Thursday, July 3, 2014

கண்டிப்பா! அடி வாங்கியிருப்பார்!!

கடந்த டிசம்பர் மாதம் அண்ணனின் குழந்தைக்கு முடி எடுப்பதற்காக‌ வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான் ஹைதிராபாத்திலிருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு வந்துவிடுகிறேன் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். ஹைதிராபாத்திலிருந்து நானும் எனது மனைவியும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேளாங்கண்ணிக்குச் செல்லவேண்டிய நாளின் காலையில் தான் சென்னை வந்திறங்கினோம். வேளாங்கண்ணிக்குச் சென்னையிலிருந்து பகல் பயண ரெயில்கள் ஏதும் இல்லை. அதனால் பேருந்தில் பயணம் செய்வது என்று முடிவெடுத்திருந்தேன். காலையில் தனியார் பேருந்துகள் ஏதும் வேளாங்கண்ணிக்கு இயக்கபடாத‌தால் என்னால் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கும் பேருந்தில் ஏறிச் சென்றுவிடலாம் என்று கோயம்பேடு வந்துவிட்டோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஒரு பேருந்து வேளாங்கண்ணிக்கு கிளம்பியது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த வண்டியில் ஏறலாம் என்று காத்திருந்தோம். அந்தப் பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அடுத்தப் பேருந்தும் வந்தது. ஓட்டுநர் வண்டியை நடைமேடையில் நிறுத்துவதற்குள் சிலர் பேருந்தில், தங்கள் பொருட்களைப் போட்டு முன் இருக்கைகளில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அதில் ஒருவர் தனது கைகளில் இருந்த இரண்டு பேக்குகளை எடுத்து அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் போட்டார். நாங்கள் இருவரும் பேருந்தை ஓட்டுநர் முழுமையாக நிறுத்தும் வரை காத்திருந்து, பின்புதான் வண்டியில் ஏறினோம். அதற்குள் பேருந்தில் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தது. அடுத்தடுத்த‌ இரண்டு இருக்கைகளில் பேக்கு போடப்பட்டிருந்த‌ இருக்கைகள் எவரும் அமராமல் காலியாக இருந்தது, அவைகளைப் போட்டவரையும் காணவில்லை. நாங்கள் அந்த இருக்கைகளைக் கடந்து அடுத்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டோம்.

சிறிது நேரத்தில் இருக்கையில் பேக்கைப் போட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு பையன்கள் என்று குடும்பத்தினருடன் வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுமக்க முடியாமல் ஆளுக்கு ஒன்றிரண்டு பெட்டி மற்றும் படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். வந்த சிறிது நேரத்தில் அவர்களில் இருக்கைக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் பெட்டிகளைக் கொண்டு மோதிவதும், இருக்கைகளில் கீழ் பெட்டிகளைத் தள்ளுவதுமாகப் பேருந்தை ஒரே களோபரமாக‌ ஆக்கிவிட்டார்கள். அவர்கள் நால்வரும் தங்கள் பெட்டிப்படுக்கைகளை வைத்துச் செட்டில் ஆவதற்குள் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு வழிப் பண்ணிவிட்டார்கள். "அக்கட தீஸ்கோ", "இக்கட பெற்றுக்கோ" என்று சத்தமாக‌ அவர்களுக்குள் பேசிய தெலுங்கும், பேருந்தில் இருந்த அனைவரின் கவனமும் இவர்களில் மீது பதிவதற்குக் காரணமாய் இருந்தது.

பேருந்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது. சிறிது நேரத்தில் நடத்துன‌ரும் வந்து டிக்கெட்டுகளைக் கொடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். எங்கள் முன்னால் அமர்ந்திருந்த தெலுங்குக் குடும்பத்தில் உள்ள‌ இரண்டு பையன்களும் சிறிது நேரத்தில் தெலுங்கில் கத்த தொடங்கிவிட்டார்கள். என்னவென்று பார்த்தால் சன்னல் இருக்கை தான் வேண்டும் என்ற‌ சண்டை. அந்தச் சண்டையைச் சிறுவர்கள் தங்களுக்குள் போட்டிருந்தால் பரவாயில்லை. சன்னல் ஓரமாக இருந்த அப்பாவிடம் தான், அந்தப் பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று அவரும் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பையன்களை மிரட்டிக்கொண்டிருந்தார். எனக்கும், எனது மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அப்பா, பிள்ளைகளுக்கான சண்டையை அவருடைய‌ மனைவிதான் "மீரு இக்கட வந்து குச்சண்டி" என்று கணவனை மிரட்டிப் பிரச்சனையை முடித்துவைத்தார்.



அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசியது பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் அளவிற்கு இருந்தது, அவர்கள் பேசிய தெலுங்கில், எனக்குப் புரிந்ததை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் கடந்த ஒரு வாரமாகத் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்றும் இப்போதும் அவர்கள் வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லத்தான் இந்தப் பேருந்தில் ஏறி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. சிறிது நேரத்தில் ஓட்டுநர் வந்து பேருந்தை எடுக்கத் தொடங்கினார். அதற்குள் நடத்துனரும் எங்கள் அருகில் டிக்கெட் கேட்டு வந்திருந்தார். அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினரிடம் நடத்துனர் "எத்தனை டிக்கெட்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "வேளாங்கண்ணி, இரண்டு புல் டிக்கெட்" "இரண்டு ஆப் டிக்கெட்" என்றார். நடத்துனர் இருக்கையில் இருந்த அந்த இரண்டு பையன்களையும் சைகையால் எழுந்து நிற்க சொன்னார். அந்தச் சிறுவர்களின் உயரத்தைப் பார்த்துவிட்டு, இவர்களுக்கு ஆப் டிக்கெட் கொடுக்க முடியாது, புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.

தெலுங்குப் பேசியவர் கத்துவதற்குத் தொடங்கிவிட்டார். நடத்துனர் அமைதியாக "பெர்த் சர்டிபிக்கேட்" என்று சொல்லி சைகையால் கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "பெர்த் சர்டிபிக்கேட் லேது" என்றார். அப்படினா நீங்க புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே நடத்துனர் டிக்கெட்டைக் கிழிக்கத் தொடங்கினார். நடத்துனர் சொல்லியது புரியாதது போலத் தெலுங்கு காரர் "மீரு ஏது செப்தினாரு?" என்று தொடங்கித் தெலுங்கில் தொண்டைக் கிழியும் அளவிற்குக் கத்திக்கொண்டிருந்தார். அதில் நடத்துனரை முட்டாள், பைத்தியகாரன் என்று திட்டிய வார்த்தைகளும் அடங்கும். தெலுங்குப் பேசியவர் தொடர்ந்து கத்துவதை நிறுத்தாமல் இருந்ததால், நடத்துனர் அந்த இரண்டு பையன்களையும் அழைத்துக் கொண்டு சென்று முன் இருக்கையில் வரையப்பட்டிருந்த அளவுக் கோட்டிற்கு முன்னால் நிற்குமாறுச் சொன்னார். இருவரும் அந்த 130 செ.மீ உயரம் வரையப் பட்டிருந்த கோட்டிற்கு மேலாகவே வளர்ந்திருந்தார்கள்.

நடத்துனர் செய்வது எதுவுமே புரியாத‌து போலவே, அந்தத் தெலுங்குப் பேசியவர் கத்திக்கொண்டிருந்தார். நடத்துனர் நான்கு புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவர் கேட்பதாக இல்லை. ஆந்திராவில் நான் ஆப் டிக்கெட் தான் எடுப்பேன். என்னை நீ ஏமாற்றுகிறாய்! என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். நடத்துனருக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை, "யோவ்! நாலு புல் டிக்கெட் எடுத்தால் வண்டியில் இரு!, இல்லையென்றால் வண்டியை விட்டுக் கீழே இறங்கு" என்று கோபமாகச் சத்தம் போட்டார். பேருந்தில் இருந்த அனைவரும் இங்கு நடப்பதை வேடிக்கைப்பார்ப்பதும், அவர்களுக்குள் சிரிப்பதுமாக இருந்தார்கள். அந்தத் தெலுங்குக் காரர் பேசிய தெலுங்கு எனக்கு அரைகுறையாகப் புரிந்ததால், இவர் நடத்துனர் சொல்லியது புரியாமல் தான் கத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து நான் இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம், ஆப் டிக்கெட் வேண்டுமானால், நீங்கள் பையன்களின் பெர்த் சர்டிபிக்கேட் காண்பிக்க வேண்டும், இல்லையென்றால் 130 செ.மீ உயரத்திற்குக் குறைவாக இருக்கவேண்டும் என்று தெலுங்கில் சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம். நடத்துனரின் மீது இருந்த கோபம் முழுவதையும் என்னிடம் திருப்பிவிட்டார்.

உன்னுடைய வேலை என்னவோ, அதைப் பாரு! எனக்கு நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம்! என்று தெலுங்கில் கத்தியதோடு மட்டும் அல்லாமல், இங்கிலீசிலும் பாடம் நடத்துவதற்குத் தொடங்கிவிட்டார். எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை, கையை மடித்து மூஞ்சில் ஒரு குத்துவிடலாம் என்று கையை ஓங்கிய போது அருகில் இருந்த மனைவி என்னை இழுத்து அமர வைத்துவிட்டார். நடத்துனரும், இந்த முட்டா பயலுட்ட நீங்க ஏன் சார்! பேசுறீங்க? விடுங்க, டிக்கெட் எடுக்கலைனா வண்டியை நிறுத்தி இறக்கிவிடப் போகிறேன்! என்றார். இருந்தாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. நடத்துனர் சொல்லியது அனைத்தும் அவனுக்குப் புரிந்திருக்கு, ஆனால் புரியாதது போல் நடித்திருக்கிறான். பாவம்! அந்த நடத்துனர், கடைசிவரை அவனிடம் தவறாக ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ஆனால் தெலுங்கில் எந்த அளவிற்குத் திட்ட முடியுமோ, அந்த அளவிற்கு அவன் அந்த நடத்துனரை திட்டினான். அவன் திட்டிய வார்த்தைகள் எதுவும் நடத்துனருக்குப் புரிய வாய்ப்பில்லை. அவன் திட்டிய‌ வார்த்தைகள் அனைத்தும், அரைகுறையாகத் தெலுங்குத் தெரிந்த எனக்குப் புரிந்ததால் தான், நான் எழுந்து அவனிடம் விளக்கம் கொடுக்க நேர்ந்தது.

நடத்துனர், தெலுங்குக் குடும்பத்தை விட்டுவிலகி, மற்றவ‌ர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்தத் தெலுங்குப் பேசியவரின் மனைவி நான்கு புல் டிக்கெட் கொடுங்க! என்று நடத்துனரிடம் கேட்டார், இப்போதும் அந்தத் தெலுங்குக் காரர் வாயில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

மறுநாள் காலையில் வேளாங்கண்ணிக் கோவிலில், அண்ணனின் குழந்தைக்கு முடி எடுத்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்று கால்களை நனைத்துத் திரும்பியபோது, ஒரு கடையின் முன் கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்தை உற்று நோக்கினேன், நேற்று பேருந்தில் பார்த்த அந்தத் தெலுங்குக்காரர் தான் நடுவில் நின்று கொண்டு ஏதோ கத்திக்கொண்டிருந்தார். கண்டிப்பாக நேற்று நான் செய்ய நினைத்ததை இன்றைக்கு எவராவது ஒருவர் செய்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டுக் கடந்தேன்.

.

6 comments:

kalil said...

"angittu pogathappa anga akka thangachi rendu peru sandai pottutu irukkainga"

Ha ha ha

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அந்த நேரத்தில் பொறுமைதான் எங்கும் தேவை என்பதை உணர்த்தி விட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

நானும் இப்படி சில ஆந்திராக் காரர்களை பார்த்து இருக்கிறேன்!அப்படி என்ன கஷ்டமோ அவர்களுக்கு!

கரந்தை ஜெயக்குமார் said...

சிலர் திருந்தவே மாட்டார்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

tha ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது கோபம் தாங்க முடியவில்லையா...?
.....


.....

நாளால் சரியாகிடும்...!

Related Posts with Thumbnails