சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அது தான் இந்த பதிவை என்னை எழுதத் துண்டியது.

காலந்தவறாமல் காலையில் அலுவலகம் வருவதும் சரி. திட்டமிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுப்பதும் சரி. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பார். ஹைதிராபாத் அலுவலுகத்தில் நாங்கள் வேலை செய்த போது ஞாயிறு என்றால் அனைவரும் கிரிக்கெட் விளையாட செல்வோம். காலையில் ஆறு மணிக்கே சென்றால் தான் மைதானத்தில் விளையாட இடம் கிடைக்கும். அங்கும் முதல் ஆளாக வந்து அசத்துவார். எங்க வீட்ல இன்னைக்கு பேப்பர் போடுறவன் தாமதமாக வந்தான். அதனால அலுவலகத்துக்கு நான் தாமதமாக வந்தேன் என்று நொண்டி சாக்கு சொல்வதை தான் நம்மில் பல பேர் கொண்டுள்ளோம். மாற்றம் வேண்டும் என்று சொல்லும் சொல் வீரர்களாக மட்டுமல்லாமல் நமது செயல்களிலும் சிறிது மற்றத்தை கொண்டு வரலாமே...

நண்பர்களின் நட்பின் மேல் ஆபார நம்பிக்கை அவருக்கு உண்டு. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நட்பு பெரிதாக கை கொடுக்கவில்லை மாறாக ஏமாற்றத்தையே தந்து இருந்தது. ஆனால் இவரைப் பார்த்த பிறகு நட்பு பற்றிய எனது பார்வை மாறியது. அவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தை நட்பின் மீது எதிர்பார்த்தல் கூடாது என்பது. எங்களது நிறுவனம் ஆரம்பித்த போது முதலில் வேலைக்கு சேர்ந்த மூன்று பேர்களில் இவரும் ஒருவர். இப்போது எங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை எண்பதுக்கு மேல். அதில் இருபதுக்கு மேல் இவருடன் படித்தவர்கள் மற்றும் நண்பர்கள். அனைவரும் இவருடைய சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தவர்கள். நகரங்களில் வேலை தேடுவதை விட வேலை இல்லாமல் தங்குவது என்பது ரெம்பக் கொடுமை. அதன் வலி சொன்னால் தெரியாது அனுபவித்தால் தான் புரியும். கிராமத்தில் உள்ள சில படித்த இளைஞர்களுக்கு சொந்தம், பந்தம் நகரங்களில் இருந்தால் சுலபமாக வந்து தங்கி வேலை வாங்கிவிடுகிறார்கள். அப்படி வேலை வாங்கி சம்பாதிக்கும்ப் போது தன்னோடு படித்த பழைய நண்பர்களை மறந்து விடாமல் நினைவு கூரலாமே.....

அந்நிய குளிர்பானங்களை குடிக்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர். எங்கள் அலுவலகத்தில் நடக்கும் விருந்துகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அவர் குடிப்பது இல்லை. நான் ஒருவன் அந்நியக் குளிர்பானம் குடிப்பதை நிறுத்தி விட்டால் அதைக் குடிப்பவர்கள் அனைவரும் நிறுத்தி விடுவார்களா என்று வாதம் செய்வதை விட்டு விட்டு என்னுடைய மாற்றம் ஒரு நாள் சமுதாயத்தை மாற்றும் என்று எண்ணலாமே...

இவர் ஆறு நாடுகளுக்கு மேல் சென்று வந்து விட்டார். அவருடைய வருங்கால லட்சியக் கனவு இன்னும் சில வருடங்களில் சொந்த ஊருக்கு சென்று பண்ணை விவசாயம் செய்வது என்பதே. வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு போய் கடற்கரை ஓரமாய் நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு வீட்டை வாங்கி கால் மேல் கால் போட்டு இயற்கையை ரசிக்கலாம் என்று எண்ணாமல் சொந்த கிராமத்துக்குச் சென்று தொலைந்துப் போன விவசாயத்துக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என்று எண்ணலாமே...


குறிப்பு: விரைவில் இவரும் ஒரு வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். அதற்கும் எனது வாழ்த்துக்கள்.

Friday, January 15, 2010

முதல் களம்... முதல் ஆட்டம்...

வாக்குக்கு வாக்கெடுத்து
வண்ணத்தமிழ் பா! தொடுத்து
வாழும் இறைவனுக்கு கவிதாலயம்
எழுப்பி விட்டு.....

என்னடா இது எல்லாம் மேடையில் பேச வேண்டியது போல் அல்லவா இருக்கு... சரி எப்படியோ ஆரம்பிச்சிட்டோம்....

எல்ல பதிவர்களுக்கும் எனது வணக்கத்தை கூறி பதிவுலக ஆட்டத்தில் நானும் ஆடிப் பார்க்கலாம் என்று இந்த புதிய ஆண்டில் களம் இறங்குகிறேன். இது என்ன தலைப்பு என்று நீங்கள் நினைக்கலாம். இப்போது தமிழர் தொலைக்காட்சி என்றாலே ஆட்டம் தான். அதில் உலக மகா நடுவர்கள் சொல்லும் கெமஸ்ட்ரி, பிஸிக்ஸ் எல்லாம் நம்மக்கும் ஒர்க்கவுட் ஆகாதா என்ற ஆசைதான். இது எனது முதல் களம்..முதல் ஆட்டம்...

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வழ்த்துக்கள்

குறிப்பு: எனது பழைய மின்னஞ்சல் முகவரிக் கொண்ட எனது வலைத்தளத்தில் உள் கட்டமைப்புகள் சரி வர இயங்கவில்லை. அதனால் என்னால் அந்த மின்னஞ்சல் முகவரி கொண்ட வலை தளத்தில் பதிவுகள் தொடர முடியவில்லை. எனவே நான் புதிய முகவரிக் கொண்ட அதேப் பெயரில் வலைத்தளம் ஒன்றை வடிவமைத்து இன்று முதல் இதில் பதிவுகள் இட ஆரம்பித்துள்ளேன். பழைய வலைத்தளத்தில் கருத்துரை இட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து இதிலிம் தொடர வேண்டுகிறேன். இது ஒரு மீள்பதிவு.
Related Posts with Thumbnails