Friday, July 15, 2016

சாருவின் அறிவுரைகள்_யாருக்கு?

சாருவின் கட்டுரைகளை இப்போது படிக்கும் போதெல்லாம் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்திருக்கும் வயசான பெரிசுகள் இன்றைய இளைய தலைமுறையை பார்த்து "லோகம் கெட்டு போயிடிச்சி பார்த்தேளா!" என்று புலம்பும் விதமாகத் தான் இருக்கிறது.  எங்கேயோ ஒரு முலையில் அமர்ந்து புலம்பும் பெரிசாக இவரும் இருப்பாரானால் நாமும் "போகட்டும்" என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால் இவரின் கழிவிரக்க புலம்பல்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் வரும் போது தான், நாம் இவற்றை விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. சமீபத்தில் வந்த தினமலர் பத்திரிக்கைகளில் இவர் எழுதிய கட்டுரையில் முதல் பத்தியிலேயே முரண்பாடுகளும், தடுமாற்றமும் தான், நீங்களே படித்து பாருங்கள்.

"வெறும், 100, 'லைக்' மட்டுமே வந்தால் மனம் பதறுகிறது; முகம் வாடுகிறது." இப்படி பெண்களை பற்றி எழுதியவர் அடுத்த வரியில் இப்படி எழுதுகிறார்.

"எந்தப் பெண்ணின் புகைப்படம் வரும் என்று, தவமாய்க் கிடக்கிறது மாபெரும் இளைஞர் கூட்டம். ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தவுடன், மாறி மாறி, 'சரசர' வென்று லைக்குகள் குவிகின்றன. வெறும் லைக்குகள் மட்டுமல்ல. 'ஆசம்... அடடா என்ன அழகு, மனம் கிறங்குகிறது, அழகே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை"

தர்க்கரீதியாக பார்த்தால், மேலே சொன்ன இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே உண்மையில்லை, பெண்கள் என்ற அடையாளத்துடன் கவர்ச்சியான புகைப்படங்களையும், கிளுகிளுப்பு ஏற்றும் கவிதைகளையும் பதிவிடுபவர்கள் உண்மையில் யார் என்று முகநூலில் அனா ஆவன்னா தெரியாத கத்துக்குட்டிகளுக்கு கூடத் தெரியும். உண்மை இப்படி இருக்க இவரோ அந்தப் படங்களுக்கு ஜொள்ளு விட்டு திரியும் சிறு கூட்டத்தை மிகைப்படுத்திப் புலம்புகிறார்.

"இவ்வளவுக்கும் அந்தப் பெண் செய்த சாதனை என்னவென்று பார்த்தால், காலையில் எழுந்து தன் புகைப்படத்தைப் போட்டு, 'குட் மார்னிங்' சொன்னார்; அவ்வளவு தான். இத்தனை லைக்குகளையும், கமென்டுகளையும் பார்த்த பெண்ணின் மனம் குதூகலிக்கிறது."

பெண்கள் தன்னுடைய புகைப்படத்தைப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா?.. உங்களுக்கு ஏன் சாரு வயிறு எரிகிறது? தனக்கு வராத லைக்குகளும் கமெண்டுகளும் இவர்களுக்கு வருகிறதே! என்ற ஆதங்கம் தான் இதில் வெளிப்படுகிறது. தாங்கள் இந்தப் பதிவிற்கு எதற்காக உங்களுடைய வரைபடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளும் வாசகர் கடிதத்தில் கூட "சாருவின் புகைப்படம் இல்லாமல் பத்திரிக்கையில் கட்டுரையா?" என்றெல்லாம் அள்ளித் தெளிப்பது எதற்காக?. தங்களின் புகைப்படம் பதிந்த டி-ஷர்டை எதற்காக வெளியிட்டீர்கள்?. பொதுவெளியில் வரும் போதெல்லாம் என்னைப் புகைப்படம் எடுக்க முடியுமா ? என்னைக் காணொளி எடுக்க முடியுமா? என்று கூவி கூவி அழைப்பது எதனால்? சமீபத்தில் உங்களுடைய புத்தகத்தில் உள்ள அட்டைப் படத்தில் தங்கள் புகைப்படத்தை சரியாக லே-அவுட் செய்யவில்லை என்று எத்தனைக் கட்டுரை எழுதினீர்கள்?

"எதார்த்த உலகில் ஒரு பெண்ணை, ஆண் எப்படி எதிர்கொள்கிறான்? எந்தப் பெண்ணிடமும் ஒரு ஆண் எடுத்த எடுப்பில், 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொன்னால், உதை தான் விழும்."

எதார்த்த உலகம் மட்டுமல்ல, இணைய உலகிலும் "உதை தான் விழும்" சாருவிற்கு விழுந்த உதை மறந்து விட்டது என்று நினைக்கிறேன். உங்களின் முகநூல் பேச்சுக்கள் அதற்கான எதிர்வினைகள் இன்றும் இணையத்தில் இருக்கிறது.

"ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'சாட்டிங்'கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, 'வாடி, போடி' என்று அழைக்க முடியும்."

இந்த மைனர் குஞ்சு வாயில் வடை சுடுகிறது, சாரு அந்த மைனர் குஞ்சு சுட்ட வடையை எடுத்துக் கொண்டு வந்து பொதுவெளியில் வைத்து உளுந்து வடையா? பருப்பு வடையா? என்று கிண்டி பார்க்கிறார். அய்யோ சாரு, கிண்டிப் பார்க்க வேண்டியது வடையை அல்ல மைனர் குஞ்சை. சமீபத்தில் இறைவி படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கும் ஆண் நண்பர், அந்தப் பெண் நண்பரிடம் சொல்லுவது தான் எனக்கு ஞாபகம் வருகிறது, எனக்கும் இது தான் முதல்முறை, ஒரு பெண் கூட என்னைக் கிட்ட சேர்க்க மாட்டார்கள், வீட்டிற்குக் கூட அழைக்க மாட்டார்கள் என்ற நிதர்சன உண்மையை  வருத்தத்துடன்  சொல்வார், அதற்கு அந்தப் பெண் நண்பர் "அப்ப நீ அட்டைக் கத்தியா" என்று கேட்டு சிரிப்பார்.

நிதர்சன உலகில் சிலர், இந்தப் பெண்ணை நான் வளைத்துக் காட்டட்டுமா? அவளை என்னிடம் "ஐ லவ் யு" சொல்ல வைக்கட்டுமா? என்று உதார் விட்டுக் கொண்டு நடப்பார்கள், நிஜத்தில் தன்னால் செய்ய முடியாத ஒன்றை, தான் செய்ததாகவும், செய்யப் போகிறதாகவும் சொல்லிக்கொண்டு கனவுலகில் மிதப்பார்கள், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் இப்படியானவர்களின் பேச்சை பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஜெயமோகன் அவர்கள் சாருவிற்கு புனைவு எழுத வாராது என்று சொல்லியதை படித்திருக்கிறேன். சாருவின் எழுத்தில் அதை பார்த்திருக்கவும் செய்திருக்கிறேன், கீழே சாரு எழுதியிருக்கும் பத்தியில் இருப்பது புனைவா? நிதர்சனமா? ஒரு வித தடுமாற்றத்துடனே தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

"'வாடி, போடி!' ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை."

" 'சாட்டிங்'கின் முடிவில் அது, 'செல்லம்' வரை போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்."

முதல் பத்தியில் "தப்பு தாண்டா பேச்சு எதுவும் இல்லை" என்று பூசி மெழுகுகிறார், அப்படியே அடுத்த பத்தியில் "செல்லம் வரை போய் விட்டது" என்று அங்கலாய்க்கிறார்.

ஒரு பெண் தன்னுடன் மட்டும் தோழியாக பேசினால் அது "சுதந்திரம்" அவள் அப்படியே தோழியாக இன்னொரு ஆணிடம் பேசினால் "கட்டற்ற சுதந்திரம்" உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் தீயை வைக்க... போங்கய்யா போங்க !!


கட்டுரையின் இணைப்பு:


சாருவின் தினமலர் முதல் கட்டுரைக்கு நான் எழுதிய முகநூல் பதிவு:

இது தான் சாத்தான் வேதம் ஓதுவது!

முகநூலில் உள்ள உள் பெட்டியில் இளம் பெண் ஒருவரிடம் இந்த எழுத்தாளர் செய்த வக்கிர பேச்சுகளின் ஈரம் இன்னும் காயவில்லை, அதற்குள் வந்துவிட்டார் லோகத்துக்கு அறிவுரை சொல்ல... பிரபல கவிஞர் சொன்னது போல் போங்கய்யா! போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கள் என்று சொல்ல மாட்டேன்! போய் முதலில்‌ பொதுத் தளத்தில் பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று படியுங்கள்! அப்புறம் வந்து பொங்கல் வைக்கலாம்.

பாமினி என்று பெண் வாசகருக்கு இந்த எழுத்தாளர் சொன்னதாவது இவருக்கு ஞாபகம் இருக்கிறதா? மறந்துவிட்டது என்றால் அவருடைய‌ விமர்சகர் வட்டம் வந்து கேட்டால் பக்குவமாகச் சொல்லுவார்கள்.

பெண்களைப் பற்றிய இவரின் மனோபாவத்தை இயக்குநர் மிஸ்கின் அவர்களிடம் கேட்டால் தெரியும்!

வாசகர்களுக்கு மறதி என்று ஒன்று இருப்பது இவர்களுக்குச் சாதகமாக போய்விடுகிறது ..

கட்டுரையின் இணைப்பு:

மனோபாவம் மாற வேண்டும்!
.

0 comments:

Related Posts with Thumbnails