Showing posts with label தேர்த‌ல் க‌ள‌ம். Show all posts
Showing posts with label தேர்த‌ல் க‌ள‌ம். Show all posts

Monday, May 23, 2016

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் அயோக்கியர்களா?

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் வாக்கிற்கு அதிகம் பணம் கொடுத்தவர்கள் அரியணையை ஏறுபவர்களாகவும், குறைவாக பணம் கொடுத்தவர்கள் மண்டப படிகளில் இருப்பவர்களாகவும், பணம் கொடுக்காதவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவரும் ஜனநாயக பரிசுத்தவான்கள் போலவும், வாக்களிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக நாட்டில் பாவிகள் என்பது போலவும் ஊடகங்கள் கட்டியெழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக, வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவான கன்னியாகுமரி மற்றும் சென்னையை குறிவைத்து, படித்தவர்களுக்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து என்று அமிலத்தை வீசுகிறார்கள். எது நம்முடைய ஜனநாயகத்தில் கேலிக்கூத்து என்பதைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.



தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய நாள் முதல், தினந்தோறும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி ஒரு சிறு விசாரணையாவது நடத்தப்பட்டதா? எவருடைய பணம்? எந்தக் கட்சி வேட்பாளரால் கொண்டுவரப்பட்டது? அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்பது பற்றி முழுமையான தகவல்களை இந்த மக்களுக்குக் கொண்டு சென்றனவா? இன்றைக்குத் தேர்தல் ஜனநாயகம் பற்றி பேசும் ஊடகங்கள். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பணம் இந்தமுறை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.

யாரால், எந்தத் தொகுதிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற புள்ளிவிவரம் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கே தெரிகிறது என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் கொண்டு நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். பணம் பட்டுவாடா, லாட்ஜில் மூட்டை மூட்டையாய் பணம், கண்டெய்னரில் பிடிபட்ட பணம், லாரியில் கொண்டுசென்ற பணம் என்று தேர்தலே அம்மணமாய் கிழிந்து தொங்கும் போது, இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து! என்று அறிவித்து ஒட்டு போடும் வேலையைத் தேர்தல் ஆணையம் செய்யும் போது வராத கோபம் வாக்களிக்காதவன் மீது வருவது வியப்பே!



ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டது, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை ஆறுமுனை போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் நீட்டி முழங்க வேண்டுமானால் இந்தக் கட்சிகள் உதவும், ஆனால் மக்களின் நலன் சார்ந்து உண்மையில் முழுமையான மாற்றம் கொண்டுவர ஏதேனும் கட்சிகள் வந்ததா? என்றால் ஏமாற்றமே!, நான்கு கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாகத் திரண்டு முழுமையாக ஒரு வருடங்கள் முழுமையடையவில்லை, இந்த நால்வரும் முந்தைய தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவர்கள். அதனுடன் ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் கட்சி மற்றும் பெரிய கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமாக(வாசன்) இவர்கள் தான் மூன்றாவது அணி. மதவாதம் பேசும் தேசிய கட்சி, சாதி வெறியை வளர்க்கும் மாற்றம் முன்னேற்றம் கட்சி மற்றும் இனவாதத்தைத் தூண்டும் தமிழர் கட்சி இவர்கள் தான் உங்களுக்குத் தேர்தலில் மாற்றத்தை முன்வைத்தவர்கள். இருக்கிற கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக்கொள் என்பது போல் தான் இந்த மாற்றுக் கட்சிகள், அப்படி வைக்காதவனைக் காறி உமிழ்வது அபத்தத்தின் உச்சம்.

இவ்வளவு வக்கணையாய் பேசுகிறவன் வந்து நோட்டாவிற்கு ஒட்டு போட வேண்டியது தானே என்று நீங்கள் கேட்டால் அதைவிட நகைச்சுவை எதுவும் இல்லை. இந்த நோட்டாவிற்கான முழுமையான அதிகாரம் என்ன என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் 100 சதவீத ஓட்டுப் போட சொல்லி மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறது, ஆனால் தகுதியான வேட்பாளரை மக்கள் முன் நிறுத்துவதற்கு எந்தவித சட்டத்தையும் கடைப்பிடிப்பது இல்லை.

எதற்காக நான் ஒட்டு அளிக்கிறேன், என்னுடைய சார்பாக என்னுடைய தேவைகளையும், கருத்துக்களைச் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க நினைத்து நான் ஒட்டு அளிக்கிறேன். அவ்வாறு நான் ஒட்டு போடும் வேட்பாளர் தேர்தலில் தோற்றால் என்னுடைய வாக்கு சீட்டிற்க்கான அங்கீகாரம் எங்கே? என்னுடைய குரலை சட்டசபையில் பேசுபவர் யார்? தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு அளித்த மக்களின் குரல்கள் வெற்றி பெற்ற வேட்பாளரின் குரலால் நசுக்கப்படும், வெற்றி பெற்றவர் பெரும்பான்மை பலம் பெற்றவர்களின் குரல் என்றால், சிறுபான்மை பலம் பெற்ற ஒடுக்கப்பட்டோரின் குரல் மவுனிக்க வேண்டியது தானா? இது தான் ஜனநாயகமா? இதற்குத் தான் நான் வாக்களிக்க வேண்டுமா?

உதாரணமாக இந்தத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுகிறார். வெற்றி பெற்றவருக்கு இணையாகச் சதவீதத்தில் இவரும் வாக்குகள் வாங்குகிறார், இவருக்கு ஓட்டுப் போட்ட மக்களின் குரல்கள் சட்டசபையில் ஒலிக்காது, அதற்குக் காரணம் அவர் வெற்றி பெறவில்லை. இதில் இருக்கும் சிக்கல் ஜனநாயக மாண்புக்கு உட்பட்டது தானா?

என்னுடைய வாக்குக்கான மதிப்பு, நான் வாக்களிக்கும் அந்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை என்றால் குப்பைக்கு சமம் என்றால், நான் எதற்காக வாக்களிக்க வேண்டும்? இப்படி என்னுடைய வாக்குக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் நடைபெறும் ஒரு ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்க‌படும் மக்களாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.

மக்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரத்தை கொடுப்பதற்கான ஜனநாயக‌ வழியை வகுத்துக் கொடுத்துவிட்டு வாக்களிக்காதவர்களைக் குறை சொன்னால் பரவாயில்லை, ஆனால் நீ செலுத்தும் வாக்கு வெற்றி பெற்றவருக்கு என்றால் மதிப்பு, இல்லையென்றால் அது வெறும் "கைவிரல் மை" என்றால் எவருக்கும் அழியாத கைவிரல் மையைப் போட்டு அழகுப்பார்க்க‌ விரும்புவது இல்லை. வாங்கும் வாக்குகள் சதவீத அடிப்படையில் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பிரதிநித்துவம் கொடுக்கவேண்டும் என்ற முழக்கம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


.

Saturday, April 19, 2014

பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்! அப்ப பெண் வேட்பாளர்கள்?

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் எவருக்கும் மறுப்பு இருக்காது. சுதந்திரம் அடைந்து அறுபத்தி ஏழு ஆண்டுகள் கடந்து வந்துவிட்டோம். பெண்களின் சமூக‌ உரிமைகளையும், அரசியலில் அவர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் சுதந்திரபோராட்டக் காலத்திலேயே காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பேசியுள்ளனர். பதினைந்து முறை நாடாளுமன்ற தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட்டோம். கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த‌ பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 61/543. சதவீத எண்ணிக்கையில் பார்க்கும் போது 11.23%. 39 தொகுதிகள் கொண்ட‌ தமிழ்நாட்டில் இருந்து கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்திடுக்கப்பட்ட பெண் எம்பி ஒருவர் மட்டும் தான், அவரும் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தமுறை அந்த ஒன்றாவது வருமா? என்பது கேள்விக்குறி தான்.

Thursday, April 17, 2014

கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம்_சிரிங்க! முடியலைனா சிந்தியுங்க!

மு.க.ஸ்டாலின்(திமுக): 

அதிமுகாவிற்கும், பிஜேபிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது உண்மை. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு உற்ற நண்பர். அவர் சொல்லுவதைத் தான் கேட்பார். ஆட்சி அமைத்தவுடன் அவரைப் போய்ப் பார்த்தாரா இல்லையா?. நீங்கள் எல்லோரும் பத்திரிக்கையில் போட்டோ பார்த்திருப்பீர்கள். எனக்கும் அவர் நண்பர் தான், ஏன் நம்முடைய‌ தலைவர் கலைஞருக்கும் நண்பர் தான். அவருடைய வீட்டுக் கல்யாணத்திற்குக் கூடத் தலைவர் போயிருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து சோ அழைப்பிதழ் தந்ததால் கலைஞர் நேரில் சென்று வாழ்த்தினார். கலைஞர் வந்திருக்கிறார் என்பதாலேயே ஜெயலலிதா அந்தக் கல்யாணத்திற்கு வரவில்லை.

டிஸ்கி: தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவ‌னுக்கு வந்தால் தக்காளி சட்னி, இந்த அப்ரோச் ரெம்ப நல்லயிருக்கு.

ஜெ.ஜெயலலிதா(அதிமுக): 

மாநிலத்தில் போதுமான அளவு மின் உற்பத்தியிருந்தும், செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்படுத்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அவர்களை இனம் கண்டு கடுமையாகத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி: என்னது கிணத்தைக் காணுமா?.. தெளிவா சொல்லுங்க கிணத்தைக் காணுமா?.. இல்ல, கிணறுப் பக்கத்தில் இருந்த பம்புச் செட்டைக் காணுமா?..

விஜயகாந்த(தேமுதிக): 

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது மக்களே, ஆனால் விவசாயத்திற்கு வளர்ச்சிக்கு ஏன் நிர்ணயிக்கப் படவில்லை. மக்களே! தமிழ் நாட்டில் டாஸ்மாக் வேணுமா? வேணாமா?

கூட்டத்தில் உள்ள மக்கள் வேண்டாம்! வேண்டாம்!..

நீங்க எல்லாம் டாஸ்மாக் "வேண்டாம்!" என்று சொல்வதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்திருச்சு மக்களே, அதனால் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்திடுச்சு, கொஞ்சம் இருங்க மக்களே, துடைச்சுக்கிறேன்.

தான் போட்டிருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றிச் சிரித்துக்கொண்டே கையில் இருந்த கைக்குட்டையால் கண்ணீரை துடைப்பது போல் நடித்துக் கண்பிக்கிறார்.

டிஸ்கி: இவரு இன்னும் கேமாரா முன்பு நடிப்பதை மறக்கவில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

வை.கோ.(மதிமுக): 

மேடையில் பேசும் போது தொடர்ச்சியாக இருமிக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. அருகில் இருக்கும் தொண்டர்கள் தண்ணீர் வேண்டுமா? என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்ல கனைக்சன் சரியில்லை, ஏதோ பண்ணுகிறார்கள்(ஒரு வேளை சூனியம் வைச்சிருப்பாங்களோ).

இந்த மைக் கனைக்சன் வழியாகக் கரண்ட் பாசாகி ஏதோ வந்து எனது தொண்டையை அடைக்கிறது. அதனால் தான் என்னால் பேச முடியாமல் இருமல் வருகிறது. சிறிது நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "மைக் செட் சூப்பர்" என்று சொல்லி முடித்தார்.

டிஸ்கி: கூடவே நல்ல மலையாள மந்திரவாதியை வச்சுகிறது நல்லது. சூனியத்தை எடுக்குறதுக்காவது உதவும்.

பொன்.ராதாகிருஷ்னன்(பிஜேபி): 

வைகேவிற்காக‌ விருதுநகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த‌ பொன்னார் அவர்கள், மக்களைப் பார்த்து உங்களுடைய வாக்குகளை எல்லாம் நம்முடைய தாமரை சின்னத்திற்குத் தாருங்கள்! தாருங்கள்! என்று பேசியபோது பக்கத்தில் இருந்த வைகே, பொன்னாரில் காதில் தாமரை இல்லை, பம்பரம் பம்பரம் என்று கத்தினார்.

சுதாரித்த பொன்னார், குஜராத்தில் ஒரு மோடியைப் போல், தமிழ்நாட்டில் நான் வைகோவை பார்க்கிறேன், அதனால் தான் தாமரை சின்னம் என்று கூறினேன் என்று சமாளித்தார். வைகோவும் கூச்சமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்தார்.

டிஸ்கி: பொன்னார் அமைத்திருக்கும் (விஜயகாந்த்)கூட்டணியின் காத்துப் பலமாக அடிக்கிறது போல.. அதான் இப்படி உளற வேண்டியதாயிற்று.

கார்த்திக் சிதம்பர‌ம்(காங்கிரஸ்): 

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மத்திய அரசு 148 ரூபாய்க் கொடுக்கிறது, ஆனால் உங்களுக்கு 100 ரூபாய் தான் கொடுக்கிறார்கள். மீதியை இங்கு ஆளும் அரசு கொள்ளைய‌டிக்கிறது.

உங்க பையன் வெளிநாட்டில் இருந்து 2000 ரூபாய் அனுப்புகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் போஸ்ட மேன் உங்களிடம் 1000 ரூபாய் தான் தருகிறான் என்றால் யாரைடைய குற்றம்?..

மக்கள் எல்லோரும் "போஸ்ட் மேனின் குற்றம்" என்று குரல் கொடுக்கிறார்கள்.

அதனால் தான் சொல்கிறேன் மக்களே, தவறு யார் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இவைகளைச் சரிசெய்ய‌ அதிகார‌த்தை எங்களுக்குத் தாருங்கள் என்று தான் உங்களிடம் கேட்கிறேன்.


டிஸ்கி: அப்படினா இப்பவரைக்கும் உங்க அப்பா தானே ஆட்சியில், அதிகார‌த்தில் இருக்கிறார். அப்படியிருந்தும் முழுமையான பணம் கிடைக்கவில்லையே! இதை யாரிடம் சொல்வது கார்த்திச் சார்?...

வானதி சீனிவாசன்(பிஜேபி): 

தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாமல் அனைவரும் இருளில் வாழ்கிறோம். விவாசாயிகள் கஷ்டப் படுகிறார்கள். சிறு தொழில் செய்வேர் தொழில் நடத்தமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் குஜராத்தை பாருங்கள், பதினேழு மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கிறார்கள். அதைப்போல் திரு.நரேந்திர‌ மோடி அவர்கள் பிரதமராக வந்தால் பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ்க்கு என்ன, சீனாவிற்கே மின்சாரம் விற்க முடியும்.

டிஸ்கி: நீங்க இப்படி இங்க கொடுக்கும் வாக்குறுதிகளைச் சீனாக்காரன் கேட்டால் எப்படிச் சிரிப்பான் என்று தான் தெரியவில்லை.

நடிகர் சிங்கமுத்து(அதிமுக):

நான் விஜயகாந்தைப் பார்த்து ஒண்ணோ ஒண்ணு மட்டும் கேட்கிறேன். வீதியில நின்னுட்டு எந்தப் பக்கம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று திசைகளை மட்டும் சரியா சொல்லிட்டாருனா, நான் இந்தியாவை விட்டே போயிடுறேன். ஆமாய்யா! இது சத்தியம்!!..

டிஸ்கி: இந்தக் கொடுமையெல்லாம் யாரோட தலையில‌ போய் அடிச்சுக்கிறது!

நடிகர் ராஜேந்திரன்(தேதிமுக):

நாற்பதுக்கும் நாற்பதாம், யாருகிட்ட சொல்லுறீங்க?.. அப்படி அதிமுக‌ மட்டும் நற்பதுக்கு நாற்பது ஜெயித்துவிட்டால் ஒரு பக்கத்து மீசைய எடுக்குறேன். இது சவாலு தான்.

டிஸ்கி: மீசைக்குப் பாதிப்பு இல்லையென்று தெரிந்து தானே அடிச்சுவிடுறீங்க..

நடிகர் கார்த்திக்(காங்கிரஸ்):

நம்ம காங்கிரஸை தவிர, எந்தக் கட்சிக்கு நாட்டை ஆளா தகுதி இருக்கிறது என்று நான் கேட்கிறேன். யாரையும் தவறாக‌ பேசக்கூடாது, மோடி வேண்டுமானால் என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்த வரட்டும். எல்லாவற்றிற்கு என்னால் பதில் சொல்ல முடியும். என்னைத் தேர்தலில் நிற்பத‌ற்கு சொன்னார்கள், ஆனால் நான் தான் வேண்டாம் என்று மறுத்தேன். காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவது தான் என்னுடைய குறிக்கோள். அதற்காகத் தொடந்துப் பிரசாரம் செய்வேன்.


டிஸ்கி: நீங்க வேற அப்ப அப்பப்ப வந்து கிச்சுக் கிச்சு மூட்டுறீங்க.. என்ன! மக்களால் சிரிக்கத் தான் முடியவில்லை.

.

Tuesday, April 12, 2011

தேர்த‌ல்_இறுதிக்க‌ட்ட‌ ஓட்டு சேக‌ரிப்பு

தேர்த‌லில் போட்டியிடுப‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளை ம‌க்க‌ளிட‌ம் சொல்லி ஓட்டு கேட்ப‌தெல்லாம் சினிமாக்க‌ளில் ம‌ட்டும் தான் பார்க்க‌ முடியும் என்று நினைக்கிறேன்...

ஒவ்வொருவ‌ரின் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளையும், கொலைபாத‌க‌ங்க‌ளையும் காட்டி ஓட்டு கேட்கிறார்க‌ள். எந்த‌ ஆட்சியில் அதிக‌மாக‌ வ‌ன்முறைக‌ள் க‌ட்ட‌விழ்க்க‌ ப‌டுகிற‌து என்று போட்டா போட்டி போட்டு த‌ங்க‌ள் ஊட‌க‌ங்க‌ளில் ஒளிப‌ர‌ப்புகிறார்க‌ள். க‌ண‌க்கில் அட‌ங்காத‌ குற்ற‌ங்க‌ளை காட்டி எங்க‌ள் ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?... உன‌து ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?.. என்று போட்டி போடும் வேட்பாள‌ மாக்க‌ளே(எழுத்துப்பிழை இல்லை)!!!!.. ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் ம‌க்க‌ளுக்கு செய்த‌ ந‌ல்ல‌ விச‌ய‌ம் ஒன்றை உங்க‌ளால் சுட்டிக் காட்ட‌முடியுமா?..




எதிரெதிர் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளை காட்டி ஓட்டுப்பிச்சை கேட்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளே!!!... உங்க‌ள் ஆட்சியில் ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் செய்த‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை ப‌ட்டிய‌ல் இட்டு, ம‌க்க‌ளிட‌ம் காட்டி எப்போது ஓட்டு கேட்க‌ப் போகிறீர்க‌ள்?..

அவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் ம‌ற்றும் வ‌ன்முறைக‌ளை இவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் குறைவாக‌ இருக்கிற‌து என்று ந‌டுநிலைமையாள‌ர்க‌ளும் வாய் ச‌வுடால் அடிக்கிறார்க‌ள்.... அட‌ பெரிய‌ம‌னுச‌ங்க‌ளா!!!! ஊழ‌ல், வ‌ன்முறை இர‌ண்டுமே அர‌சிய‌லில் த‌ப்பு.. அதில‌ சின்ன‌து, பெருசு... அதிக‌ம், குறைவு.. காமெடியா இல்ல‌... போங்க‌ய்யா!!!! போங்க‌.... நீங்க‌ளும் உங்க‌ள் ந‌டுநிலைமையும்.....

அர‌சிய‌ல் என்றாலே ஊழ‌லும், வ‌ன்முறையும் தான் என்ப‌து பெரும்பால‌ன‌ ம‌க்க‌ளில் க‌ருத்து. அந்த‌ மாயையை இப்போது உள்ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் ஊட‌க‌ங்க‌ளும் அழ‌காக‌ வ‌ள‌ர்த்தெடுகின்ற‌ன‌. இப்ப‌டியே போனால் வ‌ன்முறையும், ஊழ‌லும் தான் அர‌சிய‌ல் செய்ய‌ முக்கிய‌ கார‌ணிகள் என்று ஆகிவிடும்.. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் அத‌ற்கு தூப‌ம் போடும்..

செழிக்க‌ட்டும்‌!!!! ஊழ‌ல்‌ அர‌சிய‌ல்...

வ‌ள‌ர‌ட்டும்‌!!!! இல‌வ‌ச‌ங்க‌ள்...

--------X--------X-------X----------X----------X-------------X------------X----------------X----------X----

என்னுடைய‌ தொகுதி ப‌த்ம‌னாப‌புர‌ம். என்னுடைய‌ தொகுதி வேட்பாள‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்.

ஆஸ்டின் - தேமுதிக‌

புஷ்ப‌ லீலா ஆல்ப‌ன் - திமுக‌

சுஜித்குமார் - பிஜேபி

இதில் தேதிமுக‌ வேட்பாள‌ர் ஆஸ்டின் ம‌க்க‌ளுக்கு அறிமுக‌மான‌ ஒருவ‌ர். இவ‌ர் முன்பு அதிமுகாவில் இருந்த‌வ‌ர். விஜ‌ய‌காந்த‌ க‌ட்சி ஆர‌ம்பித்த‌வுட‌ன் வ‌ந்து சேர்ந்த‌வ‌ர்.

இந்த‌ தேர்த‌லில் பிஜேபி த‌னியாக‌ வேட்பாள‌ரை நிறுத்தியிருக்கிற‌து. எங்க‌ள் ப‌குதியில் பிஜேபிக்கு க‌ணிச‌மான‌ ஓட்டு உண்டு. எது எப்ப‌டியிருந்தாலும் க‌டைசி இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌த்தும் வாக்கு சேக‌ரிப்பு தான் எங்க‌ள் தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும்..

அப்ப‌டி என்ன‌தான் ப‌ண்ணுவார்க‌ள்?.. யாரெல்லாம் வெளியூரில் இருக்கிறார்க‌ள்? என்ப‌த‌ன் க‌ண‌க்கெடுப்பு ஒன்று.

ஊரில் இருந்தும் ஓட்டு போட‌ பூத்திற்கு வ‌ராத‌வ‌ர்க‌ளின் க‌ண‌க்கெடுப்பு ம‌ற்றொன்று..

இந்த‌ க‌ண‌க்கெடுப்பு ப‌ட்டிய‌ல் போட‌ ஒவ்வொரு க‌ட்சிக்கும் ஒரு குழுவே இருக்கும். கார‌ண‌ம் வெளியூர்க‌ளிலும், வெளிநாடுக‌ளும் இருப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை இங்கு அதிக‌ம். இறுதியாக‌ ப‌ட்டிய‌லில் வ‌ரைவு அந்த‌ந்த‌ க‌ட்சி பெருசு‌க‌ளின் கைளுக்கு சென்றுவிடும்.

அப்புற‌ம் என்ன‌!!!!!!! எந்த‌ பூத்தில் எந்த‌ க‌ட்சியின் கை ஓங்கி இருக்கிற‌தோ அங்கே அந்த‌ ப‌ட்டிய‌லில் உள்ள‌வ‌ர்க‌ளின் ஓட்டுக‌ளை போட‌ வேண்டிய‌துதான்..

இப்ப‌ எங்க‌ தொகுதியில‌ எந்த‌ க‌ட்சி ஜெயிக்க‌ போவுதுனு என‌க்கு புரியுது.. உங்க‌ளுக்கு புரியுதா?....... :)
Related Posts with Thumbnails