Thursday, July 10, 2014

நல்லா! கேட்குறாங்க டீடெயிலு!!!

என்னுடைய வேலையைப் பற்றி எவருக்கும் எளிதாக விளக்கிவிட முடியாது. எந்தத் துறையைச் சார்ந்தது என்றும் குறிப்பாகச் சொல்லிவிடவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் வேலையைப் பற்றி ஒருவருக்கு விளக்க வேண்டுமானால் குறைந்தது அவருக்கு அரை மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும். அதனால் என்னிடம் வேலையைப் பற்றி விசாரிக்கும் நபர்களின் தகுதியை வைத்து ஏதாவது ஒரிரு வார்த்தைகளில் அவர்களுக்குப் புரியும் படி சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். கொஞ்சம் அதிகப் படியாக என்னுடைய வேலையைப் பற்றி விளக்கி, அவர்களிடம் சின்னாபின்னமான கதைககள் நிறையவே உண்டு. கீழே நான் சொல்லியிருப்பது கொஞ்சம் சுவரஸ்யமாக‌ இருக்கும்.

இப்படித்தான் கடந்த வாரம் நான் வாடிக்கையாகச் செல்லும் சலூன் கடைக்குச் சென்றிருந்தேன். எப்போதும் என்னைப் பார்த்தவுடன் கடை ஓனர் பெரிதாக நமஸ்தே வைப்பார். அதைப் பார்த்தவுடன் அவருடைய சலூனில் வேலைச் செய்யும் பையன்களும் மரியாதையாக நமஸ்தே வைப்பார்கள். இந்தச் சலூன் கடை ஓனர் எனக்கு நமஸ்தே வைப்பதற்கு ஒரு பின்னனி உண்டு. நான் வாரத்தில் ஒரு நாள் தான் ஷேவிங் பண்ணுவது வழக்கம். அது பெரும்பாலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையாகத் தான் இருக்கும். ஒருமுறை வாரத்தின் இடைப்பட்ட  நாளில் ஆபிசில் ஒரு பார்ட்டி ந‌டைப்பெறுவதாக என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அதில் கம்பெனியின் எம்.டி மற்றும் எல்லா ஜெனரல் மேனேஜரும் கலந்துக் கொள்கிறார்கள் என்றும் மெயில் வந்திருந்தது. அந்தப் பார்ட்டிக்கு அரைத் தாடியுடன் செல்ல வேண்டாம் என்று மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, காலையில் சலூன் பக்கம் போனேன்.

அந்தச் சலூனில் ஒரே நேரத்தில் மூன்றுபேர் அமர்ந்துக் கட்டிங் மற்றும் ஷேவிங் செய்ய முடியும். சலூனில் இருந்த இரண்டு பையன் மற்றும் ஓனர் என்று மூன்று பேருமே அன்றைக்குப் பிஸியாக இருந்தார்கள். கடையில் போடப்பட்டிருந்த ஷோபாவிலும் மூன்றுபேர் அமர்ந்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த மூன்றுபேரில் ஒருத்தர் என்னுடைய ஆபிசில் ஹெல்பர் வேலைச் செய்பவர். அவர் என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று, சார்! இங்க உக்காருங்க! என்று இடம் கொடுத்தார். நான் அவரிடம் அமர்வதற்குச் சொல்லிவிட்டு வெளியில் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் ஓனர், ஒருவருக்குக் கட்டிங் செய்து முடித்திருந்தார். அங்குக் காத்திருந்தவர்களின் வரிசைப்படி எங்கள் ஆபிஸில் வேலைச் செய்பவர் தான் அடுத்து அமர வேண்டும். அவர் நேராக என்னிடம் வந்து, சார்! நீங்க ஷேவிங் பண்ணுங்கள்! நான் அப்புறமாகப் பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரி! என்று அமர்ந்துவிட்டேன். எங்கள் இருவரின் செய்கைகளை, அந்தச் சலூன் ஒனர் பார்த்துக்கொண்டிருந்தார். அதுநாள் வரையிலும் என்னைக் கண்டுகொள்ளாதவர், அதன்பிறகு எப்போது நான் அந்தச் சலூனுக்குச் சென்றாலும் நமஸ்தே வைத்துவிடுவார்.

நான் வாரம் தவறாமல் அந்தச் சலூனுக்குச் செல்வதால், என்னிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேள்விகளைக் கேட்பார். நீங்க, என்ன வேலை சார்! பார்க்குறீங்க? என்பார். நான் ஐடி கம்பெனியில் வேலை என்பேன். நீங்க தான் மேனேஜரா? என்று ஒரு நாள் கேட்பார். உங்க கம்பெனியில் எத்தனை பேர் வேலைப் பார்ப்பார்கள்?. எல்லோரும் தமிழ்காரர்கள் தான் இருக்காங்களா?. தெலுங்குக்காரங்களும் உங்க கம்பெனியில் வேலைப் பார்க்குறாங்களா?. எந்த நாட்டுக்கு எல்லாம் போவீங்க?. எவ்வளவு சார், சம்பளம் தருவார்கள்?. நீங்க கம்பியூட்டரில் தானே வேலைப் பார்ப்பீங்க?. எத்தனை கம்பியூட்டர் உங்கள் ஆபிஸில் இருக்கிறது?. உங்களுக்குக் கம்பியூட்டரில் உள்ள பிரச்சனைகளை ரிப்பேர் செய்யத் தெரியுமா? என்று பலவாறாகக் கேள்விகள் இருக்கும். நானும் பொறுமையாக ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்வேன். சில மொக்கையான கேள்விகளுக்குச் சிரித்து வைப்பேன்.

இந்தச் சலூன் ஓனருக்கு ஹைதிராபாத்தில் மட்டும் ஐந்து கடைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் ஒருவாரம் இந்த‌ச் சலூனில் வேலையில் இருக்கும் பையன்க‌ளை மறுவாரம் அவரின் அடுத்தச் சலூனுக்கு மாற்றிவிடுவார். எவரையும் நிலையாக அந்தச் சலூனில் இருக்க விடமாட்டார். ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ கழித்துத் திரும்பவும் இந்தச் சலூனில் அந்தப் பையன்களைப் பார்க்க முடியும். இவ்வாறு வேலைச் செய்யும் பையன்களை நிலையாக ஒரு கடையில் வேலைப் பார்ப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார். அந்தக் காரணத்தை அவர் சிதம்பர ரகசியம் போல் அவருக்குள் வைத்திருந்தார். அந்தச் சிதம்பர ரகசியத்தை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எனக்குச் சில காலம் பிடித்திருந்தது. உண்மையில் அந்த ரகசியத்தை அவரின் தொழில் யுக்தி என்று கூடச் சொல்ல‌லாம். அதாவது பையன்களை வேலைக்கு அதே கடையில் வைத்திருந்தால், சில மாதங்களில் வழக்கமாக வரும் நல்ல கஸ்டம‌ர்களிடம் பழக்கம் பிடித்துக்கொண்டு, பக்கத்துத் தெருவில் புதிய கடைகளைத் திறந்துவிடுகிறார்களாம். தொடக்கத்தில் இவர் இப்படி ரெம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு தான் இந்தமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சலூனில் கடந்த வாரம் நடந்த கதையைச் சொல்லுவதற்கு ஆரம்பித்து, எங்கோ போய்விட்டது. சரி, இப்போது அந்தக் கதைக்கு வருவோம். கடந்த ஞாயிற்றுக்கிழமைச் சலூனில் ஷேவிங் பண்ணுவதற்குச் சென்றிருந்தேன், கடையில் இருந்த பையன்கள் மட்டும் தான் கஸ்டமருடன் பிஸியாக இருந்தார்கள். கடை ஓனர் சும்மா தான் இருந்தார். என்னைக் கண்டவுடன், என்ன‌ சார்! கட்டிங்கா? ஷேவிங்கா? என்று கேட்டார். நான் ஷேவிங் என்று சொல்லிவிட்டுக் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். ஷேவிங் செய்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார், எப்போதும் அவ்வாறு இருக்க மாட்டார். ஏதாவது என்னிடம் கேட்டுக் கொண்டு இருப்பார். காசு கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது, சார்! ஒரு நிமிசம் என்றார்!. எனக்கு எதற்கு அழைக்கிறார்? என்று புரியாமல் விழித்தேன்.

அப்படியே வெளியில் என்னை அழைத்துவந்து காதலன், காதலியை ஓரம் கட்டுவது போல் என்னையும் ஓரம் கட்டினார்.

எனக்கு இவருடைய செய்கைகள் ஒன்றும் புரியவில்லை!

ரெம்ப நெருங்கி வந்து தன்னுடைய தலையைச் சொறிந்தார்!

ஏதோ கேட்பதாக வந்து மீண்டும் அமைதிக் காத்தார்!

இவர் எதற்கு! இந்த அளவிற்குப் பீடிகைப் போடுகிறார்? என்று யோசிப்பதற்குள், அந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டார்!

சார்! எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் விலைக்கு வேணும்! உங்க ஆபிசில் இருந்து எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் வாங்கிக் கொடுங்கள் என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சரியான பல்பு வாங்கியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

நான் உடனடியாகப் பதில் சொல்லாமல் அமைதிக் காத்தவுடன், ஒண்ணு இல்ல, சார்! என்னோட தோஸ்த்க்கும் ஒண்ணு வேணும், ரெண்டா வாங்கிக் கொடுங்கள்! என்றார்.

ஒரு கம்பியூட்டர் என்ப‌தால் நான் யோசிக்கிறேன்! என்று நினைத்தவர், இரண்டு கம்பியூட்டர் வேண்டும் என்று எனக்குப் பல்க் ஆர்டர் கொடுக்கிறார். அவருடைய அறியாமையை என்னவென்று சொல்வது?.. அவரிடம் சிரித்துக் கொண்டே நான் ஆபிசில் கேட்டுச் சொல்கிறேன் என்று வந்துவிட்டேன்.



இந்த வாரமும் அந்தச் சலூன் கடைக்குத் தான் போக வேண்டும்!!..


.

8 comments:

சூரியா இராஜப்பா said...

அண்ணனுக்கு இரண்டு computer பார்சல்

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹா! பல்க் ஆர்டர் விட்டுடாதீங்க!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நல்ல நகைச்சுவைப்பாணியில் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

sundar said...

பல்க் ஆர்டர் வரும் போது சிறு பிள்ளைத்தனமா இருக்கப்ப்படாது :)))

sundar said...

ஹா ஹா :) பல்க் ஆர்டர் அடடா என்னே ஒரு மார்கெட்டிங் டெக்னிக் அவருக்கு ஹி ஹி :))

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
என்ன பொறுமை

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... பல்க் ஆர்டர்....

Paranthaman said...

enna Sir, romba nala onghala kanom, illa enakku mattum varalaya?
paranthaman

Related Posts with Thumbnails