Wednesday, June 29, 2016

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் நடந்த சுவாதி படுகொலை மிகக் கொடூரமானது, கண்டிப்பாக இந்தக் கொலையை செய்தவன் மனித தன்மை சிறிதும் இல்லாதவனாகத் தான் இருப்பான். அவனுக்கு எத்தகையைக் கொடூர தண்டனையைக் கொடுத்தாலும் அது இந்தக் கொலைக்கு ஈடாகாது. இது இப்படி இருக்க இந்தக் கொலையை வைத்து சமூக வலைத்தளங்களில் சிலர் நடத்தும் அரசியலும், கண் துடைப்பு ஒப்பாரிகளும் தாங்க முடியவில்லை.

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

அவர்கள் பாடிய பீப் பாடல்களின் நீட்சிகள் தான் இந்தச் சுவாதியின் கொலையும், வினுபிரியாவின் தற்கொலையும் என்று கூடவா இந்த மர மண்டைகளுக்குப் புரியவில்லை. யாருக்காகக் கொடி பிடிக்கிறோம், எதற்காகக் கொடி பிடிக்கிறோம் என்று கூட தெரியாமல் எவனோ ஒருவன் வெட்டி ஒட்டிய வால்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடியதற்குச் சிம்பு மற்றும் அனிருத் இருவரில் ஒருவரோ, அவர்களுடைய குடும்பத்தினரோ இதுவரையிலும் ஒரு சிறு துளி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தவறுகள் செய்வது இயல்பு, ஆனால் அதைத் திருத்தி கொள்ள முயல்வதும், நடந்த தவற்றுக்கு வருத்தம் தெரிவிப்பதும் தான் பண்பட்ட மனிதர்களின் செயல்களாக இருக்கும். ஆனால் இந்தத் தற்குறிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, மாதர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்க இந்த இருவர் செய்த ஈனச் செயலுக்கு இலக்கணம் கற்பிப்பது தான் கொடுமையாக இருக்கிறது.

தன்னுடைய மனைவியையோ, சகோதரியையோ எந்தவொரு பொது தளங்களிலும், சமூக தளங்களிலும் இயங்க அனுமதிக்காத காவாளி கூட்டம் தான் இன்றைக்கு மாதர் சங்கங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறது. இது கூட வேண்டாம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூடும் கூட்டங்களுக்கு கூட தன்னுடைய வீட்டிலிருக்கும் பெண்களை அனுமதிக்காத கூட்டம் தான் இன்று ஏதோ ஒரு சில பிரச்சனைகளுக்காவது குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்பைப் பார்த்து ஊளையிடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் செயல்படும் ஒரு சில‌ பெண்களையே இந்த ஆணாதிக்க மனநிலை கொண்ட கூட்டம் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலைத்தளங்களில் கூட பெண்களுக்கு எதிராக எழுதியிருக்கும் பல பதிவுகளை நீங்கள் பார்க்கலாம், முன்பு போல் பல பெண்கள் இந்தத் தளங்களில் செயல்படாமல் முழுமையாக விலகி இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் பெண்களின் முன் இருப்பது மிகப் பெரிய சவால். அவர்களுக்கு ஆதரவாகக் கூட நீங்கள் எழுத வேண்டாம், அவர்களைக் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.

தன்னைப்போல் ஒரு பிறவி தான் பெண், இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் அனைத்து உரிமையும் அவளுக்கும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள அல்லது அந்த உரிமையை அவள் எடுத்துக் கொள்ளும் போது சகித்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் அந்த ஆணாதிக்க மனோபாவம் தான் இப்படியான செயல்களை செய்ய வைக்கிறது.

தன்னை ஒரு பெண் விரும்பா விட்டால், அவனவனுக்கான திறமை மற்றும் தகுதிக்கேற்ப அவளைத் தாக்குவதற்கு கீழ்கண்ட வழிகளில் ஆயுதங்களைத் தூக்குகிறான்.

*அவளைத் திட்டி பாடல்கள்/கவிதைகள் எழுதுவது, எழுத முடியாதவன் கை கொட்டி அந்தப் பாடல்களை/கவிதைகளை ரசிப்பது.. 

*அவளுடைய நடத்தைக்குக் களங்கம் விளைவிக்க முயல்வது, சமூகத்தில் அவளின் ஒழுக்கத்தைப் பற்றி புனைவு கதைகள் கட்டுவது..

*சமூக வலைத்தளங்களில் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பகிருவது, அதை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டுவது..

*அமிலத்தை எடுத்து அவளின் முகத்தில் வீசுவது இல்லையென்றால் கத்தி எடுத்து படுகொலை செய்வது..

எப்படியான மனநிலையில் நாம் வாழ்ந்து கொண்டியிருக்கிறோம் என்று சுய சிந்தனை செய்து கொள்வது நமக்கும் நம்முடைய தலைமுறைக்கும் நலன் பயக்கும். காரணம் நீ வானத்திலிருந்து குதித்து வந்தவன் அல்ல, உன்னுடன் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கும் இன்னொரு பிறவியை அழிக்கத் தான் மேலே சொல்லியிருக்கும் ஆயுதங்களை எடுத்து வீசுகிறாய்.



(பழைய திருவிளையாடல் பட பாலைய்யா வசனம் ஞாபகம் வரலாம்)

ஆமா, யாரோ பண்டிதராம்!
என்னை சொல்லிட்டு இவன் உளறுகிறான், பண்டிதர் இல்ல, பாகவதராம்! ஹி ஹி !!
இரண்டு பயலுவளும் உளறுகிறார்கள்!
அப்படியா! நீ திருத்திச் சொல்லு!
பண்டிதரும் இல்ல ! பாகவதரும் இல்ல ! ஒய் ஜி மகேந்திரன் னு ஒருத்தரு!
யாரவர்?
இந்த கலா மண்டபத்துல நாடகத்துல எல்லாம் நடிப்பாருல்ல!
வேதனை! வேதனை! இந்த படு கொலையைக் கண்டிக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா?
பழைய படங்களில் கூடச் சோடா புட்டி கண்ணாடி போட்டுவிட்டு, கைவிரலைச் சப்பி கொண்டே நடிப்பார் அவரு தானுங்க!
என்னடா இது! இந்தத் தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை! இந்தப் படுகொலையை பத்தி கருத்து கேட்க வேற ஆளே கிடைக்கவில்லையா!
என்னங்க செய்யுறது! மேக்கப் போட்டு திரையில் வந்துட்டா, சமூகத்துக்குக் கருத்து சொல்லித் தானே ஆகவேண்டும்!
ஆமா! ஆமா! கண்டிப்பா சொல்லித்தான் ஆகவேண்டும்!
சமூகத்தில் அநியாயம் நடந்தால் அப்படியே பொங்கிடுவார்!
ஓ அப்படியா! அந்த பீப் பாட்டுக்கு இசை அமைத்த, இவருடைய பங்காளி பையன் அனிருத் பற்றி என்ன பொங்கி இருக்காரு?

ஙே! ஙே! ஙே! ஙே! ஙே!

பாலா இருந்தால் பொங்கும்! பச்சை தண்ணி எப்படிப் பொங்கும்?


.

2 comments:

ஸ்ரீமலையப்பன் said...

ஹ்மம்ம்மம்ம்ம்ம்

Anonymous said...

And dhanush too

Related Posts with Thumbnails