Monday, April 28, 2014

கல்யாணமா சார்! அப்படினா பிளிச் பண்ணிக்குங்க!!!

ஊரில் எனக்கு விவரம் தெரிந்து சலூனுக்குச் சென்று முடிவெட்டுவதற்குப் பத்து ரூபாய் இருந்தது. இப்போது எண்பது ரூபாய் என்று நினைக்றேன். கடந்த சில வருடங்களாக‌ ஊரில் முடிவெட்டுவதற்கான‌ நேரம் எனக்கு அமைவது இல்லை. எங்கு இருக்கிறேனோ, அங்கிருந்து ஊருக்குப் போகும் போது முடிவெட்டிச் சென்று விடுவேன். அதனால் ஊரில் இருக்கும் வரை முடிவெட்ட வேண்டிய நிலை வருவது இல்லை. பெரும்பாலும் நான் சுயமாகச் சவரம் செய்வது இல்லை, கடையில் தான் சரவம் செய்வேன். சுயமாகச் சரவம் செய்வதற்குச் சோம்பேறிதனம் என்று சொல்ல முடியாது. சுயமாகச் செய்தால் குறைந்தது முகத்தில் பிளேடால் ஒரு மூன்று கோடுகளாவது போடாமல் சரவம் செய்து முடிக்க மாட்டேன். கீறல்கள் விழுவதற்குக் காரணம் முகத்தில் கொஞ்சம் முடி வளர்ந்தாலும் உடனடியாகக் கட்டிகள் வந்துவிடும். அந்தக் கட்டிகளில் தான் அதிகமாகக் கீறல்கள் விழும். அதற்குப் பயந்தே சலூனுக்கு ஓடிவிடுவேன்.

எந்த இடத்தில் நான் தங்கி இருந்தாலும் அதன் பக்கத்தில் ஒரு சலூன் கடையைப் பழக்கம் பிடித்து வைத்துக் கொள்வேன், வாரம் தவறாமல் சென்றுவிடுவதால் அவர்களுக்கும் நம்முடைய முகம் மறப்பது இல்லை. சென்னையில் அதிக நாட்கள் அம்பத்தூர் கனராபேங்க் அருகில் தான் தங்கி இருந்தேன். அந்த ஏரியாவில் மெயின் ரோட்டின் வளைவில் ஒரு பெரிய‌ மலையாள சர்ச் உண்டு. அதன் பக்கத்தில் இருக்கும் சலூனுக்குத் தான் நான் வாரம் ஒருமுறை செல்வேன். அந்தச் சலூனின் ஓனர் சற்றுக் குள்ளமாக, கமலின் விருமாண்டி மீசையைப் போல், அந்த‌படம் வருவதற்கு முன்பே இவர் வைத்திருந்தார், வாரத்தின் ஞாயிறு என்றால் என்னை அங்குப் பார்க்க முடியும். பக்கத்திலேயே வேறு சில கடைகள் இருந்தாலும், இவரது கடை மட்டும் எப்போதும் கூட்டமாக இருக்கும். முடிவெட்டியுடன் தலையை நன்றாக மசாஜ் செய்து கழுத்தை இரு பக்கமும் திருப்பி, அழகாக நெட்டி முறிப்பார், இதற்காகத் தனியாகக் காசு ஏதும் வாங்க மாட்டார். கடைக்கு வரும் கூட்டம் இவருடைய தொழில் நேர்த்தியின் காரணமாகக் கூட இருக்கலாம். அவருடைய சொந்த ஊர் தென்காசி என்று சொன்னதாக ஞாபகம்.

இப்போது நான் இருக்கும் ஹைதிராபாத்தில் இருக்கும் பெரும்பாலன‌ சலூன்களில் ஹேர்கட்டிங் மற்றும் சேவிங் மட்டுமில்லாமல் பிளிச்சிங், ஸ்டீம் ட்ரீட்மென்ட், ஹெட் மசாஜ், ஆயில் மசாஜ், பெடிக்யூர், மினிக்யூர், ஹேர் செட்டிங், ஹேர் பெர்மிங் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்ட போர்டை மாட்டிருப்பார்கள். அதில் விவரமாகக் கட்டணத்தை மட்டும் போட்டிருக்க மாட்டார்கள். வெளியிலிருந்து பார்த்தால் கடை ரெம்பச் சாதரணமாகத் தான் இருக்கும். உள்ளேயும் பெரிய அளவில் எந்த வசதியும் இருக்காது. ஆனால் எல்லா வகையான ட்ரீட் மென்டிற்கும் கட்டணம் பெரிய கடைகளில் வாங்குவது போல் வாங்கி விடுவார்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஹைதிராபாத் ஆபிஸில் பணிசெய்து பேச்சிலர் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, மஸ்கட் ஆபிஸில் இருந்து மாற்றலாகி ஹைதிராபாத் ஆபிஸுக்குப் புதிதாக நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருக்கு அப்போது தான் கல்யாணம் முடிவு ஆகி, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. ஆபிஸ் கொடுத்திருந்த‌ ஹெஸ்ட்க‌வுஸில் தான் நாங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். அவர் முன்பு எப்போதும் ஹைதிராபாத்துக்கு வந்தது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கு இவருக்குத் தெரியும். தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கிற்கும் ஹைதிராபாத்தில் இருப்பவர்கள் பேசும் தெலுங்கிற்கும் பெரிய அளவில் வேறுபாடு உண்டு. புதிய இடமாக இருப்பதால் வெளியில் எங்குச் செல்லவேண்டுமானாலும் என்னோடு தான் வருவார்.

நிச்சாயதார்த்தம் முடிந்திருந்ததால் போனில் அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் ஆபிஸ் முடிந்தால் எங்களுடன் ஹெஸ்ட்கவுஸூக்கு வராமல் வெளியில் எங்கள் தெருவை சுற்றிகொண்டே போன் பேசுவார். ஒரு நாள் ரெம்ப நேரம் ஆகியும் இவர் ஹெஸ்ட்கவுஸிற்கு வரவில்லை. நான் இவர் வெளியில் நின்று போனில் தான் பேசிக்கொண்டிருப்பார் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரவு சாப்பிடும் நேரம் ஆகிவிட்டதால் வெளியில் சென்று போனில் பேசிக்கொண்டிருக்கிறாரா? என்று தேடினேன், அங்குக் காணவில்லை. தெருவைச் சுற்றிவருவார் என்று சிறிது நேரம் வெயிட் பண்ணினேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய மொபைலுக்கு அவருடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மொபைலை ஆன் செய்து காதில் வைத்தால், ஸ்டீபன், உங்ளுடைய‌ பர்சை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக ஒரு சலூன் பெயரை சொல்லி அங்கு வருமாறு என்னை அழைத்தார்.

நானும் அவசர அவசரமாக் கிளம்பி அந்தச் சலூனுக்குச் சென்றால், ஆள் அடையாளம் தெரியாமல் கெட்டப்பே மாறி நின்றார். முடி வெட்டியிருந்தார், முகம் வேறு பட்டிப் பார்த்துப் பெயின்ட் அடித்தது போல் இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக வெளியில் வந்து ஒரு முந்நூறு ரூபாய் கொடுங்க! என்றார். நானும் கொடுத்தேன். கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு என்னிடம் வந்து, வாங்க வீட்டிற்கு போகலாம்! என்றார்.

இருவரும் சலூன் கடையைத் தாண்டி நடந்தவுடன், நண்பரிடம் என்ன விசயம் என்று விசாரித்தேன். ஹேர்கட் பண்ணலாம் என்று வந்தேன், சலூன் கடைக்காரர் ஹேர்கட் பண்ணி முடித்தவுடன், ஹெட் மசாஜ், பிளிச், ஸ்டீம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, இது பண்ணினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி ஒவ்வொன்றும் பண்ணுவத்ற்கு தொடங்கினார், சிறிய கடையாக இருப்பதால் கட்டணம் பெரிய அளவில் இருக்காது என்று நினைத்து, நானும் விசாரிக்காமல் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தேன். கடைசியாக‌ எல்லாம் முடித்துவிட்டு 1300 ரூபாய் கொடுங்க என்றார். நான் ஆயிரம் ரூபாய் தான் வைத்திருந்தேன், அதானால் தான் உங்களை, இங்கு வருவதற்குச் சொன்னேன் என்றார். வெள்ளாந்தியாகப் பேசும் நண்பரை பார்த்து சிரிப்பதா? பரிதாபம் கொள்வதா? என்று தெரியாமல் இருவரும் வீட்டிற்கு நடந்தோம்.



நண்பருக்குத் தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கு கொஞ்சம் தெரியும் என்று நான் முன்பே சொல்லியிருந்தேன் இல்லையா?. இவர் சலூன் கடைக்காரரிடன் ஹேர்கட் பண்ணும்போது அரைகுறையாகத் தெலுங்கில் பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது தனக்கு அடுத்த மாதம் திருமணம் என்பதைச் சொல்லியிருக்கிறார். சலூன் கடைக்காரர் அதையே சாதகமாகப் பயன்படுத்தி, சார்! அப்ப நீங்க இப்பயிருந்தே இந்த மாதிரி ட்ரீட்மென்ட் பண்ணினால் கல்யாணம் பண்ணும் போது முகம் பளிச்சென்று இருக்கும் என்று சொல்லி, ஹெட் மசாஜ், ஆயில் மசாஜ் மற்றும் பிளிச், ஸ்டீம் என்று ஒவ்வொன்றாகப் பண்ணியிருக்கிறார். நம்ம நண்பரும் கடைக்காரரின் பேச்சில் மயங்கி எல்லாவற்றிற்கும் தலைய ஆட்டியிருக்கிறார்.

அப்புறம் என்ன? ஆடு மாட்டினால் பிரியாணி பண்ணாமலா விடுவார்கள்!!!

.

8 comments:

Anonymous said...

வணக்கம்

அப்புறம் என்ன? ஆடு மாட்டினால் பிரியாணி பண்ணாமலா விடுவார்கள்!!!

நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

கிடா வெட்டியாச்சா!?

sekar said...

சாதாரணச் சம்பவம் ஆனால் பெரிய படிப்பினை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிறிய சம்பவமும் அதனோடு ஒரு படிப்பினையும், பதிவில்!
மிக்க நன்றி ஸ்டீபன் சார்!

வருண் said...

உங்க நண்பர், பிளிச் பண்ணி பளிச்சினு ஆயிட்டாரா! ஃபேர் அண்ட் லவ்லி யும் அப்பிக்கிட்டா இன்னும் கொஞ்சம் கலரா பொண்ணுங்க பொறாமைப்படுற அளவுக்கு ஆயிடுவார். தங்க பஸ்பம் கொஞ்சம் சாப்பிட்டால் எம் ஜி ஆர் கலராகவும் வாய்ப்பிருக்கு! :) என்னவோ, கல்யாண மாப்பிள்ளையை கவனமாப் பார்த்துக்கோங்க, பிளிச் கிளிச் பண்ணி பளிச்சுனு கொள்ளை அழகா இருக்காரேனு எவளாவது சிறுக்கி தூங்கிண்டு ஓடிறப்போறா! :)

கரந்தை ஜெயக்குமார் said...

ஆடு மாட்டினால் பிரியாணிதான்

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... மாட்டிக் கொண்டாரே...!

unmaiyanavan said...

உங்கள் நண்பருக்கு நல்ல அனுபவம் தான்,

Related Posts with Thumbnails