Tuesday, June 10, 2014

டிரைவிங் லைசென்ஸ்_எதற்காக எட்டு போட வேண்டும்?

ரெம்ப வருடங்களாக‌ வீட்டில் அம்மாவின் பாதுகாப்பிலிருந்த டிரைவிங் லைசென்ஸ் எப்படியோ தொலைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக ஊருக்கு சென்றவுடன் மட்டும் லைசென்ஸின் ஞாபகம் வரும், உடனடியாக இரண்டு நாட்கள் அதற்கான‌ வேலையாக அலைவேன். பின்பு அதைத் தொடர்ந்து கவனிப்பதில்லை. உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் நீங்கள் அதை முதலில் போலிசில் புகார் செய்யவேண்டும். பின்னர் அவர்கள் கொடுக்கும் புகார் காப்பியை கொண்டு சென்று ஆர்.டி.ஓ ஆபிஸில் புதிய லைசென்ஸ் காப்பி வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாகச் சென்றால் உங்களைச் சுற்றலில் விட்டுவிடுவார்கள். ஏதாவது டிரைவிங் ஸ்கூல் முலமாகச் சென்றால், கொஞ்சம் செல‌வு ஆகும், ஆனால் எளிதாகக் காரியத்தை முடித்துவிடலாம். நானும் ஒரு டிரைவிங் ஸ்கூலின் மூலமாகத் தான் ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்.

தொலைந்த டிரைவிங் லைசென்ஸின் எண் கூட என்னிடம் இல்லை. நான் படித்த காலேஜில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் லைசென்ஸ் எடுத்திருந்ததால் அந்தக் காலேஜில் உள்ள ஹெச்.ஓ.டியின் சிபாரிசில் சென்று பழைய ரெக்கார்டுகளைப் புரட்டி, ஒரு வழியாக என்னுடைய லைசென்ஸ் எண்ணை வாங்கிக் கொண்டேன். இந்த லைசென்ஸை எண்ணை கொண்டு சென்று போலிஸில் புகார் கொடுத்து, அதன் காப்பியை வாங்கிக் கொள்ள வேண்டும். எந்தப் போலிஸ் அலுவலகத்திலும் நீங்கள் கொடுக்கும் புகாரை உடனடியாக வாங்கிவிட மாட்டார்கள். முதலில் உங்களின் பிரச்சனையைப் போலீசார் காதுக்கொடுத்துக் கேட்பதற்கே, நீங்கள் கிடா வெட்ட வேண்டும். இல்லையென்றால் அரசியல் புள்ளிகள் அல்லது போலிஸ் அலிவலகத்தில் வேலையில் இருப்பவர்கள் என்று எவராவது உங்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும்.

எனது குடும்பத்திலிருந்து இரண்டுபேர் போலிஸ் வேலையில் இருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு ஸ்டேசன்களில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமிருந்தும் நான் இரண்டு புகார்களைப் பதிவு செய்து அவற்றின் காப்பியை, டிரைவிங் ஸ்கூலில் வாங்கி வந்துக்கொடுத்ததோடு சரி. இரண்டு முறையும் ஆறு மாதத்திற்கு மேல் டிரைவிங் ஸ்கூல் பக்கம் என்னால் தலையைக் காட்டவில்லை. ஒரு புகார் காப்பியானது ஆறு மாதம் வரை தான் செல்லுபடியாகும். அதற்குமேல் என்றால் இன்னொரு புதிய காப்பியை போலிஸ் ஸ்டேசனில் சென்று வாங்க வேண்டும். நான் இரண்டுபேரிடமும் வாங்கிய, புகார் காப்பியை இப்படித் தான் வீணாக்கியிருந்தேன். என்ன தான் உறவினர்கள் என்றாலும், நம்முடைய சோம்பலுக்குத் திரும்பவும் அவர்களைத் தொந்தரவு செய்ய மனம் ஒப்பவில்லை. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் மற்றொரு யோசனையைக் கொடுத்தார். பழையதை தேடுவதற்குப் பதிலாகப் புதிதாக அப்ளை செய்து வாங்கிவிடலாம். இந்தமுறை ஒரு நாள் வந்து பழகுநர் உரிமம்(Learner's license) போட்டுவிட்டு போங்க, அடுத்தமுறை வரும் போது டிரைவிங் லைசென்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்றார். எனக்கும் அது சிறப்பானதாகவே தோன்றியது. கடந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது பழகுநர் உரிமம் போட்டுவிட்டு வந்திருந்தேன்.

இந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் படலம் ஆரம்பமாகியது. நான் சென்றிருந்த டிரைவிங் ஸ்கூலிருந்து வாரத்தின் வெள்ளிக்கிழமைதோறும் மார்த்தாண்டம் பக்கத்திலிருக்கும் ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு டெஸ்டுக்கு செல்லுவார்கள். நான் ஊருக்கு வாரத்தின் செவ்வாய்கிழமையே வந்துவிட்டேன். ஊருக்கு சீக்கிரமாக வந்தற்குக் காரணம் உண்டு, காலேஜில் படிக்கும் போது டிரைவிங் லைசென்ஸுக்காக ஜீப்பை ஓட்டுவதற்குக் கற்று கொண்டதோடு சரி. அதன்பிறகு எந்த வண்டியையும் நான் ஓட்டியது இல்லை. அதனால் இரண்டு நாட்களாவது டிரைவிங் ஸ்கூலில் இருக்கும் வண்டியை ஓட்டி பழகி கொள்ளலாம் என்று சீக்கிரமாக வந்திருந்தேன். புதன் மற்றும் வியாழன் இரண்டு நாட்கள் ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குக் கொடுத்தார். என்னிடம் கொடுத்தார் என்று சொல்லுவதைவிட அவரே ஓட்டினார் என்று தான் சொல்லவேண்டும். இரண்டு நாட்களில் என்னால் எல்லாவற்றையும் சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் நான்றாகத் தெரிந்தது. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் கொடுத்த தைரியம் மற்றும் ஹைதிராபாத்திற்கு மீண்டும் ஒரு வாரத்தில் திரும்ப வேண்டும் என்ற காரணமும் இருந்ததால் வெள்ளிக்கிழமை டெஸ்டுக்கு நேரடியாக என்னுடையை டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.

மார்த்தாண்டம் செல்லும் மெயின்சாலையிலிருந்து இடதுபக்க‌மாகச் செல்லும் ஒரு கிளைச் சாலையில் தான் ஆர்.டி.ஓ ஆபிஸ் இருக்கின்றது. அந்தக் கிளைச்சாலையில் இரண்டு பக்கங்களிலும் புதிதாக வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வேண்டிய‌ டூவீலரும், எப்சிக்காகக் காத்திருக்கும் வாகனங்களும் தான் அடைந்திருந்தது. நான் வருவதற்கு முன்பாகவே டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் வந்திருந்தார். அவருடன் இன்னும் சில பேரும் வந்திருந்தார்கள். என்னிடம் அவர், நீங்கள் டூவீலரில் எட்டுப்போட்டுப் பார்க்க வேண்டுமானால் சென்று பழகிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் சாதரணமாக, டூவீலர் ஓட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை !என்றும் காரைத் தான் எப்படி ஓட்டிக்காட்டப் போகிறேனோ! என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே பயப்படாம ஓட்டுங்க! என்றார்.

டூவீலர் லைசென்ஸ் எடுக்க வந்திருந்த பெண்கள் பலரும் சாலையில் வெள்ளை நிறப் பெயின்டில் வரையப்பட்டிருந்த எட்டில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவருக்கும் சரியாக ஓட்டுவதற்குத் தெரியவில்லை. பெண்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் இடைவெளியில், சில பையன்களும் வண்டியில் எட்டைச் சுற்றி வந்தார்கள். அவர்களும் வரைய பட்டிருந்த எட்டில் திரும்பும் இடங்களில் காலை ஊன்றினார்கள். எல்லோரும் ஓட்டுவதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். சிறிது நேரத்தில் கையில் ஒரு பெரிய பேப்பர் கட்டுகளுடன் ஆர்.டி.ஓ வந்தார். யாரெல்லாம் டூவீலர் லைசென்ஸ் எடுக்க வேண்டுமோ, அவர்கள் எல்லாம் வண்டியை வரிசையாக நிறுத்திவிட்டு இப்படி ஓரமாக வாருங்கள் என்று அழைத்தார்.

கையில் வைத்திருந்த பேப்பர் கட்டுகளை எங்களை அழைத்துவந்திருந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரின் பெயரையும் வாசித்துக் கொடுக்கச் சொன்னார். என்னுடைய பேப்பரும் எனது கைக்கு வந்தது. ஆர்.டி.ஓ அலுவலகம் இருக்கும் சாலையின் இரு பக்கமும் ரப்பர் மரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பலாக நின்ற எங்கள் அனைவரையும் அந்த ரப்பர் மரங்களுக்குள் வரிசையாக நிற்கவைத்து ஆர்.டி.ஓ சாலையின் மேல் நின்றுகொண்டு எங்களுக்கு வகுப்பு எடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் சொன்ன வார்த்தை இதுதான். இந்த அலுவலகத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இருந்தோம், ஒருவர் பணி மாற்றலாகி சென்றுவிட்டார், அவருக்குப் பதிலாகப் புதிதாக எவரும் இதுவரை வரவில்லை. நான் ஒருவன் மட்டுமே, இரண்டுபேரின் வேலையைச் சேர்த்துப் பார்க்கிறேன். ஒருவருக்கு முப்பதுபேர் என்ற வீதம் தினமும் அறுபது லைசென்ஸ் கொடுப்போம். இப்போது நான் ஒருவன் மட்டுமே ஐம்பதிலிருந்து, அறுபது லைசென்ஸை பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே சரியாக ஓட்டவில்லையென்றால் எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் பெயில் பண்ணிவிடுவேன், ஆனால் சரியாக ஓட்டினால் எல்லோருக்கும் பாஸ் போட்டு லைசென்ஸ் கொடுத்துவிடுவேன் என்றார்.

லைசென்ஸ் எடுக்க வருகிறீர்கள் என்றால் சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சிலவற்றைப் பட்டியலிட்டார். அவைகள் ஒன்றும் நமக்குப் புதியவை இல்லை. இருந்தாலும் அவருடைய வாயால் கேட்கும் போது சுவரஸ்யமாகவே இருந்தது.

#) அடுத்தவன் சைடு ஸ்டேண்டை எடுக்காமல் வண்டியில் சென்று கொண்டிருப்பான், அதைச் சொல்லுவதற்காக அவன் பின்னால் வண்டியில் சென்றவன் விபத்தில் அடிபடுவான். முதலில் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும், பின்னர் அடுத்தவனுக்கு உதவவேண்டும். 

#) டூவீலரில் செல்லும் போது வேகத்தின் அளவைக் குறைத்தாலே, பாதி விபத்துக்களைக் குறைக்க முடியும். 

#) நமது நாட்டின் சாலைகளுக்கு ஏற்ப டூவீலர்கள் தயரிக்கப்படவில்லை, சிசி அதிகமாக இருக்கும் வண்டிகளை வாங்குவதில் கல்லூரி மாணவர்களின் ஆர்வம் காட்டுகிறார்கள். 

#) மொபைல் போனில் பேசும் எண்களின் ஹிஸ்டரியை அழிக்கமுடியாத படி எதாவது ஒரு தம்பி, புதிய‌ சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்தால் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எவனும் தனது மனைவிக்குத் தெரியாமல் அடுத்தவன் மனைவிக்குப் போன் பண்ண மாட்டான், வீட்டிற்குத் தெரியாமல் பிள்ளைகள் காதலனுக்கோ, காதலிக்கோ போன் பேச மாட்டார்கள். இந்த மறைமுகப் பேச்சுகள் அனைத்தும் வாகனங்களை ஓட்டும் போது தான் செய்கிறார்கள் அதனால் தான் பல விபத்துகள் நடக்கின்றது என்றார்.

மேலும் சில புள்ளிவிபரங்களையும் சொன்னார்.


கடந்த மாதம் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17. மொத்தமாக ஆறுபேர், ஏழுபேர் என்று விபத்துகளில் உயிரிழ‌ப்பவர்களின் செய்திகள் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இதுபோல் சின்ன சின்ன டூவீலர் விபத்துக்களில் உயிரிழக்கும் ஒன்று, இரண்டுபேர்களின் செய்திகள் பெட்டி செய்தியாக முடங்கிவிடுகிறது. அதனால் தான் நமது மாவட்டத்தில் நடக்கும் விபத்து செய்திகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்ற உண்மையை விளக்கினார்.

இப்போது எதற்காக எட்டு போட வேண்டும்? ஓர் ஏழு போடலாம் அல்லது ஆறு போட்டுப் பார்க்கலாம், ஏன்! எட்டு மட்டும் தான் போட்டுக் கண்பிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள்? என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். நானும் எனது பங்கிற்கு ஒன்றை சொல்லிவைத்தேன். இந்த எட்டில் எளிதாக ஓட்டி பழகினால், நமது கிராமங்களில் உள்ள குறுகலான‌ வளைவு நெளிவான சாலைகளில் எவ்விதப் பயமும் இல்லாமல் ஓட்டலாம் என்றேன். வெளிநாடுகளில் எல்லாம் நேரான பெரிய சாலைகள் தானே இருக்கிறது அங்கும் ஏன்! இந்த எட்டுப் போடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றார். நான் அவரைப் பார்த்து வழிவதை தவிர வேறு பதில் என்னிடமில்லை.



அரசின் எந்த ஒரு துறையாக இருந்தாலும், அவைகளால் நடத்தப்படும் வகுப்புகளுக்குத் தேர்வு என்பது ஒன்று வைக்கப்படுகிறது. அவைகளுக்கு ஒரு தகுதி மதிப்பெண் வைக்கப்படுகிறது. அதைப்போல் தான் போக்குவரத்துத் துறையால் நடத்தப்படும் வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கும் தேர்வுக்கு எட்டுப் போட்டு கண்பிக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்து உள்ளது. இந்தமுறையானது பல உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. நாமும் அந்த முறையைத் தான் பின்பற்றுகிறோம்.

ஒருவர் டூவீலரை சரியாக ஓட்ட‌ வேண்டுமானால் பேலன்ஸ் பண்ணுவதற்குத் தெரியவேண்டும், காலை எங்கும் ஊன்றாமல், கைகளால் சரியாக‌ சிக்னல்களைக் கண்பித்து ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முழுமையான எட்டில் நான்கு சிக்னல்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு வரைய பட்டிருக்கும் எட்டில் இரண்டு சிக்னல்கள் தான் இருக்கிறது, குறைந்தபட்சம் காலை ஊன்றாமல் இரண்டு சிக்னல்களை எவரெல்லாம் சரியாகச் செய்கிறீர்களோ, அவர்களுக்கு நான் லைசென்ஸ் கொடுப்பேன், இல்லாதவர்களுக்குத் "பெயில்" என்று போட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். ஆண்கள் எவரும் சிக்னல் காண்பிக்கப் போவது இல்லை, அதில் தான் அதிகமான பேர்கள் தவறு செய்வார்கள், முக்கியமா! பெண்களுக்குத் தான்! என்று பெண்கள் பக்கம் திரும்பி, ஒருத்தரும் பாஸ் ஆகப் போறது இல்ல, எல்லாரும் இந்த ஓடைக்குள் தான் வண்டியை கொண்டு விடுவத‌ற்கு போகிறீர்கள்! காலை ஊன்றாமல் ஓட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு அடுத்த வாரம் வேண்டுமானாலும் வாருங்கள்! என்றார்.

அவரின் இந்த மிரட்டலே நான் உட்பட, பாதிபேருக்குப் பீதியைக் கிளப்பியிருந்தது!

எப்படி இந்த எட்டில் டூவீலர் ஓட்ட வேண்டும், சிக்னல் செய்யவேண்டும் என்பதை, உங்களை அழைத்துவந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்று அவர் பின்னால் நின்றவர்களைத் திரும்பிப் பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. யோய் எங்கைய்யா ஓடிப் போனீங்க?.. வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டுமென்றால் எவரும் வ‌ராதீங்க! அப்புறம் "பெயில்" என்று போட்டால் மட்டும் என்னிடம் வந்து நில்லுங்க!.. என்று கோபமாகத் திட்டினார். எங்களுடன் கூட்டத்தில் கலந்து நின்ற சிலருடைய பெயரை சொல்லி அழைத்தார். அவர்களை டூவீலர் ஓட்டி காட்டுவதற்குச் சொன்னார்.

டிரைவிங் ஸ்கூல் வைத்திருந்த பெண் ஒருவரையும் ஓட்டி காண்பிக்கச் சொன்னார். அவர் சரியாக ஓட்டினார். ஆனால் சிக்னல் செய்யவில்லை. அவரைப்பார்த்து ஆர்.டி.ஓ பெண்களுக்குப் பேலன்ஸ் பண்ணும் திறன் குறைவு, அதனால் அவர்கள் சிக்னல் செய்யவிட்டால் "மன்னிச்சு" என்றார்.

எவருக்காவது டவுட் இருக்கா? என்றார். இன்னும் ஒருமுறை வேண்டுமானாலும் அவர்களை ஓட்டச் சொல்லி காண்பிக்கிறேன், இத‌ற்கு அப்புறமும் சிக்னல் செய்யாமல், காலை தான் ஊன்றுவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ரெம்ப ஸ்டிக்ட் ஆபிஸர், இப்போதே தெரிந்துவிட்டது, காரை ஓட்டும் போது எனக்கு கிடைக்கப் போகும் ரிசல்ட். முக்கால் மணிநேரத்திற்கும் மேலாக வகுப்பு எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எவரெல்லாம் காலையிலேயே வந்து அந்த எட்டு வரையப்பட்டிருந்த இடத்தில் ஒருமுறை ஓட்டி பார்த்து கொண்டனரோ, அவரெல்லாம் காலை ஊன்றாமலும், சிக்னல் செய்தும் பிழைத்துக்கொண்டார்கள். என்னைபோல் டூவீலர் தானே! அதெல்லாம் நல்லாவே ஓட்டிடுவேன் என்று ஜம்பம் அடித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்த அனைவரும் "பெயில்" ஆக்கப்பட்டார்கள். நானும் "பெயில்" என்பதை எவ்வளவு நாசூக்காக‌ எழுத வேண்டியிருக்கிறது. பெண்கள்! சொல்லவே வேண்டாம்! ஒருவர் கூடத் தேறவில்லை. ஒன்றிரன்டு பெண்கள் வண்டியிலிருந்து, கீழேயும் விழுந்தனர்.

அப்புறம் என்ன அடுத்த வாரம் முதல் ஆளாகப் போய் அந்த எட்டின் மீது ஓட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய‌வில்லையே!!

.

3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நண்பரே...
8 போடுவது எட்டாக் கனியில்ல.
கிட்டும் கனிதான்.
கிட்டும்... கிட்டும்... காத்திருங்கள்.
சுவையாயிருந்தது தங்கள் அனுபவம்.

கரந்தை ஜெயக்குமார் said...

அனுபவம் அருமை

unmaiyanavan said...

கவலைப்படாதீர்கள் சீக்கிரம் எட்டு போட்டு, பாசாகி விடுவீர்கள்.

Related Posts with Thumbnails