Biodiversity is life.
Biodiversity is our life.

விளக்கம்:
பல்லுயிர் பெருக்கம் என்பது புவியின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு சூழ்நிலை முறைகளில் வாழும் உயிரினங்கள் ஆகும். இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றது. இந்த உயிரினங்களின் தற்போதைய நிலைகளை அளவிடவும், அவைகளின் பெருக்கத்தையும் மதிப்பிடுகிறது.
எதற்க்காக இந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்?.
நாம் உண்ணும் உணவில் 80 சதவீதம் இந்த உலகில் வாழும் தாவரங்களையும், விலங்குகளையும் சார்ந்து தான் இருக்கின்றன.
இப்போது உள்ள வாழ்க்கைமுறையில் நோயில்லாமல் வாழ்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று, இந்த நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க உபயோகப்படுத்தும் மருந்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த உயிரினங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள் தான்.
இருப்பிடங்கள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்கும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவ்வாறு நமக்கு இன்றியமையாத பொருட்களான உணவு, உடை, உறவிடம் என்ற காரணிகளுக்கு நாம் இவைகளை சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. இவ்வாறு நமக்கு எல்லாவிதததிலும் தேவையாக இருக்கும் இந்த உயிரினங்களை நாம் பாதுகாக்கிறோமா? என்பது நம்மை நாம் கேட்க வேண்டிய கேள்வி.
பல்லுயிர் பெருக்கம் இயற்கையாக கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கின்றது. வளி மண்டலத்தில் நடைபெறும் வேதியியல் மற்றும் நீர் சுழற்ச்சிகளை சமன் படுத்துகிறது. நீரை தூய்மை படுத்துதல்(மீன்கள்) மற்றும் மண்ணில் சத்துகளை மறுசுழற்ச்சி செய்து(மண்புழு) வளமான நிலத்தை கொடுக்கிறது. பல்வேறு ஆய்வுகளின் படி இயற்கையான சூழ்நிலையை நம்முடைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் அமைத்து கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உதாரணமாக பூக்களில் பூச்சிகள் மூலம் நடக்கும் மகரந்தசேர்க்கையை மனிதர்களான நம்மால் நடத்த முடியுமா?... (முடியும் ஆனால் இயற்கையாய் நடைபெறும் ஒரு செயலை செய்ய, செயற்கைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டிவரும்)
தொழிற்சலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் பெரும்பாலும் உயிரியல் ஆதாரங்களில் இருந்தே எடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த உயிரியல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதுக்கு உலக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
இயற்கையை ரசிப்பது என்பது நம் அனைவருக்கும் மிக பிடித்தமான ஒன்று. கோடைக்காலங்கள் வந்துவிட்டால் இயற்கையை ரசிக்க மலைப் பிரேதேசங்களுக்கு கிளம்பிவிடுவோம். இயற்கை அருவிகளும், பறவைகளும் எவர் கண்களையும் கொள்ளை கொள்ளும். இந்த இயற்கையழகு தான் பல இசையமைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் ஊக்கமாய் அமைந்துள்ளது.

அழிக்கும் காரணிகள்:
பல்லுயிர் பெருக்கத்தினை அழிக்கும் காரணிகளை எட்வர்ட் ஓ வில்சன் என்ற ஆய்வாளர் ஆங்கிலத்தில் HIPPO (ஹிப்போ) என்று அழைக்கிறார். அதில் ஐந்து காரணிகளை குறிப்பிடுகிறார்.
1)வாழிடம் அழித்தல் (H-Habitat destruction)
2)அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)மனித மக்கள்த்தொகை அதிகரிப்பு (P-human over population)
5)அதிகமான அறுவடை (O-Overharvesting)
1)வாழிடம் அழித்தல்:
இதை பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. நம் கண்முன்னே நடக்கும் செயல்கள் தான். பல விளைநிலங்கள் கட்டிடங்களாகவும், காடுகள் தொழிற்சாலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றது. உயிரினங்களில் வாழிடங்களை அழித்து நமது வாழிடங்களை பெருக்கி கொள்கிறோம். கி.பி 1000 முதல் இன்றுவரை அழிவிற்கு உண்டான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மனித நடவடிக்கையால் ஏற்பட்டதே ஆகும்.
2)அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள்:
உலகில் பல்வேறு பட்ட உயிரினங்கள் பல்வேறு இடங்களில் அந்த சூழலுக்குகேற்ப கூட்டமாக வாழ்கின்றன. அவ்வாறு கூட்டமாக வாழ்வதற்கு காரணம் கண்டங்கள், கடல்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடாமல் பிரித்துவைக்கப்படுவதால் தான். ஆனால் தற்போது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால் இவைகள் தங்களின் சூழலில் இருந்து சுலபமாக இடம்பெயர்கின்றன. இவ்வாறு இடம்பெயரும் சிற்றினங்கள் அந்த இடங்களில் உள்ள சிற்றினங்களில் வளர்ச்சியை அபகரித்து தன்னுடைய இனத்தை விருத்திசெய்கின்றன.
உதாரணமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்து நமது நாட்டில் பயிரிடப்படும் பழங்களை சொல்லலாம்.
3)மரபணு மாசுபாடு:
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடத்தப்படும் மரபணு சோதனைகள் மூலம் உருவாக்கப்படும் கலப்பினங்கள். இதனால் உருவாக்கப்படும் கலப்பினத்தின் தாயக ரகங்களில் மாசுபாடு ஏற்படுகிறது. இவ்வாறு மாசுப்படும் ரகங்கள் தங்களின் தாயக ரகங்களுடன் உட்கலப்பு செய்யும் போது பெரும் ஆபத்து விளைவிக்கும். இதனால் கலப்பினம் இல்லாத தாவரங்களை பார்ப்பது அரிதாகிவிடும்.
எந்தவொரு உயிரியிலும் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாக வைத்து கலப்பினம் செய்யாமல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புறத் தோற்றத்திலும் உள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்வதே சிறந்தது.
உதாரணமாக இப்போது சந்தையில் உள்ள கத்திரிக்காவை(Genetically Modified Brinjal) சொல்லலாம்.
4)மனித மக்கள்த்தொகை அதிகரிப்பு:
மனித மக்கள்த்தொகை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த அதிகப்படியான வளர்ச்சியும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தடையாக இருக்கின்றது. இந்த மக்கள்த்தொகை பெருக்கத்தால் சுற்றுப்புறச்சூழல் வெகுவாக பதிக்கப்படுகிறது அதனால் பூமி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகளும் நிகழ்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய தளமாக கருதப்படும் பவளப்பாறைகள், பூமி வெப்பமயமாதல்(Global Warming) நிகழ்வுகளால் இன்னும் 20 முதல் 40 வருடங்களில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
5)அதிகமான அறுவடை:
தாவரங்களில் விளையும் பொருட்களை உணவுக்கு என்று பொரும்பகுதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைகளின் சந்ததிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிக விளைச்சல் தரும் வீரிய ரக பயிர்களை பயிர் செய்து அதில் இயற்கைக்கு மீறிய அதிக மகசூலை பெறுகிறோம்.
இந்த பல்லுயிர் பெருக்கம் அதிகம் செறிந்துள்ள பகுதியான அமோசான் மழைக்காடுகள் பற்றியும், அவற்றின் அழிவுகள் பற்றியும் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
தொடரும்...
குறிப்பு: ஒரு வாரத்திற்கு முன்னால் இரவு பதினொரு மணியளவில் டிவி ரிமோட்டை பொதிகை சேனல் திருப்பினேன். அதில்தான் இந்த பல்லுயிர் பெருக்கம் பற்றி டாக்டர் ஒருவர் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அதன் தாக்கம் தான் என்னை எழுத தூண்டியது. என்னுடைய சந்தேகம் எல்லாம் இரவு பதினொரு மணிக்கு ஒளிபரப்பும் நிகழ்ச்சியா இது?.. யார் இதை அந்தநேரம் உக்கார்ந்து பார்ப்பார்கள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட கூடாது எனக்கு அப்போது மணி ஒன்பது தான்) மறுஒளிபரப்பா என்று தெரியவில்லை?..
.
.

