Monday, June 16, 2014

டீசல் விலை பத்து ரூபாய்க்கு மேல் குறைவு!! யாருக்கு?

க‌டந்தமுறை ஊருக்கு வருவதற்கு ரெயில் பயணத்தைத் தான் தேர்வு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதிராபாத்திலிருந்து சென்னை எழும்பூருக்கான பயணத்தின் முன்பதிவையும், அதைத் தொடர்ந்து காலையில் உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும் முன்பதிவு செய்திருந்தேன். எப்படியோ முந்தின நாள் மாலை ஹைதிராபாத்திலிருந்து நான்கு மணிக்கெல்லாம் கிள‌ம்பிய நாங்கள் வெற்றிகரமாகப் பதினைந்து மணிநேரம் பயணத்தைத் தூங்கியே கழித்துச் சென்னை எழும்பூர் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸையும் பிடித்தாகிவிட்டது. மீண்டும் ஒரு பதினாங்கு மணிநேரப் பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் அவ்வளவு எளித‌ல்ல, காரணம் பகல் பயணம். தூங்கிக் கழித்துவிடலாம் என்றாலும் முடியாது. முந்தினம் செய்த‌ப் பயணக் களைப்பு வேறு உங்களைப் பாடாய்படுத்திக்கொண்டிருக்கும். காலையில் புதிதாகப் பயணத்தைத் துவங்குபவர்களுக்கு, இந்தக் குருவாயூர் ரெயில் பயணம் செய்வது சுகமாக அனுபவம் தான். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது, அந்த நிலையத்தில் உள்ள பிரசித்திபெற்ற உணவுப்பொருட்கள் உங்களைத் தேடி வந்துகொண்டேயிருக்கும். கையில் உங்களுக்குப் பிடித்த புத்தகத்துடனோ அல்லது வாக்மேனில் பிடித்த படல்களையோ ரசித்துக்கொண்டே கிடைக்கும் உணவுகளை வாங்கி அசைப்போட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவது உங்களுக்கு தெரிவதில்லை. குழுவாகப் பயணம் செய்தால், சொல்லவே வேண்டாம், உங்கள் உற்சாகம் இரண்டு மடங்காக இருக்கும்.

ஆனால் எங்களின் பயணம் முந்தின நாள் இரவே தொடங்கி விடுவதால் இன்றைய பகல் பயணத்தை ரசித்துப் பயணிக்க முடிவதில்லை . ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போதும், அடுத்த நிலையம் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்க்கும். மாலையில் ஆறு மணிக்கெல்லாம் பயணத்தை முடித்துவிட்டு இறங்கிவிடலாம் என்றால் கூட மன‌தை ஓரளவிற்குச் சமாளித்துவிடலாம். ஆனால் ஒன்பது மணியையும் தாண்டிப் பயணம் செய்ய வேண்டும். மாலை ஆறுமணிக்கு மேல் ரெயிலானது ஒவ்வொரு சிக்னலிலும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நின்றுச் செல்வது இன்னும் கடுப்பை அதிகமாகக் கிளப்பும். எப்படா! வீட்டிற்குப் போவோம்! எனற எண்ணத்தில் தான் பயணிக்க வேண்டிவரும்.

ஒவ்வொரு முறையும் நானும் மனைவியும் ரயிலில் ஊருக்கு வருகிறோம் என்றால், அப்பா! ரயில் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவுடன் வந்துவிடுவார்கள். இந்தமுறையும் அப்பா, ரயில்வே நிலையத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து, எங்களுக்காகக் காத்திருந்தார்கள். நாங்கள் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணிநேரம் தாமதமாக ஒன்பது முப்பதுக்கு நாகர்கோவில் நிலைய‌த்திற்குள் நுழைந்தது. ரெயில் வண்டி நிலையத்தில் நின்றவுடன், எங்களை விட்டால் போதும்! என்ற மனநிலையில் தான் லக்கேஜை எடுத்துக்கொண்டு ஓடிவந்து, நானும் மனைவியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.

அப்பாவுடன் பேசிக்கொண்டே ரயில் நிலைய‌த்திலிருந்து வெளியே வரும் சாலையில் ஆட்டோவில் வ‌ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து கோட்டார் மார்கெட்டுக்கு வரும் சாலையை நானும் பல வருடங்களாகப் பார்க்கிறேன், ஒருமுறை கூடச் சரியாகச் செப்பனிடப்பட்டதில்லை. எப்போது பார்த்தாலும் பிரசவச் சாலையாகத் தான் காட்சியளிக்கும். இன்னும் போதாக் குறைக்குக் கால்நடைகளின் ஒதுக்கிடமாக அந்தச் சாலையும், அதையொட்டிய குளமும் காட்சியளிக்கும். பகலாக இருந்தால் நாய், பன்றி, ஆடு, மாடு என்று எல்லாவகையான கால்ந‌டைகளும் மக்களோடு, மக்களாக அலைவதையும் நீங்கள் பார்க்கலாம். இப்போது மணியானது பத்தை நெருங்கியிருந்ததால் சாலையின் இருமருங்கிலும் மாடுகள் மட்டும் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

ஆட்டோவானது கோட்டார் மார்கெட்டைக் கடந்து, பார்வதிபுரத்தை ரெம்பச் சீக்கிரமாகவே நெருங்கியிருந்தது. வீட்டிலிருந்து அம்மா போனில் என்னை அழைத்து எங்கு இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் அம்மாவிடம் பார்வதிபுரம் வந்துவிட்டேன், இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று சொல்லி மொபைல் அழைப்பைத் துண்டித்தேன். என்ன வாய் முகூர்த்தத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை. பார்வதிபுரம் சிக்னல் தாண்டிச் சாலையின் இடதுபக்கம் வண்டிகள் லைன் கட்டிக் காத்து நின்றது. வலதுபக்கத்திலிருந்து மட்டும் அவ்வப்போது ஒவ்வொரு வண்டிகள் எங்களுக்கு எதிராகச் சென்று கொண்டிருந்தது. இடதுபக்கம் நிற்கும் வண்டிகள் ஒருஅடி கூட நகரவில்லை. எல்லோரும் வண்டியை ஆப் செய்துவிட்டிருந்தார்கள். வலதுபக்கம் வண்டிகள் பெரிய அளவில் வரவில்லை, ஆனாலும் எவரும் தங்கள் வண்டியை வலது பக்கமாக எடுத்துச் செல்லாமல் காத்துக்கொண்டிருந்தார்கள். டூவீலர் வண்டி ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் சாலையில் இருக்கும் சந்துகளில் வழியாக நுழைந்து கொண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சனை என்று அப்பாவிடமும், ஆட்டோ டிரைவரிடமும் கேட்டேன். அரசுப் பேருந்துகள் அனைத்திற்கும் டீசல் இப்போது தனியார் பங்குகளில் தான் போடுகிறார்கள் என்பது உனக்குத் தெரியும் தானே!. முன்னாடி ஒதுக்குபுறமாக இருந்த பங்குகளில் போட்டுகொண்டிருந்தார்கள். அந்தப் பங்குகளுக்குச் சரியாகப் பணம் கொடுக்கவில்லை என்று பிரச்சனையில், ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டேயிருந்தார்கள் . இப்போது கடைசியாக எல்லாப் பேருந்துகளுக்கும் சுங்காங்கடைக்கும் பார்வதிபுரத்திற்கும் இடைப்பட்ட இடத்திலிருக்கும் ஒரு தனியார் பங்கில் தான் டீசல் போடுகிறார்கள். பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுவதற்கு முன்பு எல்லா டிரைவரும் இந்த‌ தனியார் பங்கில் சென்று நாளைக்குத் தேவையான‌ டீசல்களை நிரப்பிவிட்டு தான் பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுகிறார்கள். இரவு ஒன்பது மணியிலிருந்து இந்தச் சாலையானது பெரும்பாலும் இப்படிதான் மாட்டிமுழிக்கிறது என்று அப்பா சொல்லி முடித்தார்கள்.

ஒரு பேருந்து உள்ளே சென்று டீசல் நிரப்பிய பின்புதான் அடுத்தப் பேருந்து அந்தப் ப‌ங்கிற்குள் நுழைய முடியும். நெடுங்சாலையில் இருக்கும் அந்த டீசல் பங்கானது மிகச் சிறயளவு இடவசதிக் கொண்டது. பணிமனைக்குச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் ஒரே நேரத்தில் டீசல் நிரப்புவதற்கு இந்தச் சாலையில் வந்து கூடுவதால், நெரிசல் அதிகமாகவிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்துகள் நிலைமையைப் பற்றி ஏகப்பட்ட செய்திகளும், புகைப்படங்களும் தினந்தோறும் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லாம் தலைமுறை தாண்டியவையாகத் தான் இருக்கும். ஏதாவது ஒன்று வழியில் மண்டையைப் போட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். நான் வந்த அன்றும் அப்ப‌டி ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்.


ஒரு மணிநேரம் வண்டிகள் ஆமை போல் ஊர்ந்தது, எங்கள் ஆட்டோவும் அதன் பின்னே நகர்ந்து ஒரு வழியாக அந்தப் பெட்ரோல் பங்கை கடந்தோம். முப்பது மணிநேரம் ரயில் பயணம் முடித்து ஒரு வழியாக வீட்டை அடையலாம் என்றால் வழியில் நடந்த இந்தச் சோதனை எனக்கும், எனது மனைவிக்கும் கொடூர அனுபவமாக இருந்தது. வழி நெடுகிலும் புலம்பிக் கொண்டுதான் வீடு வந்து சேர்ந்தேன். என்றைக்கோ, ஒருநாள் ஊருக்கு வரும் போது இத்தைகைய போக்குவரத்து நெரிசல்களில் மாட்டும் எனக்கே இவ்வளவு கோபம் என்றால், தினமும் இந்த அவஸ்தைகளைச் சந்திக்கும் மக்களின் கதி! பணியை முடித்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று இருக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பாடுகள்!.

இப்படித் தனியார் பங்குகளில் டீசல் போடுவதால் ஒரு லிட்டரில் பத்திலிருந்து பதினொரு ரூபாய் அரசானது சேமிக்கிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்லுகிறது. இவ்வாறு சேமிக்கிறேன் என்ற வழியில் இவர்கள் பண‌த்தை இழக்கவும் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

# பத்திலிருந்து பதினைத்துக் கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று தனியார் பங்குகளில் டீசல் போடுகிறார்கள். இவ்வளவு தூரம் ஓட்டிச் செல்லுவதற்கு ஆகும் டீசல் செல‌வை எந்தக் கணக்கில் ஏற்றுவது?

# ஒரு வழித்தடத்தில் நான்கு முறையாவது பேருந்துச் சென்றுவர வேண்டும் என்று இருந்தால், டிரைவர்கள் இந்த டீசல் போடுவதற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு மூன்று முறையாகக் குறைத்துக் கொள்ளுகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய கணக்கில் ஏற்றுவது?

# சில தனியார் பங்குகளில் நாம் சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டிலில் கேட்டால் கூடக் கொடுப்பதற்குத் தயங்கும் இத்தகைய பரிசுத்தவான்கள், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் எப்படிச் சரியான அளவில் அளந்துக் கொடுப்பார்கள்?. இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய தலையில் ஏற்றுவது?. 

# ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகத் தனியார் பங்குகளை மாற்றுவதிலும்,பல முறைக்கேடுகள் நடக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்றால் மத்திய அரசு மட்டும் தான் என்று எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உண்மையில் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான, மாநில அரசின் வரியின் வீதத்தைச் சும்மா ஒருமுறை இணையத்தில் தேடிப் பாருங்கள்.
.

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

என்னசெய்வது ஒன்றை நம்பித்தான் ஒன்று வாழ்கிறது...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts with Thumbnails