Tuesday, April 8, 2014

எல்லாவற்றையும் இழப்பத‌ற்குத்தானே ஆசைப்படுகிறாய் பாலகுமாரா!!!

குடிப் பழக்கத்தைப் பற்றி எனது தளத்தில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். ஆக்டோபஸ் போன்று குடும்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் இந்தப் பழக்கத்தின் தீமையை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் தான் எழுதி வருகிறேன். சிறு வயதில் தனது தந்தையின் குடிப்பழக்கத்தை அருகில் இருந்து பார்த்தவனும், அதனால் தன்னுடைய குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் முழுமையாக உணர்ந்தவன் எவனும் தனது குழந்தைக்கு அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க விரும்ப மாட்டன். நான் ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறேன், வாரத்திற்கு ஒருமுறை குடிக்கிறேன் என்று சிலாய்க்கும் எவரும் தனது குழந்தை இந்தப் பழக்கத்தை விரும்புகிறதா, தன்னுடைய‌ மனைவி சந்தோசமாகத் தான் இந்தப் பழக்கத்தை ஏற்று நம்முடன் வாழ்கிறாளா என்று அறிய விரும்புவதில்லை.

குடிக்கும் நண்பர்கள் எவரும் தன்னுடன் நட்பாக இருக்கும் குடிக்காத நண்பர்களிடன் அவர்கள் குடிக்கும் போது செய்யும் கூத்துகளைப் பற்றிக் கேட்க விரும்புவதில்லை. அப்படியே குடிக்காத நண்பர்கள் கொடுக்கும் அறிவுரைகளையும் இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. இவர்கள் குடிப்பதைப் பற்றி விவாதிப்பது எல்லாம் உடன் குடிக்கும் நண்பர்களுடன் தான். அவர்கள் என்ன இவர்களுக்குச் சொல்லிவிடப் போகிறார்கள்? நாளைக்கு எந்தக் காரணத்தைச் சொல்லிக் குடிக்கலாம், எங்குக் குடிக்கலாம் என்பதைத் தான் விவாதிப்பார்கள்.



குடிக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு குடிக்காத நண்பன் இருந்தால் அவனுடைய நிலைமை ரெம்பக் கொடுமையானது. சொன்ன விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில் ஆரம்பித்து, ஒண்ணும் இல்லாத விசயத்திற்குக் கண்ணீர் விட்டு அழுவது வரை நடக்கும். காலையில் எழுந்து ஏன்டா இப்படிப் பண்ணினாய்? என்று கேட்டால் என்ன பண்ணினேன்? என்று தெரியாதது போல் நம்மிடமே திரும்பக் கேட்பது.

கிராமங்களில் குடிப்பவர்களிடம் ஒரு முரட்டுத்தனம் அவர்களை அறியாமலே வந்து விடுகிறது. அந்த முரட்டுத்தனத்தை வீடு வரும்வரை வெளியாட்கள் எவரிடமும் காட்டுவதற்குத் துணிவது இல்லை. அதில் எல்லாம் ரெம்ப‌ விவரமாக இருப்பார்கள். வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியிடமோ அல்லது வயதான பெற்றோர்களிடமோ தான் காட்டுகிறார்கள். இன்னும் சில பேருக்கு குடித்தால் தான் தன்னுடைய குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும். பகலில் சும்மா இருக்கும் போது அந்தக் குழந்தையைச் சீண்டுவது கிடையாது. ஆனால் இரவு குடித்துவிட்டால் போது பாசம் பொங்கி வழிந்துவிடும், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பிக் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு வந்து முத்த மழையால் நனைத்து முரட்டுத்தனமாய்க் கொஞ்சுவது. அந்தக் குழந்தைத் தூக்கக் கலக்கத்தில் மிரண்டு போய் விழிக்கும். ஒரு வேளை அந்தக் குழந்தை அழுதுவிட்டு அம்மாவை நோக்கிக் கையை நீட்டிவிட்டால் போதும் அவ்வளவு தான், ஏன்டி நீ, எனக்கெதிராகக் குழந்தையை வளர்க்கிறாயா? என்னிடம் வரக்கூடாது என்று சொல்லிக் கொடுத்து வள‌ர்க்கிறாயா? என்று சண்டையை ஆரம்பித்துவிடுவான்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், குடித்தால் தான் வாயையே திறந்து மற்றவர்களிடம் பேசுவார்கள். நண்பர்களிடமே, குடியிருக்கும் இடத்தில் பக்கத்து வீட்டுக்கார்களிடோ, உறவினர்களிடமோ இவர்கள் குடிக்காமல் இருந்தால் எந்தவிதமான நட்பும், உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள், இவ்வளவு ஏன்? முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் ஒரு குவாட்டர் கட்டிங் போட்டு விட்டால் போது அப்போது தான் உலகில் இல்லாத உறவு முறைகளும், பாசங்களும் பொங்கி வழியும். அடுத்தவன் காது அறுந்து ரத்தம் வழிந்தாலும் விடமாட்டார்கள், தொடர்ந்து மொக்கையைத் தான் போடுவார்கள். அப்படியே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுத் தப்பிவிடலாம் என்று நாம் நினைத்தால், அப்போது தான் நீங்க எல்லாம் கோபுரம், என்னைப் போலச் சாக்கடையிடம் பேசுவீங்களா? என்று இல்லாத‌ சென்டிமென்ட் வசனம் எல்லாம் பேசுவார்கள்.

மனைவிடமும், பிள்ளைகளிடமும் கூடப் பேச வேண்டும் என்றால், இவர்களுக்குக் குவாட்டர் உள்ளே போக வேண்டும். குடித்து விட்டு வந்து தான் பிள்ளைகளுக்கு அறிவுரையே அருளுவார்கள். அப்போது மனைவியோ, குழந்தையோ இவருக்கு எதிராக‌ ஏதாவது சொல்லிவிட்டால் போதும், அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்து வீட்டையே போர்களாமாக மாற்றி விடுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இங்கிருந்து வெளிநாடுளுக்குச் சென்று வேலை செய்பவ‌ர்கள் அதிகம், அதிலும் குறிப்பாக அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்குச் செல்பவர்கள் அதிகம். இத்தகைய நாடுகளின் தட்பவெட்பச் சூழ்நிலைகளில் கட்டிட வேலை என்பது மிகவும் கடினமான ஒன்று. பெரிய‌ அளவிலான சம்பளங்களும் இருப்பது இல்லை. அதனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று மாத விடுமுறைக்கு ஊர்களுக்கு வருவார்கள். வரும் போதே ஏர்போர்ட்லேயே டூட்டிப் பிரி(Duty free) கடைகளில் பாட்டில் வாங்கி அடுக்கிவிடுவார்கள். போதா குறைக்கு விமானத்திலேயும் சரக்கை ஊற்றி விட்டி விடுவார்கள். பல வருடங்கள் கழித்து ஆசையாகக் கணவர் வருகிறார், அப்பா வருகிறார், மகன் வருகிறான் என்று கார் கொண்டு வந்து காத்திருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றவர்கள் முன்பு இந்த டூட்டிப் பிரி கவர்களுடன் தான் தோன்றுவார்கள். 

வந்த ஒரு மாதங்கள் வெளிநாட்டில் குடிக்க முடியவில்லை, அதனால் குடிக்கிறேன் என்று ஒரு காரணத்தைச் சொல்லி நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவன் வந்திருக்கிறான் என்று தெரிந்தால் போதும், அவனைச் சுற்றியே வந்து, தினமும் குடிப்பதற்கு என்றே ஊரில் ஒரு கூட்டம் தயாராக‌ இருக்கும். இவர்களுக்கு மட்டும் வருடத்தில் எல்லா நாட்களும் கொண்டாட்டம் தான். யார் யார் வெளிநாட்டில் இருக்கிறார்கள் எப்போது ஊருக்கு வருவார்கள் என்ற தகவல்கள் உறவினர்களுக்குத் தெரிகிறதோ இல்லையே இவர்கள் கைகளில் அப்டேட்ஸ் சரியாக இருக்கும்.

வெளிநாட்டிக்குத் திரும்பப் போவதற்கு முன்பும் ஒரு மாதமாகக் குடிக்க ஆராம்பித்து விடுவார்கள். இதற்கு இனி இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் என்னால் குடிக்க முடியும் என்று ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டு குடிப்பார்கள். இப்போது நண்பர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள், காரணம் கொண்டு வந்த பணம் அனைத்தும் வந்த ஒரு மாதத்திலேயே குடித்தும், நண்பர்களுக்கு விருந்து வைத்தும் செல‌வு செய்திருப்பார்கள். இப்போது கடன் வாங்கித் தான் குடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் இப்போதைய‌ நிலை என்ன என்பது, ஒரு மாததிற்கு முன்பு இவர்கள் கூடக் குடித்தவர்களுக்குத் தெரியும், எங்கே தன்னிடம் கடன் கேட்டு விடுவார்களோ அல்லது தன்னிடம் செலவு செய்யச் சொல்வார்களோ என்று ஒருவரும் அவர்கள் பக்கம் தலை வைக்க மாட்டார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து ஊருக்கு வந்திருப்பது மூன்று மாதம் விடுமுறையில் இதில் இரண்டு மாதங்கள் குடித்தே காலத்தைக் கடத்திவிடுவார்கள். மீதம் இருக்கும் ஒரு மாதத்தில் உறவினர்கள் வீட்டில் நடக்கும் காதுக்குத்து, கல்யாணம், இழவு, திருவிழாக்கள் என்று சொல்லியே பாதி நாட்கள் குடித்துக் கொண்டாடி விடுவார்கள். இப்படி விடுமுறைக்கு ஊருக்கு வரும் நபர்கள் குடிப்பத்தை மட்டுமே முழு நேர வேலையாகச் செய்வார்கள். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ என்று தனியாக நேரம் ஒதுக்க மாட்டார்கள். விடுமுறைக்கு எதற்கு இவர்கள் ஊருக்கு வருகிறார்கள், பேசாமல் அங்கேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று மனைவியும், பெற்றோரும் நினைக்கும் அளவிற்குக் கூத்து அடிப்பார்கள். குடித்துவிட்டு மனைவிடம் போடும் சண்டைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் மேல் பெரிதான ஈர்ப்பு இருப்பதில்லை.

குடியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் பல பேர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் திருந்தி விடுவார்கள் என்று பெற்றோர்கள் இவர்களுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிவைத்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் குடித்துக் கொண்டே தான் வாழ்க்கையை ஓட்டுவர்கள். ஒரு கட்டத்தில் உடம்பில் வலு இல்லாமல் வீட்டில் வீழ்வார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள். இளம் வயதில் சிறு குழந்தைகளுடன் விதவையாக இருக்கும் பல பெண்களை எங்கள் ஊரில் பார்க்கமுடியும். இன்னும் சிலர் குடிக்காரக் கணவனால் அடி உதை வாங்கிக் கொண்டு எல்லாம் என் தலைவிதி என்று இருப்பவர்கள், இப்போது அதே குடிகாரக் கணவன் உடம்பில் வலு இல்லாமல் மருத்துவமனைகளில் இருக்கும் போது பக்கத்தில் கவனித்துக் கொண்டிருப்பார்க‌ள்.



தன்னுடைய மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்பதை மட்டுமே முக்கியமாகக் கருதும் இவர்கள், தன்னுடன் வாழும் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என்று எவரின் நலனிலோ, மகிழ்ச்சியிலோ, கொண்டாட்டங்களிலோ அக்கறை கொள்வது இல்லை. "மது அடிமை" என்ற ஒற்றைச் சொல்லில் சுயத்தை இழந்து, குடும்பங்களைத் தவிக்கவிட்டு, சமூக அக்கறையில்லாமல் வாழ்வதற்குத் தானே ஆசைப்படுகிறாய்!!!!

.

12 comments:

r.v.saravanan said...

நான் ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறேன், வாரத்திற்கு ஒருமுறை குடிக்கிறேன் என்று சிலாய்க்கும் எவரும் தனது குழந்தை இந்தப் பழக்கத்தை விரும்புகிறதா, தன்னுடைய‌ மனைவி சந்தோசமாகத் தான் இந்தப் பழக்கத்தை ஏற்று நம்முடன் வாழ்கிறாளா என்று அறிய விரும்புவதில்லை.


சரியான கேள்வி ஸ்டீபன்
வாழ்க்கையில் ரசிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது இந்த குடியே கதி என்று வாழ்பவர்களை என்ன சொல்வது

Anonymous said...

நம்மை நம்பி உள்ளோரின் நலனை நினைத்தால் குடி பழக்கமாக மாறாது.

unmaiyanavan said...

நல்லதொரு கட்டுரை.
"//இவர்கள் குடிப்பதைப் பற்றி விவாதிப்பது எல்லாம் உடன் குடிக்கும் நண்பர்களுடன் தான்.//" - சரியாக சொன்னீர்கள். குடிப்பவர்களுக்கு, குடிப்பவர்கள் தான் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

"//குடிக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு குடிக்காத நண்பன் இருந்தால் அவனுடைய நிலைமை ரெம்பக் கொடுமையானது. //" - இன்னும் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். குடிக்கும் கூட்டத்தில் குடிக்காத ஒருவன் இருந்துவிட்டால், அவனை எப்படியாவது குடிக்க வைக்க முயற்சிப்பார்கள் பாருங்கள் அது ரொம்பவும் கொடுமை.

Anonymous said...

இவ்வளவு எழுதுனவர், இதை கொண்டு வந்து சீரழிக்கும் கழிசட கழகங்ககளை பற்றி எழுத தோணலையா ?

அம்மான்னு சொன்னா அன்புன்னு பாட்டிட்டு , அம்மான்னு டாச்மாக்குன்னு மாத்துன இந்த வற்ட்சிதலைவியயும், 90 வயசிலும் மிடாஸ் கமிஷன் வாங்கும் கட்டுமரத்தை பத்தியும் எழுதுங்க

வருண் said...

Hi there!

இதைப் பற்றி ஒரு முறை இஸ்லாமியப்பதிவர் ஒருவர் பதிவுக்கு ஆதரவு கொடுத்து "மது அருந்துவது தவறு" என்பதுபோல கருத்தை வைத்தவுடன்தான் பதிவுலகில் வருண் இஸ்லாமியனாக்கப்பட்டான். :))

இப்போ சமீபத்தில் அடாவடி வருண் பட்டம் கெடைத்துள்ளது! :)))

rishikesav said...

இன்னொரு பிரபலம் இங்கு வருவார் என்றிருந்தேன் ... ஏனோ அவரில்லை ... முதலில் வருபவர் அவரே ...

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னைச் சுற்றி முதலில் ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வதே குடிகாரனின் முதல் வெற்றி... பாதுகாப்பு கொடுப்பவர்கள் + பாதுகாப்பு என்பது அன்பு என்னும் ஆயுதமாகவும் இருக்கலாம்... அந்தப் பாதுகாப்பு தந்தை / தாய் / மனைவி / சகோதரர்கள் / சகோதரிகள் / நண்பர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... இவர்களின் ஒருவரை வென்றால் போதும்... அவர்கள் மற்றவர்களை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்து விடுவார்கள்... பிறகென்ன...? "எது வரை போகுமோ - அது வரை போகலாம்... புது வகை ரசனையோடு பார்க்கலாம்...?" ஆம்... அழகான படத்தில் மாலையோடு அவர்கள் வீட்டில் பார்க்கலாம்...

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

பொருள் : நீரில் மூழ்கினவனை தீப்பந்தத்தால் தேடுவதைப் போல், குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரையோ, ஆலோசனையோ தேவைப்படாது... - இது அய்யன் அன்று சொன்னது... ஆனால் இன்று முடியும் :-

மேல் சொன்ன பாதுகாப்பு உடைய வேண்டும்... மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை...

சிறப்பான ஒரு பாட்டு :

தைரியமாக சொல்... நீ மனிதன் தானா...?
மனிதன் தானா...?
இல்லை - நீ தான் ஒரு மிருகம்...
இந்த மதுவில் விழும் நேரம்...
மனமும் நல்ல குணமும்...
உன் நினைவை விட்டு விலகும்...
நீ தான் ஒரு மிருகம்...
இந்த மதுவில் விழும் நேரம்...

மானை போல் மானம் என்றாய்...
நடையில் மத யானை நீயே என்றாய்...
வேங்கை போல் வீரம் என்றாய்...
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்...
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்...

தைரியமாக சொல்... நீ மனிதன் தானா...?
மனிதன் தானா...?

அலையாடும் கடலை கண்டாய்...
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்...
மலராடும் கொடியை கண்டாய்...
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்...
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்...

தைரியமாக சொல்... நீ மனிதன் தானா...?
மனிதன் தானா...?

பொருள் வேண்டி திருடச் செல்வாய்...
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்...
துணிவோடு உயிரை கொல்வாய்...
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்...
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்...

தைரியமாக சொல்... நீ மனிதன் தானா...?
மனிதன் தானா...?
நீ தான் ஒரு மிருகம்...
இந்த மதுவில் விழும் நேரம்...

ஒரு பதிவு :

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_26.html

Unknown said...

#அடுத்தவன் காது அறுந்து ரத்தம் வழிந்தாலும் விடமாட்டார்கள், தொடர்ந்து மொக்கையைத் தான் போடுவார்கள்#
இதைப் போலவே எனக்கும் ஒரு நண்பர் இருக்கிறார் ,அவரைக் கண்டாலே காணததுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறேன் !
போதையில் சாக்கடைக்குப் பக்கத்தில் விழுந்து கிடந்ததைக்கூட பெருமையாக சொல்லிக் கொள்வார் !
த ம 4

நாடோடி said...

@r.v.saravanan said...
//நான் ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறேன், வாரத்திற்கு ஒருமுறை குடிக்கிறேன் என்று சிலாய்க்கும் எவரும் தனது குழந்தை இந்தப் பழக்கத்தை விரும்புகிறதா, தன்னுடைய‌ மனைவி சந்தோசமாகத் தான் இந்தப் பழக்கத்தை ஏற்று நம்முடன் வாழ்கிறாளா என்று அறிய விரும்புவதில்லை.


சரியான கேள்வி ஸ்டீபன்
வாழ்க்கையில் ரசிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது இந்த குடியே கதி என்று வாழ்பவர்களை என்ன சொல்வது//

வாங்க சரவணன்,

உங்க கருத்துக்கு ரெம்ப நன்றி.

@Chokkan Subramanian said...
//நல்லதொரு கட்டுரை.
"//இவர்கள் குடிப்பதைப் பற்றி விவாதிப்பது எல்லாம் உடன் குடிக்கும் நண்பர்களுடன் தான்.//" - சரியாக சொன்னீர்கள். குடிப்பவர்களுக்கு, குடிப்பவர்கள் தான் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

"//குடிக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு குடிக்காத நண்பன் இருந்தால் அவனுடைய நிலைமை ரெம்பக் கொடுமையானது. //" - இன்னும் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். குடிக்கும் கூட்டத்தில் குடிக்காத ஒருவன் இருந்துவிட்டால், அவனை எப்படியாவது குடிக்க வைக்க முயற்சிப்பார்கள் பாருங்கள் அது ரொம்பவும் கொடுமை.//

வாங்க சுப்பிரமணியன்,

நீங்கள் சொல்வதும் உண்மைதான். குடிக்கமல் இருப்பதால் தானே, இவன் நமக்கு அட்வைஸ் சொல்லுகிறான், இவனும் குடித்துவிட்டால் பிரச்சனை இல்லை என்ற எண்ணம் தான். கருத்துக்கு ரெம்ப‌ நன்றி.

நாடோடி said...

@Anonymous said...
//இவ்வளவு எழுதுனவர், இதை கொண்டு வந்து சீரழிக்கும் கழிசட கழகங்ககளை பற்றி எழுத தோணலையா ?

அம்மான்னு சொன்னா அன்புன்னு பாட்டிட்டு , அம்மான்னு டாச்மாக்குன்னு மாத்துன இந்த வற்ட்சிதலைவியயும், 90 வயசிலும் மிடாஸ் கமிஷன் வாங்கும் கட்டுமரத்தை பத்தியும் எழுதுங்க//

வாங்க அனானி,

உண்மைதான் இந்த அரசாங்கள் தான் சீரளிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை, ஆனாலும் நம‌க்கு இருக்கும் சுயசிந்தனை என்ன ஆகி போனது என்பதை பற்றி தான் இந்த கட்டுரையில் கேள்வி எழுப்பியிருக்கிறேன். கண்டிப்பாக அதை பற்றியும் எழுதுவேன், நிறைய பேர்கள் எழுதியும் இருக்கிறார்கள்.

நாடோடி said...

@வருண் said...
//Hi there!

இதைப் பற்றி ஒரு முறை இஸ்லாமியப்பதிவர் ஒருவர் பதிவுக்கு ஆதரவு கொடுத்து "மது அருந்துவது தவறு" என்பதுபோல கருத்தை வைத்தவுடன்தான் பதிவுலகில் வருண் இஸ்லாமியனாக்கப்பட்டான். :))

இப்போ சமீபத்தில் அடாவடி வருண் பட்டம் கெடைத்துள்ளது! :)))//

Hi Varun

இவங்க கொடுக்கிற பட்டங்களை கொண்டு போய் குப்பையில் போடுங்க.. நீங்க உங்க பாட்டுக்கு கலக்குங்க...

@rishikesav said...
//இன்னொரு பிரபலம் இங்கு வருவார் என்றிருந்தேன் ... ஏனோ அவரில்லை ... முதலில் வருபவர் அவரே ...//

வாங்க ரிஷி

எந்த பிரபலம் வந்த என்னா?.. நீங்க வந்து படிங்க.. உங்க கருத்தை சொல்லுங்கள்..

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க தனபாலன்,

பாட்டு, திருக்குறள் என்று நீண்ட கருத்துரைக்கு ரெம்ப நன்றி.

@Bagawanjee KA said...
//#அடுத்தவன் காது அறுந்து ரத்தம் வழிந்தாலும் விடமாட்டார்கள், தொடர்ந்து மொக்கையைத் தான் போடுவார்கள்#
இதைப் போலவே எனக்கும் ஒரு நண்பர் இருக்கிறார் ,அவரைக் கண்டாலே காணததுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறேன் !
போதையில் சாக்கடைக்குப் பக்கத்தில் விழுந்து கிடந்ததைக்கூட பெருமையாக சொல்லிக் கொள்வார் !//

வாங்க பகவான்ஜி,

நல்ல நண்பர் தான். சிலருக்கு குடித்து செய்யும் கழிசடை செயல்களை பெருமையாக பீற்றி கொள்வதில் ஒரு தற்பெருமை.. ):

Related Posts with Thumbnails