Monday, May 30, 2016

இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!

இன்றுடன் ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது, கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் படி என்னை மாற்றியமைத்தது இந்த ஐபிஎல் போட்டிகள். அதுவரையிலும் இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும், எதிர் அணி எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக உலகத்தில் உள்ள அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி ரசிகன். பள்ளியில் விடுமுறை விட்டுவிட்டால் போதும் பேட்டைத் தூக்கி கொண்டு கிரவுண்டுக்கு ஓடி விடுவேன். சோறு தண்ணி இல்லாமல் 10 ரூபாய் பெட் மேட்சுக்கு ஊர் ஊராகச் சுற்றிய வரலாறு கூட உண்டு.

இப்படி எல்லாம் எழுதியவுடன் பெரிய ஒரு ஆல் ரவுண்டரை இந்தியா டீம் இழந்திடுச்சோ! என்று நீங்கள், நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல. பேட்டிங் என்றால் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது தெரியும், பவுலிங் என்றால் பந்தை மாங்கா எறிவது போல் எறியாமல் கையை சுற்றிப் போட தெரியும். எனக்கு அந்த அளவிற்குத் தெரிந்திருப்பதே என்னுடைய டீமிற்கு பெரிய தகுதியாக இருந்தது என்றால் எங்களுடைய டீம் எவ்வளவு பெரிய டீம் ஆக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், வாரம்தோறும் ஊரில் பல இடங்களில் நடக்கும் பெட் மேட்சுகளில் எங்க டீம் போய் அடி வாங்காத இடமே கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருந்துவிட்டு, அடுத்த வாரமும் அடி வாங்கிய டீமிடம் போய் பெட் மேட்சு கேட்போம்.



நான் விளையாடும் போது எட்டு ரூபாய்க்கு ரப்பர் பந்து வாங்குவதே பெரிய கஷ்டம், அதற்கு வாரம் தோறும் தலைக்கு 50 காசு, 1 ரூபாய் என்று டீமில் வசூலிக்க வேண்டும், அந்த 50 காசுக்கும் 1 ரூபாய்க்கும் கடன் சொல்லுறவங்களே டீமில் அதிகம் பேர் இருப்பார்கள். இது இப்படி இருக்க வாரம்தோறும் 10 ரூபாய் பெட் மேட்சு போட்டுத் தோற்பதற்கு எவரிடமும் பணம் இருக்காது, அதற்கு என்று சில புரவலர்களை வைத்திருப்போம். நம்ம புரவலர்கள் எல்லாம் உள்ளுரில் வேலை செய்பவர்களாக தான் இருப்பார்கள். மாலையில் வேலை முடித்து கிரவுண்டுக்கு வரும் புரவலர்களிடம், அண்ண! இந்த வாரம் அந்த ஊர் டீமோட பெட் மேட்சு போடுறோம், தோத்த காசை வாங்குறோம் அண்ண! நீங்க, தான் ஒப்பனிங் பேட்டிங்! கெத்து காட்டுறோம்! மறந்திறாதீங்க! என்று உசுப்பேற்ற சில பேர், நம்ம டீம்ல ரெடியா இருப்பாங்க.

அண்ணா! நீங்களும் நானும் தான் ஒப்பனிங் பேட்டிங் இறங்குகிறோம்! நான் அடிக்கவே மாட்டேன் அண்ணேன், ஸ்டிரோக் மட்டும் வச்சு ஓடி வந்து உங்களுக்கு வாய்ப்பு தருவேன், நீங்க தான் பேட்டை சுத்தணும்! இன்னைக்கு நாம் யாருன்னு, அந்த டீமுக்கு காட்டுறோம்! அண்ண, ஆனா ஒண்ணு, நீங்க பேட்டை சுத்தும் போது மட்டும் பந்தை பார்த்து சுத்துங்க! ஏன்ன, நீங்கப் பேட்டை நல்லா தான் சுத்துறீங்க, என்ன ஒண்ணு பந்து தான் பேட்டில் பட மாட்டேங்குது, ஆனா ஒண்ணு அண்ணே! பந்து மட்டும் பேட்டில் பட்டால் போதும் கிரவுண்டுக்கு வெளிய தான்னேன் என்று தன்னை கலாய்க்கிறானா, பாராட்டுறானா! என்று தெரியாமல் பெட் மேட்சுக்கு வந்து நிற்கும் புரவலர் அண்ணனிடம் பெட் மேட்சுக்கான பணம் வாங்கி விட்டால் போதும், “ஒப்பனிங் பேட்டிங் நீங்க தான்!!” என்று சொன்னவன் அவர் கண்ணிலிருந்து காணாமல் போயிருப்பான்.

இப்ப மற்றொருவன் வந்து, அண்ணா! நாம தான் டாஸ் ஜெயித்திருக்கிறோம், பெட் மேட்சுக்கு காசு வேற, நீங்க தான் கொடுத்து இருக்கிறீர்கள், எதிரணியில் பவுலிங் நல்லா போடுறவன் பேரை சொல்லி, அவன் வேற முதல் ஓவரே பவுலிங் போட இருக்கிறான், உங்க விக்கெட் போச்சுன்னா டீம்ல எவனும் அப்புறம் ஒழுங்க ஆட மாட்டன், நீங்க தான் அண்ணே! மேட்சை நடத்தணும், வாண்ணே! வந்து அம்பயரா நில்லுன்னு! என்று அடிக்கிற வெயிலுல கொண்டு மண்டைக் காய விட்டுடுவானுங்க.

ஊர்ல விளையாடும் போது அம்பயர் எல்லாம் சும்மா தான், பேட்டிங் பண்ணுறவன் சொல்லுறது தான் அம்பயர் சொல்லுவார், பேட்டிங் பண்ணுறவன் வைடு என்று சொன்னால் அம்பயர் வைடு கொடுப்பார், விக்கெட் இல்லையென்றால் விக்கெட் இல்லை, எதிரணியில் உள்ளவன் சண்டை போடுவது மட்டும் அம்பயரிடம், பெட் மேட்சில் அம்பயராக நிற்பதற்கும், தெருவில் குழாயடியில் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

அம்பயரா நிற்கும் புரவலர் அண்ணன், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், நான் போகலாமா என்று டீம் நண்பர்களை பார்த்தால், அண்ணே! நல்ல டார்கெட் வைக்கணும், இப்ப ரன்ரேட் ரெம்ப கம்மிண்ணேன், நீங்க வேற பெட் மேட்சுக்கு பணம் கொடுத்து இருக்கீங்க! என்று அப்பப்ப பீதியை காட்டி, நாம ஜெயிக்கணும் அண்ணே! அவன் போகட்டும், இவன் போகட்டும், கடைசி ரெண்டு ஓவர் அண்ணேன், நீங்க தான் பேட்டை சுத்துறீங்க்க, நாலு சிக்சர் போகும், ரன்ரேட்டும் நல்லா இருக்கும், என்று வாயிலேயே வடை சுட்டுவிட்டு கடைசி வரைக்கும் பேட்டை கையில் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி ஊர்க் கதை பேசினால் அப்படியே நீண்டு விட்டுப் போகும், நான் சொல்ல வந்தது சொல்ல முடியாமல் போகும். பேச்சுலராக சவுதியில் இருக்கும் போது, என்னுடன் ப்ராஜெக்ட்க்கு வந்த மூன்று பேருடன் சேர்ந்து தங்கியிருந்த வில்லாவிற்குள் கிரிக்கெட் விளையாடுவோம். நான்கு பக்கமும் இரண்டு ஆள் உயரத்திற்குச் சுவர் இருக்கும், அதற்குள் தான் நாங்கள் நான்கு பேரும் வெளியில் தூக்கி அடித்தால் அவுட் என்று வைத்து விளையாடுவோம். நாங்கள் அப்போது தான் முதல் முறையாகச் சவுதிக்கு வந்திருந்தோம், வெளியில் யாரையும் அறிமுகம் கிடையாது, கொஞ்ச நாட்களில் எங்கள் ப்ராஜெக்ட்லில் ஒரு சிறிய பகுதியை அவுட்சோர்சிங் கொடுத்திருந்தோம், அந்த அவுட்சோர்சிங் கம்பெனிலிருந்து இரண்டு மலையாளி நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த மலையாளி நண்பர்களும் லீவு நாட்களில் எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள், அவர்கள் இருவரும் சவுதி வந்து நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். அதனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள், நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவிற்கு பக்கத்தில் ஒரு காலியிடம் இருப்பதாகவும், அதில் கிரிக்கெட் விளையாடலாம், பலர் லீவு நாட்களில் விளையாடுவார்கள் என்றும் அந்த மலையாளி நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் எங்கள் நால்வரையும் வற்புறுத்தி அந்தக் காலியிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடைய நண்பர்கள் சிலரும் இருந்தார்கள், பவுலிங் போடுவதற்கு ஒரு தளம் போல் போட்டு விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. நான்கு சுவருக்குள் விளையாடிய எங்களுக்கு அந்த இடத்தில் விளையாடியது ரெம்பவே ஜாலியாக இருந்தது.



மறு வாரமும் அந்த மலையாளி நண்பர்களுடன் விளையாட அந்தக் காலியிடத்திற்கு சென்றோம், ஆனால் அன்று அந்த இடத்தில் நமது பக்கத்து நாட்டு மக்கள் (பாகிஸ்தான்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். மலையாளி நண்பர்கள் அவர்களிடம் போய் பேசினார்கள், நாங்கள் இப்ப தான் விளையாட வந்தோம், விளையாடி முடிப்பதற்கு ரெம்ப நேரம் ஆகும், உங்களுக்கு விளையாடனும் என்றால் வாருங்கள்! ஒரு மேட்சு போடலாம் என்று அந்தப் பக்கத்து நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று மலையாளி நண்பர்கள் எங்களிடம் வந்து சொன்னார்கள். பின்னர் அவர்களே இவங்க! கூட விளையாட வேண்டாம் நாம அடுத்த வாரம் வந்து விளையாடலாம் என்று சொன்னார்கள், கிரகம்! என்னோட வாயிதான் சும்மா இருக்காம, ஊர்லயே பெரிய பெரிய டீம் கூடவே விளையாடி ஜெயித்துருக்கோம், இவங்க என்ன பெரிய பிசாத்து டீம், வாங்க ஒரு மேட்சு போடுவோம் என்று நண்பர்களை உசுப்பேற்றினேன்.

மலையாளி நண்பர்கள் என்னிடம் மட்டும், மலையாளத்தில் பேசுவார்கள், அவர்கள் என்னிடம், "வேண்டாம் ஸ்டீபன்! நமக்கு இவிட பந்து பொறுக்கும் சோலி மாட்டும் தான் கிட்டும்" என்று சொன்னார்கள், நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், என்னுடைய நண்பர்களிடம் வாங்க விளையாடுவோம் என்று சொல்லியது தான் தாமதம், பக்கத்து நாட்டு மக்கள் டாஸ் போட அழைத்தார்கள், போட்ட டாஸில் அவர்கள் தான் ஜெயித்தார்கள், பேட்டிங் என்று சொல்லி, இரண்டு பேர் பேட்டிங் இறங்கினார்கள். மலையாளி நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

நம்ம நண்பர் ஒருவர், கொஞ்சம் நல்லா பவுலிங் பண்ணுவார்கள், அவரை தான் ஓபனிங் பவுலிங் போட அழைத்தோம், பந்தைப் பக்கத்து நாட்டு மக்கள் தான் கொடுத்தார்கள், டென்னிஸ் பாலில் செல்லோடேப் சுற்றி இருந்தார்கள், அதை வைத்துத் தான் விளையாட வேண்டும் என்று சொன்னார்கள், நார்மலா நாம விளையாடும் டென்னிஸ் பால் கொஞ்சம் கனமாக இருக்கும், இது ரெம்ப லைட் வெயிட், சரி என்று சொல்லிக்கொண்டு பவுலிங் போட ரெடியானோம்.

நாங்கள் ஆறு பேரும் பில்டிங் நிற்க தயாரானோம், மிட்விக்கெட், மிட்ஆன், மிட்ஆப் என்று நின்று கொண்டிருந்த எங்களை, பேட்டிங் பண்ணுவதற்கு நின்று கொண்டிருந்த பக்கத்து நாட்டுக்காரர் கோ லாங்! கோ லாங்! என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை, இவன் ஏண்டா பில்டிங் செட் பண்ணுறான், நாம் தானே பீல்டிங் செட் பண்ணனும்! இவனுக்கு என்ன வந்தது? என்று அவன் சொல்வது புரியாது போலவே நிற்க, என்னிடம் வந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு சிக்ஸ் லைனில் நிற்க வைத்தான். நான் அவனிடம் "எனக்குத் தெரியும் போடா, போய் ஒழுங்கா பேட்டிங் புடிடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு திரும்பவும் வந்து மிட்ஆப் ல் வந்து பீல்டிங் நின்றேன், அவன் திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று சொன்னான், எல்லாம் எனக்குத் தெரியும், பேட்டிங் புடிடா என்று சொல்லிக்கொண்டே நண்பரை பவுலிங் போடச் சைகை காட்டினேன்.

பேட்டிங் பண்ணுவதற்க்கு நின்ற பக்கத்து நாட்டுக்காரர் ஸ்டைல் ஒரு மார்க்கமாக இருந்தது, நம்ம ஊரில் டீம் பிரிக்கும் போது கடைசிவரை எவரும் எடுக்காமல் ஒருத்தனை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, கடைசியில் எடுத்து டபுள் சைட் பேட்டிங்டா நீ! என்று நாசூக்காகப் போடுவோம் தானே, அவன் பேட்டை எவ்வாறு பிடிப்பானோ! அதுபோல் தான் பக்கத்து நாட்டுக்கார ஓபனிங் பேட்ஸ்மேன் பேட்டைப் பிடித்திருந்தான். நம்ம நண்பர் ஓடி வந்து முதல் பாலை போட்டார், போட்டது தான் தெரியும், பந்து பேட்டில் பட்டு சிக்ஸ் லைன் தாண்டி விழுந்தது. பந்து விழுந்த திசை சரியாக என் கையை பிடித்துக் கொண்டு பக்கத்து நாட்டுக்காரர் கொண்டு விட்ட இடம். இப்போது அந்தப் பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மேன் சிரித்துக்கொண்டே "மேர போலேனா! போலேனா! என்றான்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும்! போடா டேய்! ஒரு பால் ஏதோ குருட்டாம் போக்கில் பேட்டில் பட்டு சிக்ஸ்ர் போயிட்ட நீ பெரிய ஆளா! ஓடிப்போய் மணலில் அழுந்தியிருந்த பந்தை எடுத்து வந்து, பவுலிங் போடும் நண்பரிடம் கொடுத்து, அடுத்த பாலை போடு நண்பா! என்று சொல்லிவிட்டு திரும்பவும், மிட்ஆப் பொசிசனில் பீல்டிங் வந்து நின்றேன், திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மென் கத்தினான், இப்போதும் எல்லாம் தெரியும் நீ மூடு! என்று சைகை செய்துவிட்டு பவுலிங் போட சொன்னேன்.

இந்தப் பந்தும் சிக்ஸர் பறந்தது, நண்பரும் எல்லா வியூகத்திலும் பந்தை போட்டார், பந்து மிட் ஏரியாவை தாண்டி தான் விழுந்தது, அடுத்த ஓவரே நான் பவுலிங் போட வந்தேன், நம்ம பாலும் நாலு திசைக்கும் பறந்தது, எவ்வளவு தான் ஓடி வந்து போட்டாலும் பந்து ஸ்லோவாக தான் போனது, லைட் வெயிட் பந்தில் ரெம்ப பாஸ்ட்டா வீச முடியவில்லை. அப்புறம் என்ன? மொத்தம் எட்டு ஓவர் கதறக் கதற ஓட விட்டார்கள், பந்தைப் பொறுக்குவதற்கு நாலு திசையிலும் ஓடியே களைத்திருந்தோம். இப்போது தான் மலையாளி நண்பர்கள் சொன்ன "சோலி" யும், பக்கத்து நாட்டுக்காரர் சொன்ன "கோ லாங்!" க்குமான அர்த்தம் புரிந்தது.

எட்டு ஓவரில் ஒரு ரன் அவுட் தவிர வேறு எந்த விக்கெட்டும் எடுக்க முடியவில்லை, ரிட்டய்ர்டு ஹெர்டு முறையில் ஒருவர் பின் ஒருவர் வந்து பந்தை துவம்சம் செய்தார்கள். இப்போது தான் அப்ரடியின் சிக்ஸ்ர் மகிமை புரிந்தது. எல்லோரும் நல்ல ஹேண்ட்பவர் வைத்திருக்கிறார்கள், அவர்கள் பேட்டில் பட்டால் பந்து தெறிக்கிறது. ஒருவழியாக பவுலிங் முடித்து பேட்டிங் பிடித்தால் இன்னும் கொடுமையாக இருந்தது, நாங்களும் அதே பந்தில் தான் பவுலிங் போட்டோம், ஆனால் அவர்கள் வீசும் பந்து சொயிங்! சொயிங்! என்று இடுப்புக்கு வந்தது. எப்படியோ மூணு ஓவர் வரை மொத்த விக்கெட்டும் சமாளித்ததே பெரிய விசயம்.

நான்காவது ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்துவிட்டு நொந்து நூடில்ஸ் ஆகி நண்பர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும் போது, எங்களுடன் விளையாடிய‌ பக்கத்து நாட்டுக்காரர் ஒருவன் வந்து "அடுத்த வாரமும் இதே டைம் நாங்க இங்க தான் விளையாட வருவோம், கண்டிப்பா வாங்க!! என்று எங்களிடம் கைக்கொடுத்தார். எதற்கு வைச்சு செய்யவா? அதான் செஞ்சுட்டீங்களே! இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!


.

0 comments:

Related Posts with Thumbnails