Wednesday, September 14, 2011

கூடங்குளம்_மக்களின் போரட்டம்!!!

நான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள்.

# கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்.

# கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற்ச்சாலை.

# குளச்சல் துறைமுகம்.

சில ஓட்டு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் இவைகளும் அடங்கும்.

இவைகளின் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருக போகிறது. அதனால் தொழிற்நூட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளை குறிவைத்து படித்த மாணவர்கள் அதிகம். அதில் நானும் ஒருவன்.. :))

இந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பாலிடெக்னிகள் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதும் வேறு மாவட்டங்களை கணக்கிடும் போதும் எங்கள் மாவட்டத்தில் இவைகளின் எண்ணிக்கை அதிகம் தான். திரும்பிய திசையெங்கும் கல்லூரிகள்.

படித்து முடித்தவுடன் அனைவரும் செய்யும் முதல் காரியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. காரணம் மேலே சொன்ன திட்டங்கள் நிறைவேறினால் வேலை நிச்சயம் என்பது அனைவரின் எண்ணம். நானும் பதிந்து வைத்திருக்கிறேன். ஆறு வருடம் தவறாமல் புதுப்பிக்கவும் செய்தேன்.அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை மற்றும் பொறுமையில்லை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

மேலே கூறிய மூன்று திட்டங்களில் நடைமுறைக்கு வந்தது கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் மட்டும் தான். மற்றவை என்ன ஆனது? என்று அந்த அரசியல் ஆண்டவருக்கே வெளிச்சம். இத்திட்டத்திற்கு கையெழுத்து போடப்பட்ட ஆண்டு 1988. ஒரு சில காரணங்களால் பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்பு 2001 ஆம் ஆண்டில் இருந்து மிக துரிதமாக வேலைகள் ஆரம்பிக்கபட்டது.

இது ஆரம்பிக்க பட்ட காலத்தில் ஊடகங்களின் தாக்கமும், தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக இல்லாததால் மக்களுக்கு இந்த அணுமின் உலையை பற்றிய தகவல்களும், விழிப்புணர்வுகளும் அதிகம் இல்லை. அரசியல்வாதிகளும் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லத் தவறிவிட்டார்கள். அதற்கு பதிலாக அணு உலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கும் போதே, ஆரம்பித்தவுடன் அனைவருக்கும் வேலை என்று மட்டும் சொல்லி ஓட்டுகளாக மாற்றினர். இன்னும் சிலர் முன்பணம் கொடுங்கள் உடனே வேலைவாங்கி தருகிறேன் என்று கல்லா கட்டினார்கள்.

ஆனால் இத்திட்டம் முழுமையடைந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எவருக்கும் பணிகள் வழங்கப்படவில்லை. ஒரு சில இயக்கங்களில் போராட்டங்களுக்கு பிறகு சிலரை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்தார்கள். அவர்களையும் முழுமையாக பணியில் வைத்துக்கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவரும் இந்த காலகட்டங்களில் நம்முடைய அரசு மட்டும் மீண்டும் மீண்டும் புதிய அணு உலைகளை நிறுவுகிறது. இந்த கூடங்குளம் அணு உலையிலும் இந்த வருடம் புதிய 4 ரியாக்டர்கள் (Reactors) நிறுவப்படுகிறது. இதில் இவர்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.



“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா?”

இது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ?..”

இந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே!!!!!!!!!!...

இந்த அழிவுகள் எல்லாம் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். பலர் சாகும் வரை உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். இவர்களின் அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நம்முடைய சில பதிவர்களும் இதில் கலந்துள்ளார்கள் அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இந்த பதிவில் பதிவர் கூடல் பாலா அவர்கள் எழுதிய போரட்டம் பற்றிய சுட்டியும் இணைத்துள்ளேன். முடிந்தவரை இந்த போரட்டத்தை பற்றி பலரிடம் கொண்டு சேர்க்க நண்பர்களை வேண்டுகிறேன்.

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

நன்றி: பதிவர் கூடல்பாலா.
Related Posts with Thumbnails