Saturday, May 3, 2014

தயவுசெய்து கிச்சன் பக்கம் வராதீங்க!!!

அன்றைக்குச் சனிக்கிழமை, ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் தூங்கி எழுவதேற்கே லேட்டாகிவிட்டது. மனைவியோ சீக்கிரமே எழுந்து டிபன் ரெடி பண்ணிவிட்டார். நான் பல்தேய்த்து, குளித்து டிபன் சாப்பிட டேபிளில் அம‌ரும் போது மணியானது பத்தை தாண்டியிருந்தது. வாரிய தலையுடன் வெளியில் கிளம்பிய மனைவி எனக்கு அவசர அவசரமாக நான்கு இட்லியை தட்டில் பரிமாறிவிட்டு, "நான் பக்கத்து வீட்டு அக்கா கூடச் சூப்பர் மார்கெட் போய் வருகிறேன், கொஞ்சம் நீங்க ப்ரிஜில் இருக்கும் கீரையை வெளியில் எடுத்து ந‌றுக்கி மட்டும் வைச்சுருங்க!" என்று சொல்லிவிட்டுக் கையில் கூடையுடன் கிளம்பினார்.

காலையில் எப்போதும் டிபன் சாப்பிடும் நேரத்தை விட இன்று லேட்டாக இருந்ததாலோ என்னவோ, பசி அதிகமாக இருந்தது. தட்டில் மனைவி வைத்த நான்கு இட்லி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இட்லி எடுத்து சாப்பிட்டுவிட்டு கிச்சன் சென்று ப்ரிஜ்ஜில் பாலீதீன் கவரில் இரண்டு கட்டுகளாகக் கட்டியிருந்த கீரையை எடுத்தேன். கீரையின் வேரில் அதிகமான அளவு மண் ஒட்டியிருந்தது. அதைத் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நறுக்கத் தொடங்கினேன். இரண்டு கட்டுகளையும் நறுக்கிய போது ஒரு பெரிய தட்டு முழுவதும் வந்தது.

சூப்பர் மார்கெட் சென்ற மனைவி திரும்பி வருவதற்கு நேரம் இன்னும் அதிகமாகவே இருந்தது. அதனால் நறுக்கிய கீரையை நாமே பொரியல் செய்தான் என்ன? என்ற எண்ணம் மனதில் எழவே, உடனே அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கினேன். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவையிரண்டையும் தனியாக நறுக்கி வைத்துக் கொண்டேன். தேங்காயும் துருவி தனியாக ஒரு தட்டில் அரைத்து வைத்துக் கொண்டேன். இப்போது ஸ்டவ்வில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்புப் போட்டு, வெங்காயம் பச்சை மிளகாயைக் கொட்டி வதக்கிவிட்டு நறுக்கிய‌ கீரையைக் கொட்டினேன்.



கொட்டிய கீரையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்புப்போட்டு கிளறி, கடாயைச் சிறிது நேரம் மூடி வைத்தேன். சிறிது நேரத்தில் மூடியை எடுத்து கீரையைக் கிளறிவிட்டு ரெடியாக இருந்த தேங்காயைத் தூவி இறக்கினேன். இருபதில் இருந்து முப்பது நிமிடங்களில் எல்லாம் வேலையும் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து டீவியை ஆன் செய்து ஒவ்வொரு சானலாக மாற்றத் தொடங்கினேன்.



சிறிது நேரத்தில் சூப்பர் மார்கெட் சென்ற மனைவி வீட்டிற்குள் நுழைந்தார். வாயிலில் நுழையும் போதே, நான் கீரையை நறுக்கி மட்டும் தானே வைக்கச் சொன்னேன், பொரியலே பண்ணிடீங்களா!! என்று ஹாலில் இருந்த‌ என்னிடம் கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார். கிச்சன் ஷெல்பில் அவர் கழுவி அடுக்கி வைத்திருந்த மொத்தப் பாத்திரங்களும், இப்போது வாஷ் பேஷனில் கிடந்தது. ஒரு கீரையைப் பொரியல் பண்ணுவதற்குள் இவ்வளவு பாத்திரங்களையா எடுத்து வாஷ் பேஷனில் போடுவது? என்று கேள்வியை என்னிடம் திருப்பினார்.

ஆமா!! என்பது போல் பெரிதாக‌ தலையை ஆட்டி வைத்தேன்.

சரிங்க, வாஷ் பேஷ‌னில் இருக்கும், இந்த இரண்டு பெரிய பாத்திரத்தை வைத்து என்ன செய்தீர்கள்?

கீரையின் வேரில் மண் அதிகமாக ஒட்டியிருந்தது, அதனால் ஒன்றில் மாற்றி ஒன்றில் கழுவினேன்.

அதுக்கு எதுக்குப் பாத்திரம்? வாஷ்பேஷனில் இருக்கும் டேப்பை திறந்துவிட்டே கழுவலாமே!!

ஓ!! இதை இப்படிக் கூடச் செய்யலாமா என்று மைன்ட் வாய்ஸ் சொல்லியது.
ஆமாயில்ல, சரி அடுத்த முறை அப்படியே கழுவலாம்..

ஆமாங்க!! எதுக்கு ரெண்டு கடாயும் எடுத்துக் கழுவுதற்குப் போட்டிருக்கீங்க? சின்னக் கடாயில் தானே கீரையைப் பண்ணியிருப்பீர்கள், அப்புறம் எப்படிப் பெரிய கடாயும் வாஷ் பேஷனுக்கு வந்தது?.

சின்னக் கடாயில் தான் பொரியல் பண்ண ஸ்டவ்வில் வைத்தேன், கீரையை முழுவதும் கொட்டிய போது அந்தச் சிறிய‌ கடாயில் நிற்கவில்லை, அதனால் பெரிய கடாயை எடுத்து மாற்றினேன்.

என்னது!! சின்னக் கடாயில் கீரை நிற்கவில்லையா? அப்படினா எத்தனை கட்டுகள் எடுத்து பொரியல் செய்தீர்கள்?.

ப்ரிஜ்ஜில் இருந்த இரண்டு கட்டையும் நறுக்கி பொரியல் செய்தேன்.

நாம் ரெண்டு பேரும் சாப்பிட‌ ரெண்டு கட்டு கீரையா?. ஒரு கட்டுத் தாராளமா போதுமே, பண்ணியது எல்லாம் சரிதான், ரெண்டு கட்டையும் நீங்க தான் சாப்பிடணும்!!

அதுக்கென்ன!! சாப்பிட்டால் போச்சு!!

ஆமா! ஷெல்பில் இருந்த மொத்த தட்டுகளும் இங்க தான் கிடக்குது!! அதுல என்ன செய்தீர்கள்?.

அது.. வந்து... ஒரு தட்டுல வெங்காயம் வெட்டி வச்சேன், அப்புறம்ம்ம்ம் ஒரு தட்டுல பச்சை மிளகாய் வெட்டி வச்சேன், இன்னொன்னுல தேங்காய்....

எல்லாம் சரிங்க!! கீரை பொரியல் பண்ணுவதற்கு எதுக்குங்க மிக்சி?..

அது வந்து, தேங்காயை துருவி துருவி பார்த்தேன், சரியாக வரல, அதனால தேங்காயை உடைத்து போட்டு மிக்சியில் அரைத்து கொட்டினேன்..

பத்து நிமிடத்தில் நான் செய்யுற பொரியல், அதை நீங்கள் செய்து ஒரு மணி நேரம் எனக்குப் பாத்திரம் கழுவும் வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள்!!!

"இதுக்கு பேசாமல் கையை காலை வச்சுட்டு, டீவியாவது பார்த்திருக்கலாம்". மைன்ட் வாய்ஸ்

ஹாலில் ஓடிய டீவியில் வெற்றிக்கொடி க‌ட்டுப் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விகளுக்குப் பார்த்திபன் கொடுக்கும் பதிலை பார்த்து, வடிவேலு தன் முகத்திற்கு நேரே கையை நீட்டி வேணுன்டா!! உனக்கு வேணும்!! என்ற வசனம் பேசும் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.


.

Thursday, May 1, 2014

ரியல் எஸ்டேட் தொழில் எனும் நீர்குமிழி!!!

ஊரில் பெற்றோர்கள் சம்பாதித்து வைத்த பணத்தைப் படிக்கும் போதே ஊதாரித்தனமாகச் செலவு செய்துகொண்டும், படித்து முடித்த பிறகும் உருப்படியாக எந்த வேலைக்கும் செல்லாமல் பொறுக்கித் தனமாக ஊரை சுற்றிக் கொண்டிருந்த சிலர், திடிரென வெள்ளையும் சொள்ளையுமாக ஊரில் வலம் வந்தார்கள். இவர்களின் கெட்டப்பே தலைக்கீழாக மாறியிருந்தது. காலையில் குளிக்கிறார்களோ, இல்லையோ, நம்மருகில் வந்தால், உடல் முழுவதும் சென்டின் வாசம். கழுத்தை சுற்றி ஒரு பெரிய‌ முறுக்கு செயின், இந்த முறுக்கு செயின் கழுத்தில் போட்டிருப்பது வெளியில் தெரியுமளவிற்குச் சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் எப்போதும் திறந்தே வைத்திருப்பார்கள்.

வலதுகையில் ஒரு விரல் தடிமனுள்ள சங்கிலியை பிரேஸ்லெடாகச் சிலர் போட்டிருப்பார்கள். இன்னும் சிலர் தங்கத்தால் செய்த‌ குறுங்வளையத்தைக் கையில் அணிந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். புதிதாகப் பார்த்த எவரும் "இவன் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டான்" என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக‌வே மீசையும் பெரிதாக வைத்திருப்பார்கள். இப்படிக் கெட்டப் போட்டு சொந்த ஊரில் சுற்றுபவர்கள் சொல்லிக்கொண்டிருந்தது ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறேன் என்பது தான். இதேப்போல் சுற்றியவர்களில் சிலர் என்னுடன் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள்.

நான் வெளிநாட்டிலிருந்து எப்போது ஊருக்கு வந்தாலும் என்னிடம் வந்து ஊரில் விலைக்காக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள். நான் இப்போது சொத்துகள் ஏதும் வாங்கும் நிலையில் இல்லை என்று சொன்னாலும், முழுதாகப் பணம் இப்போது கொடுக்க வேண்டாம், உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவு பணத்தை இப்போது கொடுக்கலாம், மீதம் பின்புகொடுத்து சொத்தை எழுதி வாங்கலாம் என்று தவணை முறை எல்லாம் சொல்லுவார்கள். நானும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தமுறை பார்க்கலாம் என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.

வீட்ல உள்ளவங்களுக்கு என்ன டவுட்டுனா... எப்படி இவ்வளவு பொருட்களை கொடுக்க முடியுமுன்னு!!! எனக்கு என்ன டவுட்டுனா... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கனு!!!

ஊரில் இருக்கும் சொத்துக்களுக்கு விலையை நிர்ணயம் செய்பவர்கள் இந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் என்று ஆகிபோனார்கள். எப்படியென்றால், எவரும் தன்னுடைய‌ வீட்டில் கஷ்டமான சூழ்நிலை வரும் போது தான் பெரும்பாலும் சொத்துக்களை விலைக்குப் பேசுவார்கள். அவர்களில் தற்போதைய பணத்தேவை என்ன என்பதை அவர்களிடம் பேசும்போதே இந்தப் புரோக்கர்கள் பல்ஸ் பார்த்துவிடுவார்கள். அந்தச் சொத்துக்கான அடிமட்ட‌ விலையைப் பேசி, உரிமையாளருக்கு உட‌னடியாக‌ தேவைப்படும் தொகையை இவர்கள் தங்கள் கைகளிலிருந்து அட்வான்ஸாகக் கொடுத்து எழுதி வாங்கிக் கொள்வார்கள். முழுமையான பணத்தைக் கொடுத்து அந்த‌சொத்தை தங்கள் பெய‌ருக்கு எழுதி வாங்காமல், மறுவிலைக்கும் ஆட்களைத் தேடுவார்கள். என்னைப்போல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தான் முதலில் இவர்கள் குறிவைப்பார்கள்.

சொத்து உரிமையாளரிடம் பேசி வைத்திருக்கும் விலையை விட, அப்போது அந்தச் சொத்திற்கு இருக்கும் மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து, ஐம்பதில் இருந்து நூறு சதவீதம் வரை அதிக விலை வைத்துதான் மறுவிலைக்கு ஆட்களைத் தேடுவார்கள். இவர்களுடைய தொழில் நெட்வொர்க் பெரியளவில் இருப்பதால் வெளியூரிலிருந்தும் ஆட்களைக் கொண்டுவந்தும் சொத்துக்களை விற்றுவிடுவார்கள். தனியாக எவரும் இந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுவது இல்லை. இரண்டு அல்லது மூன்றுபேர் சேர்ந்துதான் இந்தத் தொழிலைச் செய்தார்கள். ஒரு சொத்தை முடித்தாலே பல லட்சங்கள் இவர்களுக்கு லாபமாக வரும். ரியல் எஸ்டேட் தொழில் பண்ணும் சிலர் முதலில் சொத்து உரிமையாளர்களுக்குக் கொடுக்கும் தொகையும் பெரும்பாலும் தங்கள் கைகளிருந்து கொடுப்பது கிடையாது, வெளிநாட்டில் பணிசெய்யும் சிலரை தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு அவர்களுடைய பணத்தைக் கொண்டு வாங்கி விற்கும் வேலையையும் செய்தார்கள். கிடைக்கும் லாபத்தில் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

வெளிநாடுகளில் பணிசெய்து கொண்டிருப்பவர்கள், விடுமுறையில் ஊருக்கு வரும்போது, இந்த ரியல் எஸ்டேட் பண்ணுவர்களின் சம்பாத்தியத்தைப் பார்த்து தாங்களும் இதைப்போல் செய்யலாம் என்று வெளிநாட்டிற்கு முழுக்கு போட்டவர்களும் உண்டு. ஒரு பதினைத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு சென்ட் மனையின் விலை சில‌ ஆயிரங்களாக‌ இருந்தது, அதே மனைகள் இன்று பல லட்சங்களில் விலை போகிறது. எனது அப்பாவின் தலைமுறையில் இருந்தவர்களுக்கு மூன்று குழந்தைகளுக்கு மிகாமல் எல்லோருக்கும் இருந்தது. அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு சொத்துக்களை அவர்கள் சம்பாதித்து வைக்கவில்லை. எனவே அவர்களின் பிள்ளைகள் தாங்களாகவே படித்து, வேலைக்கு சென்று சம்பாதித்து அவர்களுக்குத் தேவையான சொத்துக்களை வாங்க ஆரம்பித்தார்கள், இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் கூடப் பல லட்சம் கொடுத்து வாங்கும் அளவுக்கு விலையானது விண்ணை முட்டி நின்றது.

சரியாக‌ ஐந்து வருடங்களில் அவரவருக்குத் தேவையான சொத்துக்களை வாங்கியவுடன், ரியல் எஸ்டேட் தொழில் என்ற நீர்குமிழி உடைய தொடங்கியது. இன்றைய சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் எவரும் பெற்றுக்கொள்வது இல்லை. அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான சொத்துக்கள் தனது தந்தையால் சம்பாதித்தும் வைக்கப்படுள்ளது. இப்போது சொத்துக்கள் வாங்குபவர்கள் தனது அடிப்படைத் தேவைகளுக்கு வாங்குவதில்லை, லாபம் சம்பாதிப்பதிப்பது மட்டுமே குறிக்கோளாகயிருக்கிறது. கடந்த சில வருடங்களாக‌ ரியஸ் எஸ்டேட் தொழில் அதிக லாபம் ஈட்டுவதாக‌ இல்லாததால் எவரும் அதில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. இப்போது ஷேர் மார்கெட் மற்றும் தங்கத்தின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள்.

கடந்த சில வருடங்களில் அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சில சட்டங்களும் மற்றும் சொத்துகளைத் தங்கள் பெயரில் எழுதுவதற்குக் கொடுக்கும் கட்டணங்களில் அதிகரிப்பும் இந்த ரியல் எஸ்டேட் தொழிலை கொஞ்சம் கட்டுபடுத்தியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் சொத்துகளில் மதிப்பு அதிகரிப்பது போன்ற ஒரு சூழ்நிலையை ரியல் எஸ்டேட் பண்ணுபவர்கள் கட்டமைத்திருந்தார்கள். இப்போது சில வருடங்களாகச் சொத்துகளில் மதிப்புப் பெருமளவில் ஏற‌வில்லை. சொத்து உரிமையாளர்களுக்கு, ஒரு தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து வாங்கிப்போட்ட ரியல் எஸ்டேட் முதலாளிகள், அந்தச் சொத்துக்களைப் பிறருக்கு விற்கவும் முடியாமல், அட்வான்ஸையும் வாங்க முடியாமல் இப்போது தவித்து வருகிறார்கள்.

.

Monday, April 28, 2014

கல்யாணமா சார்! அப்படினா பிளிச் பண்ணிக்குங்க!!!

ஊரில் எனக்கு விவரம் தெரிந்து சலூனுக்குச் சென்று முடிவெட்டுவதற்குப் பத்து ரூபாய் இருந்தது. இப்போது எண்பது ரூபாய் என்று நினைக்றேன். கடந்த சில வருடங்களாக‌ ஊரில் முடிவெட்டுவதற்கான‌ நேரம் எனக்கு அமைவது இல்லை. எங்கு இருக்கிறேனோ, அங்கிருந்து ஊருக்குப் போகும் போது முடிவெட்டிச் சென்று விடுவேன். அதனால் ஊரில் இருக்கும் வரை முடிவெட்ட வேண்டிய நிலை வருவது இல்லை. பெரும்பாலும் நான் சுயமாகச் சவரம் செய்வது இல்லை, கடையில் தான் சரவம் செய்வேன். சுயமாகச் சரவம் செய்வதற்குச் சோம்பேறிதனம் என்று சொல்ல முடியாது. சுயமாகச் செய்தால் குறைந்தது முகத்தில் பிளேடால் ஒரு மூன்று கோடுகளாவது போடாமல் சரவம் செய்து முடிக்க மாட்டேன். கீறல்கள் விழுவதற்குக் காரணம் முகத்தில் கொஞ்சம் முடி வளர்ந்தாலும் உடனடியாகக் கட்டிகள் வந்துவிடும். அந்தக் கட்டிகளில் தான் அதிகமாகக் கீறல்கள் விழும். அதற்குப் பயந்தே சலூனுக்கு ஓடிவிடுவேன்.

எந்த இடத்தில் நான் தங்கி இருந்தாலும் அதன் பக்கத்தில் ஒரு சலூன் கடையைப் பழக்கம் பிடித்து வைத்துக் கொள்வேன், வாரம் தவறாமல் சென்றுவிடுவதால் அவர்களுக்கும் நம்முடைய முகம் மறப்பது இல்லை. சென்னையில் அதிக நாட்கள் அம்பத்தூர் கனராபேங்க் அருகில் தான் தங்கி இருந்தேன். அந்த ஏரியாவில் மெயின் ரோட்டின் வளைவில் ஒரு பெரிய‌ மலையாள சர்ச் உண்டு. அதன் பக்கத்தில் இருக்கும் சலூனுக்குத் தான் நான் வாரம் ஒருமுறை செல்வேன். அந்தச் சலூனின் ஓனர் சற்றுக் குள்ளமாக, கமலின் விருமாண்டி மீசையைப் போல், அந்த‌படம் வருவதற்கு முன்பே இவர் வைத்திருந்தார், வாரத்தின் ஞாயிறு என்றால் என்னை அங்குப் பார்க்க முடியும். பக்கத்திலேயே வேறு சில கடைகள் இருந்தாலும், இவரது கடை மட்டும் எப்போதும் கூட்டமாக இருக்கும். முடிவெட்டியுடன் தலையை நன்றாக மசாஜ் செய்து கழுத்தை இரு பக்கமும் திருப்பி, அழகாக நெட்டி முறிப்பார், இதற்காகத் தனியாகக் காசு ஏதும் வாங்க மாட்டார். கடைக்கு வரும் கூட்டம் இவருடைய தொழில் நேர்த்தியின் காரணமாகக் கூட இருக்கலாம். அவருடைய சொந்த ஊர் தென்காசி என்று சொன்னதாக ஞாபகம்.

இப்போது நான் இருக்கும் ஹைதிராபாத்தில் இருக்கும் பெரும்பாலன‌ சலூன்களில் ஹேர்கட்டிங் மற்றும் சேவிங் மட்டுமில்லாமல் பிளிச்சிங், ஸ்டீம் ட்ரீட்மென்ட், ஹெட் மசாஜ், ஆயில் மசாஜ், பெடிக்யூர், மினிக்யூர், ஹேர் செட்டிங், ஹேர் பெர்மிங் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்ட போர்டை மாட்டிருப்பார்கள். அதில் விவரமாகக் கட்டணத்தை மட்டும் போட்டிருக்க மாட்டார்கள். வெளியிலிருந்து பார்த்தால் கடை ரெம்பச் சாதரணமாகத் தான் இருக்கும். உள்ளேயும் பெரிய அளவில் எந்த வசதியும் இருக்காது. ஆனால் எல்லா வகையான ட்ரீட் மென்டிற்கும் கட்டணம் பெரிய கடைகளில் வாங்குவது போல் வாங்கி விடுவார்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஹைதிராபாத் ஆபிஸில் பணிசெய்து பேச்சிலர் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, மஸ்கட் ஆபிஸில் இருந்து மாற்றலாகி ஹைதிராபாத் ஆபிஸுக்குப் புதிதாக நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருக்கு அப்போது தான் கல்யாணம் முடிவு ஆகி, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. ஆபிஸ் கொடுத்திருந்த‌ ஹெஸ்ட்க‌வுஸில் தான் நாங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். அவர் முன்பு எப்போதும் ஹைதிராபாத்துக்கு வந்தது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கு இவருக்குத் தெரியும். தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கிற்கும் ஹைதிராபாத்தில் இருப்பவர்கள் பேசும் தெலுங்கிற்கும் பெரிய அளவில் வேறுபாடு உண்டு. புதிய இடமாக இருப்பதால் வெளியில் எங்குச் செல்லவேண்டுமானாலும் என்னோடு தான் வருவார்.

நிச்சாயதார்த்தம் முடிந்திருந்ததால் போனில் அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் ஆபிஸ் முடிந்தால் எங்களுடன் ஹெஸ்ட்கவுஸூக்கு வராமல் வெளியில் எங்கள் தெருவை சுற்றிகொண்டே போன் பேசுவார். ஒரு நாள் ரெம்ப நேரம் ஆகியும் இவர் ஹெஸ்ட்கவுஸிற்கு வரவில்லை. நான் இவர் வெளியில் நின்று போனில் தான் பேசிக்கொண்டிருப்பார் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரவு சாப்பிடும் நேரம் ஆகிவிட்டதால் வெளியில் சென்று போனில் பேசிக்கொண்டிருக்கிறாரா? என்று தேடினேன், அங்குக் காணவில்லை. தெருவைச் சுற்றிவருவார் என்று சிறிது நேரம் வெயிட் பண்ணினேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய மொபைலுக்கு அவருடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மொபைலை ஆன் செய்து காதில் வைத்தால், ஸ்டீபன், உங்ளுடைய‌ பர்சை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக ஒரு சலூன் பெயரை சொல்லி அங்கு வருமாறு என்னை அழைத்தார்.

நானும் அவசர அவசரமாக் கிளம்பி அந்தச் சலூனுக்குச் சென்றால், ஆள் அடையாளம் தெரியாமல் கெட்டப்பே மாறி நின்றார். முடி வெட்டியிருந்தார், முகம் வேறு பட்டிப் பார்த்துப் பெயின்ட் அடித்தது போல் இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக வெளியில் வந்து ஒரு முந்நூறு ரூபாய் கொடுங்க! என்றார். நானும் கொடுத்தேன். கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு என்னிடம் வந்து, வாங்க வீட்டிற்கு போகலாம்! என்றார்.

இருவரும் சலூன் கடையைத் தாண்டி நடந்தவுடன், நண்பரிடம் என்ன விசயம் என்று விசாரித்தேன். ஹேர்கட் பண்ணலாம் என்று வந்தேன், சலூன் கடைக்காரர் ஹேர்கட் பண்ணி முடித்தவுடன், ஹெட் மசாஜ், பிளிச், ஸ்டீம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, இது பண்ணினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி ஒவ்வொன்றும் பண்ணுவத்ற்கு தொடங்கினார், சிறிய கடையாக இருப்பதால் கட்டணம் பெரிய அளவில் இருக்காது என்று நினைத்து, நானும் விசாரிக்காமல் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தேன். கடைசியாக‌ எல்லாம் முடித்துவிட்டு 1300 ரூபாய் கொடுங்க என்றார். நான் ஆயிரம் ரூபாய் தான் வைத்திருந்தேன், அதானால் தான் உங்களை, இங்கு வருவதற்குச் சொன்னேன் என்றார். வெள்ளாந்தியாகப் பேசும் நண்பரை பார்த்து சிரிப்பதா? பரிதாபம் கொள்வதா? என்று தெரியாமல் இருவரும் வீட்டிற்கு நடந்தோம்.



நண்பருக்குத் தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கு கொஞ்சம் தெரியும் என்று நான் முன்பே சொல்லியிருந்தேன் இல்லையா?. இவர் சலூன் கடைக்காரரிடன் ஹேர்கட் பண்ணும்போது அரைகுறையாகத் தெலுங்கில் பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது தனக்கு அடுத்த மாதம் திருமணம் என்பதைச் சொல்லியிருக்கிறார். சலூன் கடைக்காரர் அதையே சாதகமாகப் பயன்படுத்தி, சார்! அப்ப நீங்க இப்பயிருந்தே இந்த மாதிரி ட்ரீட்மென்ட் பண்ணினால் கல்யாணம் பண்ணும் போது முகம் பளிச்சென்று இருக்கும் என்று சொல்லி, ஹெட் மசாஜ், ஆயில் மசாஜ் மற்றும் பிளிச், ஸ்டீம் என்று ஒவ்வொன்றாகப் பண்ணியிருக்கிறார். நம்ம நண்பரும் கடைக்காரரின் பேச்சில் மயங்கி எல்லாவற்றிற்கும் தலைய ஆட்டியிருக்கிறார்.

அப்புறம் என்ன? ஆடு மாட்டினால் பிரியாணி பண்ணாமலா விடுவார்கள்!!!

.

Friday, April 25, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்க எல்லாம் நல்லா வரணும்!!!

நான் சவூதி அரேபியாவில் புராஜெக்ட் செய்து கொண்டிருந்த போது சிறிதுகால இடைவெளி கிடைத்தாலும் உடனடியாக ஊருக்கு வந்துவிடுவேன். ஒருமுறை பத்து நாட்கள் விடுமுறைக்காக ஊருக்கு வந்துபோவதற்கு ஆபிஸில் இருந்து டிக்கெட் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் என்பது மிகக் குறுகியகாலம் என்றாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது நான் தவறவிடுவதில்லை. வெளிநாடுகளில் குடும்பங்களை விட்டு தனியாக‌ வந்து, ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் என்று தொடந்து வேலைசெய்து கொண்டிருக்கும் போது கூடச் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தின் நினைவுகள் நம்மை அடிக்கடி தொல்லைச் செய்வதில்லை. ஆனால் விரைவில் ஊருக்குப் போகிறோம் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால் போதும் நம்மையறியாமல் மனம் விடுமுறைக்காக மீதம் இருக்கும் நாட்களை எண்ணுவதற்குத் தொடங்கிவிடும். அதிலும் டிக்கெட் கைக்கு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், காத்திருக்கும் ஒரு மணிநேரம் கூட ஒரு யுகமாக மாறிவிடும்.

ஆபிஸில் என்னுடைய விமான டிக்கெட்டை எமிரேட்ஸ் ஏர்லைன்சில்(EMIRATES AIRLINES) புக்கிங் செய்திருந்தார்கள். த‌மாமில்(Dammam) இருந்து துபாய்(Dubai), அங்கு ஒரு மணிநேரம் டிரான்சிட்(Transit), பின்னர்த் துபாயில்(Dubai)) இருந்து திருவனந்தபுரம்(Thiruvananthapuram). நான் ஊருக்கு வரும் நேரம் ஹஜ் சீசன், சாதரணமாகவே சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களில் இமிக்கிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் முடிப்பது என்பது சாதாரண விசயம் கிடையாது. நீண்ட‌ வரிசையில் தேவுடு காத்தே நீங்கள் வெறுத்துவிடுவீர்கள். நீண்ட வரிசையில் கால் கடுக்க‌ நின்றுவரும் நம்மிடம், ஏர்போர்ட்டில் பணிபுரியும் சவூதிகள் செய்யும் செயல்கள் மற்றும் கேட்கும் கேள்விகள், ஏன்டா நீங்க எங்க நாட்டுக்கு வர்றீங்க? என்பது போல்தான் இருக்கும். சாதாரணமாகவே இப்படிப் படுத்தியெடுக்கும் ஏர்போர்ட்டில் ஹஜ் சீசன் என்றால் பயணிகள் கூட்டம் இரண்டு மடங்காக இருக்கும். எனவே நான் தாமாம் ஏர்போர்ட்டிற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்டேன்.



லக்கேஜ் ஸ்கேன், டிக்கெட் கவுண்டர் மற்றும் எமிக்கிரேசன் என்று எல்லா இட‌ங்களிலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். லக்கேஜ் ஸ்கேன் முடித்துவிட்டு டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நானும் காத்திருந்தேன். என்னுடைய வரிசை வந்தவுடன் லக்கேஜை எடுத்து வேயின் கன்வேயரில் வைத்துவிட்டு பாஸ்போர்ட்டையும் ஆன்லைன் டிக்கெட்டையும் எடுத்துக் கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்தேன். தோளின் இருந்த ஹேண்ட் பேக்கேஜையும் எடுத்து வேயின் கன்வேயரில் வைக்கச் சொன்னார். மொத்தமாக 35 கிலோ என்று ரெட் டிஜிட்டல் டிஸ்பிளே காட்டியது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் செக்கிங் பேக்கேஜ் 30 கிலோவும், கேபின் பேக்கேஜ் 7 கிலோவும் தான் அனுமதிப்பார்கள். என்னுடைய மொத்த பேக்கேஜ் வெயிட் 35 கிலோ தான், ஆனால் கேபின் பேக்கேஜ் 10 கிலோவாக இருந்தது. சாதாரணமாக எந்த ஏர்லைன்ஸும் கேபின் பேக்கேஜ் 10 கிலோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். கவுண்டரில் இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கேபின் பேக்கைஜை கையில் எடுத்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு டிக்கெட்டை கையில் கொடுத்தார்.

டிக்கெட்டை கையில் வாங்கிகொண்டு, கேபின் பேக்கைஜை எடுத்துத் தோளில் மாட்டிவிட்டு இமிக்கிரேசன் முடிக்கக் கிளம்பினேன், அங்கும் மிக நீண்ட வரிசையிருந்தது. விமானம் கிளம்பும் நேரமும் நெருங்கிகொண்டிருந்தது. நான் வரிசையில் காத்திருக்கும் போதே அரைமணி நேரம் லேட்டாகத் துபாய் எமிரேட்ஸ் கிளம்பும் என்று டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கரில் சொல்லப்பட்டது. ஒரு மணிநேர டிரான்சிட்டில் துபாய் ஏர்போட்டிலிருந்து திருவனந்தபுரம் எமிரேட்ஸ் விமான‌த்தை பிடிப்பது என்பதே கொஞ்சம் கஷ்டமான விசயம். இதில் அரைமணி நேரம் லேட்டாகக் கிளம்பினால் எப்படி அடுத்த விமானத்தைப் பிடிப்பது, அதுவும் லேட்டாகத் தான் கிளம்புமா? எனப‌து தான் என்னுடைய கவலையாகயிருந்தது.

ஒரு வழியாக இமிக்கிரேசன் முடித்து அவசர அவசரமாகக் கேட்டை அடைந்து விமானத்தில் ஏறிக்கொண்டேன். முப்பது நிமிடம் லேட் என்று சொல்லி நாற்பது நிமிடம் ஆக்கிய பிறகுதான் விமானத்தை எடுத்தார்கள். துபாய் நேரம் இரவு ஒன்பது மணிக்கு என்னுடைய அடுத்த விமானத்திற்கான போர்டிங். நான் தாமாமிலிருந்து துபாய் வந்து இறங்கும் போது மணி சரியாக 8.45. டிராசின்சிட் பாதையில் நடையும் ஓட்டமாகக் கடந்துவந்து கேட்டில் இருக்கும் அதிகாரியிடன் டிக்கெட்டை காட்டினால் சார்! உங்க பிளைட் கிளம்பிடுச்சு, நீங்க இங்க வெயிட் பண்ணி நாளைக்கு இதே நேரத்தில் போகலாம் என்றார். என‌க்கு வெறித்தனமான‌ கோபம். போர்டிங் ஒன்பது மணி போட்டு இருக்கீங்க!, மணி இப்பதான் 8.50 ஆகின்றது, எப்படிச் சார் கிளம்பும்? என்றேன். சாரி சார் கிளம்பிடுச்சு என்றார்.

உண்மையில் எமிரேட்ஸ் நிர்வாகம் அன்றைக்குத் துபாயில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானச் சேவையை ரத்துச் செய்திருக்கிறார்கள். போர்டிங் நேரம் ஒன்பது என்று போட்டிருக்கிறார்கள், எப்படி 8.45 க்கு விமானம் கிளம்ப முடியும்? பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால், இவர்கள் வழக்கமாக‌ இப்படிதான் செய்கிறார்கள் என்று பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது அறிந்து கொண்டேன்.



இப்போது என்னுடைய பக்கத்தில் வேறு எவராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன், ஒரே ஒருவரை தவிர எவரும் இல்லை. நான் வந்த விமானத்தில் திருவனந்தபுரம் செல்வதற்கு மொத்தமே இரண்டு பேர்கள் தான். பக்கத்தில் இருந்த ஒருவரும் மலையாளி. அவர் இரண்டு வருடம் பணி முடித்து மூன்று மாதம் விடுமுறையில் இந்தியா வருகிறார். என்னால் ஒரு நாள் இங்குத் தங்க முடியாது, இதில் என்னுடைய பிரச்சனை ஏதும் இல்லை, அங்கேயே நான் டிக்கெட் வாங்கிவிட்டேன். பிளைட் தாமதமாக வந்தது என்னுடைய தவறு ஏதும் கிடையாது என்று சண்டையிடுவதற்குத் தொடங்கினேன். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரி, சார்! என்னால் ஒண்ணும் பண்ண முடியாது! நீங்க வந்து மேனேஜரை பாருங்கள்! என்று ஒரு கேபினை காட்டினார்.

மேனேஜரிடம் சென்றும் இதைத் தான் சொன்னேன். நான் ஊருக்கு வந்திருப்பதே பத்து நாட்கள் விடுமுறையில் தான், இதில் தேவையில்லாமல் ஒரு நாள் இங்குத் தங்குவதற்கு என்னால் முடியாது என்றேன். இல்ல சார் நாங்க, நீங்கள் தங்குவதற்குப் பைவ் ஸ்டார் ஹோட்டல் கொடுக்கிறோம் என்றார். நான் மேலும் கோபமாக நீங்க கொடுக்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்காக எல்லாம் நான் இங்குத் தங்க முடியாது, உடனடியாக எனக்கு அடுத்தப் பிளைட் புக்கிங் செய்து தாருங்கள் என்று சண்டையிட்டேன். இங்கு நடக்கும் பிரச்சனையை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அதிகாரியும் வந்து சேர்ந்து கொண்டார். என்னிடம் உங்க லக்கேஜ் எங்களுடைய பிளைட்டில் இருந்து டிரான்சிட் பண்ணுவது கஷ்டம். அதனால் நீங்க தயவுசெய்து நாளை செல்லுங்கள் என்று கொஞ்சினார். இருவரிடமும் நான் இங்குத் தங்கவே முடியாது. என்னுடைய பத்து நாட்கள் விடுமுறையில் ஒரு நாளை நான் இழக்கவிரும்பவில்லை என்று என்னுடைய ரிட்டன் டிக்கட்டை காட்டினேன். இனிமேலும் என்னிடம் பேசிப் பலனில்லை என்று உடனடியாக வேறு எந்தப் பிளைட் எப்போது இருக்கிறது என்று ஆன்லைனில் பார்த்துவிட்டு ஒமன் ஏர்லைன்ஸில் புக்கிங் செய்து டிக்கெட்டை கையில் கொடுத்தார்.

நான் இவ்வளவு தூரம் சண்டையிட‌வில்லையென்றால் என்னை ஒரு நாள் தங்கவைத்திருப்பார்கள். சொந்த ஊருக்கு வரும் சந்தோசத்தில் இருக்கும் நம்மிடம் வந்து கூலாக ஒரு நாள் தங்கிச் செல்லுங்கள் என்று சொல்லும் போது நமக்கு ஏற்படும் வலி இவர்களுக்குப் புரியபோவதில்லை. மனைவி உட்பட‌ வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நான் வருகிறேன் என்று வீட்டில் சொல்லியதால் அப்பாவும், அண்ணனும் கார் எடுத்து வந்து ஏர்போட்டில் வேறு வெயிட் செய்வார்கள். பயணத்தின் இடையில் வீட்டிற்குப் போன் செய்து நான் வரவில்லை என்று சொன்னால் எப்படியிருக்கும்?.

பிளைட் கிளம்ப அரைமணி நேரம் தான் இருக்கிறது சீக்கிரம் செல்லுங்கள் என்றார். கேபின் பேக்கேஜை துக்கி கொண்டு ஒமன் ஏர்வேஸ் கேட்டிற்கு ஓடினேன். அங்குச் சென்றால் ஒரு பெண் ஒமனி தான் இருந்தார். அவர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்துக் கொண்டே உங்களுடைய செக்கிங் பேக்கேஜுக்கு நாங்கள் பொறுப்புக் கிடையாது என்றார். அப்போது இருந்த மனநிலையில் லக்கேஜாவது மண்ணாகட்டியாவது என்று தான் இருந்தது. நான் வைத்திருந்த‌ கேபின் பேக்கேஜை பார்த்தவர் வேயின் மெஷினில் வைக்கச் சொன்னார். பத்து கிலோ என்று காட்டியது. உடனடியாக ஒமனி பெண் பத்து கிலோ கேபின் பேக்கேஜ் அனுமதிக்க மாட்டோம் என்றார். நான் என்னுடைய மொத்த வெயிட்டையும் டிக்கெட்டில் சுட்டிக் காட்டினேன். அவர் அதைக் கேட்பதாகயில்லை. நீங்க எமிரேட்ஸ் மேனேஜரிடம் சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என்றார்.

விமானம் கிளம்புவதற்கான‌ நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது. அங்கிருந்து திரும்பவும் எமிரேட்ஸ் ஆபிஸுக்கு ஓடினேன். அங்குச் சென்றால் மேனேஜர், இதுக்குத் தான் சார் நான் சொன்னது நீங்க நாளைக்குப் போங்க! என்று, இப்போது பாருங்க, உங்களுடைய லக்கேஜுக்கு நாங்கள் தேவையில்லாமல் பணம் கட்ட வேண்டி வருகிறது என்றார். அப்போது தான் எனக்குப் புரிந்தது, மூன்று கிலோ என்னிடம் அதிகமாக் இருப்பதற்கு இவர்களிடம் பணம் கட்டவதற்குச் சொல்லுகிறார் என்று. ஒரு வழியாக மேனேஜரும் கையெழுத்துபோட்டுக் கொடுத்துவிட்டார்.

ஒரு வழியாக எல்லாம் முடித்து ஒமன் விமானத்தில் ஏறிக்கொண்டேன். கொடுமையைப் பாருங்கள். தமாமில் இருந்து கிளம்பி துபாய், துபாயில் இருந்து மஸ்கட், மஸ்கட்டில் இருந்து திருவனந்தபுரம். எல்லாப் பயணத்தையும் முடித்துக் காலையில் திருவனந்தபுரம் வந்து இறங்கும் போது காலை எட்டு மணி. ஜெட் ஏர்வேஸில் தினமும் தமாமில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானச் சேவையிருக்கிறது. பெரும்பாலும் நான் அதில் தான் வருவேன், இந்தமுறை தான் ஆபிஸில் உள்ளவர்கள் இப்படி புக்கிங் செய்து சொதப்பிவிட்டார்கள். நான் விமானநிலையத்தில் வந்து இறங்குவதற்கு முன்பாகவே என்னைப் பற்றிய தகவல் திருவனந்தபுரம் ஏர்போட்டில் உள்ள எமிரேட்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் இறங்கியவுடன் நீங்கள் தான் ஸ்டீபனா? என்று ஓர் எமிரேட்ஸ் பெண் அதிகாரி ஒரு பெரிய பார்மை கொண்டு நீட்டினார். நான் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டே, எதற்கு என்றேன்? உங்க செங்கிங் பேக்கேஜ் இந்த விமானத்தில் வரவில்லை, அதற்காகத் தான் கம்பிளைன்ட் எழுதவேண்டும் என்றார்.

நல்லவேளையாகக் கேபின் பேக்கிஜில் என்னுடைய டிரஸ் எல்லாவறையும் வைத்திருந்தேன், அதனால் தான் வெயிட் அதிகமாகயிருந்தது, இல்லையென்றால் மாற்றுவதற்குக் கூட‌ டிரஸ் இல்லாமல் தான் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பேன். செக்கிங் பேக்கேஜை இவர்களிடம் இருந்து வாங்கியது ஒரு பெரிய கதை. நேரம் இருக்கும் போது பகிருகிறேன்.

.

Tuesday, April 22, 2014

கண்களை மிரட்டும் மாம்பழங்கள்!!!

நான் இருக்கும் ஏரியாவில் இரு வாரங்களுக்கு முன்பே மாம்பழங்கள் வரத்துத் தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக‌ ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நாக்கிற்கு மாம்பழத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று தோன்றியது. முழுமையான சீசன் ஆரம்பித்திருக்கவில்லை. நாங்கள் வழக்கமாக வாங்கும் பழக்கடைக்காரர் இன்னும் ஒரு வாரம் போனால் தான் சார் மாம்பழம் நல்லாயிருக்கும், இப்போது கிடைக்கிறத வாங்காதீங்க, கல்லைப் போட்டுப் பழுக்க வச்சுருப்பானுங்க! புளிக்கும்! என்று கூறியது மனதில் ஒரு மூலையில் ஒலித்தாலும், தெருவில் புதிதாக முளைத்திருந்த பழக்கடையில் மஞ்சள் கலரில் மாம்பழம் அடுக்கியிருந்தது கண்ணைப் பறித்தது. இங்குப் பழக்கடை மற்றும் காய்கறிக்கடை வைத்திருப்பவர்கள் அவைகளை அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியே நம்மை வாங்குவதற்குத் தூண்டும். எதையும் குப்பையாகக் குவித்துப் போட மாட்டார்கள்.



மாம்பழம் வாங்குவதில் என்னைவிட மனைவி அதிக ஆர்வமாக‌ ஆர்வமாக இருந்தார். எல்லாப் பழமும் ஒரே அளவில் மஞ்சள் மூலாம் சீராகப் பூசியது போன்று இருந்தது. தோலில் பச்சை நிறத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. கிலோ எவ்வளவு என்று கேட்டேன் எண்பது என்று பழக்கடைக்காரர் சொன்னார். இப்போது எல்லாகடைகளிலும் மாம்பழங்கள் குவிந்து இருப்பதால், அதே அளவுள்ள மாம்ப‌ழம் கிலோ முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. ப‌ழக்கடைக்காரர் எடைப்போடும் போது சரியாக ஐந்து மாம்ப‌ழம் நின்றது. வீட்டிற்கு வந்தவுடன் மனைவி முதல் வேலையாக ஒரு மாம்பழத்தில் தோலை நீக்கி விட்டு அதிலிருந்து ஒரு தூண்டை வெட்டி என்னிடம் கொடுத்தார். பழத்தில் இருந்த புளிப்புசுவையால், கீழே படத்தில் உள்ள குழந்தை தனது கண்ணைச் சிமிட்டுவது போல்தான் நானும் சிமிட்டினேன்.


சில மாம்ப‌ழங்கள் புளிப்பாகத் தான் இருக்கும், அந்த மாம்பழங்களின் வெளித்தோற்றத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். புளிக்கும் மாம்பழங்களின் தோல்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த மாழ்பழம் வெளித்தோற்றத்தில் முழுவதும் மஞ்சள் நிறம். எந்த வகையான மாம்பழத்தையும் இயற்கையாகப் பழுக்க வைத்தால் தோலில் பச்சை நிறம் கொஞ்சமாவது இருக்கும். நான் இப்போது வீடுகட்டியிருக்கும் நிலத்தில், ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு முழுவதும் மரமாகத் தான் இருந்தது. அதிலும் மாமரம் மட்டும் சுமார் இருப‌து வகையாவது நின்றிருக்கும். இந்த மரங்களில் காய்க்கும் மாம்பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எனது தாத்தா அந்தக் காலத்தில் தேடிதேடி ஒவ்வொரு ரகங்களையும் கொண்டு வந்து நட்டதாக அப்பா சொல்லுவார்கள்.

எனது வீட்டில் நின்ற, ஒவ்வொரு வகையான மாமரத்தின் பெயரும், அதன் சுவையும், அந்த மரங்களில் நாங்கள் ஏறி ஆட்டம் போட்டததும் இப்போதும் மனதில் விட்டு நீங்காமல் இருக்கிறது. எனது பழைய வீட்டின் சுவரையொட்டிய‌வாறு இரண்டு மாமரங்கள் இருந்தது, ஒரு வகை மாங்காயின் காம்பின் பக்கம் ஆப்பிளில் இருப்பது போல் குழி விழுந்து உருண்டை வடிவில் இருக்கும், அதனால் இதை நாங்கள் குண்டுகண்ணி என்று அழைப்போம். இன்னொரு வகைக் கிளீமூக்கு மாங்காயின் தோற்றத்தில் சிறிது நீளமாக இருக்கும், இதன் சுவை மாவாகச் சீனியைப் போன்று மிகவும் தித்திப்பாக‌ இருக்கும், அதனால் இதைச் சீனி மாங்காய் என்று அழைப்போம்.

எனது வீட்டின் தென் மூலையில் எலுமிச்சை அளவில் காய்கள் காய்க்கும் இரண்டு ரக மாமரங்களும் இருந்தன. இவை இரண்டிலும் உள்ள பழங்களில் நார்கள் அதிகமாகவும் இருக்கும். மேலும் இந்த மாங்காய் இரண்டும் பழுத்தாலும் காம்பில் இருந்து பால்(சுணை) அதிகமாக வரும், அதனால் அந்தப் பாலை கையால் பிழிந்து வெளியேற்றிவிட்டுதான் சாப்பிடுவோம். இந்த மாங்காய்கள் அளவில் சிறிதாக இருப்பதாலும் பாலின் தன்மை அதிகமாக இருப்பதாலும், மரத்திலிருந்து பறித்துப் பழுக்க வைப்பது கிடையாது. மரத்தில் இருந்து தானாகக் கனிந்து விழும் போது அதையெடுத்துக் கழுவிச் சாப்பிடுவோம்.

கற்கண்டு என்று ஒரு வகையான மாமரம் எனது பழைய வீட்டின் பின்புற வாசலில் நின்றது. அந்த மரத்தில் காய்க்கும் மாங்காயின் தோல் சற்றே தடிமனாக இருக்கும். வடிவில் மாங்காய் என்றால் படங்களில் என்ன அளவில் இருக்குமோ, அதுபோல் நீள அகலங்கள் அளவிட்டு செய்தது போல் இருக்கும். இதன் பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் இளம்சிவப்பாக இருக்கும், சுவைத்தால் உண்மையில் கற்கண்டு போல் அவ்வளவு தித்திப்பாக இருக்கும். இதன் தித்திப்பைப் போன்று இப்போது நான் வாங்கிச் சுவைக்கும் எந்த‌ மாம்பழங்களும் இருந்த‌தில்லை.

கப்பை மாங்காய் என்ற பெயருடன் சில மாமரங்கள் எங்கள் வீட்டில் நின்றது. அதில் மட்டுமே மூன்று வகையான ரகம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கும் இதன் சிறப்புக் காயாக இருக்கும் போதே வெளித்தோல் சிவப்பும் பச்சையும் கலந்து இருக்கும். பழுத்தால் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மரத்தில் இருந்து கனிந்து பழுத்தாலும் புளிப்புச் சுவையுடைய மாங்காயும் எனது பெரியம்மா வீட்டில் இருந்தது. வருக்கை, செங்க வருக்கை என்று இரண்டு வகை மாழ்பழங்கள். இப்படியான மாம்பழங்களின் பெயர்கள் எனது மாவட்டத்தைத் தவிர வேறு எவருக்குமாவது பழக்க பட்டிருக்குமா என்றும் தெரியவில்லை.



இப்போதும் எனது வீட்டில் இருக்கும் ஒரே மாமரம் தண்ணி மாங்காய் என்று எங்களால் அழைக்கப்படுவது மட்டும்தான். இதில் உள்ள மாங்காய் ஒவ்வொன்றும் தேங்காய் போன்று பெரிதாக இருக்கும். பச்சையாக இருக்கும் மாங்காயை வெட்டி வைத்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் ஊறிவிடும், அதனால் தான் தண்ணி மாங்காய் என்று அழைப்போம். பச்சையாகவும் பழமாகவும் சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். கோடையில் காற்றுப் பலமாக அடிப்பதால், தேங்காய் போன்று பெரிதாக இருக்கும் இந்த மாங்காய், கனம் தாங்காமல் காம்பிலிருந்து அறுந்து கீழே விழுந்துவிடும். இதை விளையும் வரை மரத்தில் வைத்துப் பாதுகாப்பது ரெம்பப் பெரிய விசயம்.

மாங்காயை பறித்துப் பழுக்க வைப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. மரத்தில் இருந்து பறிக்கும் போதே அவை கீழே விழாமல் வலையில் பறிக்க வேண்டும். அதன்பிறகு அவற்றின் காம்புகளை உடைத்துப் பால்(சுணை) வழிய‌ வைக்க வேண்டும். வழிந்த‌ பால் மாங்காயில் ஒட்டியிருந்தால் சுத்தமாகத் துணியால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். இவைகளை அடியில் வைக்கோல் பரப்பிய‌ கடவத்தில் அடுக்க வேண்டும். ஒரு வரிசை மாங்காய் அடுக்கிய பின்னர், சிறிது வைக்கோல் வைக்க வேண்டும், அந்த வைக்கோல் மேல் அடுத்த வரிசை மாங்காயை அடுக்க வேண்டும் இவ்வாறு லேயர் லேயராக வைக்கோலும், மாங்காயும் கடவம் முழுவதும் அடுக்க வேண்டும். முழுவதும் அடுக்கியபின் கடவத்தைக் கோணிப்பையைக் கொண்டு மூடி இறுக்கமாகக் கட்டி வைத்துவிடுவார்கள். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் எல்லா மாம்பழங்களும் பழுத்துவிடும். கோடைக்காலத்தில் எங்கள் வீட்டில் கடவம் கடவமாக மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பார்கள்.

எனது வீட்டில் இத்தனை வகையான மாம்பழங்களைப் பார்த்திருந்த போதும் இப்போது நான் காசு கொடுத்து வாங்கும் மாம்பழங்க‌ளைப் போல் வெளித்தோல் இவ்வளவு மஞ்சள் நிறமாக எந்தப் பழமும் இருப்பதில்லை. கலர் அதிகமாக வர வேண்டும் என்பதற்காக‌ கொன்றை மரத்தின் இலைகளைப் பறித்து வைக்கோலுடன் சேர்த்து வைப்போம் அப்போதும் மஞ்சள் நிறமாகத் தோன்றுவதில்லை, சிறிதாக‌ சிவப்பு நிறம் ஆங்காங்கே இருக்கும். கலர் நன்றாக வரவில்லையென்றாலும் தித்திக்கும் சுவை மட்டும் இரட்டிப்பாக இருக்கும்.

ஆனால் இப்போது நான் வாங்கும் மாம்பழங்களில் கலர் மட்டும் நன்றாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது, ஆனால் சுவை?..

இவ்வளவு கலராக இருக்கிறது என்றால் மாம்பழங்கள் நன்றாகப் பழுத்திருக்கிறது என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றும், ஆனால் வீட்டில் சென்று சாப்பிட்டுப் பார்த்தால் புளிப்பாக இருக்கும். நன்றாக முதிர்ந்த மாங்காய்களைத் தான் இயற்கையாகப் பழுக்க வைக்க முடியும், அதனால் தான் இவற்றின் சுவை தித்திப்பாக இருக்கிறது. நான்றாக முதிராத மாங்காய்களைப் பறித்துச் செயற்கையாகப் பழுக்க வைப்பதால் தான், கலர் மட்டும் வந்துவிடுகிறது, சுவை புளிப்பாக இருக்கிறது.

இன்னும் சில அறிவாளி வியாபாரிகள் மாமரத்தின் பச்சை இலைகள் பறித்து வைத்து அதன் மீது மாம்பழங்களை அடுக்கிவைத்து, கார்பைடுகல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதில்லை இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்று சொல்லி, வெளியில் விற்கும் மாம்பழங்களின் விலையை விட அதிக விலைக்கு விற்கிறார்கள். இயற்கையாகப் பழுக்க வைக்கப் பட்ட‌தென்றால் மாங்காய் மட்டும் பழமாக மாறும் போது இலைகள் மட்டும் பச்சையாக எப்படியிருக்கும்? யாரிடம் சொல்வது? யாரிடம் கேட்பது?

சாப்பிடும் பழங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட அழகாகவும், கலராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் மனநிலைகள் மாறத வரை எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழபோவதில்லை.

.

Saturday, April 19, 2014

சனிக்கிழமையானால் சண்டியர்!!!

ஒருவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியான ஆள் எவராக இருக்க முடியும். உழைப்பை சுரண்டுபவர்களைப் பற்றி அறிந்தவர்களால் தான் என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. ஆனால் நீ ஒரு கார்பரேட் முதலாளியிடம் பணிசெய்வதால் தொழிலாளர்கள் பற்றிப் பேச உனக்கு உரிமையில்லை என்று சொல்வது எப்படியான வாதம் என்று எனக்குப் புரியவில்லை.

நீ அந்தக் கார்பரேட் அலுவலகத்தில் உழைத்த உழைப்பை வெளிநாட்டுக் கம்பெனிக‌ளிடம் கொடுத்து லட்சம் டாலர்கள் சம்பாதித்துவிட்டு, அதில் வரும் சில லட்சங்களை ரூபாயில் உனக்குக் கூலியாகத் தருகிறார்கள். முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்கள் எப்படிப் புரட்சி, போராட்டம் என்று பேசலாம் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய கூலியை தான் வாங்குகிறோம் என்பதைக் கூட அறியாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?.

நண்பரே! ஓடாத குதிரையை எவரும் வாங்கி ரேசில் ஓட விடுவது இல்லை. வலுவான குதிரையின் மீது தான் பணம் கட்டுவார்கள். அதேபோல் தான் உழைக்காத‌ எவருக்கும் லட்சங்களில் சம்பளங்களை இந்தக் கார்பரேட் கம்பெனிகள் கொடுத்துவிடுவதில்லை என்பதை நண்பர் புரிந்தால் நலம்.

ஒரு பண்ணையாரிடம் பல‌ தொழிலாளிகள் வேலைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பண்ணையார் தொழிலாளிகளிக்கு உரிய ஊதியத்தை கொடுக்காமலும், தொழிலாளிகளின் நலனில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களை அவரின் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளிகளை விட எவர் அதிகாமாகத் தெரிந்து வைத்துக் இருக்க‌ முடியும்?. அந்தத் தொழிலாளி வர்கம் பண்ணையாரிடம் வாங்கிய சம்பளத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறது என்ற காரணத்திற்காக, அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களுக்கு எதிராகக் கருத்துக்களோ அல்லது போராட்டங்களே செய்யக் கூடாது என்று சொல்வது என்னவகையான நியாயம்?.

குடிப்பது தவறு என்று சொல்கிறோம். ஆனால் உனக்குத் தான் குடிப்பழக்கமே கிடையாதே, அப்புறம் நீ எல்லாம் எப்படி அய்யா குடிப்பழக்கம் தீங்கு என்று சொல்லவருகிறாய் என்று கேட்பது போல் தான் இருக்கிறது வா. மணிகண்டன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவு. குடிப்பழக்கத்தின் கொடுமையை ஒருவர் அனுபவித்துத் தான் அறியவேண்டும் என்றில்லை. அதன் வீச்சுச் சமூகத்தில் எத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற‌து என்பதைச் சிந்திக்கச் சிறிய அளவு மூளை இருந்தால் போதுமானது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பல வகையான போராட்டங்களில் பெரியளவில் கவனத்தில் ஈர்த்தது காந்தியடிகளின் "ஒத்துழையாமை இயக்கம்". வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படியானால் ஆங்கிலேயர்களில் கீழ் வேலைப்பார்த்துவிட்டு, அவர்களிடம் ஊதியமும் வாங்கிவிட்டு எப்படி அய்யா? இந்தப் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என்று கேட்பதற்கு ஒப்பாகும் உங்களின் இந்த‌ப் பதிவு.

நானும் முழுமையாகக் கம்யூனிசத்தைப் படித்தவன் இல்லை. எல்லா இசங்களையும் கரைத்து குடித்தவனும் இல்லை. ஏதோ பொதுவுடமை தத்துவ நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொள்கை இல்லாத வழ்க்கை என்பது உயிர் இல்லாத உடம்பு போன்றது என்பதை முழுமையாக நம்புப‌வன். கொள்கைகள் மட்டும் தான் எந்தவொரு சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் என்று இன்றும் ந‌ம்புப‌வன். தனிமனித துதிபாடல்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை, மக்களால் தூக்கியெறியப்படும்

சில ம‌னிதர்களைக் குறிவைத்து எழுதிய பதிவாக எனக்குத் தெரியவில்லை. அப்படியாகயிருந்தால் அவர்களின் பெயர்களையோ, தளங்களையோ சுட்டி எழுதியிருப்பார். ஆனால் போகிற போக்கில் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவனெல்லாம் கம்யூனிசத்தைப் பற்றிப் பேசுவதா? என்று தலையில் குட்டு வைத்துவிட்டு செல்வதால் தான் இந்த ப‌திவு எழுத தேவையாயிற்று.



.

பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்! அப்ப பெண் வேட்பாளர்கள்?

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் எவருக்கும் மறுப்பு இருக்காது. சுதந்திரம் அடைந்து அறுபத்தி ஏழு ஆண்டுகள் கடந்து வந்துவிட்டோம். பெண்களின் சமூக‌ உரிமைகளையும், அரசியலில் அவர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் சுதந்திரபோராட்டக் காலத்திலேயே காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பேசியுள்ளனர். பதினைந்து முறை நாடாளுமன்ற தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட்டோம். கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த‌ பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 61/543. சதவீத எண்ணிக்கையில் பார்க்கும் போது 11.23%. 39 தொகுதிகள் கொண்ட‌ தமிழ்நாட்டில் இருந்து கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்திடுக்கப்பட்ட பெண் எம்பி ஒருவர் மட்டும் தான், அவரும் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தமுறை அந்த ஒன்றாவது வருமா? என்பது கேள்விக்குறி தான்.

Related Posts with Thumbnails