Friday, July 20, 2012

சமச்சீர் கல்வி_மக்களின் மனம் மாறியதா?


கடந்த‌ கல்வியாண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அரசு பள்ளிகளில் ஒரு பாட முறையும், தனியார்களால் நடத்தப்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குத் தனியான பாட முறையும் இருந்து வந்தது. சமச்சீர் கல்வி கொள்கையின் படி எல்லாத் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஒரே சீரான கல்வி முறையைக் கொண்டு வந்தது தமிழக அரசு.

சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அவைகளில் ஒன்று, அரசு பாடத்திட்டத்திற்கும், தனியார் பாடத்திட்டத்திற்கும் உள்ள இடைவெளி மற்றும் தரம் என்று சொல்லப்பட்டது. தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் தரமானதாக இருக்கிறது. அதனால் தான் பெற்றோர்கள் குழந்தைகளை அதிகமாக மெட்ரிக் பள்ளிகளில் சேர்கிறார்கள். இவைகளில் படிக்கும் குழந்தைகள் மத்திய அரசுகளால் நடத்தப்படும் பணிக்கான‌ தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சிப் பெறுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

இப்போது சமச்சீர் கல்வி கொள்கையின் மூலம் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஒரே சீரான பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. சமச்சீர் கல்வி தரமாக இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை. ஆனால் இந்தப் பாடத்திட்டம் தான் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இப்போது பயிற்றுவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்தக் கல்வியாண்டில் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ சேர்ப்பதில் மக்கள் அதிகமாக‌ ஆர்வம் காட்டியிருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமையோ தலைகீழ்.

வருடத்திற்கு வருடம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக நடைபெறுவதைப் போலத் தான், இந்த வருடமும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாகியிருகிறது என்று தனியார் பள்ளியில் வேலைப்பார்க்கும் ஆசிரியர் ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார். "அந்த பள்ளியில் அதிகமாக டோனேசன் வாங்குகிறார்கள்", "இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த தொகையை விடப் பல மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள்", "நோட்டு, புத்தகங்களை அவர்களே விற்கிறார்கள்", "அவர்களிடம் இருந்து தான் யூனிபார்ம் வாங்க வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறார்கள்" என்று புலம்பும் பெற்றோர்களைத் தான் அதிகமாகச் செய்திகளிலும், விமர்சனங்களிலும் பார்க்க முடிகிறது. எந்தப் பெற்றோருக்கும் தனது குழந்தைகளை அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலோ படிக்க வைக்க விரும்பவில்லை.

இன்னும் நமது மக்களுக்கு ஆங்கில மொழியின் மீது உள்ள மோகம் குறையவில்லை. தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இந்த ஆங்கில மொழியின் மோகமும் ஒரு காரணம். "ஆங்கிலம் என்பது அறிவு இல்லை, அதுவும் ஒரு மொழி" என்று யார் புலம்பினாலும் இந்த மக்கள் சாட்டைச் செய்வது இல்லை. இப்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வர இருப்பதாகச் செய்திகளில் படித்தேன். ஒரு வேளை ஆங்கில மொழி கல்வி அரசு பள்ளிகளில் கொண்டு வந்தாலும், எல்லாப் பெற்றோரும் தனது குழந்தையைகளைக் கூட்டி வந்து உடனடியாக அரசு பள்ளியில் சேர்த்து விடுவார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அப்போதும் தனியார் பள்ளியில் தான் எனது பிள்ளைக்கு "டை" கட்டி "சூ" போட சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

"எங்கள் பள்ளியின் பாடத்திட்டம் உலகத் தரத்தில் உள்ளது" என்று சொல்லி வந்த தனியார் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகளுக்குச் சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதாக அரசு அறிவித்தவுடன், அடிவயிற்றில் சிறிதுப் பயம் இருக்கத் தான் செய்தது, எங்கே நமது பள்ளிகளில் கூட்டம் குறைந்து விடுமோ என்று. ஆனால் இந்த வருடம் குழந்தைகளின் சேர்க்கைகளைப் பார்த்த பின்பு அவர்களுக்கு மகிழ்ச்சியே.

மக்களின் மனநிலையும் மாற வேண்டும். அதற்கு இந்த அரசும் தேவையான விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் நவீனமய‌மாக்க பட வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கல்வியின் பெயரால் அடிக்கும் கொள்ளைகள் தடுக்கப்படும்.

குறிப்பு: பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். இந்த வருடம் எனது வாழ்க்கையில் பல நல்ல விசயங்கள் நடந்துள்ளது. அதனால் தான் என்னால் தொடர்ச்சியாக‌ எழுத முடியவில்லை. நல்ல நிகழ்வில் ஒன்று என‌து திருமணம். இந்த வருட தொடக்கத்தில் நல்ல படியாக நடந்தது. எனது மனைவி அவர்கள் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். அவருடைய தகவல்களும் இந்தப் பதிவில் உள்ளது.
Related Posts with Thumbnails