Saturday, June 21, 2014

வம்புக்கு இழுப்பது_இலக்கியம் யார் படைக்கிறார்கள்?

வலைத்தளங்களில் எழுதுவர்களில், ஆண்களிடமிருந்து அதிகமாக இப்படியான புலம்பல்களைப் பார்க்க முடியும். நான் பக்கம், பக்கமாக எழுதினாலும் ஒரு கமெண்டோ, லைக்குகளோ விழுவது இல்லை. ஆனால் பெண்கள் தும்மினாலும் கூடப் பல கமெண்டுகளும், லைக்குகளும் வந்து விழுகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?. இதற்குத் தான் இந்தச் சமூகத்தில் வாழமாட்டேன் என்று சொல்லுகிறேன். நான் தமிழில் இலக்கியம் படைக்காமல் இருப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது காரணம் வேண்டுமா?. இந்தச் சமூகம் என்னைத் தூக்கி அடிக்கிறது(எப்படிப் படிக்க வேண்டுமோ உங்கள் விருப்பம்) என்பதற்கு இதைவிட வேறு காரணம் இருக்க முடியாது.

மேலே குறிப்பிடும் புலம்பலில் இருக்கும் சில அடிப்படையான கேள்விகள். பெண்கள் எழுதும் தும்மல்களுக்கு அதிகமான லைக்குகள், கமெண்டுகள் போடுபவர்கள் யார்? அவர்கள் ஆண்களா? பெண்களா?. எல்லோருக்கும் தெரியும் ஆண்கள் தான். அப்படியானால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. இதில் பெண்களின் மீது வன்மம் வளர்ப்பதற்கு என்ன வேண்டி இருக்கிறது?. ஆனா... ஊனா.. கூட்டம் கூட்டமாக லைக்குகளைப் போட்டுக் கொண்டு அலையும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்?. உங்கள் இலக்கிய அறிவு என்னவென்று?. தினம் ஒரு தகவலாக இலக்கியம் படைக்கும் இலக்கியவாதியும், கனவில் வரும் செவ்விலக்கியங்களைத் தமிழில் படைக்கும் இலக்கிய ஆளுமையும் அல்லவா யோசிக்க வேண்டும்?. நம்முடைய இலக்கியப் படைப்புகளை இவர்களை எந்தளவிற்கு வருத்தியிருக்க‌ வேண்டுமென்று?. தும்மலைப் போடும் எந்தப் பெண்களும் வாருங்கள்! வந்து லைக்கு, கமெண்டு போடுங்கள் என்று புலம்பியதாகவோ! அல்லது இன்னும் புலம்பப் போவதாகவோ அறிவிக்க வில்லை. நாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம்! உலக மகா இலக்கியவாதிகளே வாருங்கள்! வந்து எங்களுக்கு மதிப்பெண் தாருங்கள் என்று கேட்ட‌தாகவும் தெரியவில்லை. எங்களுக்கு விருப்பமானவைகளை படைக்கிறோம். உங்களுக்குப் பிடித்தவைகள் படைக்க வேண்டும் என்று எங்களை அடிமை படுத்தாதீர்கள் என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். இதுதான் உங்களுக்குப் பொறுக்கவில்லை, இங்குத் தான் வருகிற‌து ஆணாதிக்க மனோநிலை.

நம்முடைய சில‌ தமிழ் திரைப்படங்களில் பெண்களின் அங்கங்களுக்கு மதிப்பெண் போடும் காட்சிகளைப் பார்க்க முடியும். அதைப் பெண்களும் ரசிப்பதாக அந்தத் திரைப்படங்களில் காண்பித்திருப்பார்கள். அந்தப் புத்தம் புதுக் காட்சியைத் திரையில் வைப்பவர்கள் ஆண்கள் தான். அதை ரசிப்பவர்களும் ஆண்கள் தான். எதார்த்த வாழ்க்கையில் என்னவோ! பெண்கள் எல்லாம் தங்களுக்கு மதிப்பெண் போடுவத‌ற்கு உங்களை அழைத்தாகக் கருதி வர்ணித்தால் செருப்படியும், துடைப்பக்கட்ட அடியும் தான் மிஞ்சும். 

சரி, இப்போது ஜெ.மோ அவர்களின் பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பிரச்சனையின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். எல்லோராலும் இலக்கியவாதி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஆ.வி.யில் தமிழின் இலக்கிய‌ வருங்காலம் இவர்கள் கையில் தான் படப்போகிற‌து என்று ஒரு லிஸ்டை எழுதுகிறார். அதில் சில பெண் எழுத்தாளர்களின் பெயரும் இடம் பெற்றுவிட்டதாம். அதில் தான் ஜொ.மோ அவர்கள் பொங்கிவிட்டார். முக்காலமும் நாங்கள் தான் இலக்கியம் படைப்போம் என்று படைத்த பிரம்மனிட‌மே, குத்தகை வாங்கி வந்த பிறகு இப்படி ஒரு லிஸ்டை எப்படிப் போடலாம் என்று அறசீற்றம் கொள்கிறார் பாவம் தான். அறம் பாடும் இலக்கிய ஆளுமைக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணீர் வடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன?.

இவர் பொங்கும் பொங்கலை எல்லாம் லிஸ்ட் போட்ட, நா.நா அவர்களிடம் தான் பொங்கியிருக்க வேண்டும். அந்தப் பெண் எழுத்தார்கள் என்ன படைத்திருக்கிறார்கள்?. தமிழ் இலக்கிய உல‌கில் அவர்களின் பங்களிப்பு என்ன?. எவருடைய இலக்கியங்களையாவது படித்திருக்கிறார்களா?. அப்படியென்றால் அவற்றின் தரவுகள் எங்கே?. அவற்றையெல்லாம் எனக்குத் தொகுத்துத் தரமுடியுமா?. எதன் அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்? என்று நீங்கள் எழுதினீர்கள்? என்பதாக, கம்பை நா.நா. பக்கம் சுற்றியிருக்க வேண்டும். இப்படியான இவர்களின் கம்பு சுற்றலில் நமக்கும் இன்னொரு மான் கராத்தேவைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால் ஜொ.மோ.வோ முச்சந்தியில் நின்று கொண்டு ஒரண்டை இழுத்துக்கொண்டு சொல்கிறார், இந்தக் குழாயடிச் சண்டைகளை வெறுக்கிறேன். என்னோட நிலை ரெம்பப் பெரிது. இவ்வுலகில் நான் இல்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசுகிறார். முச்சந்தியில் நின்று ஒரண்டை இழுத்தால் முகம் தெரியாதவனும் தான் கல்லெடுத்து அடிப்பான். குழாயடிச் சண்டையை விட ஒரண்டை இழுப்பது இன்னும் மோசம்.

ஜெ.மோ. எழுதுவது எப்படி ஒரண்டை இழுப்பது ஆகும்?. எந்தப் பெண் எழுத்தாளர்களும், நாங்கள் பெரிய எழுத்தார்கள் என்று உங்களிடம் வந்து கொடிப்பிடிக்கவில்லை. எங்களுக்கு அங்கீகார‌ம் கொடுங்கள் என்று உங்களிடம் அவர்கள் கையை ஏந்தி நிற்கவில்லை. எங்களுக்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள் என்றும் வரவில்லை. அப்படியிருக்கும் போது எவரோ ஒருவர் எழுதினார் என்று அவர்களை இழுத்துப் போட்டுப் பொதுவீதியில் வைத்து நக்கல் செய்வதை என்னவென்று சொல்வது?.

பொதுவான தரவுகளைச் சுட்டித் தான் ஜெ.மோவும் எழுதினார். எதையும் ஆதாரபூர்வமாகச் சுட்டி எழுதவில்லை. உண்மையில் பெண்களின் படைப்புகள் மீது அக்கறையிருந்தால் அவர்தான் இந்தச் சமகால இலக்கியச் சூழலில் பெண்களின் பங்களிப்புகள் பற்றிய தரவுகளைத் தந்து எழுதியிருக்க வேண்டும். அவர்களின் படைப்புகளின் மீது விமர்சனங்களை வைத்திருக்க வேண்டும். அந்த விமர்சனங்களைப் பொதுவெளியில் விவாததிற்கு விட்டிருந்தால் பாரட்டியிருக்கலாம். ஆனால் இவர் செய்தது என்ன?. இவர் செய்யாததை எதிர்வினைக்கு மட்டும் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன‌ மனநிலை?.

சரி, இவை ஒருபுறம் இருக்கட்டும். தான் படிப்பது எனது மனைவிக்குக் கூடத் தெரியாது. (இது, தான் இன்று வாக்காலத்து வாங்கி எழுதும் எழுத்தாளருக்கு ஒரு சம‌யத்தில் சொல்லிய‌ பதில் தான்) தமிழ் நூல்களைப் படிப்பதை நான் வதையாக உணர்கிறேன் என்றெல்லாம் எழுதும் அல்டிமேட் எழுத்தாளர் சாரு அவர்கள், தனது சக எழுத்தாளருக்காகப் பொங்கும் போது, அவருடைய விஷ்ணுபுரம் நூலையாவது இந்தப் பெண் எழுத்தாளர்கள் படித்திருப்பார்களா? என்று கேள்விக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கான பதில், மேலே எழுதியிருக்கும் வாக்கியங்களுக்கான‌ நகைமுரண் ஒன்று போதும்.

பெண் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று எழுதுவதற்கு முன், கொஞ்சம் சிந்தியுங்கள். யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள்?. எழுத்தில் இல்லாத அங்கீகாரத்தைப் பாலினத்தில் பெற முடியுமா?. அப்படிப் பாலினம் பார்த்துக் கொடுத்தால் யார் அந்த அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள்?. அந்த அங்கீகாரம் கொடுப்பவர்களின் இலக்கிய அறிவு/புரிதல்/ஆளுமை என்ன?. நீங்களே நிமிர்ந்துப் படுத்துக் கொண்டு உங்கள் மீதே காறி உமிழ்கிறீர்கள்.

முதலில் பெண்களை எழுதவிடுங்கள். அதன்பிறகு அவர்கள் படைத்தார்களா? இல்லையா? என்று உங்கள் அளவுகோல்களை நீட்டுங்கள். தலையெடுக்கவே அவர்கள் பல தடைகளைத் தகர்க்க‌ வேண்டியிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் எழுதுவதற்கு வந்தால் எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டும் என்று மன‌சாட்சி உள்ள ஆண்கள் சிந்தியுங்கள். இன்றைய சூழ்நிலையில் வலைத்தளங்களில் இயங்கவே பெண்களுக்கும் இருக்கும் சவால்கள் பெரிது. அவர்களும் படைப்பார்கள், படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்க முன்வாருங்கள். இப்போதே தட்டி மூலையில் அமர வைக்காதீர்கள்!.. 

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் ஆதங்கம்புரிகிறது உண்மைதான் முகநூல்பக்கம் பார்தால் பெண்கள் போடும் கருத்துக்குத்தான் அதிகமான வாக்கு விழுகிறது அதில் பார்த்தால் 95 சத வீதம் ஆண்கள்.. என்ன செய்வது. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு நல்ல பொருள் தெரிவதில்லை.
பல எடுத்துக்காட்டுக்கள் வைத்து பதிவை மிகவும் வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சரியாக சொன்னீர்கள்! நாஞ்சில் நாடன் அவர் ரசனைக்கு சிறந்த எழுத்தாளர்களை கூறினார். பிடித்தால் படியுங்கள்! இல்லையேல் விடுங்கள்! இதில் ஏன் பெண்களை வம்பிழுக்கிறார் ஜெ.மோ. தெரியவில்லை! நன்றி!

r.v.saravanan said...

நாஞ்சில் நாடனிடம் தான் ஜே மோ கேட்டிருக்க வேண்டும் அது தான் சரி.

இன்றைய சூழ்நிலையில் வலைத்தளங்களில் இயங்கவே பெண்களுக்கும் இருக்கும் சவால்கள் பெரிது. அவர்களும் படைப்பார்கள், படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்க முன்வாருங்கள். இப்போதே தட்டி மூலையில் அமர வைக்காதீர்கள்!.

என் கருத்தும் அதுவே

கரந்தை ஜெயக்குமார் said...

நாஞ்சில் நாடன் அவர் ரசனைக்கு சிறந்த எழுத்தாளர்களை கூறினார்
இதில் ஏன் பெண்களை வம்பிழுக்கிறார்

கரந்தை ஜெயக்குமார் said...

tha ma 2

Unknown said...

Well said

Related Posts with Thumbnails