Thursday, June 19, 2014

இந்த மருத்துவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

நேற்று மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வில் கட் ஆப் மார்க் அதிகம் எடுத்த மாணவர்களின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அதில் ஒரு மாணவர் கூறியது இது தான். குழந்தைகளுக்கான மருத்துவத்தை முதன்மையாக எடுத்துப் படித்துக் கிராமத்தில் உள்ள ஏழை எளியக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் சேவைகள் செய்வேன் என்று கூறினான். நல்ல விசயம், கண்டிப்பாக அவனுடைய அந்தப் பதிலை எவராலும் பாரட்டாமல் இருக்கமுடியாது. நானும் அந்தப் பதிலுக்குத் தலை வணங்குகிறேன். இந்த மாணவன் இப்போது சொல்லுவதைப் பிற்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சந்தோசமே!. இதுபோன்ற கருத்து இந்த ஒரு மாணவனின் வாக்குமூலம் அல்ல. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர், பனிரென்டாம் வகுப்பில் மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் கட் ஆப் மார்க் அதிகமாக எடுக்கும் மாணவ மாணவியர் என்று வருபவர்களில், எவரெல்லாம் இந்த மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் இந்த ஊடங்களுக்குக் கொடுக்கும் பேட்டியில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்று சொல்லியபடித் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நான் படிக்கும் காலத்திலிருந்து முதலாவதாக வரும் மாணவர், மாணவிகள்கள் ஊடகம் மற்றும் பொது இடங்களில் பேசும் போது, இன்றுவரை மேலே சொன்ன வாக்கியங்களில் ஒரு சில வார்த்தைகள் கூட அல்லது குறைவாகப் போட்டுதான் பேசுகிறார்கள். இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற கிரமாத்துக்காரனின் அம்மாவும், அப்பாவும் "இது பிள்ளை, பாரு! இப்பவே என்னா மாதிரி பேசுது! படிச்சா இப்படிப் படிக்கணும்" என்று நமது காது படவே உள்குத்தாகப் பேசுவார்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள பெற்றோர்கள் கிட்ட நிற்கும் பையனைப் பிடித்து நாலுச் சாத்துச் சத்துவார்கள். இப்படி ஊர்ல உள்ளவனுக்கு எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடியையும் திட்டையும் வாங்கிக் கொடுக்கும் இந்த நல்லவர்களைத் தான் இன்று தேடுகிறேன். நான் படிக்கும் போது சொன்ன மாணவ மாண‌வர்கள் எல்லாம் கண்டிப்பாக இன்று பெரிய மருத்துவர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் எவருமே கிராமத்தில் வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ததாக அறிய முடியவில்லை. படிக்கும் போது இப்படிச் சொன்னவர்கள், இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று எவரேனும் அறிந்தால் அவரை எனக்கு அறிவதற்குத் தாருங்கள். அந்த நல்லவரையாவது ஒருமுறை பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்வாக‌ இருக்கும். காரணம் நான் இன்றைய‌ மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் பற்றி நிறையப் பதிவுகளில் எழுதிவிட்டேன்.

நான் படிக்கும் போது, எனது வயது ஒத்த உறவினரின் பையன் ஒருவனும் சென்னையில் படித்துக்கொண்டிருந்தான். விடுமுறையில் ஊருக்கு வந்தால் கூடப் புத்தகத்தைக் கீழே வைக்கமாட்டான். அவனும் மேலே சொன்ன வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதாக‌ அவனுடைய அம்மா ஊரிலிருக்கும் எல்லோரிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். உண்மையில் அவனும் சில வருடங்களில் மருத்துவர் ஆகிவிட்டான். ஆனால் என்ன? ஏழைகளை தேடுவதில் தான் அவன் தனது போக்கை மாற்றிகொண்டான். இங்கு இருக்கும் ஏழைகளுக்குப் போதுமான மருத்துவ‌ர்கள் இருப்பதால், பாவம்! அமெரிக்காவில் போய் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறான்.

மாணவர்கள் படிக்கும் போது இருக்கும் இந்த‌ மனநிலையானது கால ஓட்டத்தில், எதார்த்த‌ வாழ்க்கை என்று வரும்போது காணாமல் போய்விடுகிறது. அது தவறு என்று நான் வாதிட வரவில்லை. இன்றைய சில‌ மருத்துவர்கள் மருத்துவமனைகளில் செய்யும் செயல்கள் அளவில்லாக் கோபத்திற்கு உள்ளாக்கிறது. எந்த நோய்க்கும் குறைந்த பட்ச டெஸ்ட்கள் இல்லாமல் மருந்துகள் கொடுப்பதில்லை. இந்த டெஸ்ட்கள் அவர்களுடைய மருத்துவமனையில் உள்ள லேப்களில் தான் எடுக்க வேண்டும், வெளியில் இருக்கும் லேப்களில் எடுத்தால் அதன் உறுதித் தன்மையை நம்ம முடியாது என்று கையை விரிக்கிறார்கள். அந்த டெஸ்ட்களுக்குக் கொடுக்கும் பணம் வெளியில் இருக்கும் லேப்களை விட அதிகம். அதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் அந்த‌ டெஸ்டுகளை முடிக்க ஒரு நாள் முழுவதும் அந்த மருத்துவமனையில் காவல் இருக்க வேண்டும். வரும் எல்லா நோயாளிக்கும் இந்த டெஸ்டுகளைப் பரிந்துரைத்தால் லேப்களில் கூட்டம் இல்லாமலா இருக்கும்!.

சமீபத்தில் எனது உறவினர் ஒருவருக்காக, பெயரைச் சொன்னால் அனைவரும் அறிந்துகொள்ளும் அளவில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவர் எனக்கு உறவில் மாமா முறை வேண்டும். அவர் சவுதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் கட்டிடவேலைச் செய்துவிட்டு ஒரு நாள் முன்னால் தான் ஊருக்கு வந்திருந்தார். வரும்போதே விமானத்தில் கொடுக்கும் மதுவை மூக்கு முட்ட‌ குடித்திருக்கிறார். அதோடு விடாமல் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவுடன் டூட்டி ஃபிரி ஷாப்பில் இருந்து இரண்டு பெரிய புல் பாட்டிலை வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் அட‌க்கி வைத்திருந்த குடியை வீட்டிற்கு வந்த ஒரு நாளில் தீர்க்கும் விதமாகக் கொண்டு வந்த இரண்டு பாட்டிலையும் காலிச் செய்திருக்கிறார்.

இரவு பதினொரு மணியிருக்கும் போது எனக்கு அவருடைய வீட்டிலிருந்து போன் வந்தது. மாமி அழுதுகொண்டே விசயத்தைச் சொன்னார்கள். குடித்தவர் எதுவும் சாப்பிடாமல் படுத்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்திக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கியிருக்கிறார். என்னவென்று கேட்டால் சொல்லுவதற்குத் தெரியவில்லை. மாமி கதறிக்கொண்டு எனக்குப் போன் போட்டிருக்கிறார்கள். நான் உடனடியாக டூவீலரில் கிளம்பி சென்று பார்த்தால் நெஞ்சு பாரமாக‌ இருக்கிறது என்று குழறிக்கொண்டே, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு கத்தினார். இரவு நேரம் வேறு அதிகமாக ஆகியிருந்ததால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்பும் குறைவாக இருந்தது. எலுமிச்சைப் பழத்தைப் பிளிந்து கொடுத்தும், மோரும் கலக்கிக் கொடுத்து ஒரு வழியாக வாந்தி வருவதற்குச் செய்தோம். வாந்தியெடுத்தவுடன் தலையில் அதிகமாக எண்ணெய் வைத்துக் குளிக்கச் செய்து படுக்க வைத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்.

காலையில் மருத்துவமனைக்குப் போகாலாம் என்று மாமியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் காலை எட்டரை மணிக்கு எல்லாம் நான் மற்றும் மாமா, மாமி மூவரும் மருத்துவமனையில் காத்திருந்தோம். முந்தின நாள் குடித்திருந்த மாமாவின் போதை முழுவதும் தெளியவில்லை. நெஞ்சில் அவ்வப்போது கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார். நான் டாக்டர் எப்போது வருவார் என்று வரவேற்பறையில் இருக்கும் நர்சுகளிடம் கேட்டேன். ஒன்பது மணிக்கு வந்துவிடுவார் என்றார்கள். சரி! என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம் மணி ஒன்பதையும் தாண்டி பத்து ஆகியிருந்தது. அப்போதும் வரவில்லை. எங்களுக்கு முன்பும் சிலர் வரிசையில் காத்திருந்தார்கள். மாமாவும் நேரம் ஆக ஆக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கினார். பத்தரை மணி இருக்கும் போது, ஒருவழியாக மருத்துவர் வந்தார், வந்தவர் கூடவே ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு வந்தார். இருவரும் மருத்துவர் அறைக்குச் சென்றன‌ர். வெகுநேரம் ஆகியும் வெளியில் இருந்தவர்கள் எவரையும் அழைக்கவில்லை.

மாமா கத்துவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நர்சுகள், எங்களிடம் வந்து முதலில் உங்களைத் தான் அனுப்புவோம், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவரின் அறைக்கும் சென்று விபரத்தை கூறியிருக்க வேண்டும். சிறிது நேரத்தில் மருத்துவருடன் சென்ற பெண்மணி அறையிலிருந்து வெளியேறினார். வெளியில் நின்ற நர்சு, உடனடியாக எங்களிடம் உள்ளே செல்ல அனுமதித்தது. உள்ளே சென்றால் ரெம்ப மரியாதையாக, லேய்! இங்க வா! எதுக்குல இப்படிக் கத்துற! என்று ஒருமையில் மருத்துவர் அழைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் மாமாவிற்கு நாற்பது வய‌திற்கு மேல் இருக்கும், ஆனால் மருத்துவருக்கு என்னுடைய வயது தான் இருக்கும்.

அதோடு விடாமல் மாமியிடம், இவன் கூட எல்லாம் எப்படிக் குடும்பம் நடத்துற! என்று கேள்வி வேறு. என்னை ஒரு பொருட்டாகக் கூட மருத்துவர் மதிக்கவில்லை. எனக்கு எப்படி எதிர்கொள்ளுவது என்று தெரியவில்லை. நான் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதுக்குள், மாமியிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, வெளியில் நின்ற‌ நர்சை அழைத்து ஓர் ஊசிப் போடுவதற்குப் பரிந்துரைச் செய்துவிட்டு. எங்களிடம் வெளியில் சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சீட்டில் எழுதிக் கொடுத்தார்.

அந்த மருத்துவமையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் வச‌தியில்லை. அதனால் மருத்துவர் பரிந்துரைத்த ஊசியைப் போட்டுவிட்டு, ஆம்புலன்ஸ் வசதியுடன் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஸ்கேன் சென்டருக்கு சென்றோம். அங்குக் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டு திரும்பவும் அந்த மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக அந்த‌ மருத்துவரை பார்க்க‌ முடியவில்லை. சாப்பிடுவதற்குப் போயிருக்கிறார், வெயிட் பண்ணுங்க! என்று நர்சுகள் பதில் தந்தார்கள். ஏற்கனவே ஒர் ஊசிப் போட்டிருந்ததால் மாமாவின் வலிக் குறைந்திருந்தது.

சிறுது நேரத்தில் அறைக்கு வந்த மருத்துவர் எங்களை அழைத்து, ஸ்கேன் ரிப்போட்டைப் பார்த்துவிட்டுக் கூலாக உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை என்பது எனக்கு முன்பே தெரியும். வெளிநாட்டிலிருந்து நேற்று தானே வந்திருக்கே, அதுக்கு ஒரு செலவு வைக்க வேண்டாமா என்று நக்கலாக பதில் தந்தார். தண்ணியை அடித்தால் மூடிக்கொண்டு படுக்கணும், அதைவிட்டு சும்மா! அங்க வலிக்குது! இங்க வலிக்குது! என்று அடுத்தவன் உயிரை எடுக்கக் கூடாது என்று அட்வைஸ் வேறு.

இந்தப் பெரிய வெளக்கெண்ணை அட்வைஸ் ஹேருக்குப் பத்தாயிரம் ரூபாய் எவருடைய பாக்கெட்டுக்குத் தண்டம் அழவேண்டும்.

மருத்துவமனைக்கு நேரத்திற்கு வர மாட்டீர்கள், அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட நேரம் இருக்கையில் இருக்க மாட்டீர்கள்!. நோயாளிகளிடம் நாகரீகமாக பேசக் கூட மாட்டீர்கள். நோயாளிகளுடன் வந்திருப்பவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மாட்டீர்கள்!. ஒரு நோயாளியை எந்த அளவு பயமுறுத்த முடியுமோ, அந்த அளவு பயமுறுத்தி பணத்தை வாங்கிவிடுவீர்கள்!. உங்களை தான் நாங்கள் கடவுளாக நினைத்து சரணாகதியடைய வேண்டும்!.


.

9 comments:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

i too have written a post about this.Same thought.
karthik amma

ஹுஸைனம்மா said...

அந்த உறவினர் பண்ணிய லந்துக்கு, ”நல்லா வேணும்” என்று நினைக்கத் தோன்றினாலும், அவரைவிட பாதிக்கப்பட்டது அவர் குடும்பம்தானே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

மருத்துவர்களில் பலர் இப்படி இருப்பது, இப்போது அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. நல்லவர்களாக இருந்துவிட்டால்தான் ஆச்சரியப்படும்படி ஆகிவிட்டது!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மருத்துவர்களில் பலர் இப்படி இருப்பது, இப்போது அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. நல்லவர்களாக இருந்துவிட்டால்தான் ஆச்சரியப்படும்படி ஆகிவிட்டது!!//

அதே!

Anonymous said...

வணக்கம்

இறுதியில் சொன்னதுதான் அன்றும் இன்றும் நடக்கிறது...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

நோயாளிகளை பணம் காய்ச்சி மரங்களாக நினைத்துவிட்டனர் பல மருத்துவர்கள்! அதே சமயம் குறைவாக பணம் வாங்கும் பல மருத்துவர்களை மக்கள் நம்புவதும் இல்லை!

வவ்வால் said...

//கிராமத்தில் வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ததாக அறிய முடியவில்லை. படிக்கும் போது இப்படிச் சொன்னவர்கள், இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று எவரேனும் அறிந்தால் அவரை எனக்கு அறிவதற்குத் தாருங்கள். அந்த நல்லவரையாவது ஒருமுறை பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்வாக‌ இருக்கும்.//

ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களுக்கு சேவை செய்யவெ தேர்டலில் நிற்பதாக சொல்லும் வேட்பாளர்கள் , அதே போல மக்களுக்கு சேவை செய்ய வராங்களா? அப்படி யாராவது வந்தால் அவரை எனக்கு அறிய தாருங்கள், அந்த நல்லாரைப்பார்த்தால் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்கும் அவ்வ்!

பையனோட பெற்றோர் காசு செலவு பண்ணி ,பையன் மண்டைய உடைச்சு படிச்சு டாக்டராகி இருக்கான் , அவன் சொன்னப்படி சேவை செய்ய வரலைனா ஒன்னும் பெரிய குத்தம் இல்லை ,ஆனால் வந்தால் நல்லா தான் இருக்கும் என்ன செய்ய?

#// டூட்டி ஃபிரி ஷாப்பில் இருந்து இரண்டு பெரிய புல் பாட்டிலை வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் அட‌க்கி வைத்திருந்த குடியை வீட்டிற்கு வந்த ஒரு நாளில் தீர்க்கும் விதமாகக் கொண்டு வந்த இரண்டு பாட்டிலையும் காலிச் செய்திருக்கிறார்.//

அது சரக்கா இல்லை சர்பத்தா அவ்வ்!

ஒரு ஃபுல் அடிக்கறதுக்குள்ள குமட்ட ஆரம்பிச்சுடும் , அதுக்கு அப்புறம் என்ன தான் முக்கினாலும் குடிக்க முடியாது பாஸ் ,ஏன்னா ஒருக்கா நானும் ஒரு ஃபுல்ல ஒட்டுக்கா அடிச்சு பார்த்து இருக்கேன் அவ்வ்!

அதிகமா சரக்கு போயிட்டா வாயு அதிகமாகி நெஞ்ச அடைக்கிறாப்போல இருக்கும் , லெமன் சோடா அல்லது சுடு நீரில் லெமன் பிழிஞ்சு உப்பு போட்டுக்கலாம், குடிச்சுட்டு கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இருக்கணும் படுக்க கூடாது.

ஈனோ,ஜெலுசில் கூட குடிக்கலாம், இதுக்கு நம்ம உடம்பு கண்டுப்பிடிச்சிருக்க சேஃப்டி மெக்கானிசம் தான் வாந்தி , எல்லாம் வெளியில் வந்தால் தானா நார்மல் ஆகிடும், அப்புறம் கூட லெமன் சோடா குடிக்கலாம் "தலை சுத்தல் நிக்கும்"

நாடோடி said...

@Ponniyinselvan/karthikeyan said...
//i too have written a post about this.Same thought.
karthik amma//

thanks for your thought & comments.

@ஹுஸைனம்மா said...
//அந்த உறவினர் பண்ணிய லந்துக்கு, ”நல்லா வேணும்” என்று நினைக்கத் தோன்றினாலும், அவரைவிட பாதிக்கப்பட்டது அவர் குடும்பம்தானே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

மருத்துவர்களில் பலர் இப்படி இருப்பது, இப்போது அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. நல்லவர்களாக இருந்துவிட்டால்தான் ஆச்சரியப்படும்படி ஆகிவிட்டது!!//

@யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//மருத்துவர்களில் பலர் இப்படி இருப்பது, இப்போது அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. நல்லவர்களாக இருந்துவிட்டால்தான் ஆச்சரியப்படும்படி ஆகிவிட்டது!!//

அதே!//

வாங்க யோகன்,

கருத்துக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@2008rupan said...
//வணக்கம்

இறுதியில் சொன்னதுதான் அன்றும் இன்றும் நடக்கிறது...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

உங்களுக்கும் வணக்கம் ரூபன்,

கருத்துக்கு ரெம்ப நன்றி.

@‘தளிர்’ சுரேஷ் said...
//நோயாளிகளை பணம் காய்ச்சி மரங்களாக நினைத்துவிட்டனர் பல மருத்துவர்கள்! அதே சமயம் குறைவாக பணம் வாங்கும் பல மருத்துவர்களை மக்கள் நம்புவதும் இல்லை!//

வாங்க சுரேஷ்,

நீங்கள் சொல்வதும் உண்மைதான். கருத்துக்கு நன்றி.

நாடோடி said...

@வவ்வால் said...
//கிராமத்தில் வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ததாக அறிய முடியவில்லை. படிக்கும் போது இப்படிச் சொன்னவர்கள், இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று எவரேனும் அறிந்தால் அவரை எனக்கு அறிவதற்குத் தாருங்கள். அந்த நல்லவரையாவது ஒருமுறை பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்வாக‌ இருக்கும்.//

ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களுக்கு சேவை செய்யவெ தேர்டலில் நிற்பதாக சொல்லும் வேட்பாளர்கள் , அதே போல மக்களுக்கு சேவை செய்ய வராங்களா? அப்படி யாராவது வந்தால் அவரை எனக்கு அறிய தாருங்கள், அந்த நல்லாரைப்பார்த்தால் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்கும் அவ்வ்!

பையனோட பெற்றோர் காசு செலவு பண்ணி ,பையன் மண்டைய உடைச்சு படிச்சு டாக்டராகி இருக்கான் , அவன் சொன்னப்படி சேவை செய்ய வரலைனா ஒன்னும் பெரிய குத்தம் இல்லை ,ஆனால் வந்தால் நல்லா தான் இருக்கும் என்ன செய்ய?

#// டூட்டி ஃபிரி ஷாப்பில் இருந்து இரண்டு பெரிய புல் பாட்டிலை வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் அட‌க்கி வைத்திருந்த குடியை வீட்டிற்கு வந்த ஒரு நாளில் தீர்க்கும் விதமாகக் கொண்டு வந்த இரண்டு பாட்டிலையும் காலிச் செய்திருக்கிறார்.//

அது சரக்கா இல்லை சர்பத்தா அவ்வ்!

ஒரு ஃபுல் அடிக்கறதுக்குள்ள குமட்ட ஆரம்பிச்சுடும் , அதுக்கு அப்புறம் என்ன தான் முக்கினாலும் குடிக்க முடியாது பாஸ் ,ஏன்னா ஒருக்கா நானும் ஒரு ஃபுல்ல ஒட்டுக்கா அடிச்சு பார்த்து இருக்கேன் அவ்வ்!

அதிகமா சரக்கு போயிட்டா வாயு அதிகமாகி நெஞ்ச அடைக்கிறாப்போல இருக்கும் , லெமன் சோடா அல்லது சுடு நீரில் லெமன் பிழிஞ்சு உப்பு போட்டுக்கலாம், குடிச்சுட்டு கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இருக்கணும் படுக்க கூடாது.

ஈனோ,ஜெலுசில் கூட குடிக்கலாம், இதுக்கு நம்ம உடம்பு கண்டுப்பிடிச்சிருக்க சேஃப்டி மெக்கானிசம் தான் வாந்தி , எல்லாம் வெளியில் வந்தால் தானா நார்மல் ஆகிடும், அப்புறம் கூட லெமன் சோடா குடிக்கலாம் "தலை சுத்தல் நிக்கும்"//

---- # ------- # ------------ # -----
வாங்க வவ்வால்,

வவ்வால் வந்து கமெண்ட் போடுவதற்கும் சில பதிவுகள் எழுத வேண்டியிருக்கு.. :)

நான் அந்த மாணவர்களை குறை சொல்லவில்லை. விமர்சனம் மட்டுமே செய்துள்ளேன். அவ்வ்.. :)

அப்புறம் நம்ம ஆளுகளுக்கு சரக்கும், சர்பத்தும் ஒண்ணு தான்.

1)சாரயம்
2)வேலிமலை
3)ஆனைகிடங்கு
4)வில்லுக்குறி கலவரம்
5)டிஎஸ்பி சவுந்திரபாண்டியன்

நான் மேலே சொல்லியிருபத்தில் குறியீடுகளை வைத்து ஒரு வரலாற்றை எழுத முடியும்.. எங்கள் ஊரில் உள்ளவர்கள் யாராவது உங்களுக்கு தெரிந்தால் இவற்றை பற்றி விசாரியுங்கள். :)

"மாம்பட்டை" என்று ஒன்று ஒருவகை போதை பாட்டில் எங்கள் ஊரில் உண்டு உங்களுக்கு அதுபற்றி தெரியுமா என்று தெரியவில்லை. சாதரண ஆட்களால் மூக்கிற்கு கிட்டே கூட கொண்டு செல்ல முடியாது. அது ஒரு பாட்டில் முக்கால் லிட்டர் வரும்.அதுவே எங்க ஆளுங்க நாலு பாட்டில் அடிப்பார்கள். அப்படியென்றால் வெளிநாட்டு சரக்கு எம்மாத்திரம்?... :)

Related Posts with Thumbnails