Saturday, May 3, 2014

தயவுசெய்து கிச்சன் பக்கம் வராதீங்க!!!

அன்றைக்குச் சனிக்கிழமை, ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் தூங்கி எழுவதேற்கே லேட்டாகிவிட்டது. மனைவியோ சீக்கிரமே எழுந்து டிபன் ரெடி பண்ணிவிட்டார். நான் பல்தேய்த்து, குளித்து டிபன் சாப்பிட டேபிளில் அம‌ரும் போது மணியானது பத்தை தாண்டியிருந்தது. வாரிய தலையுடன் வெளியில் கிளம்பிய மனைவி எனக்கு அவசர அவசரமாக நான்கு இட்லியை தட்டில் பரிமாறிவிட்டு, "நான் பக்கத்து வீட்டு அக்கா கூடச் சூப்பர் மார்கெட் போய் வருகிறேன், கொஞ்சம் நீங்க ப்ரிஜில் இருக்கும் கீரையை வெளியில் எடுத்து ந‌றுக்கி மட்டும் வைச்சுருங்க!" என்று சொல்லிவிட்டுக் கையில் கூடையுடன் கிளம்பினார்.

காலையில் எப்போதும் டிபன் சாப்பிடும் நேரத்தை விட இன்று லேட்டாக இருந்ததாலோ என்னவோ, பசி அதிகமாக இருந்தது. தட்டில் மனைவி வைத்த நான்கு இட்லி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இட்லி எடுத்து சாப்பிட்டுவிட்டு கிச்சன் சென்று ப்ரிஜ்ஜில் பாலீதீன் கவரில் இரண்டு கட்டுகளாகக் கட்டியிருந்த கீரையை எடுத்தேன். கீரையின் வேரில் அதிகமான அளவு மண் ஒட்டியிருந்தது. அதைத் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நறுக்கத் தொடங்கினேன். இரண்டு கட்டுகளையும் நறுக்கிய போது ஒரு பெரிய தட்டு முழுவதும் வந்தது.

சூப்பர் மார்கெட் சென்ற மனைவி திரும்பி வருவதற்கு நேரம் இன்னும் அதிகமாகவே இருந்தது. அதனால் நறுக்கிய கீரையை நாமே பொரியல் செய்தான் என்ன? என்ற எண்ணம் மனதில் எழவே, உடனே அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கினேன். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவையிரண்டையும் தனியாக நறுக்கி வைத்துக் கொண்டேன். தேங்காயும் துருவி தனியாக ஒரு தட்டில் அரைத்து வைத்துக் கொண்டேன். இப்போது ஸ்டவ்வில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்புப் போட்டு, வெங்காயம் பச்சை மிளகாயைக் கொட்டி வதக்கிவிட்டு நறுக்கிய‌ கீரையைக் கொட்டினேன்.



கொட்டிய கீரையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்புப்போட்டு கிளறி, கடாயைச் சிறிது நேரம் மூடி வைத்தேன். சிறிது நேரத்தில் மூடியை எடுத்து கீரையைக் கிளறிவிட்டு ரெடியாக இருந்த தேங்காயைத் தூவி இறக்கினேன். இருபதில் இருந்து முப்பது நிமிடங்களில் எல்லாம் வேலையும் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து டீவியை ஆன் செய்து ஒவ்வொரு சானலாக மாற்றத் தொடங்கினேன்.



சிறிது நேரத்தில் சூப்பர் மார்கெட் சென்ற மனைவி வீட்டிற்குள் நுழைந்தார். வாயிலில் நுழையும் போதே, நான் கீரையை நறுக்கி மட்டும் தானே வைக்கச் சொன்னேன், பொரியலே பண்ணிடீங்களா!! என்று ஹாலில் இருந்த‌ என்னிடம் கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார். கிச்சன் ஷெல்பில் அவர் கழுவி அடுக்கி வைத்திருந்த மொத்தப் பாத்திரங்களும், இப்போது வாஷ் பேஷனில் கிடந்தது. ஒரு கீரையைப் பொரியல் பண்ணுவதற்குள் இவ்வளவு பாத்திரங்களையா எடுத்து வாஷ் பேஷனில் போடுவது? என்று கேள்வியை என்னிடம் திருப்பினார்.

ஆமா!! என்பது போல் பெரிதாக‌ தலையை ஆட்டி வைத்தேன்.

சரிங்க, வாஷ் பேஷ‌னில் இருக்கும், இந்த இரண்டு பெரிய பாத்திரத்தை வைத்து என்ன செய்தீர்கள்?

கீரையின் வேரில் மண் அதிகமாக ஒட்டியிருந்தது, அதனால் ஒன்றில் மாற்றி ஒன்றில் கழுவினேன்.

அதுக்கு எதுக்குப் பாத்திரம்? வாஷ்பேஷனில் இருக்கும் டேப்பை திறந்துவிட்டே கழுவலாமே!!

ஓ!! இதை இப்படிக் கூடச் செய்யலாமா என்று மைன்ட் வாய்ஸ் சொல்லியது.
ஆமாயில்ல, சரி அடுத்த முறை அப்படியே கழுவலாம்..

ஆமாங்க!! எதுக்கு ரெண்டு கடாயும் எடுத்துக் கழுவுதற்குப் போட்டிருக்கீங்க? சின்னக் கடாயில் தானே கீரையைப் பண்ணியிருப்பீர்கள், அப்புறம் எப்படிப் பெரிய கடாயும் வாஷ் பேஷனுக்கு வந்தது?.

சின்னக் கடாயில் தான் பொரியல் பண்ண ஸ்டவ்வில் வைத்தேன், கீரையை முழுவதும் கொட்டிய போது அந்தச் சிறிய‌ கடாயில் நிற்கவில்லை, அதனால் பெரிய கடாயை எடுத்து மாற்றினேன்.

என்னது!! சின்னக் கடாயில் கீரை நிற்கவில்லையா? அப்படினா எத்தனை கட்டுகள் எடுத்து பொரியல் செய்தீர்கள்?.

ப்ரிஜ்ஜில் இருந்த இரண்டு கட்டையும் நறுக்கி பொரியல் செய்தேன்.

நாம் ரெண்டு பேரும் சாப்பிட‌ ரெண்டு கட்டு கீரையா?. ஒரு கட்டுத் தாராளமா போதுமே, பண்ணியது எல்லாம் சரிதான், ரெண்டு கட்டையும் நீங்க தான் சாப்பிடணும்!!

அதுக்கென்ன!! சாப்பிட்டால் போச்சு!!

ஆமா! ஷெல்பில் இருந்த மொத்த தட்டுகளும் இங்க தான் கிடக்குது!! அதுல என்ன செய்தீர்கள்?.

அது.. வந்து... ஒரு தட்டுல வெங்காயம் வெட்டி வச்சேன், அப்புறம்ம்ம்ம் ஒரு தட்டுல பச்சை மிளகாய் வெட்டி வச்சேன், இன்னொன்னுல தேங்காய்....

எல்லாம் சரிங்க!! கீரை பொரியல் பண்ணுவதற்கு எதுக்குங்க மிக்சி?..

அது வந்து, தேங்காயை துருவி துருவி பார்த்தேன், சரியாக வரல, அதனால தேங்காயை உடைத்து போட்டு மிக்சியில் அரைத்து கொட்டினேன்..

பத்து நிமிடத்தில் நான் செய்யுற பொரியல், அதை நீங்கள் செய்து ஒரு மணி நேரம் எனக்குப் பாத்திரம் கழுவும் வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள்!!!

"இதுக்கு பேசாமல் கையை காலை வச்சுட்டு, டீவியாவது பார்த்திருக்கலாம்". மைன்ட் வாய்ஸ்

ஹாலில் ஓடிய டீவியில் வெற்றிக்கொடி க‌ட்டுப் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விகளுக்குப் பார்த்திபன் கொடுக்கும் பதிலை பார்த்து, வடிவேலு தன் முகத்திற்கு நேரே கையை நீட்டி வேணுன்டா!! உனக்கு வேணும்!! என்ற வசனம் பேசும் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.


.

10 comments:

”தளிர் சுரேஷ்” said...

கல கல சமையலா இல்லே இருக்கு!

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா... பத்து நிமிஷத்துல செய்ய வேண்டிய வேலையை ஒரு மணி நேரம் எடுத்து செஞ்சதும் இல்லாம வீட்டம்மா கிட்ட திட்டும் வேற வாங்கிட்டீங்க... கடைசி வரி கலக்கல்...

வேகநரி said...

சுவரசியமானது.
ஒரு ரெயினிங் தானே :)

வருண் said...

Unlike your wife I am impressed with your spinach dish, Stephen! :)

Real men know how to cook too! :-)

Asiya Omar said...

சமையல் ஈசி,பாத்திரம் கழுவுவது எத்தனை சிரமம் தெரியுமா? பொரியல் பக்குவம் அருமை.

Anonymous said...

நான் இங்கு கலந்து கொள்ளலாமா?

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//கல கல சமையலா இல்லே இருக்கு!//

வாங்க சுரேஷ்,

ரெம்ப கலகல சமையல் தான். கருத்துக்கு நன்றி.

@ஸ்கூல் பையன் said...
//ஹா ஹா... பத்து நிமிஷத்துல செய்ய வேண்டிய வேலையை ஒரு மணி நேரம் எடுத்து செஞ்சதும் இல்லாம வீட்டம்மா கிட்ட திட்டும் வேற வாங்கிட்டீங்க... கடைசி வரி கலக்கல்...//
வாங்க ஸ்கூல் பையன்,

வந்து படித்து ரசித்தமைக்கு நன்றி.

@வேகநரி said...
//சுவரசியமானது.
ஒரு ரெயினிங் தானே :)//

வாங்க வேகந‌ரி,

ரெம்ப சுவரஸ்யமானது தான்.. இடிமின்னலுடன் கூடிய ரெயினிங். :)

நாடோடி said...

@வருண் said...
//Unlike your wife I am impressed with your spinach dish, Stephen! :)

Real men know how to cook too! :-)//
Hi Varun,

I will cook all dishes in very well. :)
thanks for giving your comments.

@Asiya Omar said...
//சமையல் ஈசி,பாத்திரம் கழுவுவது எத்தனை சிரமம் தெரியுமா? பொரியல் பக்குவம் அருமை.//

வாங்க சகோ,

நீங்கள் சொல்வது உண்மைதான், கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ.

@Anand Ramakrishnan said...
//நான் இங்கு கலந்து கொள்ளலாமா?//

வாங்க ஆனந்த்,

என்ன கேள்வி இது, வாங்க, வந்து ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க.. :)

drogba said...

அது சரி!!!! கறி ருசியாக இருந்ததா?

Unknown said...

பாவம்தான் உங்கள் நிலமை! அந்தக்காலதில் நானும் பட்டிருக்கிறேன்

Related Posts with Thumbnails