Showing posts with label எதிர்வினை. Show all posts
Showing posts with label எதிர்வினை. Show all posts

Friday, July 15, 2016

சாருவின் அறிவுரைகள்_யாருக்கு?

சாருவின் கட்டுரைகளை இப்போது படிக்கும் போதெல்லாம் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்திருக்கும் வயசான பெரிசுகள் இன்றைய இளைய தலைமுறையை பார்த்து "லோகம் கெட்டு போயிடிச்சி பார்த்தேளா!" என்று புலம்பும் விதமாகத் தான் இருக்கிறது.  எங்கேயோ ஒரு முலையில் அமர்ந்து புலம்பும் பெரிசாக இவரும் இருப்பாரானால் நாமும் "போகட்டும்" என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால் இவரின் கழிவிரக்க புலம்பல்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் வரும் போது தான், நாம் இவற்றை விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. சமீபத்தில் வந்த தினமலர் பத்திரிக்கைகளில் இவர் எழுதிய கட்டுரையில் முதல் பத்தியிலேயே முரண்பாடுகளும், தடுமாற்றமும் தான், நீங்களே படித்து பாருங்கள்.

"வெறும், 100, 'லைக்' மட்டுமே வந்தால் மனம் பதறுகிறது; முகம் வாடுகிறது." இப்படி பெண்களை பற்றி எழுதியவர் அடுத்த வரியில் இப்படி எழுதுகிறார்.

"எந்தப் பெண்ணின் புகைப்படம் வரும் என்று, தவமாய்க் கிடக்கிறது மாபெரும் இளைஞர் கூட்டம். ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தவுடன், மாறி மாறி, 'சரசர' வென்று லைக்குகள் குவிகின்றன. வெறும் லைக்குகள் மட்டுமல்ல. 'ஆசம்... அடடா என்ன அழகு, மனம் கிறங்குகிறது, அழகே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை"

தர்க்கரீதியாக பார்த்தால், மேலே சொன்ன இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே உண்மையில்லை, பெண்கள் என்ற அடையாளத்துடன் கவர்ச்சியான புகைப்படங்களையும், கிளுகிளுப்பு ஏற்றும் கவிதைகளையும் பதிவிடுபவர்கள் உண்மையில் யார் என்று முகநூலில் அனா ஆவன்னா தெரியாத கத்துக்குட்டிகளுக்கு கூடத் தெரியும். உண்மை இப்படி இருக்க இவரோ அந்தப் படங்களுக்கு ஜொள்ளு விட்டு திரியும் சிறு கூட்டத்தை மிகைப்படுத்திப் புலம்புகிறார்.

"இவ்வளவுக்கும் அந்தப் பெண் செய்த சாதனை என்னவென்று பார்த்தால், காலையில் எழுந்து தன் புகைப்படத்தைப் போட்டு, 'குட் மார்னிங்' சொன்னார்; அவ்வளவு தான். இத்தனை லைக்குகளையும், கமென்டுகளையும் பார்த்த பெண்ணின் மனம் குதூகலிக்கிறது."

பெண்கள் தன்னுடைய புகைப்படத்தைப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா?.. உங்களுக்கு ஏன் சாரு வயிறு எரிகிறது? தனக்கு வராத லைக்குகளும் கமெண்டுகளும் இவர்களுக்கு வருகிறதே! என்ற ஆதங்கம் தான் இதில் வெளிப்படுகிறது. தாங்கள் இந்தப் பதிவிற்கு எதற்காக உங்களுடைய வரைபடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளும் வாசகர் கடிதத்தில் கூட "சாருவின் புகைப்படம் இல்லாமல் பத்திரிக்கையில் கட்டுரையா?" என்றெல்லாம் அள்ளித் தெளிப்பது எதற்காக?. தங்களின் புகைப்படம் பதிந்த டி-ஷர்டை எதற்காக வெளியிட்டீர்கள்?. பொதுவெளியில் வரும் போதெல்லாம் என்னைப் புகைப்படம் எடுக்க முடியுமா ? என்னைக் காணொளி எடுக்க முடியுமா? என்று கூவி கூவி அழைப்பது எதனால்? சமீபத்தில் உங்களுடைய புத்தகத்தில் உள்ள அட்டைப் படத்தில் தங்கள் புகைப்படத்தை சரியாக லே-அவுட் செய்யவில்லை என்று எத்தனைக் கட்டுரை எழுதினீர்கள்?

"எதார்த்த உலகில் ஒரு பெண்ணை, ஆண் எப்படி எதிர்கொள்கிறான்? எந்தப் பெண்ணிடமும் ஒரு ஆண் எடுத்த எடுப்பில், 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொன்னால், உதை தான் விழும்."

எதார்த்த உலகம் மட்டுமல்ல, இணைய உலகிலும் "உதை தான் விழும்" சாருவிற்கு விழுந்த உதை மறந்து விட்டது என்று நினைக்கிறேன். உங்களின் முகநூல் பேச்சுக்கள் அதற்கான எதிர்வினைகள் இன்றும் இணையத்தில் இருக்கிறது.

"ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'சாட்டிங்'கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, 'வாடி, போடி' என்று அழைக்க முடியும்."

இந்த மைனர் குஞ்சு வாயில் வடை சுடுகிறது, சாரு அந்த மைனர் குஞ்சு சுட்ட வடையை எடுத்துக் கொண்டு வந்து பொதுவெளியில் வைத்து உளுந்து வடையா? பருப்பு வடையா? என்று கிண்டி பார்க்கிறார். அய்யோ சாரு, கிண்டிப் பார்க்க வேண்டியது வடையை அல்ல மைனர் குஞ்சை. சமீபத்தில் இறைவி படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கும் ஆண் நண்பர், அந்தப் பெண் நண்பரிடம் சொல்லுவது தான் எனக்கு ஞாபகம் வருகிறது, எனக்கும் இது தான் முதல்முறை, ஒரு பெண் கூட என்னைக் கிட்ட சேர்க்க மாட்டார்கள், வீட்டிற்குக் கூட அழைக்க மாட்டார்கள் என்ற நிதர்சன உண்மையை  வருத்தத்துடன்  சொல்வார், அதற்கு அந்தப் பெண் நண்பர் "அப்ப நீ அட்டைக் கத்தியா" என்று கேட்டு சிரிப்பார்.

நிதர்சன உலகில் சிலர், இந்தப் பெண்ணை நான் வளைத்துக் காட்டட்டுமா? அவளை என்னிடம் "ஐ லவ் யு" சொல்ல வைக்கட்டுமா? என்று உதார் விட்டுக் கொண்டு நடப்பார்கள், நிஜத்தில் தன்னால் செய்ய முடியாத ஒன்றை, தான் செய்ததாகவும், செய்யப் போகிறதாகவும் சொல்லிக்கொண்டு கனவுலகில் மிதப்பார்கள், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் இப்படியானவர்களின் பேச்சை பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஜெயமோகன் அவர்கள் சாருவிற்கு புனைவு எழுத வாராது என்று சொல்லியதை படித்திருக்கிறேன். சாருவின் எழுத்தில் அதை பார்த்திருக்கவும் செய்திருக்கிறேன், கீழே சாரு எழுதியிருக்கும் பத்தியில் இருப்பது புனைவா? நிதர்சனமா? ஒரு வித தடுமாற்றத்துடனே தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

"'வாடி, போடி!' ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை."

" 'சாட்டிங்'கின் முடிவில் அது, 'செல்லம்' வரை போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்."

முதல் பத்தியில் "தப்பு தாண்டா பேச்சு எதுவும் இல்லை" என்று பூசி மெழுகுகிறார், அப்படியே அடுத்த பத்தியில் "செல்லம் வரை போய் விட்டது" என்று அங்கலாய்க்கிறார்.

ஒரு பெண் தன்னுடன் மட்டும் தோழியாக பேசினால் அது "சுதந்திரம்" அவள் அப்படியே தோழியாக இன்னொரு ஆணிடம் பேசினால் "கட்டற்ற சுதந்திரம்" உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் தீயை வைக்க... போங்கய்யா போங்க !!


கட்டுரையின் இணைப்பு:


சாருவின் தினமலர் முதல் கட்டுரைக்கு நான் எழுதிய முகநூல் பதிவு:

இது தான் சாத்தான் வேதம் ஓதுவது!

முகநூலில் உள்ள உள் பெட்டியில் இளம் பெண் ஒருவரிடம் இந்த எழுத்தாளர் செய்த வக்கிர பேச்சுகளின் ஈரம் இன்னும் காயவில்லை, அதற்குள் வந்துவிட்டார் லோகத்துக்கு அறிவுரை சொல்ல... பிரபல கவிஞர் சொன்னது போல் போங்கய்யா! போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கள் என்று சொல்ல மாட்டேன்! போய் முதலில்‌ பொதுத் தளத்தில் பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று படியுங்கள்! அப்புறம் வந்து பொங்கல் வைக்கலாம்.

பாமினி என்று பெண் வாசகருக்கு இந்த எழுத்தாளர் சொன்னதாவது இவருக்கு ஞாபகம் இருக்கிறதா? மறந்துவிட்டது என்றால் அவருடைய‌ விமர்சகர் வட்டம் வந்து கேட்டால் பக்குவமாகச் சொல்லுவார்கள்.

பெண்களைப் பற்றிய இவரின் மனோபாவத்தை இயக்குநர் மிஸ்கின் அவர்களிடம் கேட்டால் தெரியும்!

வாசகர்களுக்கு மறதி என்று ஒன்று இருப்பது இவர்களுக்குச் சாதகமாக போய்விடுகிறது ..

கட்டுரையின் இணைப்பு:

மனோபாவம் மாற வேண்டும்!
.

Wednesday, June 22, 2016

நாகர்கோவில்_ஜாக்கி ஜட்டி கிடைக்குமிடம்?

சமீபத்தில் லங்கோடு போடுவதிலும், வாங்குவதில் உள்ள பிரச்சனைகளை பற்றித் தான் தற்போதைய இலக்கிய உலகம் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் நமது மாவட்ட இலக்கிய பிதாமகர் வெளியூர் பயணத்திற்கு தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்ற போது எங்கும், எதிலும் நீக்க மற போலிகள் நிறைந்திருப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை தொடர்ந்து முகநூலிலும், வலைத்தளத்திலும் யாரெல்லாம் பிராண்டட் ஜட்டி போடுகிறார்கள்/லோக்கல் உபயோகிக்கிறார்கள் என்ற முக்கியமான ஆய்வுகளில் நம்மவர்கள் திளைக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பாக தனக்கு ஜாக்கி ஜட்டி கிடைக்கவில்லையென்றும், நாகர்கோவிலில் மிகப் பெரிய ரெடிமேட் ஷாப் "டவர் ரெடிமேட்" கடையில் கூட அந்த பிராண்ட் ஜட்டி கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் எழுதியிருந்தார். நாகர்கோவிலில் எங்குத் தேடியும் டியூரோ செல் பேட்டரி கிடைக்கவில்லை என்ற ஒரு புகார் வேறு அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் கட்டுரைக்கும் வரும் வாசகர் கடிதத்தை பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள், ஜட்டியே போடுவது இல்லை போலவும், இப்போதும் பழைய வேட்டியைக் கிழித்து கோவணமாகச் சுற்றி கொண்டிருப்பவர்கள் போலவும், ஒரிஜினல் பிராண்டுக்கும், டூப்பிளிகேட் பிராண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குபவர்கள் போலவும் ஒரு தோற்றம் அந்தக் கட்டுரையில் தென்படுகிறது. அதிலும் இங்குள்ள எந்தக் கடையிலும் ஒரிஜினல் பொருட்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைக்கிறார்.

எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் பல வேலைகளுக்குச் சென்றவர்கள். இப்போதும் பெரும்பான்மையான குடும்பத்தில் ஒருவராவது வளைகுடா நாடுகளில் வேலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பிராண்டட் எலக்ட்ரானிக் பொருட்களை தான் வாங்கி வைத்திருப்பார்கள். சொந்தக்காரனிடம் கூட வெளிநாட்டிலிருந்து உனக்காகக் கொண்டு வந்தேன் என்று ஏதாவது ஒரு பொருளை நீட்டினால், சோனியா, மேட் இன் ஜப்பானா என்று கேட்டு தான் வாங்கிக் கொள்கிறார்கள், அப்படியான ஊரில் நமது ஜெயமோகன் அவர்கள் சொல்வது போல் டூப்பிளிகேட் பொருட்களை மட்டுமே நம்பி ஒருவர் கடையை திறந்தால், அவர் சீக்கிரம் அந்தக் கடையை மூடி விட்டு போக வேண்டியது தான். அதற்காக எனது மாவட்டத்தில் போலி பிராண்டட் பொருட்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். எத்தனை டூப்பிளிகேட் பிராண்டட் இருக்கிறதே, அதே அளவு ஒரிஜினல் பிராண்டும் இருக்கிறது என்பது தான் நான் கூற வருவது.

ஜாக்கி ஜட்டி பற்றி சொல்லவே வேண்டாம், இப்போது கல்லூரியில் படிக்கும் அனைத்து இளைய பட்டாளங்களும் அந்த பிராண்டட் ஜட்டியின் ரோப் வெளியில் தெரியும் அளவிற்கு தான் ஜீன்ஸ் பேண்ட் வாங்கி அணிகிறார்கள். அதனால் இலக்கியம் படைக்கும் பெருசுகள் எல்லாம் ஜாக்கி ஜட்டியை வாங்கி தன்னுடைய வேட்டி, மற்றும் பேண்டுக்கும் மறைவாகப் போட்டுவிட்டு நாங்களும் பிராண்டட் ஜட்டி தான் போடுகிறோம் என்று இளசுகளின் முன்னால் மார் தட்டிட முடியாது, வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், சூப்பர் மேன் போல் ஜட்டியை வாங்கி பேண்டுக்கு மேல் போட்டு கொள்ளலாம்.

நமது எழுத்தாளர், நாகர்கோவில் முழுவதும் ஒரு ஜாக்கி ஜட்டி வாங்க அலைந்தேன், எங்கும் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பது தான் என்னை இந்தக் கட்டுரையை எழுத வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது, மிகப் பெரிய எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை படித்த அவருடைய வாசகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தால் ஒரு பிராண்டட் லங்கோடு கூட வாங்க முடியாது போல! என்ற முன் முடிவுக்கு வரக்கூடும். அதற்குத் தினமும் அவரது இணையதளத்தில் ஜாக்கி ஜட்டி கட்டுரைக்கு வந்து கொண்டிருக்கும் வாசகர் கடிதங்களே சாட்சி!

அவர் வீடு இருக்கும் பார்வதிபுரத்திலிருந்து அப்படியே செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி நடந்தால், பால் பண்ணை பஸ் ஸ்டாப் வரும், அந்த சிக்கனலில் இருக்கும் ஹோண்டா டூவீலர் ஷோரூம் பக்கத்தில் ஒரு மெகா மார்ட் இருக்கிறது, அங்குப் போனால் வித விதமான ஜாக்கி ஜட்டிகள் வாங்கலாம், இந்த ஜட்டியில் என்ன வித விதமான என்று கேட்கிறீர்களா? இருக்கிறது, இந்தமுறை நான் வாங்கிய கிளாசிக் டைப் ஜாக்கி ஜட்டி, காலேஜ் பசங்க போடுற ஜீன்ஸ் பேண்டு போல் பிருஷ்டத்திற்கு கீழாக நிற்கிறது, எவ்வளவு தான் முயற்சித்தாலும் பாதி பிருஷ்டத்திற்கு மேல் ஏற மாட்டேன் என்கிறது, உன்னோட பிருஷ்டம் பெருசு ஆனதற்குக் கடைக்காரன் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் என்னுடைய பிருஷ்டம் பெரிதானதால் வந்த பிரச்சனை இல்லை, அந்த வகையான மாடலின் வடிவமைப்பே அப்படி தான் இருக்கிறது, என்னென்ன வகை இருக்கிறது என்று தெரிய வேண்டுமானால் குகூள் செய்து பாருங்கள் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அதனால் ஜாக்கி ஜட்டி வாங்குபவர்கள் இதையும் கவனத்தில் வைத்து வாங்குங்கள். இந்தமுறை நான் வாங்கிய நான்கு செட் ஜாக்கி ஜட்டியை போடாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறேன். ஏன்டா! ஒரு எதிர்வினை கட்டுரையில் கூட அட்வைஸ், மெசேஜ் என்ற மொக்கைகள் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டே! என்று சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது..ஹி.. ஹி..

அப்படியே நமது எழுத்தாளர் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டு, மீண்டும் செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி முன்நோக்கி நடந்து அடுத்த பஸ் ஸ்டாப் ஆன மத்தியாஸ் வார்டு வந்தால் அங்கு டெரிக் சூப்பர் மார்கெட் இருக்கிறது. இவருக்கு டூயூரோ செல் பேட்டரி என்ன, பிலிப்ஸ் மற்றும் சானியோ பிராண்ட் பேட்டரி வகைகள் வரைக் கிடைக்கும். நமது எழுத்தாளர் இன்னும் திருவிதாங்கோடு பக்கம் இருக்கும் கடைகளுக்கு போனது இல்லை என்று நினைக்கிறேன், வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாக்லெட் வரை அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கிறது, அப்படி அந்தக் கடைகளில் இல்லையென்றால், என்ன பொருள் வேண்டும் என்பதை நாம் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் ஒரு வாரக் காலத்தில் நமக்கு வாங்கி வந்து தருகிறார்கள்.

இந்த பிராண்டட் பொருட்கள், நான் சொல்லிய இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கும் கிடைக்காதா என்றால், இல்லை வேறு பல இடங்களில் இருக்கும் கடைகள் பற்றியும் என்னால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்க முடியும், ஆனால் நமது எழுத்தாளரின் வசதிக்காக அவர் வசிக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிடைக்கும் கடைகளை மட்டும் எழுதியிருக்கிறேன்.



ஜட்டி பற்றிய கதை வந்ததால், எனது நண்பருடைய அனுபவத்தையும் சேர்த்து எழுதுகிறேன், இந்த அனுபவம் வட இந்தியா போன போது எனக்கும் ஒருமுறை நடந்து இருக்கிறது. சவுதியில் நண்பர் ஒருவரை ஒரு புது ப்ரொஜெக்ட் விசயமாக, ஒரு நாள் மீட்டிங் போய் வரலாம் என்று மேனேஜர் அழைத்துக் கொண்டு போயிருந்தார். அந்த ப்ரொஜெக்ட் பண்ண வேண்டிய சைட் கொஞ்சம் ரிமோட் ஏரியா, பெரிதாக டெவலப் ஆகாத சிட்டி. நண்பரும் ஒரு நாள் தானே, என்று அதிகமான துணிகள் எடுத்துப் போகவில்லை, இரண்டு செட் துணிகள் மட்டும் கைப் பையில் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். ப்ரொஜெக்ட் மீட்டிங் முடிந்தவுடன், உங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு ஆள் இன்றிலிருந்தே வேலையைத் தொடங்க வேண்டும், உங்கள் ப்ரொஜெக்டுக்கு தேவையான அனைத்தும் டாக்குமெண்டுகளும் வரத் துவங்கி விட்டது என்று கிளைண்ட் வற்புறுத்தியிருக்கிறான். அப்புறம் என்ன, ப்ரொஜெக்டில் கிளைன்ட் சொன்னால் தட்ட முடியுமா? ஒரு வாரம் "நீ சமாளித்துக் கொள்!" என்று நண்பரை அடகு வைத்துவிட்டு மேனேஜர் வந்து விட்டார்.

ஒரு வாரம் என்று நினைத்து, ஒரு மாதம் அந்த நண்பர் ப்ரொஜெக்டில் தனியாக இருக்க வேண்டி வந்தது, அதன் பிறகு தான் என்னுடன் சேர்ந்து மூன்று பேர் வந்தோம். ஒரு மாதம் நண்பர் தங்கியிருந்த ஹோட்டலில் தான் நாங்களும் தங்க வைக்கப் பட்டோம், நண்பரின் ரூமில் ஒரு மூலையில் கசங்கிய ஜட்டி குவியாக கிடந்தது, என்ன என்று விசாரித்த போது, ஹோட்டலில் துணி துவைப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றும், வெளியில் லாண்டரியில் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கும் ஜட்டி குவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், இங்கிருக்கும் லாண்டரி கடையில் ஒரு ஜட்டி துவைப்பதற்கு கூட இரண்டு ரியால் கேட்கிறான், இரண்டு முறைத் துவைக்க கொடுத்தால் நான்கு ரியால் ஆகிறது, புதிதாகக் கடையில் விற்கும் பத்து ஜட்டிகள் இருக்கும் பாக்கெட் முப்பது ரியால் தான் சொல்கிறான், அதனால் நான் இரண்டு பாக்கெட் வாங்கி உபயோகித்து வருகிறேன் என்று சொன்னார்.


.


.

Saturday, June 21, 2014

வம்புக்கு இழுப்பது_இலக்கியம் யார் படைக்கிறார்கள்?

வலைத்தளங்களில் எழுதுவர்களில், ஆண்களிடமிருந்து அதிகமாக இப்படியான புலம்பல்களைப் பார்க்க முடியும். நான் பக்கம், பக்கமாக எழுதினாலும் ஒரு கமெண்டோ, லைக்குகளோ விழுவது இல்லை. ஆனால் பெண்கள் தும்மினாலும் கூடப் பல கமெண்டுகளும், லைக்குகளும் வந்து விழுகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?. இதற்குத் தான் இந்தச் சமூகத்தில் வாழமாட்டேன் என்று சொல்லுகிறேன். நான் தமிழில் இலக்கியம் படைக்காமல் இருப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது காரணம் வேண்டுமா?. இந்தச் சமூகம் என்னைத் தூக்கி அடிக்கிறது(எப்படிப் படிக்க வேண்டுமோ உங்கள் விருப்பம்) என்பதற்கு இதைவிட வேறு காரணம் இருக்க முடியாது.

மேலே குறிப்பிடும் புலம்பலில் இருக்கும் சில அடிப்படையான கேள்விகள். பெண்கள் எழுதும் தும்மல்களுக்கு அதிகமான லைக்குகள், கமெண்டுகள் போடுபவர்கள் யார்? அவர்கள் ஆண்களா? பெண்களா?. எல்லோருக்கும் தெரியும் ஆண்கள் தான். அப்படியானால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. இதில் பெண்களின் மீது வன்மம் வளர்ப்பதற்கு என்ன வேண்டி இருக்கிறது?. ஆனா... ஊனா.. கூட்டம் கூட்டமாக லைக்குகளைப் போட்டுக் கொண்டு அலையும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்?. உங்கள் இலக்கிய அறிவு என்னவென்று?. தினம் ஒரு தகவலாக இலக்கியம் படைக்கும் இலக்கியவாதியும், கனவில் வரும் செவ்விலக்கியங்களைத் தமிழில் படைக்கும் இலக்கிய ஆளுமையும் அல்லவா யோசிக்க வேண்டும்?. நம்முடைய இலக்கியப் படைப்புகளை இவர்களை எந்தளவிற்கு வருத்தியிருக்க‌ வேண்டுமென்று?. தும்மலைப் போடும் எந்தப் பெண்களும் வாருங்கள்! வந்து லைக்கு, கமெண்டு போடுங்கள் என்று புலம்பியதாகவோ! அல்லது இன்னும் புலம்பப் போவதாகவோ அறிவிக்க வில்லை. நாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம்! உலக மகா இலக்கியவாதிகளே வாருங்கள்! வந்து எங்களுக்கு மதிப்பெண் தாருங்கள் என்று கேட்ட‌தாகவும் தெரியவில்லை. எங்களுக்கு விருப்பமானவைகளை படைக்கிறோம். உங்களுக்குப் பிடித்தவைகள் படைக்க வேண்டும் என்று எங்களை அடிமை படுத்தாதீர்கள் என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். இதுதான் உங்களுக்குப் பொறுக்கவில்லை, இங்குத் தான் வருகிற‌து ஆணாதிக்க மனோநிலை.

நம்முடைய சில‌ தமிழ் திரைப்படங்களில் பெண்களின் அங்கங்களுக்கு மதிப்பெண் போடும் காட்சிகளைப் பார்க்க முடியும். அதைப் பெண்களும் ரசிப்பதாக அந்தத் திரைப்படங்களில் காண்பித்திருப்பார்கள். அந்தப் புத்தம் புதுக் காட்சியைத் திரையில் வைப்பவர்கள் ஆண்கள் தான். அதை ரசிப்பவர்களும் ஆண்கள் தான். எதார்த்த வாழ்க்கையில் என்னவோ! பெண்கள் எல்லாம் தங்களுக்கு மதிப்பெண் போடுவத‌ற்கு உங்களை அழைத்தாகக் கருதி வர்ணித்தால் செருப்படியும், துடைப்பக்கட்ட அடியும் தான் மிஞ்சும். 

சரி, இப்போது ஜெ.மோ அவர்களின் பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பிரச்சனையின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். எல்லோராலும் இலக்கியவாதி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஆ.வி.யில் தமிழின் இலக்கிய‌ வருங்காலம் இவர்கள் கையில் தான் படப்போகிற‌து என்று ஒரு லிஸ்டை எழுதுகிறார். அதில் சில பெண் எழுத்தாளர்களின் பெயரும் இடம் பெற்றுவிட்டதாம். அதில் தான் ஜொ.மோ அவர்கள் பொங்கிவிட்டார். முக்காலமும் நாங்கள் தான் இலக்கியம் படைப்போம் என்று படைத்த பிரம்மனிட‌மே, குத்தகை வாங்கி வந்த பிறகு இப்படி ஒரு லிஸ்டை எப்படிப் போடலாம் என்று அறசீற்றம் கொள்கிறார் பாவம் தான். அறம் பாடும் இலக்கிய ஆளுமைக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணீர் வடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன?.

இவர் பொங்கும் பொங்கலை எல்லாம் லிஸ்ட் போட்ட, நா.நா அவர்களிடம் தான் பொங்கியிருக்க வேண்டும். அந்தப் பெண் எழுத்தார்கள் என்ன படைத்திருக்கிறார்கள்?. தமிழ் இலக்கிய உல‌கில் அவர்களின் பங்களிப்பு என்ன?. எவருடைய இலக்கியங்களையாவது படித்திருக்கிறார்களா?. அப்படியென்றால் அவற்றின் தரவுகள் எங்கே?. அவற்றையெல்லாம் எனக்குத் தொகுத்துத் தரமுடியுமா?. எதன் அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்? என்று நீங்கள் எழுதினீர்கள்? என்பதாக, கம்பை நா.நா. பக்கம் சுற்றியிருக்க வேண்டும். இப்படியான இவர்களின் கம்பு சுற்றலில் நமக்கும் இன்னொரு மான் கராத்தேவைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால் ஜொ.மோ.வோ முச்சந்தியில் நின்று கொண்டு ஒரண்டை இழுத்துக்கொண்டு சொல்கிறார், இந்தக் குழாயடிச் சண்டைகளை வெறுக்கிறேன். என்னோட நிலை ரெம்பப் பெரிது. இவ்வுலகில் நான் இல்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசுகிறார். முச்சந்தியில் நின்று ஒரண்டை இழுத்தால் முகம் தெரியாதவனும் தான் கல்லெடுத்து அடிப்பான். குழாயடிச் சண்டையை விட ஒரண்டை இழுப்பது இன்னும் மோசம்.

ஜெ.மோ. எழுதுவது எப்படி ஒரண்டை இழுப்பது ஆகும்?. எந்தப் பெண் எழுத்தாளர்களும், நாங்கள் பெரிய எழுத்தார்கள் என்று உங்களிடம் வந்து கொடிப்பிடிக்கவில்லை. எங்களுக்கு அங்கீகார‌ம் கொடுங்கள் என்று உங்களிடம் அவர்கள் கையை ஏந்தி நிற்கவில்லை. எங்களுக்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள் என்றும் வரவில்லை. அப்படியிருக்கும் போது எவரோ ஒருவர் எழுதினார் என்று அவர்களை இழுத்துப் போட்டுப் பொதுவீதியில் வைத்து நக்கல் செய்வதை என்னவென்று சொல்வது?.

பொதுவான தரவுகளைச் சுட்டித் தான் ஜெ.மோவும் எழுதினார். எதையும் ஆதாரபூர்வமாகச் சுட்டி எழுதவில்லை. உண்மையில் பெண்களின் படைப்புகள் மீது அக்கறையிருந்தால் அவர்தான் இந்தச் சமகால இலக்கியச் சூழலில் பெண்களின் பங்களிப்புகள் பற்றிய தரவுகளைத் தந்து எழுதியிருக்க வேண்டும். அவர்களின் படைப்புகளின் மீது விமர்சனங்களை வைத்திருக்க வேண்டும். அந்த விமர்சனங்களைப் பொதுவெளியில் விவாததிற்கு விட்டிருந்தால் பாரட்டியிருக்கலாம். ஆனால் இவர் செய்தது என்ன?. இவர் செய்யாததை எதிர்வினைக்கு மட்டும் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன‌ மனநிலை?.

சரி, இவை ஒருபுறம் இருக்கட்டும். தான் படிப்பது எனது மனைவிக்குக் கூடத் தெரியாது. (இது, தான் இன்று வாக்காலத்து வாங்கி எழுதும் எழுத்தாளருக்கு ஒரு சம‌யத்தில் சொல்லிய‌ பதில் தான்) தமிழ் நூல்களைப் படிப்பதை நான் வதையாக உணர்கிறேன் என்றெல்லாம் எழுதும் அல்டிமேட் எழுத்தாளர் சாரு அவர்கள், தனது சக எழுத்தாளருக்காகப் பொங்கும் போது, அவருடைய விஷ்ணுபுரம் நூலையாவது இந்தப் பெண் எழுத்தாளர்கள் படித்திருப்பார்களா? என்று கேள்விக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கான பதில், மேலே எழுதியிருக்கும் வாக்கியங்களுக்கான‌ நகைமுரண் ஒன்று போதும்.

பெண் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று எழுதுவதற்கு முன், கொஞ்சம் சிந்தியுங்கள். யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள்?. எழுத்தில் இல்லாத அங்கீகாரத்தைப் பாலினத்தில் பெற முடியுமா?. அப்படிப் பாலினம் பார்த்துக் கொடுத்தால் யார் அந்த அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள்?. அந்த அங்கீகாரம் கொடுப்பவர்களின் இலக்கிய அறிவு/புரிதல்/ஆளுமை என்ன?. நீங்களே நிமிர்ந்துப் படுத்துக் கொண்டு உங்கள் மீதே காறி உமிழ்கிறீர்கள்.

முதலில் பெண்களை எழுதவிடுங்கள். அதன்பிறகு அவர்கள் படைத்தார்களா? இல்லையா? என்று உங்கள் அளவுகோல்களை நீட்டுங்கள். தலையெடுக்கவே அவர்கள் பல தடைகளைத் தகர்க்க‌ வேண்டியிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் எழுதுவதற்கு வந்தால் எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டும் என்று மன‌சாட்சி உள்ள ஆண்கள் சிந்தியுங்கள். இன்றைய சூழ்நிலையில் வலைத்தளங்களில் இயங்கவே பெண்களுக்கும் இருக்கும் சவால்கள் பெரிது. அவர்களும் படைப்பார்கள், படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்க முன்வாருங்கள். இப்போதே தட்டி மூலையில் அமர வைக்காதீர்கள்!.. 

Saturday, April 19, 2014

சனிக்கிழமையானால் சண்டியர்!!!

ஒருவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியான ஆள் எவராக இருக்க முடியும். உழைப்பை சுரண்டுபவர்களைப் பற்றி அறிந்தவர்களால் தான் என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. ஆனால் நீ ஒரு கார்பரேட் முதலாளியிடம் பணிசெய்வதால் தொழிலாளர்கள் பற்றிப் பேச உனக்கு உரிமையில்லை என்று சொல்வது எப்படியான வாதம் என்று எனக்குப் புரியவில்லை.

நீ அந்தக் கார்பரேட் அலுவலகத்தில் உழைத்த உழைப்பை வெளிநாட்டுக் கம்பெனிக‌ளிடம் கொடுத்து லட்சம் டாலர்கள் சம்பாதித்துவிட்டு, அதில் வரும் சில லட்சங்களை ரூபாயில் உனக்குக் கூலியாகத் தருகிறார்கள். முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்கள் எப்படிப் புரட்சி, போராட்டம் என்று பேசலாம் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய கூலியை தான் வாங்குகிறோம் என்பதைக் கூட அறியாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?.

நண்பரே! ஓடாத குதிரையை எவரும் வாங்கி ரேசில் ஓட விடுவது இல்லை. வலுவான குதிரையின் மீது தான் பணம் கட்டுவார்கள். அதேபோல் தான் உழைக்காத‌ எவருக்கும் லட்சங்களில் சம்பளங்களை இந்தக் கார்பரேட் கம்பெனிகள் கொடுத்துவிடுவதில்லை என்பதை நண்பர் புரிந்தால் நலம்.

ஒரு பண்ணையாரிடம் பல‌ தொழிலாளிகள் வேலைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பண்ணையார் தொழிலாளிகளிக்கு உரிய ஊதியத்தை கொடுக்காமலும், தொழிலாளிகளின் நலனில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களை அவரின் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளிகளை விட எவர் அதிகாமாகத் தெரிந்து வைத்துக் இருக்க‌ முடியும்?. அந்தத் தொழிலாளி வர்கம் பண்ணையாரிடம் வாங்கிய சம்பளத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறது என்ற காரணத்திற்காக, அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களுக்கு எதிராகக் கருத்துக்களோ அல்லது போராட்டங்களே செய்யக் கூடாது என்று சொல்வது என்னவகையான நியாயம்?.

குடிப்பது தவறு என்று சொல்கிறோம். ஆனால் உனக்குத் தான் குடிப்பழக்கமே கிடையாதே, அப்புறம் நீ எல்லாம் எப்படி அய்யா குடிப்பழக்கம் தீங்கு என்று சொல்லவருகிறாய் என்று கேட்பது போல் தான் இருக்கிறது வா. மணிகண்டன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவு. குடிப்பழக்கத்தின் கொடுமையை ஒருவர் அனுபவித்துத் தான் அறியவேண்டும் என்றில்லை. அதன் வீச்சுச் சமூகத்தில் எத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற‌து என்பதைச் சிந்திக்கச் சிறிய அளவு மூளை இருந்தால் போதுமானது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பல வகையான போராட்டங்களில் பெரியளவில் கவனத்தில் ஈர்த்தது காந்தியடிகளின் "ஒத்துழையாமை இயக்கம்". வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படியானால் ஆங்கிலேயர்களில் கீழ் வேலைப்பார்த்துவிட்டு, அவர்களிடம் ஊதியமும் வாங்கிவிட்டு எப்படி அய்யா? இந்தப் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என்று கேட்பதற்கு ஒப்பாகும் உங்களின் இந்த‌ப் பதிவு.

நானும் முழுமையாகக் கம்யூனிசத்தைப் படித்தவன் இல்லை. எல்லா இசங்களையும் கரைத்து குடித்தவனும் இல்லை. ஏதோ பொதுவுடமை தத்துவ நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொள்கை இல்லாத வழ்க்கை என்பது உயிர் இல்லாத உடம்பு போன்றது என்பதை முழுமையாக நம்புப‌வன். கொள்கைகள் மட்டும் தான் எந்தவொரு சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் என்று இன்றும் ந‌ம்புப‌வன். தனிமனித துதிபாடல்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை, மக்களால் தூக்கியெறியப்படும்

சில ம‌னிதர்களைக் குறிவைத்து எழுதிய பதிவாக எனக்குத் தெரியவில்லை. அப்படியாகயிருந்தால் அவர்களின் பெயர்களையோ, தளங்களையோ சுட்டி எழுதியிருப்பார். ஆனால் போகிற போக்கில் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவனெல்லாம் கம்யூனிசத்தைப் பற்றிப் பேசுவதா? என்று தலையில் குட்டு வைத்துவிட்டு செல்வதால் தான் இந்த ப‌திவு எழுத தேவையாயிற்று.



.

Sunday, April 6, 2014

மல்லிகைப் பூ மணத்தில் மீன்குழம்பு!!

என்னவோ தெரியவில்லை, கன்னியாகுமரி எனது மாவட்டம் என்பதால் மீன் என்பது என்னுடைய வாழ்வியலில் ரெம்ப நெருக்கமான ஒன்று. இத்தகைய நெருக்கம் என்பது எனக்கு மட்டும் அல்ல, எனது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலனவர்களும் அப்படித் தான். கண்டிப்பாக வாரத்தில் ஆறு நாட்களும் மீன் குழம்பும், பொரித்த மீனும் எங்கள் வீட்டில் இருக்கும். அப்படியென்றால் ஒரு நாள் மட்டும் காய்கறி சாப்பிடுவீங்களா? என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது தான். ஞாயிறு விடுமுறை என்பதால் கடலிற்குப் பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்கச் செல்வது இல்லை, அதனால் அன்று எங்கள் ஊரில் இருக்கும் மீன் சந்தையில் மீன்கள் வருவது இல்லை. அதற்குப் பதிலாக‌ அன்று ஒரு நாள் மட்டும் அந்த மீன் சந்தையில் சிக்கன் அல்லது மட்டன் கடையைப் போடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்க்குப் போய்விட்டு விட்டு வீட்டிற்கு வரும் போதே அப்பா கையில் கறியுடன் தான் வருவார். காலையிலேயே டிபன் கறிக்குழம்புடன் தான் ஆரம்பம ஆகும். இந்த நிகழ்வு எங்கள் வீட்டில் மட்டுமே நடக்கும் என்பது இல்லை, எங்கள் ஊரில் இருக்கும் பெரும்பாலனவர்களில் வீட்டில் வாரம்தோறும் நடக்கும் நிகழ்வு இது தான்.

எங்கள் ஊரில் மீன் என்பது சென்னை போன்ற பெரு நகரங்களில் விற்பதை போல் எடைப் போட்டு விற்பனை செய்வது இல்லை. நெத்தலி, கூனி போன்ற சிறுமீன்களைக் கூறு(சிறுக்குவியல்) போட்டு விலையைச் சொல்லுவார்கள். சாளை, மத்தி போன்ற மீன்களை எண்ணம் வைத்து விற்பார்கள். அயிலை, நெய்மீன், வெங்கட, விளமீன், வாளை, பிள்ளை சுறா, சீலா போன்ற‌ பெரிய மீன்களை எல்லாம் தோரயமாக விலை சொல்லுவார்கள், நாம் அவற்றைப் பேரம் பேசி வாங்கவேண்டும். எங்கள் ஊரில் இருக்கும் மீன் கடையில் பேரம் பேசத் தெரியவில்லை என்றால் மீன் வாங்குவது என்பது குதிரைக்கொம்பு கதையை போல் தான், கண்டிப்பாக அதிகமான விலைக் கொடுத்து தான் மீன் வாங்கி வருவீர்கள்.

உள்ளுரில் இருக்கும் மீன் சந்தை என்பதால் இங்கு பெரும்பாலும் எங்கள் ஊரில் உள்ள‌ பெண்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும். இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஊரில் படிக்கும் போது விடுமுறை நாட்களில் இந்த மீன் சந்தைக்கு என்னுடைய பெரியம்மாவுடன் செல்வேன். பேரம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இப்படியெல்லாம் பேரம் பேசலாமா? என்று வியந்து பார்த்தது எங்கள் ஊரில் உள்ள இந்த மீன் சந்தையில் தான். மீன் வியாபாரி இருபது ரூபாய் என்று சொல்லும் மீனை எந்தவித அலட்டலும் இல்லாமல் மூன்று ரூபாய் என்று கேட்பார்கள், அவரும் அவ்வளவுக்கு எல்லாம் வராது என்பார், அப்படியே பேரம் பேச்சு நடந்து ஐந்து ரூபாயில் விலை முடியும். பாருங்கள்! எவ்வளவு விலை சொன்ன மீனை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார்கள் என்று. இப்போதும் ஊருக்குச் செல்லும் போது இந்த மீன் சந்தைக்குச் சில நாட்கள் போவது உண்டு. இன்றைக்கும் இந்த மீன் சந்தையின் பேரம் பேசும் நிலை இதுதான் ஆனால் அன்று இருபது ரூபாய் என்று சொல்லிய‌ மீன் இன்று இருநூறு ஆகியிருக்கிற‌து.

எங்கள் வீட்டில் அம்மா வைக்கும் மீன் குழம்பையே சாதத்தில் ஊற்றி சாப்பாட்டை முடித்து விடலாம், வேறு வகையான‌ குழம்பு எதுவும் தேவைப்படுவது இல்லை. வைக்கவும் மாட்டார்கள். அப்படியே குழம்பு என்று வைத்தால் அதன் பெயர் வெறங்கறி(வெறும் கறி: இதில் தேங்காய் அரைத்து மீன் மசாலா போட்டு வைப்பார்கள், வேறு எதுவும் போட மாட்டார்கள் அதனால் தான் அது வெறும் கறி). எனது மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் நான் இந்தக் குழம்பை பார்த்தது இல்லை. மதியமும், இரவும் மீன் வைத்து தான் எங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கும். அம்மா மீன் குழம்பு வைப்பதற்கு என்று தனியாகவே மசாலா அரைத்து வைத்திருப்பார்கள். அந்த மசாலாவில் குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது பொருட்கள்(வத்தல், மல்லி, சீரகம், மஞ்சள், பால் காயம், அரிசி, மிளகு, வெந்தயம்.. போன்ற‌) சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள். தேங்காய் அரைத்து விட்டு வைக்கும் எனது வீட்டின் மீன் குழம்பின் சுவையே தனிதான்.

தினமும் மதியம், இரவு என்று வாரத்தின் ஆறு நாட்களும் இந்த மீன் குழம்பை ஊற்றி சாப்பிடுவ‌தில் சலிப்பு என்பது வருவதே இல்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருப்பவர்களுக்குச் சலிப்படையாமல் சாப்பிட, தினமும் என்ன குழம்பு வைப்பது, என்ன பொரியல் பண்ணுவது என்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். இப்போது நான் இருக்கும் ஹைதிராபத்திலும் எனது மனைவிக்கும், எனக்கும் இந்தப் பிரச்சனை வருவது உண்டு.

கட்டுரையின் தலைப்புக்கு வரவே இல்லையே என்று நினைக்காதீர்கள், மீனைப் பற்றிய அரிச்சுவடுத் தெரியாதவன் எல்லாம் பெருசா பேச வந்துட்டான் என்று கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால் தான் மேலே உள்ள‌ விளக்கங்கள். இப்போது தலைப்பிற்கு வந்து விடலாம். மல்லிகைப் பூ மணத்தில் மீன் குழம்பு வைக்க முடியுமா? என்பது தான் இன்றைக்கு என்னுடைய குழப்பம். முடியும் என்று உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த சாரு அவர்கள் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். உலக இலக்கியம் படித்தவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று மீன் உணவுடன் நெருங்கிய தொடர்புடைய என்னால் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை.

மீனை சுத்தம் செய்வது என்பது கண்டிப்பாக ஒரு கலை தான். நன்றாகச் சுத்தம் செய்யவில்லை என்றால் ஒரு வகையான கவுச்சு நாற்றம் வருவது உண்மை. ஆனால் நன்றாகச் சுத்தம் செய்துவிட்டால் மல்லிகைப் பூ மணம் வந்துவிடும் என்று நம் காதில் இரண்டு பெரிய வாழைப்பூவை மாட்டிவிட நினைப்பதால் தான் இந்த சீற்றம்.

ஒரு காய்கறியை சமையல் செய்தாலே எத்தகைய மணம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் இயற்கையான மணத்தை விட வேறு மணம் வருவதற்கு வாய்ப்பு உண்டா? என்றால் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இயற்கையாக மீனின் வாசம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த மீனைச் சமையல் செய்யும் போது மீனின் வாசம் வராமல் வேறு வாசம் வந்தால் அதில் போடப்பட்டது மீன் அல்ல, வேறு ஏதோ என்று தான் அர்த்தம்.

வத்தல் மற்றும் மல்லிப் பொடிகளுக்குப் பதிலாக, சந்தன‌மும் ஜவ்வாதும் கலந்து குழம்பு வைத்தாலும் மீனின் வாச‌ம் தான் வருமே தவிர, நம்ம ஊர் ஊதுபத்தியின் வாசம் வீசுவது இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, பிறவிக் குணத்தைப் பேய்க்குக் கொடுத்தாலும் அது மாறுவது இல்லை என்பது. அதைப் போலத் தான் மீனின் குணத்தை மாற்ற முடியாது.

மீன் குழம்பை ரசித்து உண்பவர்களுக்குத் தெரியும், அந்தக் குழம்பில் மீனின் குணமும், மணமும் இல்லையென்றால் அதன் சுவை மீனின் சுவையாக இருக்காது வேறு ஏதாகவோ இருக்கும். அப்படியென்றால் மல்லிகைப் பூ வாசம் வீசும் மீன் குழம்பு என்று கவித்துவமாகச் சொல்வதில், ஒன்று இயற்கையாக வரும் மீனின் வாசனையைக் கொண்ட மீனால் அந்தக் குழம்பு செய்யப்படவில்லை அல்லது மீனின் வாசனையை மல்லிகைப் பூ வாசமாக எண்ணி நுகருகிறார். எதுவாக இருந்தாலும் இரண்டு பிரச்சனையிலும் "அவர் நமது காதில் சர்வ சாதரணமாக நாலு முழ பூவை சொருகி விட்டு செல்ல பார்க்கிறார்" என்று தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

வீட்டிலேயே கருவாடு தயாரிக்கும் பேக்டரி வைத்திருக்கிறேன் என்றும் அளக்கிறார். அந்தப் பேக்டரி துவங்குவதற்குக் காரணம் வெளியில் கிடைக்கும் கருவாடுகளில் உப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார். ஒரு பொருளைப் பதப்படுத்துவதற்கு உப்பு என்ற மூலப் பொருள் இல்லாமல் முடியுமா என்றால், நான் முடியாது என்று தான் சொல்வேன். உப்புப் போடாமல் உலர்த்தப் பட்ட கருவாடு என்பது அழுகிய மீனை போன்றது. மீனில் தான் அழுகல் இருக்கும். கருவாட்டில் அழுகல் என்று ஒன்று இல்லை என்று வாதிட்டால் கருவாட்டைப் பற்றி முழுமையாக அறியாதவர் என்று தான் நான் சொல்வேன். குறைவான‌ அளவு உப்புச் சேர்த்து உலர்த்தப்படும் கருவாடு என்பது அழுகிய மீனை காய வைத்து சாப்பிடுவதைப் போன்றது. இத்தகைய கருவாடை குழம்பில் போட்டவுடன் முற்றிலும் கரைந்து காணமல் போய்விடும். நல்ல கருவாட்டு குழம்பிற்கும் இந்தக் குழம்பிற்கும் வாசம் முற்றிலும் வேறாக இருக்கும்.

உப்பு அதிகமாக‌ போட்டு உலர்த்தப்படும் கருவாடுதான் சுவையாக இருக்கும். கருவாட்டில் இருக்கும் உப்பின் தன்மையை எடுக்க வேண்டுமானால் இரண்டு முறை தண்ணீரில் கருவாடை சிறுது நேரம் ஊறவைத்துக் கழுவி சுத்தம் செய்து எடுத்தால் போதும்.

மீன் குழம்பு மல்லிகைப் பூ வாசம் வீசும் முறையை உங்களுக்கு என்னால் சொல்லித்தர முடியாது. அந்த அளவிற்கு உலக இலக்கியம் நான் படிக்கவில்லை ஆனால் மீன் குழம்பு மீனின் வாசம் வீச எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல தர‌ முடியும். மீனின் செதில்களை எடுத்து துண்டுகளாக நறுக்கிய பின்பு கொஞ்சம் பரல் உப்பை(கல் உப்பு) மீன் துண்டுகள் இருக்கும் சட்டியில் போட்டு நன்றாகத் தோய்த்துக் கழுவினால் கவுச்சி நாற்றம் சுத்தமாக இருக்காது.

சிறிது மஞ்சள் தூளுடன் தயிர் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்தால் வாத்துக் கறி மட்டும‌ல்ல எந்தக் கறியிலும் வரும் கவுச்சி நாற்றம் என்பது அறவே இருக்காது. தயிர் இல்லையென்றால் எழுமிச்சைப் பழச்சாறு பிழிந்தும் ஊறவைக்கலாம்.

.


Related Posts with Thumbnails