Showing posts with label பழ‌ங்க‌ள். Show all posts
Showing posts with label பழ‌ங்க‌ள். Show all posts

Thursday, June 9, 2016

நாம் தான் உணவிற்குக் கையேந்தும் தலைமுறைகள்!!

இன்றைக்கு நம்முடைய உணவு பழக்கவழக்கம் எப்படி இருக்கிறது என்பதை நம்முடைய வீட்டில் சமையல் அறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியைத் திறந்து பார்த்தாலே தெரிந்துவிடும். குறைந்தது மூன்று பாத்திரங்களாவது எப்போதும் அந்தப் பெட்டியில் இருக்கும், நேற்று வைத்த சாம்பார், இரண்டு நாட்கள் முன்பு வைத்த காரக் குழம்பு, ஒரு வாரத்திற்கு முன்பு வைத்த ரசம் என்று ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி தேதி வாரியாக பிரித்து வைத்திருப்போம். இவையில்லாமல் பாதி எடுத்துவிட்டு மீதம் வைத்திக்கும் தயிர் பாக்கெட், ரெடிமேடாக கடைகளில் வெட்டிக் கிடைக்கும் ப்ரோசன் காய்கறிகள் என்று பட்டியல் நீளும்.

"விரைவாகச் சமைக்க முடிகிறது" என்று சொல்லிக்கொண்டு, நாம் சமைக்கும் உணவுகள் நம் உடலை எந்தளவிற்கு மாற்றத்திற்கு உட்படுத்துகிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறோம். காலையிலேயே பிரட் ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற வெளிநாட்டு  உணவு வகைகளை நம்முடைய குழந்தை களின் தட்டில் பரிமாற தொடங்கிவிட்டோம், நமது பாரம்பரிய உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட மாவுகள் மூலம் தயாரிக்க தொடங்கிவிட்டோம். இன்ஸ்டன்ட் உப்புமா முதல் இன்ஸ்டன்ட் பரோட்டா வரை வாங்கி குளிர்சாதன பெட்டியில் அடுக்கி விடுகிறோம்.

இன்றைய அவசர உலகில் எல்லாவற்றிற்கும் சுலபமான வழியைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய நாம் உணவுப் பொருட்கள் சமைப்பதற்கும் குறுக்கு வழிகளை நாடத் தொடங்கிவிட்டோம், பதப்படுத்தப் பட்ட உணவுப்பொருட்களுக்கு நாம் அடிமையாக மாறிவிட்டோம். அதனால் தான் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்களின் குவியல்கள் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்களில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. சிலர் வீட்டில் சமைக்கும் சிக்கன் குழம்பு பிடிக்கவில்லை என்று ஓரம் தள்ளுகிறார்கள், ஆனால் கடைகளில் வாங்கும் புரோஸ்டடு சிக்கன் ஒரு பக்கெட்டை காலி செய்கிறார்கள், குழந்தைகளும் பழங்கள் சாப்பிட பிடிக்கவில்லை, ஆனால் பாட்டில்களில் வைத்திருக்கும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை வாங்கித் தாருங்கள் என்றும் சொல்லுகிறார்கள். முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் எல்லாம் வயோதிகர்களும், நோயாளிகளும் உண்ணும் உணவாக இன்றைய தலைமுறைகள் எண்ணுகிறார்கள். அதற்கு மாற்றாகப் பன்னாட்டு நிறுவனங்களால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குப்பை உணவுகளின் சுவைகளுக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு இப்போது இருக்கும் நிறுவனங்கள் போதாது என்று, இன்றைக்குப் பல கார்பரேட் சாமியார்களும் களத்திற்கு குதித்துள்ளார்கள். "ஐந்தே நொடியில் ஆரோக்கியமான உணவு தயார்!" என்று நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் விளம்பரங்கள் தான் இன்றைக்கு நமது வீட்டுத் தொலைக்காட்சியை நிறைக்கிறது. இப்போது நமது சமையல் அறையில் நிறைந்திருக்கும் பொருட்கள் அனைத்தும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தான். நாம் எதை உண்ண வேண்டும் என்பதைக் கூட இன்றைக்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. அத்தகையை உணவு பழக்க வழக்கத்திற்கு நாமும் அடிமையாகி, நம்முடைய அடுத்த தலைமுறையையும் அதற்கு பழக்கப் படுத்தி விட்டோம்.

காலையில் எழுந்து பல் துலக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசையில் ஆரம்பித்து, இரவு தூங்குவதற்கு முன்னால் உபயோகப்படுத்தும் மவுத் வாஷ் வரைக்கும் சந்தை படுத்துவதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் அனைவரின் கவனத்தை விளம்பரங்கள் மூலமாக ஈர்ப்பதில் போட்டி போடுகின்றன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தாமல் எவரும் வாழவே முடியாது என்ற ஒரு மாயத் தோற்றத்தை நிறுவ முயலுகிறார்கள்.

நம்முடைய நுகர்வு கலாச்சாரத்தை உரம் போட்டு வளர்ப்பதற்கு "விளம்பரம்" என்னும் உத்தியை இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிக்கை மற்றும் இணையம் என்று எந்தப் பக்கம் நீங்கள் நுழைந்தாலும் வலுக்கட்டாயமாக அவர்களின் விளம்பரங்களைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஏதோ ஒரு தேவைக்காக ஒருமுறை வாங்கும் பொருட்களை, மறுமுறை நாடிச்சென்று வாங்க வைத்து, பின்னர் அதற்கு நாம் அடிமையாகும் யுத்தியைப் பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பாக செய்கின்றன. கடைகளுக்குச் சென்றுதான் வாங்க முடியும் என்றிருந்த பொருட்களை வீடுத் தேடிவந்து கொடுக்கும் ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதிகப்படியான நுகர்வு கலாச்சாரம் நம்முடைய சுயச் சார்பை அழித்திருக்கிறது. நம்முடைய சுயச் சார்பை அழித்ததில் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றிகள் அடங்கியிருக்கிறது, உதாரணமாக என்னுடைய பால்ய வயது வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். எனது வீட்டைச் சுற்றி ஒரு இருபது சென்ட் நிலம் உண்டு. அந்த நிலத்தைச் சுற்றியிருந்த வேலியில் அப்பா அன்னாசி செடி நட்டு வைத்திருந்தார்கள், அதிலிருந்து வீட்டிற்குத் தேவையான அன்னாசிப் பழம் கிடைக்கும். மேலும் அதில் ஒரு நான்கு வகையான மாமரங்கள் மற்றும் இரண்டு பலாமரம், இரண்டு கொல்லாமரம்(முந்திரி மரம்) மற்றும் ஒரு புளிய மரமும் உண்டு. இந்த மரங்களை எல்லாம் என்னுடைய தாத்தா நட்டு வளர்த்தாக அப்பா சொல்லுவர்கள். சிறிய மரங்களாக மூன்று நாட்டுக் கொய்யா மரம், இரண்டு சீத்தாப்பழம் மரம் மற்றும் ஒரு பப்பாளி என்று அப்பா நட்டு வைத்திருந்தார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் பசு மாடு ஒன்று எப்போதும் இருக்கும். நான் பள்ளிப் படிக்கும் போது வீட்டில் சாண எரிவாயுவைப் பயன் படுத்தித்தான் சமையல் செய்வார்கள். அதிலிருந்து கிடைக்கும் கழிவு உரத்தைக் கொண்டு வீட்டில் தோட்டங்கள் போடுவது தான் எங்களுடைய பொழுதுபோக்காக இருந்தது. அக்கா பூச்செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பாள், நானும் எனது அண்ணனும் கீரை, அவரை, கத்தரி, தக்காளி போன்ற காய்கறிகளை நட்டு வளர்ப்போம். வீட்டின் கொல்லைப்புறத்தில் பாத்திரங்கள் கழுவும் கழிவு நீர் பாயும் இடத்தில் எப்போதும் இரண்டு வாழைமரங்கள் நிற்கும். வீட்டின் அருகில் உள்ள நிலம் அல்லாமல் ஊருக்கு வெளியில் ஒரு வயலும், சிறிய தென்னம் தோப்பும் எங்களுக்கு உண்டு.

நான் மேலே சொல்லியிருக்கும் அனைத்துமே எங்கள் வீட்டிற்குத் தேவையான உணவு பொருட்களில் 75 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்துவிடும். நெல்லிருந்து கிடைக்கும் அரிசியிலிருந்து மதியத்திற்கும் இரவிற்கும் தேவையான சோறு மற்றும் காலை உணவான புட்டு, இடியாப்பம், ஆப்பம் செய்து கொள்ளலாம். இரண்டுமுறை நெல் பயிரிட்டால் ஒருமுறை உளுந்து, சிறுபயிறு என்று வயலில் விதைப்போம், எனவே தோசை இட்லிக்குத் தேவையான உளுந்து கிடைத்துவிடும். வீட்டில் பசு மாடு இருப்பதால் சுத்தமான பாலுக்குப் பஞ்சம் இல்லை எனவே காப்பி, டீ போன்றவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. முக்கனிகளான மா, பலா, வாழை இவை மூன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் இருப்பதால், எங்களின் உணவு தேவைக்கான பழங்கள் வீட்டு நிலத்தில் நடப்பட்டிருக்கும் மரங்களிலிருந்தே கிடைத்துவிடும்.

எனது வீட்டின் முன் நிற்கும் மிளகு கொடி


நாங்க! கன்னியாகுமரி ஆளுங்க! தேங்காய் இல்லாமல் குழம்பு என்பது எங்கள் அகராதியில் கிடையாது, தினமும் ஒரு அரைமுறி தேங்காயாவது காலி செய்துவிடுவோம். தென்னந் தோப்பிலிருந்து கிடைக்கும் தேங்காயும், அதிலிருந்து செக்கில் ஆட்டப்பட்டுக் கிடைக்கும் எண்ணெயும் சமையலுக்கு தாராளமாக போதும். குழம்பு வைப்பதற்கான புளி வீட்டில் இருக்கும் மரத்திலிருந்து கிடைத்துவிடும். எனது அம்மா மாதம் ஒருமுறை வத்தல், மல்லி, மஞ்சள் என்று ஒரு ஒன்பது வகையான மளிகைப் பொருட்களை கடையிலிருந்து வாங்கிப் பக்குவப்படுத்தி பொடி செய்து வைத்துக்கொள்வார்கள். இந்தப் பொருட்களுடன் சோப்புகள் மற்றும் சிறிய வெங்காயம் போன்றவை தான் பெரும்பாலும் நாங்கள் கடைகளிலிருந்து வாங்கும் பொருளாக இருக்கும்.

அம்மா பொடிச் செய்து வைத்திருக்கும் குழம்பு தூளைத் தான் மீன் குழம்பு வைப்பது முதல் மட்டன் குழம்பு வைப்பது வரை உபயோகப்படுத்துவார்கள். வீட்டில் எப்போதும் பத்து நாட்டுக் கோழிகளுக்கு குறையாமல் வளரும், அதனால் முட்டைகளுக்கும் வீட்டில் பஞ்சம் இல்லை. ஊரில் திருவிழா மற்றும் வேறு விசேசம் என்றால் வெடைக் கோழியும் அடிக்கலாம். வாரத்தில் ஆறு நாட்களும் என் வீட்டில் மீன் குழம்பு இருக்கும், அதோடு கூட வீட்டில் விளையும் கீரைகள் மற்றும் அவரைப் போன்றவற்றால் செய்யப்பட்ட பொரியல்களும் இருக்கும், வார இறுதி நாளில் மட்டும் மட்டன் அல்லது சிக்கன் இருக்கும். இவ்வாறு நாங்கள் உண்ணும் உணவுப் பொருளில் பெரும்பகுதி ரசாயனங்களின் கலப்பு இல்லாமல் நம்முடைய நிலத்தில் விளைந்தவையாக இருந்தது.

வணிகர்களின் போராட்டம் காரணமாக ஒரு வாரம், இரண்டு வாரம் எல்லாம் கடைகள் திறக்கப்படவில்லையென்றாலும் அந்த காலத்தில் என்னுடைய அம்மா உட்பட எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள், காரணம் சுயச் சார்பு, இன்றைக்கு ஒரு நாள் கடைகள் அடைத்தாலே என்ன நிலமை என்பதை நீங்களே தெரிந்து வைத்திருப்பீர்கள். பால் கிடைக்கவில்லை, குடி தண்ணி கிடைக்கவில்லை என்ற குரல்களை தான் எங்கும் கேட்க முடியும். எப்படி நாம் கையேந்தி நிற்கிறோம் என்பதை இதைவிடத் தெளிவாக விளக்கிவிட முடியாது.

சமீபத்தில் விகடனில் வந்த ஒரு கட்டுரையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திரு.பெலிக்ஸ் அவர்களின் விவசாய முறையைப் பற்றி படித்தேன். அவர் தன்னுடைய சாப்ட்வேர் வேலையை உதறித் தள்ளிவிட்டு ஊரில் வந்து தனக்கு சொந்தமான 34 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ளார். அவருடைய நிலத்திலிருந்து கிடைக்கும் விளைபொருட்கள் அவருடைய குடும்பத்தின் 80 சதவீத உணவு தேவையை நிவர்த்தி செய்வதாக சொல்லுகிறார்.இவரிடம் ஒரு பேட்டியில் உங்களின் உணவு தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்வது பற்றி அருகில் இருப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டும் போது, அவர் சொல்லியது அருகில் இருப்பவர்களை விட நம்மை ஆளும் அரசு என்னை எப்படிப் பார்க்க போகிறது என்பது தான்!

இவரின் விகடன் கட்டுரை படிக்க:

34 சென்ட்...

இவரின் இனையதளதிற்கு செல்ல:

சுதந்திரமான வாழ்க்கை

உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் என்று எல்லா ஆக்கங்களையும் நம்மை ஆளும் அரசுகளே முன்னின்று விரிவாக்கம் செய்யும் போது சுயச் சார்புடன் ஒருவன் வாழ்கின்றான் என்றால் அவனை இந்த அரசுகள் எப்படிப் பார்க்கும்?.


.

Tuesday, April 22, 2014

கண்களை மிரட்டும் மாம்பழங்கள்!!!

நான் இருக்கும் ஏரியாவில் இரு வாரங்களுக்கு முன்பே மாம்பழங்கள் வரத்துத் தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக‌ ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நாக்கிற்கு மாம்பழத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று தோன்றியது. முழுமையான சீசன் ஆரம்பித்திருக்கவில்லை. நாங்கள் வழக்கமாக வாங்கும் பழக்கடைக்காரர் இன்னும் ஒரு வாரம் போனால் தான் சார் மாம்பழம் நல்லாயிருக்கும், இப்போது கிடைக்கிறத வாங்காதீங்க, கல்லைப் போட்டுப் பழுக்க வச்சுருப்பானுங்க! புளிக்கும்! என்று கூறியது மனதில் ஒரு மூலையில் ஒலித்தாலும், தெருவில் புதிதாக முளைத்திருந்த பழக்கடையில் மஞ்சள் கலரில் மாம்பழம் அடுக்கியிருந்தது கண்ணைப் பறித்தது. இங்குப் பழக்கடை மற்றும் காய்கறிக்கடை வைத்திருப்பவர்கள் அவைகளை அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியே நம்மை வாங்குவதற்குத் தூண்டும். எதையும் குப்பையாகக் குவித்துப் போட மாட்டார்கள்.



மாம்பழம் வாங்குவதில் என்னைவிட மனைவி அதிக ஆர்வமாக‌ ஆர்வமாக இருந்தார். எல்லாப் பழமும் ஒரே அளவில் மஞ்சள் மூலாம் சீராகப் பூசியது போன்று இருந்தது. தோலில் பச்சை நிறத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. கிலோ எவ்வளவு என்று கேட்டேன் எண்பது என்று பழக்கடைக்காரர் சொன்னார். இப்போது எல்லாகடைகளிலும் மாம்பழங்கள் குவிந்து இருப்பதால், அதே அளவுள்ள மாம்ப‌ழம் கிலோ முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. ப‌ழக்கடைக்காரர் எடைப்போடும் போது சரியாக ஐந்து மாம்ப‌ழம் நின்றது. வீட்டிற்கு வந்தவுடன் மனைவி முதல் வேலையாக ஒரு மாம்பழத்தில் தோலை நீக்கி விட்டு அதிலிருந்து ஒரு தூண்டை வெட்டி என்னிடம் கொடுத்தார். பழத்தில் இருந்த புளிப்புசுவையால், கீழே படத்தில் உள்ள குழந்தை தனது கண்ணைச் சிமிட்டுவது போல்தான் நானும் சிமிட்டினேன்.


சில மாம்ப‌ழங்கள் புளிப்பாகத் தான் இருக்கும், அந்த மாம்பழங்களின் வெளித்தோற்றத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். புளிக்கும் மாம்பழங்களின் தோல்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த மாழ்பழம் வெளித்தோற்றத்தில் முழுவதும் மஞ்சள் நிறம். எந்த வகையான மாம்பழத்தையும் இயற்கையாகப் பழுக்க வைத்தால் தோலில் பச்சை நிறம் கொஞ்சமாவது இருக்கும். நான் இப்போது வீடுகட்டியிருக்கும் நிலத்தில், ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு முழுவதும் மரமாகத் தான் இருந்தது. அதிலும் மாமரம் மட்டும் சுமார் இருப‌து வகையாவது நின்றிருக்கும். இந்த மரங்களில் காய்க்கும் மாம்பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எனது தாத்தா அந்தக் காலத்தில் தேடிதேடி ஒவ்வொரு ரகங்களையும் கொண்டு வந்து நட்டதாக அப்பா சொல்லுவார்கள்.

எனது வீட்டில் நின்ற, ஒவ்வொரு வகையான மாமரத்தின் பெயரும், அதன் சுவையும், அந்த மரங்களில் நாங்கள் ஏறி ஆட்டம் போட்டததும் இப்போதும் மனதில் விட்டு நீங்காமல் இருக்கிறது. எனது பழைய வீட்டின் சுவரையொட்டிய‌வாறு இரண்டு மாமரங்கள் இருந்தது, ஒரு வகை மாங்காயின் காம்பின் பக்கம் ஆப்பிளில் இருப்பது போல் குழி விழுந்து உருண்டை வடிவில் இருக்கும், அதனால் இதை நாங்கள் குண்டுகண்ணி என்று அழைப்போம். இன்னொரு வகைக் கிளீமூக்கு மாங்காயின் தோற்றத்தில் சிறிது நீளமாக இருக்கும், இதன் சுவை மாவாகச் சீனியைப் போன்று மிகவும் தித்திப்பாக‌ இருக்கும், அதனால் இதைச் சீனி மாங்காய் என்று அழைப்போம்.

எனது வீட்டின் தென் மூலையில் எலுமிச்சை அளவில் காய்கள் காய்க்கும் இரண்டு ரக மாமரங்களும் இருந்தன. இவை இரண்டிலும் உள்ள பழங்களில் நார்கள் அதிகமாகவும் இருக்கும். மேலும் இந்த மாங்காய் இரண்டும் பழுத்தாலும் காம்பில் இருந்து பால்(சுணை) அதிகமாக வரும், அதனால் அந்தப் பாலை கையால் பிழிந்து வெளியேற்றிவிட்டுதான் சாப்பிடுவோம். இந்த மாங்காய்கள் அளவில் சிறிதாக இருப்பதாலும் பாலின் தன்மை அதிகமாக இருப்பதாலும், மரத்திலிருந்து பறித்துப் பழுக்க வைப்பது கிடையாது. மரத்தில் இருந்து தானாகக் கனிந்து விழும் போது அதையெடுத்துக் கழுவிச் சாப்பிடுவோம்.

கற்கண்டு என்று ஒரு வகையான மாமரம் எனது பழைய வீட்டின் பின்புற வாசலில் நின்றது. அந்த மரத்தில் காய்க்கும் மாங்காயின் தோல் சற்றே தடிமனாக இருக்கும். வடிவில் மாங்காய் என்றால் படங்களில் என்ன அளவில் இருக்குமோ, அதுபோல் நீள அகலங்கள் அளவிட்டு செய்தது போல் இருக்கும். இதன் பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் இளம்சிவப்பாக இருக்கும், சுவைத்தால் உண்மையில் கற்கண்டு போல் அவ்வளவு தித்திப்பாக இருக்கும். இதன் தித்திப்பைப் போன்று இப்போது நான் வாங்கிச் சுவைக்கும் எந்த‌ மாம்பழங்களும் இருந்த‌தில்லை.

கப்பை மாங்காய் என்ற பெயருடன் சில மாமரங்கள் எங்கள் வீட்டில் நின்றது. அதில் மட்டுமே மூன்று வகையான ரகம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கும் இதன் சிறப்புக் காயாக இருக்கும் போதே வெளித்தோல் சிவப்பும் பச்சையும் கலந்து இருக்கும். பழுத்தால் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மரத்தில் இருந்து கனிந்து பழுத்தாலும் புளிப்புச் சுவையுடைய மாங்காயும் எனது பெரியம்மா வீட்டில் இருந்தது. வருக்கை, செங்க வருக்கை என்று இரண்டு வகை மாழ்பழங்கள். இப்படியான மாம்பழங்களின் பெயர்கள் எனது மாவட்டத்தைத் தவிர வேறு எவருக்குமாவது பழக்க பட்டிருக்குமா என்றும் தெரியவில்லை.



இப்போதும் எனது வீட்டில் இருக்கும் ஒரே மாமரம் தண்ணி மாங்காய் என்று எங்களால் அழைக்கப்படுவது மட்டும்தான். இதில் உள்ள மாங்காய் ஒவ்வொன்றும் தேங்காய் போன்று பெரிதாக இருக்கும். பச்சையாக இருக்கும் மாங்காயை வெட்டி வைத்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் ஊறிவிடும், அதனால் தான் தண்ணி மாங்காய் என்று அழைப்போம். பச்சையாகவும் பழமாகவும் சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். கோடையில் காற்றுப் பலமாக அடிப்பதால், தேங்காய் போன்று பெரிதாக இருக்கும் இந்த மாங்காய், கனம் தாங்காமல் காம்பிலிருந்து அறுந்து கீழே விழுந்துவிடும். இதை விளையும் வரை மரத்தில் வைத்துப் பாதுகாப்பது ரெம்பப் பெரிய விசயம்.

மாங்காயை பறித்துப் பழுக்க வைப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. மரத்தில் இருந்து பறிக்கும் போதே அவை கீழே விழாமல் வலையில் பறிக்க வேண்டும். அதன்பிறகு அவற்றின் காம்புகளை உடைத்துப் பால்(சுணை) வழிய‌ வைக்க வேண்டும். வழிந்த‌ பால் மாங்காயில் ஒட்டியிருந்தால் சுத்தமாகத் துணியால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். இவைகளை அடியில் வைக்கோல் பரப்பிய‌ கடவத்தில் அடுக்க வேண்டும். ஒரு வரிசை மாங்காய் அடுக்கிய பின்னர், சிறிது வைக்கோல் வைக்க வேண்டும், அந்த வைக்கோல் மேல் அடுத்த வரிசை மாங்காயை அடுக்க வேண்டும் இவ்வாறு லேயர் லேயராக வைக்கோலும், மாங்காயும் கடவம் முழுவதும் அடுக்க வேண்டும். முழுவதும் அடுக்கியபின் கடவத்தைக் கோணிப்பையைக் கொண்டு மூடி இறுக்கமாகக் கட்டி வைத்துவிடுவார்கள். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் எல்லா மாம்பழங்களும் பழுத்துவிடும். கோடைக்காலத்தில் எங்கள் வீட்டில் கடவம் கடவமாக மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பார்கள்.

எனது வீட்டில் இத்தனை வகையான மாம்பழங்களைப் பார்த்திருந்த போதும் இப்போது நான் காசு கொடுத்து வாங்கும் மாம்பழங்க‌ளைப் போல் வெளித்தோல் இவ்வளவு மஞ்சள் நிறமாக எந்தப் பழமும் இருப்பதில்லை. கலர் அதிகமாக வர வேண்டும் என்பதற்காக‌ கொன்றை மரத்தின் இலைகளைப் பறித்து வைக்கோலுடன் சேர்த்து வைப்போம் அப்போதும் மஞ்சள் நிறமாகத் தோன்றுவதில்லை, சிறிதாக‌ சிவப்பு நிறம் ஆங்காங்கே இருக்கும். கலர் நன்றாக வரவில்லையென்றாலும் தித்திக்கும் சுவை மட்டும் இரட்டிப்பாக இருக்கும்.

ஆனால் இப்போது நான் வாங்கும் மாம்பழங்களில் கலர் மட்டும் நன்றாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது, ஆனால் சுவை?..

இவ்வளவு கலராக இருக்கிறது என்றால் மாம்பழங்கள் நன்றாகப் பழுத்திருக்கிறது என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றும், ஆனால் வீட்டில் சென்று சாப்பிட்டுப் பார்த்தால் புளிப்பாக இருக்கும். நன்றாக முதிர்ந்த மாங்காய்களைத் தான் இயற்கையாகப் பழுக்க வைக்க முடியும், அதனால் தான் இவற்றின் சுவை தித்திப்பாக இருக்கிறது. நான்றாக முதிராத மாங்காய்களைப் பறித்துச் செயற்கையாகப் பழுக்க வைப்பதால் தான், கலர் மட்டும் வந்துவிடுகிறது, சுவை புளிப்பாக இருக்கிறது.

இன்னும் சில அறிவாளி வியாபாரிகள் மாமரத்தின் பச்சை இலைகள் பறித்து வைத்து அதன் மீது மாம்பழங்களை அடுக்கிவைத்து, கார்பைடுகல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதில்லை இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்று சொல்லி, வெளியில் விற்கும் மாம்பழங்களின் விலையை விட அதிக விலைக்கு விற்கிறார்கள். இயற்கையாகப் பழுக்க வைக்கப் பட்ட‌தென்றால் மாங்காய் மட்டும் பழமாக மாறும் போது இலைகள் மட்டும் பச்சையாக எப்படியிருக்கும்? யாரிடம் சொல்வது? யாரிடம் கேட்பது?

சாப்பிடும் பழங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட அழகாகவும், கலராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் மனநிலைகள் மாறத வரை எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழபோவதில்லை.

.

Monday, June 28, 2010

பழ‌ங்க‌ள்_என‌க்கு தெரிந்த‌ சில‌ வ‌கைக‌ள்

ச‌வுதி அரேபியாவில் பேரிச்சை ம‌ர‌ங்க‌ள் அதிக‌ம். ஒருமுறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்த‌ பேரிச்சை ம‌ர‌ங்க‌ளை ப‌ற்றி பேசி கொண்டிருக்கும் போது ந‌ம‌து ஊரில் உள்ள‌ ப‌னை ம‌ர‌த்தை ப‌ற்றிய‌ பேச்சு வ‌ந்த‌து. அப்போது நான் ப‌னை ம‌ர‌த்தில் இர‌ண்டு வ‌கைக‌ள் உண்டு. ஒரு வ‌கை பூ தான் பூக்கும் அதில் நொங்கு கிடைப்ப‌து இல்லை என்றும், ம‌ற்றொரு வ‌கையில் தான் நொங்கு கிடைக்கும் என்று சொன்னேன்.

என்னுட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளில் சில‌ருக்கு இந்த‌ இர‌ண்டு வ‌கைக‌ளை ப‌ற்றி தெரிந்திருக்க‌ வில்லை. அதில் ஒருவ‌ர் க‌ண்ணால் பார்த்தால் தான் ந‌ம்புவேன் என்று அட‌ம் பிடித்தார். அவ‌ங்க‌ளை எல்லாம் ஒரு வ‌ழியாக‌ ச‌மாதான‌ ப‌டுத்துவ‌த‌ற்குள் போதும் போதும் என்று ஆகி விட்ட‌து.. இந்த‌ ப‌னை ம‌ர‌ம் ஒன்றிலேயே இவ்வ‌ள‌வு குழ‌ப்ப‌மா? அப்ப‌டியானால் என‌க்கு தெரிந்த‌ சில‌ ம‌ர‌ங்க‌ளில் உள்ள‌ வ‌கைக‌ளை சொன்னால்? உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன். உங்க‌ளுக்கும் ஏதாவ‌து தெரிந்தால் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ள்.

பலாப்ப‌ழ‌ம் அனைவ‌ரும் அறிந்த‌தே... அதில் என‌க்கு இர‌ண்டு வ‌கைக‌ள் தெரியும். எங்க‌ள் ஊரில் ப‌லாப்ப‌ழ‌த்தை வ‌ழ‌க்கு சொல்லாக‌ ச‌க்கை என்று அழைப்ப‌து உண்டு.

1)வ‌ருக்கை ச‌க்கை(ப‌லாப்ப‌ழ‌ம்)
2)கூழ‌ன் ச‌க்கை(ப‌லாப்ப‌ழ‌ம்)

இதில் முத‌ல் வ‌கையை ம‌ட்டும் தான் ந‌க‌ர‌ங்க‌ளில் நான் பார்த்து இருக்கிறேன். இந்த‌ வ‌கையில் உள்ள‌ சுளைக‌ளை தான் த‌னியாக‌ எடுத்து பாக்க‌ட்டுக‌ளில் அடைத்து விற்கிறார்க‌ள். இத‌ன் சுளைக‌ள் கொஞ்ச‌ம் அட‌த்தியாக‌ இருக்கும்.

இர‌ண்டாவ‌து வ‌கை ப‌லாப்ப‌ழ‌த்தை எங்க‌ள் ஊரை த‌விர‌ எங்கும் பார்த்து இல்லை. இந்த‌ பலாப்ப‌ழ‌ம் ப‌ழுத்து விட்டால் நாம் ந‌ம‌து கைக‌ளின் ப‌ல‌த்தால் இதை பிள‌க்க‌ முடியும். ஆனால் முத‌ல் வ‌கையை எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ ப‌ழுத்தாலும் கைக‌ளினால் பிள‌க்க‌ முடியாது. ரெம்ப‌ க‌டின‌மாக‌ இருக்கும். க‌த்தியால் தான் வெட்ட‌ முடியும்.



ப‌ழுத்த‌ கூழ‌ன் ச‌க்கையின் சுளையை வ‌ருக்கை ச‌க்கையின் சுளையை போல் த‌னியாக‌ எடுக்க‌ முடியாது. கூழ‌ன் ச‌க்கையின் சுளைக‌ள் ப‌குதி திட‌ நிலையில் இருக்கும். இதை நீங்க‌ள் கையில் எடுத்து வாயில் வைத்தால் நூல் போல் இழுக்கும். இத‌ன் சுவை முத‌ல் வ‌கையை விட‌ தித்திப்பாக‌ இருக்கும். ப‌ல் இல்லாத‌ முத‌ய‌வ‌ர்க‌ள் இந்த‌ வ‌கையை தான் விரும்பி சாப்பிடுவார்க‌ள்.

இந்த‌ ப‌லாப்ப‌ழ‌த்தின் ம‌ண‌ம் அதிக‌ வாச‌னை திற‌ன் கொண்ட‌து. ந‌ம‌து வீட்டின் ப‌க்க‌த்தில் உள்ள‌ நான்காவ‌து வீட்டில் பலாப்ப‌ழ‌ம் வெட்டினால் கூட‌ ந‌ம‌து வீட்டில் அத‌ன் வாச‌னை தெரிவித்து விடும். என‌வே ப‌க்க‌த்து வீட்டு கார‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் இதை சாப்பிட‌ முடியாது.

இதே ப‌லாப்ப‌ழ‌த்தின் வேறு சில‌ ர‌க‌ங்க‌ளும் நான் பார்த்திருக்கிறேன். அயினி ச‌க்கை என்று அழைக்க‌ப்ப‌டும். இது ப‌லாப்ப‌ழ‌த்தை போல் இருக்கும். ஆனால் அள‌வு மிக‌ சிறிய‌தாக‌ இருக்கும். இது சிறிது புளிப்பு சுவையுடைய‌து. இந்த‌ ம‌ர‌ம் பெரும்பாலும் வீடுக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டும். எங்க‌ள் ஊரில் இந்த‌ ம‌ர‌த்தின் க‌த‌வு ம‌ற்றும் ஜ‌ன்ன‌ல்க‌ளுக்கு த‌னி ம‌வுசு உண்டு.

க‌றி ச‌க்கை என்று அழைக்க‌ப்ப‌டும் ஒரு ர‌க‌த்தையும் பார்த்து இருக்கிறேன். இதுவும் பார்ப‌த‌ற்கு ப‌லாப்ப‌ழ‌த்தை போல், ஆனால் சிறிய‌ அள‌வில் இருக்கும். இதை ச‌மைய‌ல் ப‌ண்ண‌ ப‌ய‌ன்ப‌டுத்துவார்க‌ள்.

சீத்தாப்ப‌ழ‌ம் இதிலும் இர‌ண்டு வ‌கைக‌ள் உள்ள‌து. பாஞ்சி ப‌ழ‌ம் என்று எங்க‌ள் ஊரில் அழைக்க‌ ப‌டும். ஒரு வ‌கை இனிப்பு சுவை உடைய‌து. இது தான் அதிக‌மாக‌ ந‌க‌ர‌ங்க‌ளில் பார்க்க‌ முடிகிற‌து. இது மாவு போன்று சுவைப்ப‌த‌ற்கு தித்திப்பாக‌ இருக்கும்.



இர‌ண்டாவ‌து வ‌கை புளிப்பு சுவையுடைய‌து. இத‌ன் மேல் தோலில் முட்க‌ள் காண‌ப்ப‌டும். இது இனிப்பு சீத்தாப்ப‌ழ‌த்தை விட‌ சிறிது பெரிதாக‌ இருக்கும்.



குறிப்பு: மேலே சொன்ன‌ வ‌கைக‌ள் தெரியாது என்றால் அடுத்த‌ மாத‌ம் குழித்துறையில் ந‌டைபெறும் "வாவுப‌லி ச‌ந்தை"யில் க‌ல‌ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நான் கூறிய‌தை விட‌ அதிக‌மான‌ வ‌கைக‌ளை பார்க்க‌ முடியும். முடிந்தால் அதை ப‌ற்றி அடுத்த‌ மாத‌ம் ஒரு இடுகை போடுகிறேன்.

.

.
Related Posts with Thumbnails