Showing posts with label உஷார். Show all posts
Showing posts with label உஷார். Show all posts

Thursday, June 16, 2016

உறவுகளைச் சிதைத்த நிதி நிறுவனத்தின் (PACL) மோசடி!!!

கிராமங்களில் தனியார் முதலாளிகளால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களை நம்பி பணத்தை கட்டும் மக்களையும், தனி ஆட்களால்  நடத்தப்படும் ஏலச்சீட்டுகளில் பங்கெடுக்கும் மக்களையும் அதிகப்படியான வட்டிக்கு ஆசைப்படும் மக்கள், கொழுத்த லாபத்திற்கு பேராசைப் படும் மக்கள் என்ற சிறுமை படுத்தும் சொற்றொடர்களில் அடக்கிவிட முடியாது. இப்படியான நிதி நிறுவனங்களிலோ, ஏலச்சீட்டுகளிலோ பணம் கட்டுபவர்கள் பெரிய அளவில் எதிர்கால திட்டங்கள் தீட்டி, வட்டிகளைக் கணக்கிட்டு, வரும் லாபத்தை வைத்துக் கொண்டு பெரும் குபேரர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் எவரும் அந்தச் சீட்டுகளில் சேர்வதில்லை. மாறாகப் பங்காளி சொன்னான், பக்கத்து வீட்டுக்காரன் சேர்ந்திருக்கிறான், சொந்த பந்தங்களும் என்னை அந்தச் சீட்டுகளில் சேர்ந்துகொள்ளச் சொன்னார்கள் என்ற வெள்ளந்தி தனமான காரணங்களால் தான் இப்படியான மோசடிகளில் விட்டில் பூச்சிகளாக பெரும்பாலானவர்கள் விழுகிறார்கள்.

எங்கள் கிராமத்தில் இந்த பிஏசிஎல் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருந்தது, உள்ளூரில் சிறுசிறு வேலைகள் செய்துகொண்டு கொஞ்சம் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய உறவினர்கள் ஒருவரையும் விடாமல் பாலிசி எடுத்துக்கொள்ளுமாறு துரத்தினார்கள். சில இடங்களில் அவர்களுக்கென்று தனியாக அலுவலகமும் வைத்திருந்தார்கள். இந்த பிஏசிஎல் நிறுவனத்திலிருந்து எங்கள் ஊரில் செயல்பட்ட முகவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அதனால் தான் சுலபமாக, வெகு விரைவில் மக்களிடம் இந்த நிறுவனம் காலூன்ற முடிந்தது.

முன்பெல்லாம்  நான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குச் சென்றால் இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் முகவர்கள் குறைந்தது ஒரு பத்து பேராவது என்னைத் தேடி வீட்டிற்கு வருவார்கள். அதில் பாதி பேர் நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள், மீதம் பாதி பேர் என்னையோ அல்லது என் குடும்பத்தில் உள்ளவர்களையோ தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணங்கள் சொல்லித் தப்பித்து விடுவேன். தொடக்கத்தில் என்னிடம் இதுவும் எல்ஐசி போலத் தான், ஆனால் இது ஐந்து வருடத்தில் முடிந்துவிடும் என்பது போல மேலோட்டமாக சொன்னார்கள், ஒருமுறை என்னுடைய உறவினர் ஒருவரிடம் இந்த நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய கோப்புகளை காட்டச் சொன்னேன், அப்போது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, நாம் கொடுக்கும் பணத்திற்கு இவர்கள் நிலங்களைத் தான் கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள், எங்கு நிலம் இருக்கிறது? அந்த நிலத்தை நாம் பார்க்க முடியுமா? எப்போது எனக்கு அது கிடைக்கும் என்ற என்னுடைய கேள்விக்கே அந்த முகவரிடம் பதில் இல்லை. நீங்க அதையெல்லாம் பார்க்க வேண்டாம், ஐந்து வருடம் முடியும் போது இவ்வளவு ரூபாய் (ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் தொகையை சொல்லி) உங்களுக்குக் கிடைக்கும் என்பது போல தான் சொன்னார்.

இந்த பிஏசிஎல்  நிறுவனத்திலிருந்து முகவர்களாகச் சுற்றி வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நிறுவனத்தின் செயல்முறைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு எல்ஐசி போன்று செயல்படும் ஒரு நிறுவனம், எல்ஐசியில் நாம் சேர்ந்திருக்கும் திட்டம் முடிவு பெற பதினைந்து வருடங்கள் பணம் கட்ட வேண்டும், அதன் பிறகு தான் நமக்கு மொத்த தொகை கைக்கு வரும். ஆனால் பிஏசிஎல் நிறுவனத்தின் திட்டங்களில் ஐந்து வருடம் பணம் கட்டினால் போதும், அடுத்த ஆறு மாதங்களில் முதிர்வு பணம் கைக்கு வந்துவிடும் என்பது போல தான் எல்லோரிடம் கொண்டு சேர்த்தார்கள். இன்னும் சிலரிடம் கூட்டுறவு வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் கட்டப்படும் ஆர்டி போலத் தான் என்றும், அதில் கிடைக்கும் முதிர்வு தொகையை விட இதில் அதிகமாகக் கிடைக்கும் என்றும் போகிற போக்கில் அள்ளி விட்டார்கள்.

கிராமங்களில் உள்ளவர்கள் மேலே சொல்லியவற்றையெல்லாம்  எப்படி நம்புகிறார்கள் என்பதில் தான் உளவியல் சிக்கல் இருக்கிறது, மேலே சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்தும் முகவர்கள் என்று சொல்லப்படும் உறவினர்களால் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இங்கு பிஏசிஎல் என்ற நிறுவனத்தை நம்புவதை விட மக்கள், இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லி வரும் உறவினர்களின் வார்த்தைகளை நம்புகிறார்கள், என்னுடைய பங்காளி என்னை ஏமாற்ற மாட்டான், என்னுடைய சித்தப்பா என் பணத்தின் மீது ஆசைப்பட மாட்டார், நண்பன் எதற்காக என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்பது போல இந்த முகவர்கள் என்ற உறவினர்கள் மீது அபார நம்பிக்கை வைக்கிறார்கள். இதனால் தான் இந்த நிதி நிறுவனம் செய்த மோசடியை, முகவர்கள் என்ற உறவினர்கள் செய்த மோசடியாக நினைத்து புழுங்குகிறார்கள். இன்றைக்கு இந்த பிஏசிஎல் என்ற நிறுவனம் செய்த மோசடியின் விளைவு பல குடும்பங்களின் உறவுகளை மிக மோசமாகச் சிதைத்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தால் இந்த பிஏசிஎல் நிதி நிறுவனத்தின் முகவர்கள் பத்து பேர் என்னைத் தேடி வருவார்கள் என்று சொன்னேன் அல்லவா, அவர்களைக் கல்யாணத்திற்கு முன்பு வரை எப்படியோ சமாளித்து விட்டேன், கல்யாணம் முடிந்த பிறகு இன்னும் கூடுதலாக வரத் தொடங்கினார்கள், இதற்கு ஒரே வழி, யாராவது ஒருவரிடம் ஒரு திட்டத்தில் சேர்ந்துவிட்டு, எல்லோரிடமும் நான் அவரிடம் பணம் கட்டுகிறேன் என்று முடித்துக் கொள்ளலாம் என்றால் யாரிடம் திட்டத்தில் சேர்வது என்ற சிக்கல்?.

நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் என்னுடைய குடும்ப காரர்களே பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாக இருக்கிறார்கள், அவர்களிடம் நான் சேராமல் உங்களிடம் சேர்ந்தால் நன்றாக இருக்காது என்று அவர்களை ஒரு வழியாகச் சமாதான படுத்தி அனுப்பிவிட்டு, குடும்ப காரர்களில் இருக்கும் முகவர்களிடம் சேரலாம் என்றால் எந்தக் குடும்ப காரரிடம் சேர்வது என்ற சிக்கல்?.

மனைவியின் உறவினர்கள் என்ற முறையில் இரண்டு பேர் முகவர்கள், அண்ணனின் மனைவியின்  உறவுமுறையில் சிலர், எங்களுடைய குடும்ப உறவினர்களில் பலர் என்று ஒரு பெரிய லிஸ்டே இருந்தது. என்னுடைய மனைவி என்னிடம், "எங்களது உறவினர்களாக இருக்கும் முகவர்களிடம்  நான் பேசிக்கொள்கிறேன்" வேறு இருப்பவர்களிடம் எவராவது ஒருவரிடம் சேருங்கள் என்று ஒரு சிக்கலை அவிழ்த்தார். மற்ற இரண்டு உறவினர்களில் கண்டிப்பாக ஒருவர் வீதம் போட்டு தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது. அண்ணனின் உறவினரில் அண்ணியின் சித்தி, எங்களின் குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது அண்ணனின் குழந்தைகளை பார்ப்பதற்காக வாருவார், எனவே அவரிடமே அண்ணனுடைய குழந்தையின் பெயரில் ஒரு திட்டத்தில் சேரலாம் என்றும், என்னுடைய மனைவி திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், எனவே அவருடைய பெயரில் ஒரு திட்டம் எடுக்கலாம் என்று என்னுடைய பெரியப்பாவின் மகள் எனக்கு அக்காள் முறை வரும் அவர்களிடம் சேர்வது என்றும் முடிவு செய்தோம். எல்லாம் ஒரு வருடம் ஆறு மாதம் நன்றாகத் தான் போனது, பணத்தை மாதம் மாதம் வீட்டிற்கே வந்து வாங்கிச் சென்றார்கள். ஒரு மாதம் பணம் கொடுப்பதற்கான ரசீதை அடுத்த மாதம் பணம் வாங்கும் போது கொடுத்தார்கள்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் மீது சிபிஐ புகார், அலுவலகங்களில் சிபிஐ  ரெய்டு என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்ததிலிருந்து அடிக்கடி எங்கள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் முகவர்களான உறவினர்கள் இப்போது வருவதில்லை, என்னுடைய அக்கா வாரத்திற்கு ஒரு நாளாவது எங்களுடைய வீட்டிற்கு வருவார். இந்த நிதி நிறுவனத்தின் மோசடிக்கு பிறகு எங்களிடம் என்ன சொல்வது என்ற தர்மசங்கட நிலைக்கு ஆளாகி வீட்டிற்கு வருவதை குறைத்துக்கொண்டார். நாங்களும் அவரை எங்காவது பார்த்தால் அவரிடம் என்ன கேட்பது, எப்படி கேட்பது என்ற தயக்கம், அப்படியே அவரிடம் கேட்டாலும், இந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை பற்றிய செய்திகள் அவருடைய மேலதிகாரிகளும் சரியாக சொல்வதில்லை என்று பதில் சொல்லுகிறார்கள். ஆனால் கட்டிய தொகை கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று இன்னும் எங்களை நம்ப சொல்லுகிறார்கள்.

இது என்னுடைய கதை இல்லை, பலருடைய குடும்பங்களில் இது தான் நிலைமை, காரணம் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல் எவரும் இந்த நிறுவனங்களின் நம்பிக்கையை விட, இந்த உறவினர்களின் வார்த்தையை நம்பி  தான் திட்டங்களில் அதிகமாகசேர்ந்தார்கள். நானும் கூட இந்த இரண்டு குடும்ப முகவர்களிடமும், உங்களுடைய நிறுவனத்தின் மீது எனக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது, உங்களின் வார்த்தையை நம்பியும், இதனால் உங்களுக்கும் ஒரு சிறு பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் நான் இந்தத் திட்டத்தில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தில் சேர்ந்திருந்த முகவர்களுக்குக் கொடுக்கப்படும் போனஸ் தொகையானது மற்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் தொகையை விட அதிகம், அதனால் அதிகமான முகவர்கள் இந்த நிறுவனத்தில் சேருவதில் காட்டிய ஆர்வம் இந்த நிறுவனத்தின் மோசடிக்குத் துணையாக அமைந்தது, மிகக் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் தன்னுடைய கிளைகளைக் கிராமங்களின் அடிவரையிலும் சென்று சேர்த்தது. முதல் ஐந்து வருடங்களில் சேர்ந்தவர்களுக்கு, சொல்லிய காலத்திற்குள் முதிர்வு தொகையை கொடுத்திருந்தது, அவ்வாறு கிராமங்களில் முதிர்வு தொகை பெற்ற ஒரு சிலரின் பெயர்களை மூலதனமாகச் சொல்லி  பலரிடம் இந்தத் திட்டங்களை கொண்டு சேர்த்ததில் இந்த முகவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

இந்த நிதி நிறுவத்தின் மோசடியால் பணத்தை இழந்தது ஒருபுறம் இருந்தாலும், குடும்ப உறவினர்களின் உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இன்றளவும் பலகுடும்பங்களில் உள்ளவர்கள் தான் கட்டிய பணத்தை உறவினர்களானமுகவர்களிடம் கேட்டு சண்டைகள் போடுகிறார்கள். இந்தச் சண்டையை சகிக்க முடியாமல் சில முகவர்கள் தங்களுடைய கை காசுகளைப் போட்டும், கடன் வாங்கியும் அவர்களுக்கான தொகையை திரும்பக் கொடுத்து குடும்ப உறவினர்களைத் திருப்தி படுத்துகிறார்கள்.




சஹாரா நிறுவனம் செய்த நிதி நிறுவன மோசடியை விட இந்த பிஏசிஎல் நிறுவன மோசடி பல மடங்கு பெரியது என்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிதி நிறுவன மோசடி இது தான் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதற்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று இன்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கும் பல கோடி ரூபாய் தொகையை அரசு அங்கீகரித்த வங்கிகள் மூலமாகத் தான் பரிமாற்றம் செய்திருப்பார்கள், சாமானியனான என்னால் ஒரு வங்கியின் மூலம் இன்னொருவரின் வங்கி கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கூட முழுமையாகப் பண பரிமாற்றம் செய்ய முடியவில்லை. ஒரு ரூபாய் பண பரிமாற்றம் செய்ய வேண்டுமானாலும்  நம்மிடம் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் இருக்க வேண்டும், எதற்காக என்று கேட்டால் இது தான் வாங்கியின் சட்ட நடைமுறை என்று நமக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இவர்களில் சட்டம் யாரை நோக்கிப் பாயும் என்பது ஏழை விவசாயி பாலனை தாக்கியதிலும், முதலாளி மல்லயாவை பத்திரமாக லண்டனில் சேர்த்ததிலும் தான் பல்லிளிக்கிறதே!..


இந்த நிறுவனத்தின் மோசடியைப் பற்றிய விகடன் கட்டுரை:

Friday, June 27, 2014

வாடா மச்சான்! ஒருத்தன் சிக்கிட்டான்!

என்னடா! ஹைதிராபாத் வந்து ஒரு வருடத்திற்கு மேலே ஆகியும் இன்னும் கம்பெனியில் இருந்து ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறார்களே! என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன்! சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே! கிளம்புவதற்குத் தாயார் ஆகிவிடு! என்று சொல்லிச் சிரித்தார். இந்த ஷாக் எனக்குப் புதிது ஒன்றும் இல்லாததால், நானும் சிரித்துக்கொண்டே எப்ப, சார்! கிளம்பவேண்டும்? என்று கேட்டேன். நாளைக்கே வேண்டுமானாலும் கிளம்பி வாருங்கள்! என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா! தான் அவ்வளவு சீக்கிரத்தில் ரெடியாகாது, குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிமுடித்தார்.

நான் ரெம்ப நாட்கள் ஹைதிராபாத்தில் இருக்கமாட்டோம்! என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ! அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு! தேவையானவைகளை வைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதவைகளை, நம்ம சொந்தகாரர்கள் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றார். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது.

இந்த இணையம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும், பல நேரங்களில் நம்மை அதில் அடிமையாக முடங்க வைத்துவிடும். கடந்த சனிக்கிழமை ஆபிஸ் லீவாக இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததே லேட்டாகத் தான். வெள்ளிக்கிழமை என்னுடைய வீட்டுப் பொருட்களை ஷிப்ட் பண்ணுவது பற்றி ஆபிசில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அப்போது, சென்னை நகர் பையன் ஒருவன், எதுக்குச் சார்! ரெம்ப யோசிக்கிறீங்க? இப்ப எல்லாம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று மூலைக்கு மூலை போர்டு மாட்டி வைச்சுருக்கானுங்க! அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க! பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே! என்று நோட் பண்ணிக் கொண்டேன். நேற்று ஆபிசில் நோட் பண்ணிய ஐடியா என்னவோ, காலையில் மனைவி கொடுத்த டீயுடன் வந்து மன‌தில் ஒட்டிக்கொண்டது.

இப்போது ஞாபகம் இருப்பதை, இப்படியே விட்டால் மறந்துவிடும் என்று, லேப்டாப்பை திறந்து இணையத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று தட்டியது தான் தாமதம். முதல் பக்கத்திலேயே சுலேகா டாட் காம் என்ற பேஜ் தானாகத் திறந்து போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி என்ற தகவல்களைக் கேட்டு, பாப் அப் வின்டோ ஒன்று ஓபன் ஆகியது. நான் உசாரா இருக்கிறேன்! என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும்? என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன? என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா? என்று எண்ணிக்கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து வருவதற்குள், மனைவி இரண்டுமுறை பாத்ரூம் கதவை தட்டிவிட்டார். என்னவென்று கேட்டால், உங்க போன் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்றார். யார் அடிக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு! என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன்! என்றார். சரி விடு! அடிக்கட்டும், நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தால், இரண்டு எண்களிலிருந்து பனிரென்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அந்த எண்களில் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்டால், சார், நாங்க! சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். நானும் அவரிடம் தெரியாமல் "ஆமாம்" என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் நாங்க உங்களுக்குப் பல பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விபரங்கள் தருகிறோம், உங்க மெயில் ஐடியை தாருங்கள் என்று கேட்டார். மெயிலுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மொபைலுக்கும் தொடர்ந்து மெசேஸ் வந்து கொண்டே இருந்தது.

தொடந்து வந்து கொண்டிருந்த மெஸேஜ்களில் இருவதிலிருந்து இருவத்தைந்து பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் விபரங்கள் மற்றும் போன் நம்பர்கள் இருந்தது. இதோடு விட்டுருந்தால் நல்லாயிருக்கும், ஆனா! அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான்! அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான்! எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல! அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள்! என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா! காலையில, ஒரு பத்து மணிக்குச் ச‌ங்கை எடுத்து ஊத ஆரம்பிச்சது.



சார், நீங்க வீட்டு பொருட்கள் ஷிப்ட் செய்ய வேண்டும் என்று சுலோகா டாம் காமில் சொன்னீங்களாம்!

ஆமாங்க! சொல்லியிருந்தேன்!

நாங்க‌ *---$%%%.. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸூல இருந்து பேசுறோம்!

அப்படியா! சொல்லுங்க.

எங்க, சார்! போகனும்?

அங்க, தான் போகனும்!.

என்னவெல்லாம் கொண்டு போகனும்?

இதெல்லாம் கொண்டு போகனும்!.

மேஜர் பொருட்கள் மட்டும் சொல்லுங்க?

டீவி, பிரிஜ், டைனிங்டேபிள், செயர், கூலர், பெட்!.

வண்டி இருக்க? சார்!

வண்டி இல்லங்க.

அலமாரி இருக்கா? சார்!

அலமாரி இல்லங்க.

நாகர்கோவிலில் இருந்து உங்க ஊரு எத்தனை கிலோமீட்டர்?

பதிமூணு கிலோமீட்டர்.

இவ்வளவு ரூபாய் ஆகும் சார்!

அப்படியா, நான் டேட் இன்னும் கன்பார்ம் ஆகல, டேட் கன்பார்ம் ஆனதும் சொல்லுறேன்.

நான் எப்ப, சார்! கால் பண்ணட்டும்?

அடுத்த வாரத்துல, கால் பண்ணுங்க.

மொத்தம் பதிமூணு பேரு, ஓர் ஆளு நானு, தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் என்று மூணு லாங்கேஜ் வேறு! கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது!.

இதுல ஒரே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் இருந்து, இரண்டு மூன்று பேர் மாறி மாறி வேறு பேசினார்கள், ஏம்ப்பா! இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார்! சுலேகாவில் இருந்து எனக்கும் மெஸேஜ் வந்தது, நான் ஆபிஸில் இல்லை, வெளியில் இருக்கிறேன். என்று மன்னிப்பு வேறு.

கொடுமை என்னானா! எல்லாத் தகவல்களையும் கேட்டுவிட்டு, சாரி, சார்! நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும்! இதோட நிப்பாட்டிக்கலாம்! என்று சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்பது தெரியாது.

காலையில, பத்து மணிக்கு ஆரம்பிச்சது, மாலையில் ஆறு மணி ஆன‌ பிறகும் விடலியே! நாலு பேரு, சார்! நாளைக்குக் காலையில வீட்டுக்கு வந்து, உங்க பொருட்களைப் பார்த்து கொட்டேசன் தருகிறோம் என்று அவர்களின் தொழில் நேர்மையை என்னிடம் விவரித்தார்கள்.

சும்மா, இணையத்தில் ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று போட்டுத் தேடியது ஒரு குற்றமா?. கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார்! டேட் கண்பர்ம் பண்ணுவீங்க! என்ற கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிட்டு இருக்கிறேன்.

நேற்றைக்கு எனக்குப் பதிலாக இங்கு ஹைதிராபாத் ஆபிஸில் புதிதாக ஒருவரை எடுத்திருந்தார்கள், அவர் பூர்வீகம் சென்னை. ஹைதிராபாத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்று இணையத்தில் நேற்று தேடிக்கொண்டிருந்தார். இன்னைக்கு ஆபிஸுக்குக் கொஞ்சம் லேட்டா வருகிறேன்! என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம்! யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ? வந்தா தான் விசாரிக்க முடியும்.

பார்ப்போம்! இன்னொரு பதிவு எழுத்துவதற்கு மேட்டர் தேறுமா என்று!

.
Related Posts with Thumbnails