இப்படித்தான் நான் போன வருசம் ஊருக்கு வந்திருக்கும் போது, இந்த யமுனா அக்காவும், சந்துருவும் ஊருக்கு வந்திருந்திருந்தார்கள். பக்கத்தில் ஊரில் இருக்கும் அவங்க அம்மாவை பார்த்துவிட்டு மதியம் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள், கூடவே நம்ம சந்துருவும் வந்திருந்தான். என்னை சந்துரு "அங்கிள்" என்று தான் கூப்பிடுவான். எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் போதே யமுனா அக்காவை ஏதாவது சொல்லி கிண்டல் பண்ணுவது என்னுடைய வழக்கம். அன்றும் அப்படித்தான் யமுனா அக்காவிடம் என்னுடைய அம்மா, சென்னையில் இருந்து எப்ப வந்தேம்மா? என்று கேட்டார்கள். அதுக்கு யமுனா அக்கா, "மார்னிங் செவன் தேர்ட்டி" என்று இங்கிலீஷில் பதில் சொன்னார்கள். பக்கத்தில் இருந்த நான், "துரையம்மா இப்ப எல்லாம் இங்கிலி பீசில் தான் பேசுது" என்று சொன்னது தான் தாமதம் பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரித்துவிட்டார்கள், ஒருவனை தவிர.. அதுதான் நம்ம சந்துரு.. நானும் சரி, பையனுக்கு காமெடி புரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து யமுனா அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு செயர் போட்டு அங்கு உக்கார்ந்திருந்தேன். யமுனா அக்கா பக்கத்தில் உக்கார்ந்திருந்த சந்துரு மெதுவாக என்னிடம் வந்தான். வந்தவன், என்னிடம் "அங்கிள் நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க? என்றான். நானும் சும்மா இல்லாமல் "மெட்டீரியல் இஞ்சினீயர்" என்று கெத்தா சொல்லிட்டேன். என்ன அங்கிள் பீட்டர் விடுறீங்க.... சும்மா தமிழ்ல சொல்லுங்க என்று போட்டான் பாருங்க ஒரு பிட்டு, கொஞ்சம் ஆடித்தான் போனேன். சுதாரித்து பதில் சொல்லுவதற்குள் வீட்டில் இருந்த மொத்த பேரும் சிரிச்சு முடிச்சாச்சி......
என்ன அங்கிள் மெட்டீரியல் இஞ்சினீயருக்கு தமிழ்ல என்ன?.. என்று திரும்பவும் கேட்டான். அது.......... அது வந்து... இஞ்சினீயர் என்றால் "பொறியாளர்" டா என்று சத்தமாக சொல்லி சிரித்த என்னை, ஒரு சின்ன ரியாக்சனும் இல்லாமல் அப்படியே நக்கலாக பார்த்து விட்டு, இஞ்சினீயர்னா, பொறியாளர்னு எங்க்களுக்கும் தெரியும் அங்கிள், முன்னாடி இருக்கிற மெட்டீரியலுக்கு என்ன தமிழ் வார்த்தை என்று என்னை மடக்கினான். டேய் மெட்டீரியலுனா? "மெட்டல்" டா, அதான் உலோகம், கனிமம், தாது போன்றவை. அவைகளை மூலப்பொருட்கள் என்று சொல்லுவார்கள் அதுதான் அதனுடைய தமிழ் அர்த்தம் என்று பாடம் நடத்தினேன். போங்க அங்கிள் மெட்டீரியல் என்ற ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய பாடம் நடத்துறீங்க.. என்று சிரித்து விட்டு, அப்ப நீங்க மெட்டல் எஞ்சினீயரா?.. இனி நான் உங்களை மெட்டல் அங்கிளுனு கூப்பிடுறேன் என்று சொல்லி விட்டு ஓடினான்.
அவனுடைய அம்மாவை நான் கலாய்த்த போது, இவன் மட்டும் சிரிக்காமல் இருந்ததுக்கு அர்த்ததை இப்போது புரிந்து கொண்டேன்.. அட சாமீ.. இப்ப உள்ள பசங்க என்னா விவரம்......... !!!!!!..

இந்த சந்துரு தான், இந்த வருட லீவிலும் ஊருக்கு வருகிறான் என்று அம்மா காலையில் சொல்லி கொண்டிருந்தார்கள். இந்த வருடமும் அவனிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள கூடாது என்று கவனமாக இருந்தேன். அதற்கு ஏற்றது போல் ஆபிஸில் இருந்து அவசரமாக ஒரு போன் அழைப்பு வந்தது. என்னுடைய மேனேஜர் தான் பேசினார். அவசரமாக ஒரு பைல் மெயில் பண்ணுறேன், கொஞ்சம் குவாலிட்டி செக் பண்ணி அனுப்புங்க என்று சொன்னார்.
நானும் நல்லவன் போல் லேப்டாப்பை ஆன் பண்ணி அந்த பைலை டவுன்லோட் செய்து வேலை செய்ய ஆரம்பிக்கும் போது, யமுனா அக்காவும் சந்துருவும் வந்தார்கள். வந்த அக்காவிடம் நலன் விசாரித்துவிட்டு, சந்துருவை என்னுடன் அழைத்து கொண்டு லேப்டாப் முன் அமர்ந்தேன். என் பக்கத்தில் இருந்த செயரில் அவனையும் உக்கார சொல்லிவிட்டு, என்னுடைய வேலையை ஆரம்பித்தேன். அது எக்ஸல் பைல். அதில் சில மெட்டீரியல் விபரங்கள் இருக்கும் அவை ஸ்டாண்டர்டு பார்மெட்டுக்கு சரியாக உள்ளதா என்பதை தான் நான் சரி பார்க்க வேண்டும். அதற்க்காக எக்ஸலில் உள்ள பல பார்முலாக்களை உபயோகிக்க வேண்டும். நான் ஒவ்வொரு பார்முலாவாக போட்டு செக் செய்து கொண்டு இருப்பதை, சந்துரு ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு மணிநேரம் தொடர்ந்து என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தவன், என்னிடம் என்ன அங்கிள்!!!! இந்த வேலை தான் ஆபிஸிலும் பார்ப்பீங்களா? என்றான். நானும் ஆமாப்பா.. இந்த பார்முலா எல்லாம் உபயோகப்படுத்துவது ரெம்ப கஷ்டம். கொஞ்சம் மாறினாலும் எல்லாம் தப்பாயிடும் என்று பில்டப் கொடுத்தேன்.
என்ன அங்கிள், உங்களுக்கு மேக்ரோ எழுத தெரியாதா?.. விபில அதான் விசுவல் பேசிக்ல ஒரு மேக்ரோ எழுதி வைச்சீங்கணா 5 நிமிச வேலை. அதுவே ஆட்டோமெட்டிக்கா செக் செய்யும் என்றான். இப்படி ஒவ்வொருவாட்டியும் நீங்க லொட்டு.. லொட்டுனு பார்முலாவை டைப் பண்ண வேண்டியதுயில்லை என்று சொல்லிவிட்டு நக்கலா சிரித்தான்...
அப்படியே அவனை பார்த்து வழிந்துவிட்டு, வலிக்காத மாதிரியே லேப்டாப்பை இழுத்து மூட தொடங்கினேன்..
என்ன அங்கிள் வேலையை முடிச்சிட்டீங்களா?... வாய மூடுறா!!! என்று என்னை நானே சொல்லிவிட்டு, அவன் கேட்ட கேள்வியை காதில் வாங்காமல், நீ அடுத்த வருசம் எந்த கிளாஸ்டா போக போறே? என்றேன்.
நான் செவந்த் கிளாஸ் போறேன் அங்கிள் என்றான்..