Tuesday, March 11, 2014

இலங்கை தமிழர் பிரச்சனை_எத்தனை முரண்பாடுகள்!!!

ஐந மனித உரிமை அமைப்பின் ஆணையாளர்: நவனீதன் பிள்ளை

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் நடந்த போது, மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது உண்மை, அதற்காகச் சர்வதேச விசாரனை வேண்டும். போர் முடிந்த போதும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளது, சிங்கள இராணுவதினரால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது கண்டிக்கத் தக்கது. 

எதிர்க்கட்சி தலைவர்(பிஜேபி): சுஷ்மா சுவராஜ் 

இலங்கைக்குச் சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது. இலங்கையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினோம். தமிழர்களின் மறுகுடியமர்த்தல் பகுதிகளையும் பார்வையிட்டோம். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு பிரமிக்கிறேன்.

மதிமுகக் கட்சி தலைவர்: வைகோ 

இலங்கை பிரச்சனையில் தமிழ் ஈழம் மட்டும் தான் ஒரே தீர்வு. போர் குற்றவாளி, சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை சர்வதேச விசாரணை கூண்டில் ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழினமே, தமிழர்களே விழித்தெழுங்கள். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன் 

இலங்கையில் பொது வாக்கெடுப்பெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் எல்லோரும் ஒங்கி குரல் கொடுக்கும் போது தான் சர்வதேச சமூகத்தின் அழுத்ததைப் பெற்றுத் தமிழீழத்தை வென்றெடுக்க முடியும். இந்திய அரசு இதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்: கோபண்ணா 

இலங்கை ஒரு சுதந்திரம் பெற்ற நாடு, அந்த நாட்டில் உள்விவாகாரங்களில் இந்தியா ஓரளவிற்குத் தான் தலையிட முடியும். இலங்கை தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.: விஜயதரணி 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் நிர்பந்ததினால் தான் இலங்கையில் வடக்கு மாகணத் தேர்தலை நடத்தமுடிந்தது. ராஜிவ் மற்றும் ஜெயவர்த்தனே ஒப்பந்ததின் 13 வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவதற்கான அனைத்து முயச்சியையும் இந்தியா செய்து வருகிறது.

பிஜேபி மாநில செயலாளர்: ராகவன் 

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத் தான் பிஜேபி செய்யும். இங்கு இருந்து கொண்டு தமிழீழம் என்று குரல் எழுப்புவதை ஏற்க முடியாது. 13 வது சட்ட மசோதாவை நிறைவேற்றி தமிழர்களுக்கு முழுமையான அதிகார பகிர்வை கொடுக்கத் தான் பிஜேபி விரும்புகிறது. 

காந்திய மக்கள் கட்சி: தமிழருவி மணியன் 

நரேந்திர மோடியால் மட்டுமே இலங்கையை மிரட்டி வைக்க முடியும். சிங்கள அதிபர் ராஜபக்சேவிற்கு, இப்போது இந்தியா சுண்டைக்காயாக இருக்கிறது. கண்டிப்பாக மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆவார், ஈழ தமிழர்களின் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்.

தலைமைக் கழகப் பேச்சாளர்(அதிமுக) : ஆவடி குமார் 

தமிழர் ஒருவர் பிரதமராக ஆகாமல் ஈழ தமிழர் பிரச்சனை முடிய போவதில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் இந்த முறை பிரதமர் ஆவது உறுதி. அவர் தலைமையில் ஈழ தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் எல்லை பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்படும். 

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்: குமரன் பத்மநாபன் 

இப்போது உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது, ஆயுத போரட்டம் மூலம் ஈழ விடுதலையை அடைய முடியாது. இங்குள்ள தழிழர்களும் தனி நாடு விரும்பவில்லை. ஒருங்கிணைந்த இலங்கைலேயே வாழ விரும்புகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், புலம் பெயர்ந்த புலிகள் அமைப்பில் ஈடுபாடு கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் தான் பிரிவினையை ஆதரிக்கிறார்கள்.

வட மாகாண முதலமைச்சர்: விக்னேஷ்வரன் 

எங்கள் நாட்டின் பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்வோம். இப்போது தமிழர்களின் மறுவாழ்வு, நில உரிமைகள், இரணுவத்தை வெளியேற்றுதல் போன்ற பணிகளைச் செய்வதே என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். வெளியில் இருக்கும் தமிழர்கள் இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பதே நல்லது. 

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற எம்.பி: ஸ்ரீதரன் 

இன்றைக்கும் இலங்கையில் வாழும் என்னைப் போன்றவர்களும் கூட அரசை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் தான் இருக்கிறோம். இந்த நேரத்தில் தமிழ் நாட்டு மக்களில் குரலும், இளைஞர்களின் போரட்டமும் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களில் சர்வதேச முன்னெடுப்புகளும் தான் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றது. 13 வது சட்டத்திருத்தம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் தமிழர்களுக்குத் தந்துவிடாது.

                                                                *-----*

இலங்கை தமிழர் பிரச்சனை எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடத்தவும், நடுநிலையாளர்களுக்கு மேடையில் முழங்கவும், விமர்சகர்களுக்கு சுய விளம்பரம் தேடவும் நன்றாக பயன்படுகிறது.

பிரச்சனை ஒன்று, ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் இயக்கங்களில் உள்ள கொள்கைகளை வைத்து எத்தனை முரண்பாடுகள்!!!
தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.


.

Sunday, March 9, 2014

சாலையைப் போடுங்க‌, ஆனா மண்டை உடையாம போடுங்க!!!

சாலைகளைப் போடுவதற்கு அரசு எப்படி ஒப்பந்தங்கள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதைக் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தேன். பல போரட்டங்களுக்குப் பிறகு மீண்டும் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான சாலையைப் போட தொடங்கியிருந்தார்கள். இவர்கள் ஒரு பகுதியில் இருந்து போட்டு மறுபுறத்தில் முடிப்பதற்குள் முதலில் போட பட்டிருக்கும் சாலைகள் பல்லை காட்ட தொடங்கியிருக்கும். இது தான் இவர்கள் போடும் சாலையின் லட்சணம். இவை ஒருபுறம் இருக்க நான் கேட்ட முதல் கேள்விக்கான அவசியம் இதுதான். நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலான நெடுஞ்சாலை ஒருவழிச்சாலை, இரண்டு புறமும் வாகனம் போவதும், வருவதுமாக இருக்கும்.

இவர்கள் சீரமைக்கும் சாலையில் முதல் முதலாக எந்த அளவில் சாலையில் தார் போட்டு இருப்பார்களோ, அதே அளவில் தான் திரும்பவும் அதன் மேல் சல்லியை கொட்டி தார் ஊற்றுகிறார்கள். எல்லோருக்கும் தெரியும் தார் சாலை என்பது சாதரணத் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்கும். இப்படி உயரமாக இருக்கும் சாலையில் ஒவ்வொரு முறையும் சீரமைக்கும் போது ஒர் அங்குலம் முதல் இரண்டு அங்குலம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இரண்டு அல்லது முன்று முறை செய்யும் போது சாலையின் உயரம் தரையின் சமதளத்தில் இருந்து ஒர் அடிவரை உயர்ந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் சாலைப்போடுபவர்கள் இந்த இரண்டு ஓரங்ளையும் சிறுது சல்லிக் கொட்டி மழித்து விடுவது இல்லை. அவ்வாறு செய்தால் ஒப்பந்த தாரர்களுக்குக் கொஞ்சம் சல்லியும் சிறிது தாரும் செலவு ஆகும். அதனால் இவர்கள் செய்வது இல்லை, இன்னும் சில ஒப்பந்த தாரர்கள் சாலையின் இரண்டு ஓரங்களிலும் மண்ணைக் கொட்டி மறைத்து விடுவார்கள். சாலைப் போட்ட நான்கு நாட்கள் நன்றாக இருக்கும், ஒரு மழை வந்தால் காணமல் போகும்.

இதைப் போன்ற‌ ஒரு வழிச் சாலையில் இருச்சக்கர‌ வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இரண்டு பெரிய பேருந்தோ அல்லது கனரக வண்டியோ நேர் எதிராக வந்தால் இவர்கள் முதலில் ஓரங்கட்டுவது ஓரத்தில் செல்லும் இருச்சக்கர‌ வாகனத்தைத் தான். சாலையில் இருந்து ஒர் அடி பள்ளத்தில் இருக்கும் தரையில் இருச்சக்கர‌ வண்டியை அனுபவம் இல்லாமலோ அல்லது கைத் தவறியோ விட்டால் என்ன ஆகும் வண்டியின் சக்கரத்தை சுழற்றி ஆளை கிழே தள்ளும். பெரும்பாலன விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன்.

இந்த நெடுஞ்சாலை ஒரு வழிச்சலையாக இருப்பதால் ஒரு வண்டி முன்னால் போகும் போது இரண்டாவது வண்டி முதல் வண்டியை முந்த வேண்டும் என்று நினைக்கும் போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஓரங்கட்டுவது இருச்சக்கர வாகனத்தைத் தான். இருச்சக்கர வண்டியை ஓட்டும் நீங்கள் வலுக்க‌ட்டாயமாகப் பள்ளத்தில் இறக்க‌ நிர்பந்திக்கப் படுவீர்கள். உங்களால் வண்டியைக் கட்டுப்படுத்தி ஓர் அடிக்கு மேல் இருக்கும் பள்ளத்தில் இறக்க‌ முடியாவிட்டால் கீழே விழ வேண்டியது தான்.



இன்றைக்கு நமது நாட்டில் சாலைகள் ஒழுங்காக இல்லை, சாலை விதிகளும் ஒழுங்காக இல்லை, அப்படியே இருந்தாலும் அதை மதிப்பதற்கு மக்களும் தயாரில்லை. ஆனால் 200 சி.சி, 250 சி.சி என்று இருச்சக்கர‌ வாகனங்களைக் கல்லூரி படிக்கும் இளைஞர்களைக் குறி வைத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அந்த வண்டியை ஓட்டுவதற்கான சாலை வசதி இருக்கிறதா என்று வண்டி வாங்குபவனே கவலை படாத போது, வண்டியை விற்பவன் எங்கே கவலைப்படப் போகிறான். சி.சி அதிகமான‌ வண்டிகளை இப்போது பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கைகளில் சி.சி அதிகமாக உள்ள வண்டிகளைத் தான் பார்க்க முடிகிறது. ஒரு வண்டியில் இரண்டு, முன்று பேர் என்று சிட்டாகப் பறக்கிறார்கள். இப்படி வண்டியில் போகும் என்று சொல்ல முடியாது பறக்கும் கல்லூரி மாணவர்கள் வண்டியை கொண்டு சாலையின் ஓரத்தில் இருக்கும் பள்ளத்தில் விட்டால் என்ன ஆகும், மண்டை தான் உடையும்.

கன்னியாகுமரி மாவட்ட செய்திதாள்களை என்றைக்குப் புரட்டினாலும் பக்கத்திற்குப் பக்கம் இருச்சக்கர வாகன விபத்துக்களைப் படிக்க‌ முடியும். எனது நட்பு வட்டம் மற்றும் உறவுகளில் கூடச் சமீக காலங்களில் நடந்த விபத்துகள் மட்டும் மூன்று. இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள், இன்னொருவர் ஆசிரியர். நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடைப்பெறும் இடங்கள் எது என்று எவரிடம் கேட்டலும் கீழே உள்ளவற்றைப் பட்டியல் இடுவார்கள். பார்வதி புரத்தை அடுத்த உள்ள‌ களியங்காடு, சுங்கான்கடையை அடுத்து உள்ள‌ கருப்புக்கோடு, தோட்டியோடு, வில்லுக்குறி பாலம் மற்றும் குமாரகோவிலை ஒட்டியுள்ள தென்கரை பாலம். இந்த இடங்களில் தான் அதிகமான இருச்சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் முறையான அறிவிப்புப் பலகைகள் கூட இல்லை, அப்படியே சில இடங்களில் இருந்தாலும் அவை கண்ணுக்கு தெரியாதவாறு மிகச் சிறியதாக ஓரத்தில் எங்காவது நட்டு வைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் ஊள்ள சாலைகளைப் பற்றிப் பேசும் போது நமது கண் முன் வந்து நிற்கும் முக்கியமான ஒரு சாலை கோட்டார் ரயில்வே நிலையத்திற்குச் செல்லும் சாலை. எனக்குத் தெரிந்து இந்தச் சாலை ஒரு நாளும் மேடு பள்ளம் இல்லாமல் இருப்பது இல்லை. பிரசவத்திற்கான சாலை என்று விளையாட்டிற்குச் சொல்லும் சாலையைப் பார்க்க வேண்டும் என்றால் இது தான். தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்லும் இந்தச் சாலையின் நிலைமை ரெம்ப மோசம்.

வாஜ்பாய் அவர்கள் பிரதமாக இருக்கும் போது கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலையைப் பற்றிக் கருத்து விவாதங்களிலும், மேடையெங்கும் நாங்கள் கொண்டு வந்த அருமையான திட்டம் என்று முழங்கும் பொன்னார் அவர்கள், அவரது சொந்த தொகுதியில் அத்திட்டம் நடைமுறை ப‌டுத்தாது பற்றி வாயே திறப்பது இல்லை. காவல் கிணறுடன் இத்திட்டம் முடக்கப்பட்டு நிற்கின்றது. சாலை விரிவாக்கம் செய்தால் பல முதலாளிகளில் கடைகள் தகர்க்கப்படும். அரசியல்வாதிகளுக்குத் தான் முதலாளிகளுக்கு நஷ்டம் என்றால் இரத்த கண்ணீரே வருமே..

.

Thursday, March 6, 2014

என்ன மாப்ளே!!! நாய் ஒண்ணும் செய்யாது!!

எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு அழைப்பது உண்டு. ஒரு நாள் புது மனைவியின் சித்தி வீட்டிற்கு அதாவது நண்பனின் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்.

நண்பனுக்கு நாய் என்றாலே ஏழாம் பொருத்தம் தான். அதுவரை தூங்கிக் கொண்டிருக்கும் நாய் கூட, இவன் அந்த வழியாக வந்தால் காது புடைக்க, வாலை நிமிர்த்துக் குரைக்கத் தொடங்கிவிடும். எனவே நாயை மட்டும் ஒருவர் வீட்டில் பார்த்து விட்டால் அந்த வீட்டிற்குத் தனியாகப் போக மாட்டான். இவன் விருந்துக்குப் போயிருந்த வீட்டில் ராஜபாளையம் நாய் ஒன்று இருந்திருக்கிறது. காலையில் இவன் சென்ற போது இவன் கண்ணில் அது மாட்டவில்லை அல்லது அது கண்ணில் இவன் மாட்டவில்லை.



நண்பனுக்கு வெளியில் இருந்த வேலை எல்லாம் முடிவதற்கு மதியம் ஆகிவிட்டது. அலைச்சல் அதிகமாக இருந்ததால் பசி வேறு இவனை வாட்டியது. மாமியார் வீட்டுக் கறி விருந்துச் சாப்பாடு நினைவுக்கு வரவே வண்டியை நேராக மாமியார் வீட்டுக்கு விட்டான். வண்டியை "கேட்" டுக்கு வெளியில் நிறுத்தி, லாக் செய்துவிட்டு, மெதுவாக நடந்து "கேட்டை" திறக்க சென்றால் பெரிய அதிர்ச்சி, ஒரு பக்கம் ராஜபாளையம் நாய்க் கம்பீரமாக நிற்கிறது, இன்னொரு பக்கத்தில் தோட்டத்தில் சின்ன மாமியார் வாழையிலை வெட்டிக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கத்தில் இருக்கும் நாயை பார்த்தவுடன், அதுவரையிலும் அடிவயிற்றில் இருந்த பசி இவனுக்குச் சுத்தமாக மறந்துப் போச்சு. அதென்னவோ தெரியவில்லை இவனைப் பார்த்தவுடனே அதுவும் பாதி நறுக்கிய வாலையும் முறுக்கத் தொடங்கிற்று. மறுபக்கத்தில் இருந்த மாமியார் "சும்மா வாங்க, டாமி ஒண்ணும் செய்யாது" என்று இவனைப் பார்த்தார்.

இவனுக்கோ இருந்த பசி மறந்து, காலையில் சாப்பிட்டதை அடிவயிறுக் கலக்க ஆரம்பிச்சுட்டுது.

"ஆமா!! உங்க நாயி அது..  உங்களை ஒண்ணும் செய்யாது, வர்றது எல்லாம் எனக்குத் தான்" என்று மனசுக்குள் நினைத்து விட்டு, "மாமி நீங்க கொஞ்சம் அது பக்கத்துல வந்து பிடிச்சுக்குங்க, நான் வந்துடுறேன்" என்று சொன்னான்.

சின்ன மாமியாரும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு, வந்து நாயைப் பிடிப்பதற்குள், வீட்டின் உள்ளிருந்து வாசலில் வந்த சின்ன மாமனார் "என்ன மாப்ள நீங்க!! இந்த நாய்க்குப் போய் இப்படிப் பயப்படுறீங்கனு" இவனுடைய ஆண்மைக்குச் சவால் விட இவனும் "சடோர்னு" கேட்டைத் திறந்து வீட்டை நோக்கி நடக்க, முறுக்கிய வாலுடன் டாமியும் பாய, "ஆஆஆனுனு" நண்பனின் அலறல்.

நாய்ப் பாய்ந்த வேகத்தில் அதன் பல் எதுவும் படவில்லை, நகம் தான் கீறி விட்டுருந்தது.

அப்புறம் என்ன?. பக்கத்து வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் குசலம் விசாரிக்க வந்துட்டாங்க.

"நம்ம டாமி, ஊர்ல இதுவரைக்கும் யாரையும் கடிச்சதே கிடையாதுனு" பெருசு ஒண்ணு கன்னத்தில் கை வைக்க, "அப்ப நான் என்ன திருட்டு பயலானு" நண்பன் மனதினுள் நினைத்து முறைக்க,

ஆமா அக்கா "புதுசா வந்த மாப்பிளையையாக் கடிக்கனுமுனு" இன்னொரு பெருசு நெற்றி புருவத்தை உயர்த்த, அதுக்கென்ன "புது மாப்பிளை, பழைய மாப்பிளை" என்று பார்த்தா கடிக்கும் என்று மனசுக்குள் நண்பன் புலம்பினான்,

என்ன மாமா என்னை கறிவிருந்துக்கு கூப்பிட்டீங்க, அதுக்கு முன்னாடி இந்த நாய்க்கு கறிவிருந்து போட்டு இருக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு பரிதாபமாக மாமாவை பார்க்க, அவரு "மன்னிசிடுங்க மாப்பிள" என்று தலை கவிழ்ந்தார்.

நாயின் பல்லுப் படல என்றாலும், "கறி ஏதும் இரண்டு நாளைக்குச் சாப்பிட வேண்டாம், வெறும் ரசம் மட்டும் சாப்பிடுங்கனு" பக்கத்துவீட்டுக் காரர் சொல்ல, "விருந்துக்கு வந்த இடத்துல இப்படி ஆகிப் போச்சேனு" இன்னொருவர் ஆரம்பிக்க, நண்பனுக்கோ ஆள விட்ட போதும், இப்படியே ஓடியே போயிருவேன் என்பது போல் ஒவ்வொருவரையும் பார்த்தான்.

எப்படியோ எல்லோரையும் ஒருவழியா சமாதானப் படுத்திவிட்டு, ரசம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மனைவியை வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கிளம்பினால், தெருவில் போகும் வழியில் இரண்டு பக்கமும் கூட்டமாக நின்னு வேடிக்கை வேறு பாத்திருக்கிறார்கள். நண்பனோ சாலையைத் தவிர வேறு எதையுமே பார்க்காதது போல் வண்டியை ஓட்டிவந்திருக்கிறான்.

இது போதாதுனு வழியில் மூணு இடத்தில் வண்டியை நிப்பாட்டி

என்ன மச்சான் "நாய் கடிச்சாமே" அக்கா சொன்னானு ஒருத்தரும்,

என்ன மாமா "நாய் எங்கக் கடிச்சினு" வேற ஒருத்தரும்,

"போகும் போதே ஆஸ்பத்திரிக்கு போயிட்டு போங்க மருமவனேனு" இன்னொருத்தரும் சொல்ல..

நண்பனுக்கோ கடுங்கோபம். "ஆமா இது இப்ப ரெம்ப முக்கியம்" என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டான். எல்லோருக்கும் போலி சிரிப்பையும், தலையும் ஆட்டிவிட்டு வந்திருக்கிறான்.

இனிமேலும் சின்ன மாமியார் வீட்டுக்குத் தனியா போவானு நினைக்குறீங்க!!!!..

குறிப்பு: இந்தப் பதிவு நான் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதியது.

.

Monday, March 3, 2014

ஆட்டோ_ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல!!!!

நான் இந்தப் பதிவில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆட்டோவில் கட்டண மீட்டர்கள் வைக்கக் கூடாது என்றோ, அல்லது அதில் வைத்திருக்கும் கட்டணத்தை விட அதிகமாக வாங்குவது நியாயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஆட்டோ கட்டணத்தை ட்டும் பெரிதாகப் பேசும் அல்லது எழுதும் நண்பர்களிடம் கேட்பது ஒன்றுதான். ஆட்டோக்காரர்களிடம் மட்டும் "ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல" என்று சர்வ சாதரணமாககேட்கும் நாம் கீழே நான் சொல்லியிருக்கும் விசயங்களை எப்படி அணுகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.


இன்று பெருநகரங்களில் இருக்கும் திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு சாதரண மினரல் வாட்டர் பாட்டிலின் விலை என்ன? அதே வாட்டர் பாட்டிலை வெளியில் வாங்கினால் அதன் விலை என்ன? என்பது அனைவருக்கும் தெரியும்திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு பாப்கார்ன் விலையில் வெளியில் உள்ள கடைகளில் அதேப்போல் இரண்டு வாங்க முடியும். ஆனால் அங்கெல்லாம் யாரும் ஏன்டா இப்படி விற்கிறீங்கனு பொங்குவதைப் பார்க்க முடியவில்லை. வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதைவிடக் கொடுமை வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று வாசலியே போர்டு மாட்டிவிட்டு, அதற்கும் ஆள் வைத்துப் பரிசோதனை செய்கிறார்கள். டிக்கெட் எடுத்து தான் உள்ளே வருகிறேன், அதேப்போல் என்னுடைய பணத்தை கொடுத்து தான் வெளியில் இருந்து உணவுப் பொருளும் வாங்கி வருகிறேன். ஏன்டா இவைகளை நான் உள்ளேக் கொண்டு போகக்கூடாது என்று எவரும் கேட்பதில்லை. திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்குச் செய்யும் செலவை விட, இங்கு வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அநியாயமாகக் கொடுக்கும் விலையின் செலவு அதிகம். திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு கணக்குக் கேட்காமல் வாங்கிச் சாப்பிட்ட‌ நாம் தான் வெளியில் வந்து, நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று "ஆட்டோ வேணுமா சார்?" என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் புக் பண்ணும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், வாரத்தில் சாதரண நாட்களில் இருக்கும் டிக்கெட்டின் விலையை விடச் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை நூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மோசடி முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தான் இருந்தது, ஆனால் இப்போது வார இறுதி நாட்களிலேயே இப்படி விலையேற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பஸ் முதலாளிகள் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் டீசலுக்கு அதிக விலை கொடுப்பதில்லை, அதேப்போலப் பஸ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் அதிகச் சம்பளம் கொடுத்தும் விடப் போவதில்லை. "அப்புறம் எதற்கு இந்த விலையேற்றம்?" எவருக்கும் கேட்கும் துணிவில்லை. ஒரு பஸ் டிக்கெட்டிற்கு நூறு முதல் முந்நூறு ரூபாய் அதிகமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் கொடுத்து பயணித்து விட்டு விடியற் காலையில் பஸ்சை விட்டு இறங்கி போக வேண்டிய இடத்திற்காக ஆட்டோவை தேடும் போது, நமக்காகவே காத்திருந்தது போல் வந்து "எங்க சார் போகனும், வா சார் உட்கார்" என்று கேட்கும் ஆட்டோகாரரிடம் தான் "மீட்டர் போட்டா ரேன்" என்று சட்டம் பேசுவோம்.

இப்போது சாதரணமாக ஒரு ஹோட்டலில் சென்று டிபன் ஆர்டர் செய்தாலே அதைக் கொண்டு வந்து பரிமாறும் சர்வர், இறுதியில் பில் கொடுக்கும் போது நமது முகத்தைப் பார்க்கிறார். அவருக்கும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் டிப்ஸ் வைக்க வேண்டும். சாப்பிட்டது ஐம்பது, அதற்குக் கொடுக்கும் டிப்ஸ் பத்து. இன்னும் கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் டிப்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் தனது கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல. இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம். நான் இப்போது இருக்கும் ஹைதிராபாத்க்கு வந்தவர்களுக்குத் தெரியும். பிரியாணி என்றால் அது பாவர்ஜி ஹோட்டல் என்று. அந்தக் கடையின் பிரியாணி என்றால் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்பவனும் சாப்பிடுவான். அந்த அளவிற்குப் பிரியாணி சுவையாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிட எப்போதும் நமது ஊரில் நடக்கும் கல்யாணப் பந்தி போல் தள்ளுமுள்ளாகத் தான் இருக்கும். இந்த ஹோட்டலில் பில் போடுவதும், பணம் வங்குவதும் நமக்குப் பரிமாறும் சர்வர் தான். மொத்தமாகப் பில் போட்டு கொடுக்கும் போதே அவருக்குத் தேவையான டிப்ஸை அவரே பில்லில் போட்டு நம்மிடம் வாங்கிக் கொள்வார். ஒரு வேளை பில்லில் போட மறந்து விட்டால் அவரே கேட்டு வாங்கிக் கொள்வார். நாம் சாப்பிடும் தொகைக்கு ஏற்ப அவர்களின் டிப்ஸும் இருக்கும்.

இப்போது பயணத்திற்கு "நாங்க இருக்கோம் வாங்க" என்று நம்மைக் கனிவாக அழைப்பவர்கள் கால் டாக்சி வைத்திருப்போர். இவர்கள் இப்போது ஒரு சிஸ்டம் வைத்திருக்கார்கள், ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்டகிலோ மீட்டர் நாம் பயணம் செய்யலாம் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். இதைப் பிளான் செய்து நாம் புக் பண்ணினால் என்ன ஆகும் என்பதைக் கீழே விளக்குகிறேன். நாம் போக வேண்டிய இடத்திற்கு ஆகும் நேரம் கால் மணி நேரம், அப்படியானால் வருவதற்கும் கால் மணி நேரம், சென்றஇடத்தில் நமக்கு ஆகும் வேலைக்கான நேரம் அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒரு மணி நேரம் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் நாம் அந்தக் கால் டாக்சியில் உள்ள ஒரு மணி நேர பிளானை புக் செய்கிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போகும் போது கால் மணி நேரத்தில் சென்று விடுகிறேம், அங்குள்ள வேலையையும் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வரும் போது டிராபிக் காரணமாக நாம் பத்து நிமிடம் தாமதமாக வருகிறோம் என்றால் அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதேப்போல் மற்றொரு ஒரு மணி நேரத்திற்கான பணம். இரண்டு மணி நேரத்திற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உண்டு. டிரைவரிடம் எப்படி என்று கேட்டால் அவர் மீட்டரை காட்டுவார். சார் எனக்கு இதில் எதுவும் கிடைக்காது, நீங்கள் குறைத்துக் கொடுத்தால் எனது சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்று கையை விரிப்பார். இதையே ஒர் ஆட்டோ டிரைவர் செய்தால் நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்கும்.



இன்றைக்கும் சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு சிலஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார். அது மட்டுமல்ல குடித்துவிட்டு நடுச் சாலையில் விழுந்துக் கிடப்பவர்களைச் சற்று ஒதுக்கி போடுவதற்கோ அல்லது அவனுடய ஆடையைச் சரிசெய்வதற்கோ வழியில் செல்லும் எவருக்கும் மனசு வராது. அதையும் மனிதாபிமானம் உள்ள ஓர் ஆட்டோ டிரைவர் செய்வதை நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.

மீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், முதியோர்களை இன்றைய தலைமுறைகள் எவ்வாறு கவனிக்கின்றன என்ற தலைப்பில் பேசிய ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியது; இன்றைக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரும்பாலான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மனிதாபிமானம் உள்ள ஏதாவது ஒரு சிலஆட்டோ டிரைவர்கள் தான். இந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை.

சமீபத்தில் நான் சென்னை வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரிடம் மீட்டர் கட்டணம் பற்றிப் பேசினேன். என்னங்க மீட்டர் போட்டு ஓட்டினா லாபமா? நஷ்டமா? என்றேன், அவரோ எனக்கே தெரியல சார் என்றார். அப்புறம் நஷ்டம் தான் சார். எங்க சார்!! சவாரி கிடைக்க மாட்டேங்குது, எங்களுக்கு உறுதியாக இத்தனை சவாரி கிடைக்கும் என்று இருந்தால் லாபமாக இருக்கும். ஆனால் இப்போது சாவரி கிடைப்பதே குறைவாக இருக்கு என்று சொன்னார். அவர் கூறியதும் எனக்கு உண்மையாகப் பட்டது, காரணம் இவர்களுக்கு இன்று இத்தனை சாவரிகள் கிடைக்கும் என்ற உறுதி இல்லை. ஆனால் அன்றைக்கும் அவர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு மேல் மட்டத்தில் இருப்பவர்களையே அசைத்துப் பார்க்கிறது, இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். நம்மிடம் வாங்கும் பத்து, இருபது ரூபாய்களைக் கொண்டு அவர்கள் ஒன்றும் பங்களா கட்டிவிட முடியாது. அவர்கள் குடியிருப்பது என்பதோ வாடகை வீடுகளிலும், சேரிகளிலும் தான். அவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதாக உயர்ந்தாகவும் இல்லை.


இந்த ஆட்டோ டிரைவர்களுக்குக் கேட்கும் தொகையை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கும் சில பயணிகளால் தான் இந்த பிரச்சனை என்றுப் புகார் வேறு கூறுகிறார்கள் முற்போக்காளர்கள். இவர்களால் தான் இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரிடமும் அதிகமாக பணம் கேட்பதாகவும் எழுதுகிறார்கள். இப்படிக் கொடுப்பவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும் என்று அறிவுரை வேறு. என்ன கொடுமை... கண்டிப்பாக நான் கொடுக்கும் பத்து அல்லது இருபது ரூபாய், அவனுடைய குழந்தைக்குப் பிஸ்கட் ஆகத் தான் வீட்டுக்கு போகும். இப்படிக் கொடுப்பதை நிறுத்தி தான் நான் திருந்த வேண்டும் என்றால் நான் திருந்தாமலே இருந்துவிட்டுப் போகிறேன்.

பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களில் சட்டையைப் பிடிப்பது எதனால். மேலே சொல்லியிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் எந்தப் பத்திரிக்கையும் எழுதியதாகவோ அல்லது ஊடகங்கள் பொங்கியதாகவோ தெரியவில்லை. காரணம் இந்தப் பெரிய கார்பரேட் முதலாளிகளில் விளம்பரம் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தேவை. இவர்களில் நியாயம், அநியாயம் எல்லாம் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தான்.

.

Friday, February 28, 2014

பல்லிளிக்கும் தமிழ்மணம் ம‌குடம்!!!

நான் பெரும்பாலும் தமிழ் பதிவுகள் படிக்க வேண்டுமானால் முதலில் இணையத்தில் திறப்பது தமிழ் மணம் திரட்டியை தான். நண்பர்களுக்கும் பதிவுகள் படிப்பத‌ற்கு பரிந்துரை செய்வது இதைத் தான். தமிழ் மணம் திரட்டியில் திறந்தவுடன் முதலில் படிப்பது மகுடத்தில் இருக்கும் பதிவையும், வாசகர் பரிந்துரை பதிவுகளையும் தான். மகுடம் ஏறும் பதிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் எனக்கும் அவ்வப்போது எழாமல் இல்லை. அதைப்பற்றிப் பல பதிவர்கள் எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் தமிழ் மணத்தில் மகுடத்தில் இருக்கும் பதிவை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பதிவுக்கு ஓட்டு அளித்திருப்பவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருந்தது. நீங்களும் அந்தப் பொன்னான ஓட்டு போட்டு மகுடத்தில் ஏற்றியவர்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.



பல பதிவர்கள் சொல்லியதை போல, எழுதியதை போல் தமிழ்மணம் ஓட்டு முறையில் மாற்றம் கொண்டு வருவது மிக முக்கியம். இல்லையென்றால் எவர் நினைத்தாலும் அவருடைய பதிவை மகுடத்தில் ஏற்றி பார்க்கலாம் அல்லது எளிதாக வாச‌கர் பரிந்துரையிலும் கொண்டு வரலாம்.

முன்பு தமிழ்மணம் பற்றி என்னுடைய எண்ணம் இதுவாகத் தான் இருந்தது ஒருவருக்குச் சுயமாக வலைத்தளம் இருந்து, அதில் தமிழ்மணபட்டையை நிறுவி பின்னர்த் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடம் இருந்து பாஸ்வேர்டு வந்த பின்பு தான் ஒட்டளிக்க முடியும் என்று நினைத்து வந்தேன். தமிழ்மணம் ஓட்டு பற்றிய பலருடைய பதிவுகளைப் படித்த பின்பு தான் இதில் இவ்வளவு தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இந்தப் பதிவில் ஓட்டு அளித்திருக்கும் அனைத்து பெயர்க்ளையும் கொஞ்சம் பாருங்கள். பெயர் ஒன்றாக இருக்கிறது, இறுதியில் ஒன்று, இரண்டு என்று எண்களை மட்டும் சேர்த்து இருக்கிறார்கள்..

இனியும் தாமதிக்காமல் தமிழ்மணம் நிர்வாகிகள் நட‌வடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் இதைப்போல் பல பதிவுகள் மகுடத்தில் வந்து பல்லிளிக்கும். அதையும் கொடுமை என்று படித்துத் தீர வேண்டும்...

தமிழ்மணம் என்ன செய்ய வேண்டும் என்று பல பதிவர்கள், பல பதிவுகளை எழுதியுள்ளார்கள், அவற்றில் சிறந்தவற்றைக் கருத்தில் கொண்டு உருவாகினால் நன்றாக இருக்கும். அல்லது தமிழ்மணமே ஒரு வாசகர் பரிந்துரை பக்கத்தை நிறுவி அதில் வாசகர்கள், பதிவர்கள், கருத்துரையாளர்களின் கருத்துகளைக் கேட்டு பின்பு அவற்றில் சிறந்தவற்றை எடுத்து நடைமுறைப்படுத்தலாம்.

.

Thursday, February 27, 2014

என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா ???

நம்ம ஆளுங்களுக்கு வீட்ல பொண்ணுப் பார்க்க ஆரம்சிட்டாங்க என்பதை அவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை வைத்தே சொல்லிட முடியும். 

1) முதல் கவலையே மயிரைப் பற்றிய தாக இருக்கும். ஊர்ல உள்ள ஆத்துத் தண்ணியில குளிக்கும் போது கருக் கருனு அடர்த்தியா இருந்துச்சு, இப்ப இங்க வந்து இந்த உப்பு தண்ணியில குளிச்சுச் செம்பட்டை பாய்ஞ்சி மண்டையே காலி ஆகிடுச்சுனு அறையில் இருக்கும் நண்பனிடம் புலம்ப ஆரம்பிப்பார்கள். இந்தப் புலம்பலை கேட்டு கிட்டு இருக்குறவனோ "சிக்கினான் அடிமை ஒருத்தனு" மயிரு வளரனமுனு சொல்லிட்டு வர்ற விளம்பரம் அத்தனையும் இவனை வச்சே டெஸ்ட் பார்த்திருவான். இதுவும் ஒவ்வொருத்தரின் பண வசதிகேற்ப எண்ணையில் ஆரம்பித்து ஹேர் பிளாண்டிங் வரை போகும்.

2) அது வரையிலும் கண்ணாடியின் முன்பு போய் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவன், இப்போது கண்ணாடியை சிறுது கீழே இறக்கி தொப்பையைப் பார்த்து "ஓ மை காட்" என்பான். அன் லிமிட்டடு மீல்ஸ் ரெண்டு சாப்பிடும் போது தெரியாத தொப்பை இப்போது, நண்பன் டீ குடிக்கலாம் என்று கூப்பிட்டால் கூட மச்சி "கிரீன் டீ" சொல்லு என்பான். இணையத்தில் படித்தாலும் சரி, புத்தகங்கள் வாங்கினாலும் சரி, தொப்பையைக் குறைக்கும் வழிகளைத் தான் அவன் கண்கள் தேடும். தங்கியிருக்கும் அறையில் பெல்லி ரெடிசுர் பெல்டில் இருந்து ஆர்பிட் எலைட் வரை அவரவர் வசதிகேற்ப இருக்கும்.

3) உடம்பை பற்றிய கவலையெல்லாம் வந்துவிடும். ஒன்பது மணி ஆபிசுக்கு எட்டரைக்கு அலாரம் வச்சு, எட்டே முக்காலுக்கு எழுந்து குளிச்சும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஒன்பது மணிக்குப் பைக்கை ஸ்டார்ட் செய்கிறவன், விடியற்காலை ஆறு மணிக்கே அலாரம் வச்சி எழுந்து டிராக் சூட்டை மாட்டுவான், அப்படியே பக்கத்தில் தூங்கிறவனையும் பிடிச்சு இழுப்பான் "வாடா வாக்கிங் போகலாம்" என்று. ஆளு பாக்குறதுக்குப் பவர் ஸ்டார் போல இருந்துட்டு, வாரணம் ஆயிரம் சூர்யா உடம்புக்கு ஆசை படுவாங்க. ஆபிஸ் முடிஞ்சு படம் பாக்கலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி ஜிம்முக்கு போகனும் என்று நமக்குப் பல்பு கொடுப்பார்கள்.

4) பண்டிகைக்கும், திருவிழாவிற்கும் எடுத்த நான்கு டிரஸ்ஸை வருசம் புள்ளா போட்டுகிட்டு இருப்பவன் தீடிரென மாசத்துக்கு நான்கு டிரஸ் எடுப்பான். பண்டிகைக்கு எந்தக் கடையில தள்ளுப்படி அதிகமா போட்டிருக்குனு பார்த்து பார்த்து எடுத்தவன், பிரண்டட் கடையா தேடிப் பார்த்து தான் இப்ப டிரஸ் எடுப்பான். சும்மா இல்லீங்க இன்னர் வேர் கூடப் பிரண்டட் பெயர் போட்டுருந்தால் தான் செலக்ட் பண்ணுவான்.

5) நாமுளும் அவன் கூட நாலு வருசமா ஒன்னா ரூம்ல தான் இருந்திருப்போம், எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா என்பது அந்தப் பாத்ரூம் கண்ணாடிக்கு தான் வெளிச்சம். ஆனா இப்ப புது இருநூறு கிராம் அடவான்ஸ்ட் சென்சோடைன் டூத் பேஸ்ட்டும், சென்சிட்டிவ் டூத் பிரஷும் ஹால்ல இருக்கிற கண்ணாடி முன்னாடி இருக்கும். காலையிலேயும் மாலையிலேயும் டங் கிளீனர் வச்சு இவன் போடுற சவுண்டை பார்த்து நம்ம நாக்கை, நாமளே பிடிங்கி வெளியே போட்டுவிடலாம் போல இருக்கும்.

6) எப்பவுமே சவரம் செய்யாத அரைத் தாடியுடம் அலையும் நம்ம ஆளு கிட்ட ஏன்டா சவரம் செய்யலைனு கேட்ட "டைம் இல்ல மச்சி" என்பான். இப்ப எல்லாம் வீட்லேயே ட்ரிபிள் பிளேடு ரேசர் வைச்சு தினமும் கண்ணாடி முன்பு ஒரு மணி நேரம் நிற்பான். வாரத்துக்கு ஒரு முறை சலூனுக்கும் கிளம்பிடுவான். ஸ்டீம் பாத், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ், பேசியல் என்று சொல்லி பீதியை கிளப்புவான்.

7) நான்கு வருடமா அதே இடத்தில் தான் இருந்திருப்பான். ஹோட்டல், தியேட்டர் தவிர எங்கேயுமே சுற்றாத ஆளு புதுசா அந்த ஏரியாவில் இருக்கும் கோவிலை தேடுவான். வெள்ளிக்கிழமை ஆகிட்டா காலையிலேயே குளிச்சுட்டு விபூதியை பூசிடுவான். பக்கோடா சாப்பிடலாம் வாடானு கூப்பிட்டா கூட, மச்சி சிக்கன் பக்கோடாவா சொல்லுனு சொல்லுறவன், இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்.

8) தியேட்டரில் படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சிகள் வந்தால் வெளியே தம் அடிக்கவோ, அல்லது மொபைல் போனில் கேம் விளையாடவோ செய்வான், இன்னும் ஏன், லேப்டாப்புல படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சியை மட்டும் பாஸ்ட் பார்வர்டு செய்து இரண்டரை மணி நேரப் படத்தை இரண்டு மணி நேரத்தில் பார்த்து முடிப்பான். இப்ப என்னடானா ஹெட் போனை தலையில் மாட்டிவிட்டு மெலோடிஸ் பாட்டா கேட்டுட்டு இருப்பான். ரூம்க்கு வந்தாலும் சன் மியூசிக்கோ, இசை அருவியோ தான் ஓடும். நாம ரிமோட்டை வாங்கி வேற சேனல் மாத்தினால் "ஞானசூனியம்" என்று தலையில் அடிப்பான்.

9) பேண்ட், சர்ட், செருப்புனு சுத்திட்டு இருந்த ஆளு, இப்ப ஜீன்ஸ், டீ சர்ட், சிலிம் பிட், கேன்வாஸ் என்று கலக்குவான். தண்ணியையும், அயன் பாக்ஸையும் பார்க்காத ஜீன்ஸ் பேண்ட் இப்ப லாண்டரிக்கும், வாசிங் மிசினுக்குப் போகும்.

10) லீவு நாள்ல அழுக்கான துணியைத் துவைக்காமல் குப்புற அடிச்சு தூங்கிட்டு, திங்கட்கிழமை காலையில அழுக்கான சட்டையைத் துக்கிட்டு, ஸ்பிரே அடிக்கத் தேடுற ஆளு, இப்ப எல்லாம் குளிச்சு முடிஞ்சு பாடி ஸ்பிரே போடாமல் இன்னர் பனியன் போட மாட்டன். வெளியில் நடந்து போகும் போது, வழியில் நிற்கும் ஒரு டூவீலரை கூட‌ விட மாட்டான். பக்கத்தில் போய்ப் பாக்கெட்ல இருக்குற சீப்பை எடுத்து தலையைச் சீவி விட்டு, "மச்சி முடி ரெம்பக் கொட்டுதுடா, எதாவது பண்ணனும்" என்பான்.


அப்படியே இதையும் பார்த்துட்டு போங்க.. இணையத்தில் சுட்டது தான்..



.

Monday, February 24, 2014

அடுத்தவன் தாலியை அறுத்து வயிரு வளர்ப்பவர்கள்!!!

கிராமங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவுவதில் கூட்டுறவு வங்கிகள் தான் உதவியாக இருக்கின்றன. இதில் கொடுக்கப்படும் விவசாயக் கடன்களுக்கு அரசு மானியங்களும் கொடுத்து வருகின்றது, சில சமயம் வறட்சியின் காரணமாக‌ ஆளும் மத்திய‌ அரசால் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுப்படி செய்வதும் உண்டு. மேலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் வசதியும் உண்டு. கிராமங்களில் பொரும்பாலன விவசாயிகளுக்கு இந்த நகைக்கடன் வசதி பெரும் உதவியாக இருப்பது உண்மை. விவசாயிகள் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் பூச்சு மருந்துகள் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது குழந்தைகளில் படிப்பு செலவாக இருந்தாலும் முதலில் அவர்கள் வீட்டில் உள்ள தங்க‌ நகைகள் தான் அடகுக்கடைக்குப் போகும். பெரும்பாலும் கடன் வாங்கும் விவசாயியாக இருந்தால் அவனிடம் இருக்கும் தங்க நகை என்பது மனைவியின் தாலி செயினாகத் தான் இருக்கும்.

விவசாயிகள் பெரும்பாலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைப்பதற்குக் காரணம் வட்டி குறைவாக இருப்பது ஒன்று மற்றொன்று இந்த வங்கியின் மீதான நம்பிக்கை. தனியார் வங்கிகளில் நகைகள் பேரில் பணம் அதிகமாகத் தந்தாலும் வட்டி வீதம் அதிகம். மேலும் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையும் குறைவு. முன்னறிவும் இல்லாமலே நகைகளை ஏலத்தில் விட்டுவிடுவார்கள், நாம் போய் ஏன் முன்னறிவுப்பு செய்யவில்லை என்று கேட்டால் நாங்கள் அனுப்பினோம் உங்களுக்கு வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது, முகவரி நீங்கள் தவறாகத் தந்து இருப்பீர்கள் என்று நம் மீதே தவறை திருப்புவார்கள். இந்த மாதிரியான தில்லுமுல்லுகள் கூட்டுறவு வங்கிகளில் நடப்பது இல்லை. ஆனால் புதுவிதமான் திருட்டு இங்கு நடப்பதாக அதில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கும் நகைகளில் சிறு பகுதியை வெட்டி எடுத்து விட்டு திரும்பவும் அதை அழகாகத் தெரியாத அளவிற்குப் பத்த வைத்து கொடுத்து விடுகிறார்களாம். இந்தத் திருட்டை மோதிரம், கம்மல் போன்ற சிறிய நகைகளில் செய்வது இல்லை, செயின்களில் தான் செய்கிறார்களாம். கிராமங்களில் செயின் என்றால் பெரும்பாலும் தாலிச் செயினாகத் தான் இருக்கும் அல்லது மகள்களில் கல்யாண‌த்திற்குச் சேர்த்து வைத்திருப்பவையாக இருக்கும். தனது கழுத்திலோ, அல்லது தனது மகள்களில் கழுத்திலோ போட்டு அழகு பார்க்க கூட விவசாயத் தொழில் அவர்களுக்குப் பெரும்பாலும் கைக் கொடுப்பது இல்லை. அதனால் அதன் எடை குறைந்தாலோ அல்லது அளவு சிறிய‌தாக இருந்தாலோ பெரும் அளவில் அவர்களுக்குச் சந்தேகம் வருவது இல்லை. மேலும் இந்தத் திருட்டை கொஞ்சம் வெவரமானவர்களிடம் செய்வது இல்லையாம். பெரும்பாலும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களிமும், கணவன்மார்கள் வெளிநாட்டில் இருக்கும் பெண்களிடமும் தான் இந்த திருட்டு வேலையைப் பார்க்கிறார்களாம். யாரவது சந்தேகம் வந்து பிரச்சனைகள் பண்ணினால் வெளியில் தெரியாமல் பணம் கொடுத்து சரி செய்கிறார்களாம். இந்தத் திருட்டு வேலைக்கு வங்கியில் வேலை பார்க்கும் உயர் அதிகார்களும் உடந்தை. அவர்களுக்கும் சேர வேண்டிய‌ பங்குச் சரியாக‌ போய்ச் சேர்ந்து விடுகிறதாம்.

என்னிடம் சொன்ன நண்பன் இந்த கூட்டுறவு வங்கியில் வேலைப் பார்க்கவில்லை, அவன் அதன் அருகில் இருக்கும் ரேசன் கடையில் ஊழியராக பணிச்செய்கிறான். அவன் பணியில் சேர்ந்து இன்னும் முழுமையாக இரண்டு வருடம் கூட ஆகவில்லை. இந்த திருட்டைப் பற்றி எவரிடம் முறையிட வேண்டும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அப்படியே முறையிட்டாலும் எப்படியான ந‌டவடிக்கை இருக்கும் என்பதும் உறுதியில்லை. அவனுடைய ஆற்றாமையை என்னிடம் புலம்பினான். என்னுடைய ஆற்றாமையை நினைத்து நான் இங்கு பதிந்து வைக்கிறேன்.

இதை என்னுடைய நண்பன் என்னிடம் சொல்லும் போது எனக்குப் பகீரென்று இருந்தது, காரணம் ஒரு மாதத்திற்கு முன்பு தான் வட்டி குறைவாக இருக்கும் என்று அப்பாவின் உதவியுடன் என்னுடைய சில நகைகளைத் தனியார் வங்கிகளில் இருந்து எடுத்து எங்கள் ஊரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வைத்திருக்கிறேன். அங்கு இதுபோல் நடந்தாக நான் கேள்விப்ப‌ட்டது இல்லை இருந்தாலும் நம்மையறியாமல் ஒருவித சந்தேகம் மனதில் எழாமல் இல்லை. நகைகளை நாம் அடகு வைக்கும் போது நம் நகைகளை ஒரு முறைக்கு நான்கு முறை எடை செய்து பார்க்கும் ஆசாரிகள், நாம் திரும்ப மூட்டும் போதும் அதை ஒரு முறைக் கூட எடைப் போட்டு நம்மிடம் காட்டுவது இல்லை, நாமும் அவசரத்திலும் மற்றும் இவர்களில் மீதான நம்பிக்கையிலும் அதைச் சரிப்பார்க்கச் சொல்லுவதும் இல்லை.

இப்படி கூலி விவசாயிகளின் தாலியை அறுத்து தொப்பை வளர்க்கும் ஜென்ம‌ங்களை எதைக் கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.......


.
Related Posts with Thumbnails